Friday, December 25, 2009

happy christmas..

முன்பெல்லாம் கிறிஸ்துமஸ் நாளன்று நான் சர்ச் சென்று வருவேன்.. சர்ச் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.. மிகவும் நீண்ட அதன் விஸ்தாரமான தன்மை எனக்குள் ஓர் தாங்கொணா மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும்.. மண்டியிட்டு அமைதியாக பிரார்த்திக்கிற கிறிஸ்துவர்களும் அவர்களது பக்தி முறைகளும் எனக்கு அலாதி ஆனந்தம்..
ஓர் ஹிந்துவாக கோவில்களை நான் மிகவும் ரசிக்கிறவன் என்றாலும் .. பிற மதம் சார்ந்த விஷயங்களும் என்னை அவ்வப்போது ஈர்க்கும்...
இயேசு ஜனித்தது மற்றும் , முள்கிரீடத்தில் அவரை துன்புறுத்தியதும், மற்றும் ஆணி கொண்டு சிலுவையில் அறைந்த விஷயங்களும் .. அவர்களது கற்பனைக்கேற்ப அலங்காரம் செய்து வைத்திருப்பதை பார்க்கையில் ஓர் பரவசம்..
திருவள்ளுவரின் உருவமோ ஜீசஸின் உருவமோ மனிதர்களின் கற்பனை தான் என்றாலும், அந்தக்கற்பனையே உண்மையைக்காட்டிலும் வீரியம் பொருந்தியதாயும் பொருத்தமானதாகவும் அமைந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்..

என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

Saturday, December 19, 2009

பணவெறி..

ஆரம்பத்தில் கம்பியுட்டர் மூலமாக நிறைய சம்பாதிக்க முடியும் என்பது போல பற்பலரும் சொல்லக்கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்து, பிற்பாடு .. தொண்ணூறு சதவிகிதம் டுபாக்கூர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கு சொந்தமாக ஒரு கணினி தேவைப்படுகிறது.
கணினி குறித்து எந்த அறிவுமே அற்றவர்கள் , இப்படி எல்லாம் வதந்திகளை கிளப்பி, என் போன்ற சில ஜென்மங்களை எப்பாடு பட்டாவது கம்பியூட்டரை வாங்க வைத்து விடுகிறார்கள்..

அப்படி எல்லாம் நெகிழ்வாக சம்பாதிக்கிற சாத்யக்கூறுகள் இல்லை என்பதை அந்த வதந்தி பரப்பிய நபர்களிடம் சொன்னால், "ஓஹோ.. அப்படியா சேதி... நல்ல வேலை .. நாங்க வாங்கலை." என்று வேறு தப்பித்த தன்மையில் புத்திசாலித்தனமாக உரையாடுகிறார்கள்.

அதன் உபயோகம் வேறு விதத்தில் கண்டிப்பாக இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சொல்வது போல குறுக்கு வழிகளில் பணம் பண்ண முடியும் என்பதெல்லாம் எந்நாளும் நடவாது..
உதாரணத்திற்கு என்னென்னவோ BUX பெயர்கள் எல்லாம் சொல்லி பேபால் , அலெர்ட் பே என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உள்ளே நுழைந்து விளம்பரங்களை கிளிக் செய்தால் டாலர் பிய்த்துக்கொட்டும் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்..
விரல்கள் வலி எடுப்பது தான் மிச்சம்..
எந்த நாயும் எதுவும் தராது..
ஆகவே அவைகளை எல்லாம் விடுத்து எதாவது tally, coral drawing , என்பதெல்லாம் கற்று நம் சுய உழைப்பில் வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அது தான் ஆத்மதிருப்தியும் கூட...
அப்படி நம் குருட்டு அதிர்ஷ்டம் க்ளிக் செய்து காசு வந்தாலுமே அது மானம் கெட்ட காசு தான்.

ஆனால் மக்கள், நாய் விற்ற காசு குரைக்குமா என்கிற அறிவுப்பூர்வ கேள்விகளை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.

நானுமே கூட பங்குச்சந்தையில் சம்பாதிக்கலாம் என்கிற பேராசையில் ஆன்லைனில் சில பங்குகளை விற்றும் வாங்கியும் intraday செய்கிறேன். அம்பதை வைத்துக்கொண்டு நூற்றைம்பது சம்பாதிக்கிற பேராசையில், இருக்கிற அம்பதையும் இருபத்தைந்தாக்கி , அதுவும் அம்பேல் ஆக இருக்கிறது.. இப்படி தன்மானம் அற்ற வகையில் சம்பாதிப்பது அறிவுப்பூர்வமானவர்களுக்கும் பகுத்தறிவாளிகளுக்குமே கூட சுவாரஸ்யப்பட்டுவிடுகிற விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இன்னும் என் போன்ற முட்டாள்களுக்கு சொல்லவும் வேண்டுமோ?

Sunday, December 13, 2009

போட்டிகள்...

போட்டிகள் எனக்குள் தாங்கொணா வெறிகளையும் கற்பனைகளையும் விதைக்குமேயன்றி அதில் ஈடுபடவோ வெற்றி பெறவோ சாத்யப்படுவதில்லை என்பதை பல போட்டிகளில் பங்குபெற்று உணர்ந்திருக்கிறேன்.
ஆனாலும் போட்டி என்பது ஓர் ஆரோகியமான போக்கு என்பதை அறிவேன். எந்த விதமான தன்மைகளுக்கும் போட்டி என்பது இன்றியமையாத ஒன்றென்றே கருதுகிறேன். போட்டி இல்லாத எந்த விஷயங்களும் ஓர் வீரியமிழந்தே காணக்கூடும். போட்டி என்று வந்த பிறகே அந்த விஷயம் வசீகரமாக மாறும்..

அவ்விதமாகத்தான் தமிழ்மணம் அறிவித்திருக்கிற போட்டியை உணர்கிறேன். என் பங்கிற்கு எனது ரெண்டொரு படைப்புகளை ... அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க .... வெளியிட முனைந்து இருக்கிறேன் என்ற போதிலும் , பல அறிவுப்பூர்வமான எழுத்தாளர்கள் பங்கு பெறுகிற இந்த கோதாவில் என் பங்கேற்பு கேலிக்குரியது என்பதை அனுமானித்தே நான் என் படைப்புகளை வெளியிட நேர்ந்திருக்கிறது...

நன்றி.. வெற்றி பெறக்காத்திருக்கிற புத்திசாலிகளுக்கு என் ADVANCED CONGRATULATIONS.


அன்பு
சுந்தரவடிவேலு....

Monday, December 7, 2009

அல்வாவின் அடிமைகள் நாம்..

மிக அன்னியமாகி விட்ட வசந்தங்கள் குறித்து நானும் வெட்கமில்லாமல் அசை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு மிக நெருக்கமாக சிநேகம் வைத்துள்ள சங்கடங்களையும் வேதனைகளையும் அப்புறப்படுத்தவும் தவிர்த்து ஒழிக்கவும் நானும் படாத பாடு படுகிறேன் என்றாலும் அவைகள் வெட்கமில்லாமல் என்னை அணுகி, நான் வசந்தங்களை கற்பனையில் அசை போடுவது போலவே நிஜத்தில் என்னை அவைகள் அசை போடுகின்றன.

எந்த சித்தாந்தங்களுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கையானது அதன் போக்கில் ஓர் வகையான சூட்சுமத்தில் பயணித்து நம்மையும் உடன் அழைத்துக்கொண்டு போகிறது, நாம் விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்.... போராடியேனும் ஜெயித்தாக வேண்டும் என்கிற தீவிர வெறி ஒரு புறம் இருந்தாலும், காலமும் நேரமும் சில நபர்களுக்கு மாத்திரமே அதிகம் கை கொடுக்கிறது .. பல பேர்களுக்கு அல்வா கொடுத்து விடுகிறது...


இப்படியாக அல்வாவுடனாக சப்புக்கொட்டிக்கொண்டு பலரும் அலைந்து கொண்டிருக்க ... அதுவே கூட நாளடைவில் சுவாரசியப்பட்டும் போகிற கேவலக்கூத்துக்களும் அரங்கேறி விடுகின்றன..


அல்வாவில் மண் ஒட்டியிருந்தாலுமே கூட அதனை தட்டி விட்டோ அல்லது மண்ணுடனாகவோ சாப்பிடவும் பழகிக்கொண்டோம்... எதனையும் ஜீரநித்துப்பழகி விடுகிற நமது பெருந்தன்மை நமக்கே நம் மீது ஓர் பரிதாபம் கலந்த ஆச்சர்யத்தைக் கொடுத்து விடுகிறது...


இப்படி அல்வா தந்த காலம் மனசிறங்கி ஒரு தருணத்தில் கை கொடுக்க முன் வந்தாலுமே கூட அல்வாவுக்கு அடிமைப்பட்ட பலரும் காலம் கொடுக்கிற கையை திருகி எறியக்கூட துணிந்து விடுகிறோம்....



சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Saturday, December 5, 2009

பிரக்ஞையுள்ள முகமூடிகள்..

அனிச்சைகளும் விபத்துக்களும்
எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிற
வினோதம் என் வாழ்வு நெடுக...!

ஜாக்கிரதைகள் மீதான வெறி..
அஜாக்கிரதைகளை
அநாகரீகமாக உணரும் மருட்சி..!!

கடிக்காமல் பறக்கிற
கொசுவைப்பார்த்தாலே
ஜீவகாருண்யம் முடிவுக்கு வந்து
விடுகிற நிலைமையில்--
இன்னும் கடித்து விட்டாலோ
ரௌத்ரம் வேறு கைகோர்த்துக் கொள்கிறது..

நடிக்கிற பாத்திரமாய்க் கூட
அசௌகரி ய ங்களுக்கு சந்தர்ப்பம்
அளிக்க முடியாமல் இருக்கிற எனக்கு
--சௌகரியமாக வாழ்க்கையை
நிதர்சனத்தில் எங்கனம் அனுசரிப்பது
என்பது புரியாத புதிராயும்
கேள்வியாயும் வியாபித்துக்கிடக்கின்றன...

சுந்தரவடிவேலு..

Tuesday, November 24, 2009

எதையேனும் எழுதுகிறவன்..

எழுத முடியாத மனநிலைகளையும் தாண்டி எழுதுகிறவன் தான் உண்மையான எழுத்தாளன்.
எழுதுகிற நேரம் இருந்தும் அதற்கான மனம் அற்று வெறுமே சற்று இடைவெளி விழுந்து விட்டது.. மீண்டும் எழுத ப்லோகை திறந்தால் ஏனோ ஓர் சுரத்தே அற்று எதை எழுத வேண்டும் என்கிற விவஸ்தைகள் கூட கழன்று .. என்னவோ கிறுக்க விழைகிறேன்.
மீண்டும் களத்தில் இறங்கி விட்டான் என்று சமுதாயம் எனக்காக இடுகிற கூப்பாடுகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தாலும்.. எழுதியே பிரபலம் அடைந்தும் , பணம் காசு சம்பாதித்தும் எவ்வளவோ எழுத்தாளர்கள் சாதித்த இந்த களத்திலே நம்மால் வெறும் ஜம்பம் மாத்திரமே அடிக்க முடிகிறது என்கிற கவலை வந்து .... மீண்டும் எழுத சோம்பிப்போய்.... பார்ப்போம். தெளிவாய் மறுபடி..

நன்றி.. சுந்தரவடிவேலு

Monday, November 16, 2009

குழந்தையின் வருகை..

உன் ரௌத்திரம்
என்னை குதூகலப்படுத்தும்..
என் முடியை
நீ பொசுக்குகிற சுகம்
என் தலைவலிகளைக்கூட
சொஸ்தமாக்கும்...

பசியில் நீ வீறிடுவதை
சற்று ரசிப்பேன்...
கையில் பால்புட்டியை
வைத்துக்கொண்டே...
உன்னை அழ வைப்பது
நோக்கமன்று.,
உன் சாரீரம் வலுவடைய
வேண்டும் என்கிற உத்தி அது...

உன் மௌனமான புன்னகை
ஓர் அழகென்றால் - உன்
முணகல் நிறைந்த
புன்முறுவல் ஓர் நேர்த்தியான
சங்கீதம்...

-செத்துக்கிடந்த
என் வாழ்க்கை.. இன்று
உயிர்த்தீயில் ஜொலிக்கிறது!
இற்றுக்கிடந்த என் கனவுகள்..
இன்று இறுகிப்போய்
வடிவம் பெற்றிருக்கின்றன..!!

வீடு வரவே சலிப்புணர்ந்தேன்
அன்று..
இன்று வெளியேற சலிப்புணர்கிறேன்
வீட்டை விட்டு..!
உன் வருகை-
எனக்குள் நிகழ்த்திய இந்த
மாற்றங்களை ...
நீர்வீழ்ச்சியில் குளிப்பதாக
உணர வைக்கின்றன..!!


சுந்தரவடிவேலு...

Tuesday, November 10, 2009

தேய்பிறை ரசிகன்...

என் கனவுகள்
தொலைவதற்காகக் காத்திருக்கின்றன..

நனவாக்கி விடலாம்
என்கிற என் நம்பிக்கைகளையும்
முயற்சிகளையும்
என்ன சமாதானப்படுத்தியும்
என் வசமாக்க சாத்யப்படவில்லை...

அவநம்பிக்கைகளின்
ஆளுமையில் என்
எழுச்சிகளுக்கு ஆயுள் தண்டனை...
அது மரண தண்டனையாகவே
மாறக்கூடும்....

தோற்கடிப்பதற்கு என்றே
லட்சியங்களை வைத்திருந்தேன்...
கனவுகளாகவும் கற்பனைகளாகவும்
அவைகளை வகைப் படுத்தி...


சுந்தரவடிவேலு.








Friday, November 6, 2009

என் அபிப்பிராயம் சரியா தவறா?.. அறியேன்...

வாழ்க்கை சிலருக்கு அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காத வனப்புகளை அறிமுகப்படுத்தி விடுகிறது...
சொற்ப ரசனைகளுடன் வாழ்க்கையை அனுசரித்து வந்தவர்களுக்கு காலம் கைக்கு அடங்காத கணிசமான பரிசை விநியோகித்து விழி பிதுங்க வைத்து விடுகிறது... இவை அனைத்தையும் எவ்விதம் அடைந்தோம் என்கிற ப்ரக்ஞை கூட அற்று இவைகளை எப்படி அனுபவித்துத்தீர்ப்பது என்கிற சுகமான குழப்பங்களில் லயித்து விடுகின்றனர்...
வித விதமான கார்கள்... உயர் ரக ஆடை அணிகலன்கள்... இன்னபிற இத்யாதி லக்சூரி சமாச்சாரங்கள்... அவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அப்படிப்போட்டு ஆட்டுகிறது..

சிலருக்கோ... அவஸ்தைகளை சொல்லி மாளாது... துரதிர்ஷ்டம் மாத்திரம் எப்போதும் துணை வரும்... மருந்துக்குக்கூட உற்சாகம் நிகழாது... தப்பித்தவறி என்றேனும் ஏதாவது சந்தோஷங்கள் தலை காட்டுமேயானால் .. உடனடியாக ஓடி விடக்கூடிய சுடுதண்ணி அவசரத்தில் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்... பஞ்சரான சைக்கிள் மூலையில் முடங்கிக்கிடக்கும்., நோய்வாய் பட்ட மொபெட்டு ஒன்று பெட்ரோல் தாகத்தில் வறண்டு கிடக்கும்... நடந்தே போய்விட்டு வரலாம் என்றால், போய்வர வேண்டிய இடம் வெகு தூரத்தில் இருக்கும்.. நம் சவுகரியத்திற்கு டவுன் பஸ் கூட இருக்காது... ஆனாலும் போயாக வேண்டும்.. போனால் வந்தும் ஆகவேண்டும்..!

இப்படி முரண் களுடன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கொடுமைகள்... இதற்கெல்லாம் இறைவனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவா முடியும்.. நாம் சொன்னாலும் தான் கடவுள் நிற்பாரா என்ன...

வசதி படைத்தவர்களிடத்தில் கடவுள் ஓர் பணியாள் போல பவ்யமாக கைகளைக்கட்டிக்கொண்டு நிற்பது போல தோன்றுகிறது எனக்கு... அதே கடவுள் வரியவர்களிடத்து எஜமானன் போல அதட்டிக்கொண்டு இருக்கிறார் என்றே அனுமானிக்கிறேன்...!!

இவ்விதமாக கடவுளை கீழ்த்தரமாக ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.. நம்மையெல்லாம் ஸ்ருஷ்டித்த கடவுளுக்கு , இந்த சுண்ணாம்பு --- வெண்ணை பாகுபாடுகள் எதற்கு என்கிற ஆதங்கமான கேள்வியைத்தான் முன்வைக்கிறேன்... எளியவர்கள் நிரம்பிய இந்த சமூகத்திற்காக.... அவர்களுடைய பிரதிநிதியாக..


சுந்தரவடிவேலு...


Thursday, November 5, 2009

ஸ்ருதி பிசகல்கள்...

எனக்குள்ளாக நீ
பிரவேசித்த நாள் ..
என் நினைவில் இல்லை...!
ஓர் மழலை
உருவானதற்குரிய காரணம்
புணர்தல் என்றாலும்
அது எந்தப் புணர்தல்
என்று வகைப்படுத்துவது
சாத்யமில்லை போலவே
நீ என்னுள் நினைவாகவும்
அதற்கு முன்னர்
கண்களுக்கு தரிசனம்
ஆனதும்...
எந்தத்தருணம் என்பது
புதிர் தான்..!!

ஆனால் உன்னை
காண்பதற்கு முன்பே
உன்னை என்றேனும் காண்பேன்
என்கிற ஓர் அசரீரி என்னுள்
ஒலித்துக்கொண்டே இருந்ததை
சொன்னால் எனக்கே நான்
நம்பத்தகாதவன் போலவே தான்
தெரியும்...

இவ்வளவையும் ஓர் ஞானி போல,
ஓர் தீர்க்கதரிசி போல..
தெரிந்து வைத்திருந்த நான்....

-இன்னொருவனை நீ
காதலிக்க என்னையே
தூதனுப்பக்கூடும்
என்பதை அனுமானிக்க
தவறிய வினோதம்....

என் ஞானத்தையே
நான் கேவலமாக
உணர வேண்டிய ஓர்
சூழலை உருவாக்கிற்று..!!


சுந்தரவடிவேலு..

Wednesday, November 4, 2009

ஒ..மனிதா...

மனது மூட நம்பிக்கைகளுக்கு சுலபத்தில் ஆட்கொள்கிறது. ஓர் ஜோலிக்கு மேற்கே போக வேண்டியிருக்கிறது என்றால் கூட கிழக்கே போய் சுற்றி வந்தால் தான் அது உருப்படும் என்பதாக சுலபமாக சென்டிமென்டை உள்வாங்கிக்கொள்கிறது மனது..
இந்த மாதிரியான போக்குகள் அறிவிப்பூர்வமானவர்களிடமும் கூட மையம் கொண்டு விடுவது தான் கொடுமை.. இப்படி detailed ஆக ஒவ்வொன்றிலும் வாழ்ந்து அப்படி என்ன சாதிக்கிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல் .. இதையெல்லாம் கவனிக்கிற பகுத்தறிவாளிகளுக்கு..
இதெல்லாம் ஒரு புறமிருக்க, வாஸ்து என்கிற ஓர் நாகரிகமான தவிர்க்க முடியாத பேய், பிச்சைக்காரன் வீடுகளில் துவங்கி குபேரர்கள் வசிக்கிற வீடுகள் வரை உள்ளே புகுந்து ஊடுருவிக்கிடக்கிறது...
அங்கலாய்ப்புகளும் ஆசைகளும் மனிதப்பிறவிக்கு மாத்திரம் மற்ற உயிரினங்களுக்குக்காட்டிலும் சற்று அபரிமிதமாக திணித்து விட்டார் கடவுள் என்றே தோன்றுகிறது...
6 அறிவு வைத்தவன் இன்னும் கொஞ்சம் முட்டாள்தனங்களை தவிர்த்தே படைத்திருக்கலாம். அதற்குள்ளாக இனி கடவுளுக்கு என்ன அவசரமோ?


சுந்தரவடிவேலு..

Monday, November 2, 2009

பகுத்தறிவாளியின் சிந்தனை...

உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.

----ஜகி வாசுதேவ் ------ஈஷா யோகா மைய ஞானி-------

Sunday, November 1, 2009

திருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...

வருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி...
சொன்னது சொன்னது போலவே நடக்கிறது.. பிரச்சினை என்னவானாலும் அதற்கு அற்புதமான தீர்வுகளை அள்ளி வழங்குகிறார் அந்தக்கருப்பராயன் கோவில் பூசாரி..
நினைத்த காரியம் பலித்து விட்டால் மீண்டும் அதே கோவில் சென்று நாம் விரும்பிய காணிக்கைகளை பரிசளித்து விட்டு வரலாம்...
மேற்சொன்ன யாவும் செவி வழி செய்திகள்.. நாமும் தான் பிறந்த நாள் தொட்டு பிரச்சினைகளுடன் தானே இருக்கிறோம்.. ஒரு முறை போய்விட்டு வருவோமே என்கிற விதமாக ரெண்டொரு நாட்கள் முன்னர் சென்று வந்தேன்...

சில இடங்களில் ஆன்மிகம் எவ்வளவு கேவலப்பட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு பெரிய உதாரணமாய் இருந்தது அந்த இடமும் அங்கு நிகழ்கிற கூத்துக்களும்..

குறி சொல்கிற அந்தப்பூசாரி சரமாரியாக பீர் பிராந்தி ஒயின் ரம் என்று நம் முன்னாடியே ஊற்றி ஊற்றி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே ராவாக அடிக்கிறார்.. போதையில் பிதற்ற ஆரம்பிக்கிறார்... குறி சொல்ல அவர் தேர்ந்தெடுக்கிற நபர் படுகிற அனைத்த துன்பங்களையும் சொல்கிறார்.. அவைகள் கூடிய விரைவில் கருப்பராயனால் தீர்த்து வைக்கப்படும் என்கிறார். குறி கேட்ட அந்த நபர் அப்படியே புல்லரித்துப்போய் விடுகிறார்.
அங்கே வருகிற முக்கால்வாசி பக்தர்கள் நேர்த்திக்கடனாக அனைத்து வகை மதுபானங்களையும் பரிசாக அளிக்கின்றனர்.. அந்தப்பூசாரியும் யாவற்றையும் பாக் செய்து மீண்டும் ஒயின் கடைகளுக்கே சப்ளை செய்வதாகக்கேள்வி... அது போக பணம் .. தங்கம் வெள்ளி என்று வேறு பரிசளிக்கிறார்கள் மக்கள்...

ஒரு வேளை சோற்றை உலையில் கொதிக்க வைக்கவே எவ்வளவோ பேர்கள் படாத பாடு படுகிற இந்தக்கால கட்டங்களில் இப்படி மிதப்பாக சுலபத்தில் லட்சங்களும் கோடிகளும் குவிக்கிற புத்திசாலிகள் புற்றீசல்கள் போல முளைத்த வண்ணம் தான் உள்ளனர்...

இந்தத் திறன்கள் நம் போன்ற எளிய மக்களுக்கு கை கூடுவதில்லை... ஆனால், இப்படியான பித்தலாட்ட நபர்களிடம் ஏமாந்து நாசமாய் போவதற்கு மட்டும் கை கூடுகிறது..

மாடாக உழைக்கத்தெரிந்தவர்கள் கூட இந்த மாதிரியான சோம்பேறிகளிடம் சிக்கி சீரழிகிற கொடுமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இங்கு சென்று திரும்பியது நரத்திலிருந்து மீண்டது போல உள்ளது.. நாம் வந்து வாழ்கிற இடம் சொர்க்கம் இல்லை என்றாலுமே கூட .. இந்த மாதிரியான அனாசாரமான இடங்களிலிருந்து திரும்பி வருகையில் நம் இடம் கூட சொர்க்கமாகத்தான் தெரிகிறது...



சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Saturday, October 31, 2009

மீண்டும் ஏமாந்தது காக்கா...

வடை சுட்டு ஜீவனம் செய்து வந்த பாட்டி செத்துப்போனதற்கு காக்கையும் நரியும் வந்திருந்தன...
ஏமாற்றி தன் வடையை தந்திரமாக கவ்விச்சென்ற நரியை அதன் பிறகு இழவு வீட்டில் தான் பார்த்தது காகம்..
ஏன் அப்படி அன்று என் பசி குறித்த கவலை கூட அற்று தந்திரமாக பிடுங்கிச்சென்றாய் என்று நாக்கை பிடுங்கிக்கொள்வது போல நரியிடம் கேட்க வேண்டுமென்று காகம் யோசித்தது... ஆனால் இந்தக்கூட்டத்தில் அதைக்குறித்து கேட்பது அவ்வளவு நாகரீகமில்லை என்பதை உணர்ந்து .. பதினாறாம் நாள் காரியத்துக்கு வருகிற போது கேட்கலாம் என்று கேள்வியை ஒத்திவைத்தது காகம்.. காகத்தின் இந்த அனுமானத்தை எப்படியோ உணர்ந்து கொண்டது அந்தத்தந்திரக் கார நரி..

பதினாறாம் நாள் காரியத்திற்கு நரி வராதது காகத்துக்கு மறுபடி ஓர் பெரிய ஏமாற்றமாயிற்று...


சுந்தரவடிவேலு..

Wednesday, October 28, 2009

உன் ஒற்றைப் பார்வையில்...

எதுவுமற்ற வெறுமை
வந்து அவ்வப்போது
மனசை
சூனியமாக்கினாலும்
உன் நினைவுகள் வந்து
யாவற்றையும் நிரப்பி
என்னை நிறைகுடம்
ஆக்கி விடும்..

என் மனக்குளத்தில்
உன் பிம்பம் போதும்..
சலனம் ஏற்படுத்தி விடும்..!
எத்தனையோ பேர்கள்
கல்லெறிந்த போதெல்லாம் கூட
கலங்காமல் இருந்த
மனக்குளம்
இன்றுன் .. ஒரே பார்வையில்
பேரலைகள் படர்ந்து
துவம்சம் செய்து
புரட்டிப்போட்டு விட்டது என்னை..!!

சுந்தரவடிவேலு..

Sunday, October 25, 2009

மலரினும் மெல்லிய...

பாலியல் குறித்து விஷயங்களை சேகரிக்க எந்த வயதிலும் சலிப்பதே இல்லை.. நாம் இந்த பிரபஞ்சத்தில் அடி எடுத்து வைத்ததே அந்தப் புணர்ச்சியின் நிமித்தம் என்பதாலோ என்னவோ, பிரத்யேகமாக அந்த விஷயத்தில் அதீத கவனத்தை இயல்பாகவே செலுத்தப் பழகிக்கொண்டோம்...

ஆனபோதிலும் அவைகளைப்பற்றி விவாதிக்கையில் நாசுக்கு தவறாமல் சற்று இங்கிதம் தொனிக்க பரிமாறுவதே ஆரோக்யமான போக்காகும்.. அல்லாமல் யதர்ர்த்தமாக சொல்கிறோம் என்கிற பாணியில் பேசினோமே யானால் அது ஆபாசமாகவும் விபரீதமாகவும், சொல்கிற நபருக்கே குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் மாறி விடக்கூடும்...

அவை குறித்து ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன.. தொலைகாட்சி அலைவரிசைகள் உள்ளன. அதற்கென நேரம் ஒதுக்கி கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.. எந்தக்கேள்விகள் ஆனாலும் ஒளிவு மறைவு அற்று கேட்கிறார்கள்.. பதிலும் பக்காவாக சொல்கிறார்கள்.. அப்படியிருக்க, இந்த ப்ளாகில் நானேதும் புதிதாக சொல்லிவிடப்போவதில்லை..

பாலியல் குறித்து அது சார்ந்த எவ்வளவோ நிபுணர்கள் படம் போட்டுக்காட்டுகிற இந்த சூழ்நிலையில் நான் இங்கே சொல்ல ஒன்றுமில்லை.. நானும் அவை குறித்து எவரேனும் சொல்ல, வாய் பிளந்து கேட்கவே ஆயத்தமாயுள்ளேன் என்பதால் .... நான் ஏதேனும் சொல்ல வருகிறேனோ என்று வாய் திறந்து எவரேனும் இருப்பீர்களேயானால் ....

நெல்லை ஹல்வாவைத்தான் திணிக்க வேண்டும்...



சுந்தரவடிவேலு, திருப்பூர்.


Friday, October 23, 2009

என் கண்மணி...

நீ உன்
அழுகையை நிறுத்தினாலும்
நானென்
தாலாட்டை நிறுத்தமாட்டேன்..

உன்
பஞ்சுக்கன்னங்களில்
என் நாசியை
அழுத்தி-
உன் புன்னகைச்சூட்டின்
அருகாமையில்
குளிர் காய்வது
அலுக்காத சந்தோஷம்..

எட்டி எட்டி நீ
என்னை உதைத்தாலும்
உன் கால்களை
கட்டிக்கொண்டு
முத்தமிடுவதை
வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன்..

எனக்கு நீ
அருள் பாலிக்கவில்லை
என்றாலுமே கூட-
உன்னை பிரார்த்திப்பதை
மட்டும் என்னால் தவிர்க்கவே
முடியாது...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Tuesday, October 20, 2009

சிலரது மனநிலைகள்..வியப்பூட்டுகின்றன

சில படங்களை நான் பார்த்து விட்டு வருவேன்.. என் மனதிற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.. எனது நண்பர்களிடமும் அதே ரீதியில் அவர்களும் உணர வேண்டும் என்கிற விதமாக அந்தப்படத்தை சென்று பார்க்கச்சொல்வேன்.. எனது வேண்டுகோளினை ஏற்று சில நண்பர்கள் சென்று வருவார்கள்.. நான் விரும்பியது போலவே அவர்களும் அதனைக்குறித்து விமர்சித்து என் ரசனைகளை அங்கீகரிப்பார்கள்.., நானும் புளகாங்கிதம் அடைய நேரும்..
என் ரசனைகளை அங்கீகரிப்பதும் கூட ஓர் கலைஞனையே ஊக்குவிக்கிற ஓர் தன்மையை எனக்குள் நிகழ்த்தச்செய்வது ஓர் விபரீதமான சந்தோஷம்...

ஆனால் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.. நான் ரசித்தவற்றை எந்தப்பிரமாதமும் இல்லை என்பதாக சொல்லி அதற்குரிய தர்க்கரீதியான விளக்கங்களையும் முன் வைக்கிற நோக்குடன் அதீதப் பிரயத்தனத்துடன் என்னிடம் வாதாடி என்னை அவர்களுடைய கருத்துக்களுக்கு உடன்படச்செய்வதை பெரிய கௌரவப் பிரச்சினையாக்கி முழங்குவார்கள்., நானும் முடிந்த வரை கிண்டி, கிளறி... போய் தொலைகிறது என்று அவர்களுக்கு இணக்கமாக ஆமோதிப்பதை .. தாங்கள் வெற்றி பெற்றதாக உணர்வதைபபார்க்க எனக்கும் ஓர் அல்ப சந்தோஷம்.. நான் தோற்று விட்டதாக இதற்கெல்லாம் கவலைப்படுகிற அறிவீனம் எனக்கில்லை.. ஆனால் என் போல அவர்கள் இல்லை.. அவர்களுக்கு இந்த கவைக்கு உதவாத விஷயத்தில் கூட வெற்றி தேவைப்படுகிறது என்பதோடு தோல்வியை கேவலமாக வேறு நினைப்பார்கள்...

என்னவோ , ஒரு படம் பார்த்தோம், ரசித்தோம், அது குறித்து அபிப்பிராயம் சிறிது பகிர்வோம் என்கிற புத்தி கூட அற்று அதில் ஆழ்ந்து போய் பட்டிமன்றமே நடத்துகிற அளவுக்கு அறிவும் வெறியும் இருப்பதைப்பார்க்கையில் , நம்முடைய ரசனைகள் கூட சற்று மெருகு குறைந்தே காணப்படுகின்றது...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்

Sunday, October 18, 2009

தீர்க்கதரிசி...

தீபாவளிக்கு
அடுத்த நாள்...
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
வெடிக்காத
பட்டாசுகளைப்
பொறுக்கி சேமித்துக்
கொள்கிறான்..
அடுத்த தீபாவளிக்கு..!!

சுந்தரவடிவேலு..

Friday, October 16, 2009

diwali..happy moments...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
குதூகலம் கும்மாளமிடும் இந்த நாள்
அன்றும் இன்றும் என்றும்
அதே சுகந்த உணர்வுகளை
தெளிக்கிறது ... நெருப்பில்..
enjoy this diwali wildly everybody..

sundaravadivelu..

Tuesday, October 13, 2009

பலம் பொருந்திய தோல்விகளும்.. அதன் ஞாபகங்களும்...

எனது காதல்
சற்று விநோதமானது...

-என் கன்னங்கள்
அவள் உதடுகளுக்கு
முத்தமிடும்..

-அவளது மடியில்
சாய்ந்த வண்ணமாகவே
அவளுக்காகக் காத்துக்
கிடப்பேன்...

-இந்நாட்களில்
அவளுடனாக
புணர்ச்சி கொள்ளும்
தருணங்களில் கூட,
... அன்று
காதலிக்க ஆரம்பித்த
நாட்களில் "எனக்குகிடைப்பாளா?"
என்கிற கேள்விக்குறிகளுடன்
ஏங்கிக்கொண்டிருந்த அந்த
ஞாபங்கங்கள் ...

-இன்றைக்கு
எனக்குக் கிடைத்து
விட்டாள்...
அவளைப் புணர்கிறேன்
என்கிற நிதர்சனங்களை
எல்லாம் தாண்டி..
--மறக்கவே
முடியாத அன்றைய
தேடல்களின் அவஸ்தைகள்
இன்னும் வேதனை
கலந்த சுவாரசியங்களை
பதிவாக்கிக்கொண்டிருக்கிற
ஞாபகச்சுழல்கள்...
--என்
தற்போதைய
ஆசுவாசத்தையே கூட
மூர்ச்சையாக்கி
உள்ளிழுத்துக்கொள்கிற
சாத்யக்கூறுகள்
கொண்டவை என்றே
அனுமானிக்கிறேன்...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Sunday, October 11, 2009

ரசனைகள்..

காதல் என்கிற
புனிதம் துவங்கும்
பொழுதே
காமத்துக்கான
அடிக்கல்லும் சேர்ந்தே
நாட்டப்படுகிறது....

புணர்தல்
நிகழ்கிற தருணம்
வரைக்கும்
காதல் - தன்
புனிதத்துவத்தை
இழக்காமலே தான்
இருக்கிறது...

காமமும்
புனிதம் என்றும்
அது மலரினும் மெல்லியது
என்றும் உணரப்படுவதற்கு
அபரிமித ரசனை தேவைப்படுகிறது...

ரசனையற்ற புணர்தல்கள்
சலிப்பை ஏற்படுத்தும்
நாளடைவில்...!
பிறகு...
காணாமல் போயிருக்கும்
காதலும் காமமும்...!!

சுந்தரவடிவேலு

Friday, October 9, 2009

சும்மா ஒரு.. உடான்சு...

கிட்டத்தட்ட என் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டார் பில் கேட்ஸ் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் என்னை முந்த விடக்கூடாது என்பதை இந்த வருட தீபாவளித்தீர்மானமாக எடுத்துக்கொள்கிறேன்.

எனக்குக்கொடுக்க வேண்டிய ஆஸ்கார் பரிசை எ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்தது போதாதென்று , இப்பொழுது ... நோபெல் பரிசையும் வேறொரு நபருக்குக் கொடுத்து என்னை கேவலப்படுத்தியுள்ளார்கள்...

இம்புட்டு கனவை வச்சுக்குட்டு டவுன் பஸ் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு போக வேண்டியுள்ளது..
ஒதைக்காதடா கழுதை... கடிக்காதடா நாயி... ஒதுங்கி நில்றா பன்னி...
கண்டக்டர் ஒரு பக்கம் கடிக்க ... ஆதிவாசி போன்ற ஆண்களும் பெண்களும் அதிகாரம் பண்ண... மேர்சீ டெஸ்பெஞ்சுல போக வேண்டிய ஆளு நான்... இப்ப உங்க கிட்டயெல்லாம் திட்டு வாங்கிக்கினு போக வேண்டியிருக்கேன்னு... ஒரு டுபாக்கூரு கற்பனை...!!

Thursday, October 8, 2009

தினமலர் செய்தியாளர் லெனின் கைது குறித்து..

சினிமா நடிகைகளின் கற்பு, பத்திரிகயாளர்களின் சுதந்திரம் ....
எல்லாமே ஒரு சேர பறிபோய்க் கொண்டிருக்கிறது நமது தேசத்தில்...
நடிகை.. தனது வாழ்வாதாரம் கருதி கற்பை அற்பப்பொருள் ஆக்கிக்கொண்டாள்..
பத்திரிகைகள்... circulation-ஐ அதிகமாக்க இந்த அற்ப விஷயங்களை பிரமாதப்படுத்தி focus செய்து கொண்டிருக்கின்றன..

Wednesday, October 7, 2009

???

பறவைகளை விட
தூரத்தில் பறக்கிறது
சிறகுகளே இன்றி...
பேரண்டம்....!

சுந்தரவடிவேலு...

நோ கமெண்ட்ஸ்...

ஏதேனும் கமெண்ட்ஸ் வரும் என்று எதிர்பார்த்தால் ஒன்றையும் காணோம்.. கமெண்ட்ஸ் டானிக் மாதிரி.. எழுதுபவர்களுக்கு...
ஆனபோதிலும் அதற்கான தகுதி பெறாத எழுத்துக்களுக்காக கமெண்ட்ஸ்-ஐ எதிர் பார்த்துக் கிடப்பது அறிவீனம்...
எவ்வளவோ பேர்கள் படிக்கலாம்.. ப்ச். என்னத்தைப்போய் விமர்சிப்பது என்கிற சலிப்பில் கூடப்போயிருக்கலாம்... அல்லது.. இவன் அறுத்துத் தள்ளுவான். என்று ஒதுங்கிப்போயிருக்கலாம்... இப்படி ஏதாவது நிகழலாம்..
இதற்கெல்லாம் சலிக்காமல் கல்லுளி மங்கன் போல எதையேனும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகள் வகுத்துக்கொண்டேன் என்றாலும் இந்தப் பாழாய்ப் போன மனசு இருக்கே... எவரேனும் ஏதேனும் என் கருத்துக்கள் குறித்து பிரலாபித்து இருக்க மாட்டார்களா என்கிற நப்பாசை.... அன்றாடம் கமெண்ட்ஸ் காலத்தில் சற்று மேய்வேன்.. ஜீரோ கமெண்ட்ஸ் என்று இருப்பதைப்பார்த்து .."இன்னாங்கடா இது.. நம்ம காவியத்தைப் படிச்சுட்டு நம்ம ரசிகப்பெருமக்கா கண்டுக்காம இருக்காஹலே.."ன்னு ஒரு சடவு....
...இதுக்கெல்லாம் அசந்தராத வாத்தியாரே.. சும்மா எதையாச்சும் கச்சா முச்சா ன்னு கிறுக்கிக்கினே கெட... அதெல்லாம் எதனாச்சும் ஸொல்லுவாஹ.. சொல்லாட்டியும் தான் என்ன.. நீ பாட்டுக்கு எய்திக்கினே கெட ...ன்னு அசரீரி ஒன்னு பொலம்புது நைனா...

Sunday, October 4, 2009

சமத்துவம் என்பது வாழ்க்கையில் இல்லை..

ஜனங்கள் ஒன்று கூடுகிற திருவிழா கால கோவில்கள் ஆகட்டும் பிற கேளிக்கைகள் சார்ந்த இடங்கள் ஆகட்டும்..
மனிதக்கூட்டங்கள் எங்கு கூடுகிற காட்சியைப் பார்க்க நேர்கிற போதும் எனக்கு ஓர் விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கும்..
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெரிய சமத்துவ உணர்வுகள் எல்லாம் பீரிடவில்லை..
நாமெல்லாம் 'சாகப்போகிறவர்கள் என்பதில் மட்டுமே பிரம்மாண்டமானதோர் சமத்துவம் பொதிந்து கிடப்பதாகத் தெரிகிறது.

வாழ்கிற காலங்களில் அனேகமாக எல்லாருமே பாரபட்சங்களோடும் போட்டி பொறாமைகள் கொண்டும் , பிழைப்புக்கான போராட்டங்களோடும்
ஆடம்பரங்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவசரங்களும், அந்த சம காலத்தில் தன்னை சார்ந்தவர்களோ தமது நெருங்கிய நண்பர்களோ அவ்வித ஆடம்பரங்களை சுலபமாக அனுபவிக்கையில் நமக்குள் நேர்கிற ரசாயன மாறுதல்களும் அங்கலாய்ப்பான வேதனைகளும் வார்த்தைகளில் பிடிபடாது..
--ஆக, வாழ்க்கை என்பது சமத்துவத்திற்கு முரணாக இருப்பதையே யதார்த்தத்தில் தரிசிக்க முடிகிறது.
இதனை ஒப்பிடுகிற போது தான் மரணம் மிக யதார்த்தமான சமத்துவத்துடன் எனக்குப்படுகிறது...

என்றேனும் நாம் நடந்து செல்ல வாய்க்கையில் ஓர் அவசரம் நிமித்தம் டூ வீலரில் செல்பவர்களை drop செய்யச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்..பத்துக்கு ஒன்பது பேர்கள் "நான் அப்பிடி போறேன்.. இப்பிடி போறேன்.." என்று சொல்லி பறந்து விடுவார்கள். சிலரோ ஊமைகள் போல ஒன்றுமே பேசாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்..
இப்படியெல்லாம் சுட்டிக்காட்டுகிற .. சமுதாயத்தை குட்டிக்காட்டுகிற நானே இந்தத்தவறுகளை சுலபத்தில் ஓர் மனநிலையில் செய்து விடுவேன்.. நான் டிராப் செய்ய சொல்லிக் கேட்கையில் மதிக்காமல் போகிறவர்களின் மீதான கோபங்கள் ஒருபுறம்... அப்படி உதவி கேட்பவர்களே என்றேனும் எனக்கு உதவாமல் ஒதுங்கியிருப்பார்களோ என்கிற கற்பனை ஒருபுறம்....

--மேற்சொன்ன சின்ன உதாரணமே போதும், நம் வாழ்க்கையில் சமத்துவம் எப்படி வாழ்கிறது என்று...


சுந்தரவடிவேலு. திருப்பூர்.

Friday, October 2, 2009

பிசகல்..

கூப்பிடு தூர
சந்தோஷங்களைப்
புறக்கணித்து விட்டு
துயர்களிடம்
அழையா விருந்தாளிகளாய்
நுழைகிறோம்...

நூலிழையில்
தவறிப்போன
சந்தோஷங்களுக்காக
அங்கலாய்த்து சாகவே
அன்றாடம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
துயர்களின் துணையோடு..!!


சுந்தரவடிவேலு.

குப்பை..

முன்னரெல்லாம் நான் கிறுக்குவதற்கு என்றே scribbling pad வைத்திருப்பேன். .. இன்றைக்கு அதற்கு பதிலாக கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறேன்..- அதுவும் இப்படி பிரத்யேகமாக ப்லோக் எல்லாம் திறந்து..முந்தைய என் கிறுக்கல்களை நான் மட்டுமே படித்து, சலித்து, கிழித்தெறிந்தும் .., சிலவற்றைப்படித்து சிலிர்த்து.. பாதுகாத்தும் வந்திருக்கிறேன்.
இன்று சலிக்க வைப்பவைகளையும் சிலிர்க்க வைப்பவைகளையும் பாகு படுத்தவே புரியாமல் கொட்டித்தீர்க்கிறேன்..
எனது வீட்டின் dustbin இப்போதெல்லாம் நிரம்புவதே இல்லை..
அது தான் எல்லா குப்பைகளையும் உங்களிடம் கொட்டி விடுகிறேனே..

சுந்தரவடிவேலு.

Thursday, October 1, 2009

அவஸ்தை..

எந்த வசீகரங்களுமற்ற
கனவுகளுடன் உறக்கம்...
விழிப்பில் தான் எல்லாம் சூன்யம்
என்றால் உறக்கத்திலுமா?..

ஞாயிற்றுக்கிழமை
சாயங்காலம் ... சினிமா பார்க்கலாம்
என்று திரையரங்கு போனால்
அரங்கு நிறைவு...
பிளாக் டிக்கட் வாங்கிப்பார்க்க
வேண்டியதாயிற்று...

பிறகு ரெண்டொரு நாட்கள்
கழிந்து ஓர் இரவில் வந்த
கனவிலும் சினிமா பார்க்க
தியேட்டர் விரைகிறேன்...
பிளாக் கில் கூட டிக்கட்
கிடைக்காமல் வீடு திரும்புகிறேன்...!!


சுந்தரவடிவேலு.

Wednesday, September 30, 2009

தேக்கடியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்த கப்பல் கவிழ்ந்து முப்பது பேர்களுக்கு மேல் மூழ்கி இறந்த செய்தி கவலை அளிப்பதாக உள்ளது..

அறுபது பேர்கள் மாத்திரமே பயணிக்க தகுதி வாய்ந்த அந்தப்படகில் எண்பது நபர்கள் அமர்ந்து சென்றது ஓர் மெகா கேனத்தனம் என்றால் ... யானைகள் சூழ்ந்திருந்த ஓர் பிரதேசத்தைப்பார்பதற்காக எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்றாய் குழுமிய காரணத்தால் படகு மூழ்கியதாக சொல்கிறார்கள்..

வெளிநாடுப்பயனிகளும் அடக்கம் ... அது போக அநேகம் நபர்கள் கர்நாடக மாநிலத்தவர்கள் என்று செய்தி.. இப்படியா ஒட்டுமொத்தமாக முட்டாள் தனம் நிகழ வேண்டும்?

ஏறியவர்களுக்கும் விவஸ்தை இல்லை.. ஏற்றிய சுற்றுலா படகுக்காரர்களுக்கும் விவஸ்தை இல்லை...

விலை மதிப்பற்ற மனித உயிர்கள் .. விளையாட்டுப்போல விரயமாகி விட்ட இந்தக்கொடுமையான செய்தியை கேள்விப்பட்ட நேரம் பதைபதைக்க ஆரம்பித்த நெஞ்சம், இன்னும் அடங்கியதாகத்தெரியவில்லை...

என்னென்னவோ கனவுகளோடும் லட்சியங்களோடும் வாழ்க்கையை ரசனையோடு நகர்த்தியவர்களின் வாழ்வில் இப்படி ஓர் அலங்கோலமான விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால் விபத்தின் கோரப்பிடியில் சிக்குகிற வரைக்கும் அதனைக்குறித்த ப்ரக்ஞைகளோ ... ஏன்., கற்பனைகளோ கூட சில நேரங்களில் எவருக்கும் பிடிபடாத மர்மமாகவே இருந்து விடுகிறது..

மேற்கொண்டாவது யாவும் ஜாக்கிரதையாக நடந்து இவ்வித விபத்துக்களைத்தவிர்க்க வேண்டும் என்று சொல்வதே வரட்டுத்தனமாக இருக்கிறது...

ஏனென்றால் எவ்வளவு சொன்னாலும் பொய்யான ஓர் பைனான்சு கம்பெனியில் சென்று காசு பணங்களை சுலபத்தில் தொலைத்துப் புலம்பிச்சாகிற இந்த மூடர்கள் காகிதக்கப்பல்களில் கூட ஏறிப்போக முயல்வார்கள்...


சுந்தரவடிவேலு..

Tuesday, September 29, 2009

யாவும் மாயை...

அவதூறுகளும் கவலைகளும்ஆக்ரமித்துள்ள தருவாய்களில்எல்லாம் தனது கவிதைகளில்
அவைகளை பிரதிபலிக்க செய்வது கவிதை எழுதுபவர்களின் இயல்பு...

தங்கள் மனபாரங்களைஇறக்கி வைக்கிற தளமாய்விளங்குகிறது கவிதை... அதனைப்படித்து ரசிப்பவர்கள் அந்த பாரத்தை சற்று சுமக்கிறார்கள்., அதன் சோகம் கருதி விக்கித்துப்போகிறார்கள்., தங்கள் வாழ்விலும் முன்பொரு நாள் அவ்விதம் நிகழ்ந்து... ஆனால் அதனை இப்படி வார்த்தைப்படுத்த முயலாமல் வெறுமே உணர்ந்ததை .. இன்று அந்தக் கவிஞர் தன் கவிதையில் பிரதிபலித்திருப்பதைப்பார்த்து மெய் சிலிர்க்கிறார்..

தன் மன உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டதாக அவருக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். அதில் அந்தக் கவிஞர் நெக்குருகிப்போகிறார். தனக்கு நேர்ந்த அதே துன்பானுபவம் இன்னொரு நபருக்கும் நேர்ந்த விபரீதம் குறித்த சங்கடங்களையும் மீறி அதனை அவர் படித்துணர்ந்து நன்றியையும் வேறு தெரிவித்து விட்டார் என்பதால் தனக்கு நேர்ந்த துயர் கூட தூசி போல தட்டப்பட்டு அந்தப்புகழ் மெருகில் மூழ்கி விடுவது கவிதை எழுதுபவர்களின் இயல்பென்று அனுமானிக்கிறேன்.

புகழ் என்பது வாழ்வாதாரம் இல்லை என்றாலும் அது மனசுள் நிகழ்த்துகிற கிறக்கம் லட்சம் வாட்ஸ் பல்பாகும்... பணம் எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது ஏதோ தற்காலிக சந்தோஷங்களை தூவி விட்டு ஓடி விடும்., ஆனால் புகழ் என்பது நிரந்தர வசந்தம் என்பது போல ரீங்காரமிடும்.. அதுவும் கழன்று ஓடிவிடக்கூடிய சாத்யக்கூறுகளுடன் தான் உள்ளது என்பதை பல விஷயங்களுக்காக பல முறைகள் புகழ் அடைந்தவர்கள் உணர்வார்கள்.. ஆரம்ப கட்ட புகழில் திளைப்பவர்கள் அதுவும் மாயை என்கிற நிதர்சனம் புரியாமல் குழம்பி பிற்பாடு பரிதாபமாகத்தெளிவார்கள்...!!



சுந்தரவடிவேலு

திருப்பூர்..

Sunday, September 27, 2009

விழா நாட்கள்..

சரஸ்வதி பூஜை இன்று..
இளம்ப்ராயங்களில் இந்த மாதிரியான விழாக்காலங்களில் மனசு உணர்ந்த ஓர் ரம்மியமான தன்மைகள், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை... அப்படி ஓர் உன்னத உணர்வில் கிறங்கிப்போயிருக்கும் இளமனது.. பட்டாம்பூச்சிக்குப் போல வண்ண வண்ணமாய் சிறகுகள் முளைத்துக் குதூகலித்த அதே விதமான தன்மைகளுடன் வாழ்க்கை நெடுக இருந்திருந்தால் ஆகாதா என்கிற பெரும் ஏக்கம் இன்று.... முதிர்ந்து கிடக்கிற மனசுக்குள் சருகுகளும், கவலை தோய்ந்த சலசலப்புக்களும்...!!
சுண்டலுக்கும் பொரிக்குமாக என் வீதியின் ஒவ்வொரு அழைப்பே இல்லாத வீடுகளுக்குள் எல்லாம் எங்கள் பிரவேசம் இருக்கும்... எவ்வித லஜ்ஜைகளும் அற்று இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிற யதார்த்தங்கள் எல்லாம் இன்று எங்கு ஓடி ஒளிந்து கொண்டனவோ அறியேன்...
பசித்திருந்தால் கூட பட்டினி கிடக்கிற பொறுமைகளும் சோம்பல்களும் இன்றைக்கு போல அன்றெல்லாம் இருந்ததில்லை... இல்லாத பசிக்கே எதையேனும் வாயில் போட்டு அரைத்து வயிற்றுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இளமை... அவ்வளவு அனாவசியமாக இருந்தாலுமே கூட அன்றைய நாட்களின் வீரியமும் விசாலமும் இந்தப் பிராயங்களில் இல்லை என்று தான் சொல்வேன். இந்த மனோபாவங்கள், சூழ்நிலைமைகள் யாவருக்குமே வாய்க்கிற பொதுவான உணர்வுக்குழப்பங்களா அல்லது பிரத்தியேகமாக என் போன்ற சில பயித்தியங்களுக்கு மட்டுமா புரியவில்லை..
--விழாக்காலங்களில் மனசை அதன் போக்கில் விடுகிற சந்தோஷங்களைக்கூட பயிற்றுவிக்க முடியாத சோபை இன்மையில் வறண்டு கிடக்கிற இந்தப்பருவம் ," பெரும் சாபம்" என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?
எல்லாரும் இப்படி இல்லை என்றே சொல்வேன்.. இன்னும் எத்தனையோ முதிர்ந்தவர்கள் இந்த மாதிரியான விழா நாட்களில் இன்னும் அதே பழைய உற்சாகம் குன்றாமல் அனுசரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... அந்த ஆரோக்யமான போக்கு ஏன் சிலருக்கு கைவரப் பெறுவதில்லை ?
நாம் பார்த்து கொண்டாடினால் தான் நம் குழந்தைகளும் அதே விதமாக அனுசரிப்பர்..
நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பேயறைந்தாற்போல முழித்துக்கொண்டிருந்தோமேயானால் நம் குழந்தைகள் இப்போதே இந்த மாதிரியான விழா நாட்களை பிரயோஜனம் இல்லாமல் உணர ஆரம்பித்து விடுவார்கள்...
ஆகவே, ஒவ்வொரு நாளையும் விழா போல அனுஷ்ட்டித்துப் பழக்குவோம் நம் குழந்தைகளுக்கு... நம் பகுத்தறிவுகளை இப்போதே அவர்களுள் திணித்து அவர்களையும் குழப்ப வேண்டாமே...!!


சுந்தரவடிவேலு.
திருப்பூர்..

Friday, September 25, 2009

பகல் கனவு .

என்னுடைய நீ.. உன்னுடைய நான்...
நம்முடைய காதல்..
ஓர் நாள் இவ்வுலகில் நீ அற்று.. நான் அற்று..
நம் காதல் அற்று..
ஆனபோதிலும் இந்த அண்டவெளியில்
நீயும் நானும் காற்றாயாவது திரிவோமோ?
அப்போதும் சந்திப்போமோ..அடையாளம் காண்போமோ?
--அல்லது கண்டும் காணாமல் ஓடும் கயமையில்
இருப்போமோ?--ஒஹ்...நாம் அவ்விதம் செய்ய மாட்டோம்..மறுபடி நம் காதலை அனுஷ்டிக்கத்துவங்குவோம்...அனேகமாக அந்தக்காதல் நாம் பிரிவதற்காக இருக்காதென்றே கருதுகிறேன்..
வா...இந்தப் பிரபஞ்சக்காதல் ஆபத்தானது..எத்தனை நேசங்களைக் கொட்டிக்கொட்டி தீர்த்தாலும் நம்மை ஓர் இழையில் பிரித்து விட வைக்கும்..நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ இருக்கச்செய்து விடும்.. அல்லது இருவரையுமே இல்லாமல் செய்து விடும்..
இது மாயை நிரம்பிய பிரபஞ்சம்..நிரந்தரமற்றது.. நிம்மதிகளை நீர்க்குமிழ்கள் போல விநியோகிக்கிற பிரதேசம் இது... நிரந்தரம் என்பது வார்த்தை அளவில் மாத்திரம் ஊடுருவித்திரிகிற பிராந்தியம் இது.. வா.. இந்த ஈனப் பிரபஞ்சம் நம் அடர்ந்த காதலை அடை காக்க முடியாமல் தடுமாறும்..
--காற்றாகவாவது நிரந்தரமாக நாம் பிரியாமல் காதல் செய்கிற ஓர் பிராந்தியம் இந்த அண்டத்தில் எங்கேனும் இருக்கும்..அங்கே செல்வோம் வா..

Thursday, September 24, 2009

அநியாயம்...

பிழையற்ற உனது மௌனங்களும்
அபஸ்வரமான எனது ராகங்களும்
ஒருங்கிணைய முயல்கிற விபரீதம்
தாங்கொணா அசூயை ஏற்படுத்துகிறது
எனக்குள்..

பூவை ஒத்த உன் மென்மைகளும்
சற்றும் அதிர்ந்திராத உன் பேச்சுக்களும்
பாறை ஒத்த எனது தன்மைகளுக்கு
மலை அளவு முரணாய் உணர்வது
என் பெருந்தன்மை தான் என்றாலும்..,

--என் மீது மய்யல் கொண்ட உன்
பெண்மை மீது லஜ்ஜை எனக்கு...
--உனக்கான ஆண் உன்னதமானவன்,
பேரழகன், கட்டுக்குலையாத காளை
ஆண்களே வியந்து விரும்பும் மேன்மை மிக்கவன்...

நீ மிதிக்கக் கூட லாயக்கற்ற பாதை நான்.,
நான் துதிக்க மட்டுமே சமைக்கப் பெற்ற தேவதை நீ...
உன் சேலையில் நூலாகும் தகுதி கூட அற்றவன் நான்.,
நீயோ என்னை உன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாய்..!
அவிழ்த்து எறிய வேண்டுகிறேன்...!!

எனக்கானவள், மிக எளியவள், எழிலற்றவள்...,
நான் கிடைக்கவில்லை எனில் நீ மறிக்கப்போவதாகக் கேள்வி..
ஓர் சேற்றுப்பன்றி கிடைக்காமல் ஓர் புள்ளி மான் தற்கொலையா?
கோவில் கும்பாபிஷேகம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாய்
ஒண்டி நிற்கிற ஓர் சாதாரண பக்தனை......குறைந்த பட்சம்
சாமியைச்சுமந்து வருகிற பல்லக்காய்
மாற்றலாம்...! --ஆனால் நீ என்னை
சாமியாகவே மாற்ற முயல்வது.... உண்மையிலேயே
என்னை உணர்ச்சியற்ற சிலையாக்கி
விடும் என்றே அனுமானிக்கிறேன்....!!

Wednesday, September 23, 2009

எதையேனும் ...

ஏதேனும் எழுத வேண்டும் என்கிற தீவிரம் சில சமயங்களில் பாடாய் படுத்துகையில் எழுதி பிளாகில் போட்டே விடுவேன். இல்லையெனில் உறக்கமே வராது. அப்படி ஒரு அனாவசிய வேகம், வெறி... என்னவோ நான் பெரிய பிரபல எழுத்தாளன் ஆவது நின்று போவது போல ஓர் பறக்காவெட்டித்தனம்..
உண்மையில் சாதிப்பவர்கள் அமைதியாகவும் யதார்த்தமாகவும் இருப்பார்கள்..என் மாதிரி சில அரைவேக்காடுகள் தான் இப்படி கிடந்து சாகும்கள்...

அப்படியான ஓர் வெறி வேகம், இந்த ரெண்டொரு நாட்கள் வரவில்லை. ஆகவே எழுதுகிற ஆவல் அறவே அற்று வெறுமே இருக்கத்தோன்றுகிறது இப்போது..இந்த விதமான மன அயர்ச்சி கூட ஓர் பலவீனம் போல தோன்றும், இயல்பாக எதையேனும் எழுதுபவர்களுக்கு... ஆகவே சுய சமாதானத்திற்காகவேனும் எதையேனும் அனர்த்தமாக நான்கு வகையறா விஷயங்களை ஓர் தத்துவஞானி போல தூவி விட்டோமே யானால் பெரிய மகா புருஷன் போல பந்தா விட ஏதுவாகும்...

மறுபடி நாளை சந்திப்போமா? (பெரிய சாலமன் பாப்பையா இவரு...)

Saturday, September 19, 2009

மனிதம்...

சமயங்களில் நம்மை மிகவும் நேசிப்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய கொடுமையான சூழல்கள் வாய்த்து விடுவதுண்டு..அது நமது திட்டம் தீட்டுதல்கள் என்கிற தன்மைகளை எல்லாம் மீறி மிக இயல்பாக, மிகவும் நியாயம் போல அநியாயத்திற்கு நிகழ்ந்து விடும்... அந்த வலிகள் வார்த்தைகளுக்கும் அப்பாலாய் கடினமான ஓர் உணர்வாய் மனசுள் படிந்து இறுகி, பின்னொரு நாளில் நம்மை நேசித்தவர்களை மீண்டும் நாம் அடைய நேர்கையில் .. இறுகிய யாவும் இளகி அவிழத்துவங்கும்... அன்று அவர்கள் நேசிக்கையில், அதனை நாம் புறக்கணிக்க நேர்ந்ததை காலத்தின் சதி என்பதாக அவர்களும் உணர்ந்து அதே நேசத்தை அவர்கள் காண்பிக்கையில் .. முழுதுமாக லே சாகி விடுவோம்...!

தவிர்த்திருக்கவே சாத்யப்பட்டிருக்காத அந்தப் புறக்கணிப்புக்கள் குறித்து பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு நேசங்களை அடர்த்தி செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆரோக்யமான தன்மை..

இன்னும் சில சந்தர்ப்பங்களில், வீரியமே அற்ற ஓர் விஷயத்திற்காக மனஸ்தாபம் கொண்டு பல வருடங்கள் பேசாமலே இருப்போம்.. அந்த சிறுமைகளை ஓர் இழையில் இருவருமே உணர்ந்து மீண்டும் உறவாட நேர்கையில் , அந்த நீண்ட அற்புதமான இடைவெளியை வெற்றிடமாக்கி விட்ட சூன்யம் இருவர் வசமும் மௌனமாய் அவஸ்தை கொள்ளச்செய்யும்...!

வாழ்க்கை மிகவும் குறுகியது...உன் மரணம் தான் நீண்ட ஆயுள் கொண்டது...உன்னுடைய தன்மைகளை அனுசரித்தே உன் மரணம் காலத்திற்கும் மறக்கப்படாமலிருக்கும்... நீ அற்பமானவனாக வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்கிற காலத்திலேயே மறக்கப்படுவாய்...!!

இப்படியாகப்பட்ட வாழ்க்கை சூழலில் பரஸ்பரம் நேசங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து வருவதே பரம சுகம்.. அதையே நமது சந்ததிகளுக்கும் பயிற்றுவிப்பதை தலையாய கடமையாகவும் கொண்டோமேயானால் அமைதியும் நிம்மதியும் எங்கெங்கிலும் ஊடுருவிக்கிடப்பதைக் காண்போம்.

இன த்வேஷங்களும் காழ்ப்புணர்வுகளும் தீவிரவாதங்களும் மலிந்து வருகிற இன்றைய சமூக சூழலில், மனித உணர்வுகளையும் , மனித உயிர்களையும் போற்றத்தக்கதாக மதித்துப்பழக வேண்டும் என்பதே நமது எல்லாருடைய ஆவல் என்று கருதுகிறேன்...

மறுபடி பகிர்வோம்... சுந்தரவடிவேலு..

Friday, September 18, 2009

ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைத் தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாதென்றே கருதுகிறேன். தமிழ் மொழி மட்டுமே தெரிந்திருந்து ஜெயகாந்தனை இன்னும் தெரியாமல் இருக்குமேயானால், தமிழைத் தெரிந்து வைத்திருப்பதே வீண் என்று சொல்வேன்.
எனக்கு முதலில் அறிமுகமான கதைப்புத்தகமே அவருடையது தான். அவருடைய கதைகளையும் அதன் நியாய தர்மங்களையும் உணர்ந்து சிலிர்க்கிற அனுபவங்கள் மகோன்னதமானவை...!
மற்ற எழுத்தாளர்கள் எனக்குத்தெரிந்து வெறுமனே வீரியமாய் மட்டும் எழுதுவார்கள், மேடையில் ஓர் ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல உரையாட முடியாமல் அதிகம் தளும்புவார்கள். ஆனால் நிறைகுடமான ஜெயகாந்தன் எழுதுகிற அதே வீரியத்துடன் மேடைகளிலும் பட்டை கிளப்புவார்..
தயவு செய்து அவரது சிறுகதைகளையும் நாவல்களையும் படிப்பீர்களாக...
இன்னும் அவர் குறித்து அதிகம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை விளம்பரப்படுத்துவது பூக்கடை விளம்பரம் போலாகி விடும்..பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?

சுந்தரவடிவேலு..

Thursday, September 17, 2009

இசை குறித்து.. இசை குறித்து....இசை..

இசை குறித்து விளக்கமாக பின்னொரு நாளில் சொல்கிறேன் என்று பெரிய இசைஞானி போல உளறி விட்டேன் என்று கருதுகிறேன். நான் சொன்னதற்காக நீங்களும் ரொம்பத்தான் கன்னத்துக்குக் கை கொடுத்துக் காத்திருப்பதாக எனக்குக் கற்பனை வேறு...தமாசுடா சாமி...
இப்படித்தான், வாழ்க்கையில் நிறையப் பேர் தன்னை பலரும் கவனிப்பதான மாயையில் மல்லாந்து கிடக்கிறார்கள்... நாய் கூட சீந்தாது என்கிற உண்மை தெரிய வருகையில் ஒரு "மண்டக்கொடச்ச்சல்" ஒன்னு வரும் பாருங்க...அதெல்லாம் அய்யா ரொம்பவே அனுபவிச்சாச்சு...

--இருந்தாலும் நமக்குத்தெருஞ்ச ரெண்டு விஷயத்தை ஒரு பண்டிதன் பாணியில பீத்திக்கிற ஒரு சுகம் இருக்கே....அதையும் அனுபவிச்சா தாம்பா புரியும்...

இசை... வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வுகளை நம் மனசுகளுக்குக் கொணர்ந்து சேர்க்கிற வல்லன்மை கொண்டவை...
...அந்தப் பியானோவின் அனாயாச சிணுங்கல்கள் .. எப்படிப்பட்ட அடியாழக் காதலையும் உணர்த்தி விடும் ஆற்றல் கொண்டவை.
...அந்த சக்சொபோனின் மெல்லிய கதறல்கள், யாதொரு சோகத்தையும் கவிதையாக்கி விடுகிற வீரியம் கொண்டவை..
வயலின் மற்றும் கித்தாரின் மீட்டல்களாகட்டும், உதடு குவித்து காற்றினை ஊடுருவச்செய்து "ஒலியில் கலைடாஸ்கொபெ" காண்பிக்கிற புல்லாங்குழல் ஆகட்டும்,
கால்களையும் தலைகளையும் கோமாளிகள் போல ஆட்டிக்கொண்டே இருக்கச் செய்கிற தபேலா ஆகட்டும்...
எந்தக் கருவிகளும் அதன் அதன் பிரத்யேக தன்மைகளில் சோடை போவதே இல்லை...
---இதனையெல்லாம் கவனிக்கிற ரசிக்கிற ஆற்றல்களில் தான் சிலர் தவறி விடுகின்றனர்...
குறிப்பாக, திரைப்படங்களில் பின்னணி இசையை மிகவும் கவனிக்க வைத்த புகழ் இளயராஜாவைத்தவிர வேறு ஒரு இசை அமைப்பாளருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்....
இதனையெல்லாம் நான் சொல்லி என்ன ஆகப்போகிறது... அப்படி நீங்கள் கவனித்துத்தான் என்ன ஆகப்போகிறது..?
அவனவனுக்கு 1008 பிரச்சினைகள் தலைக்கு மேல் இருக்கிறது...இசையை கவனி, வெங்காயத்தை கவனி .....ன்னு -- இவன் சள்ளை தாங்கலைப்பா..

மறுபடி சந்திப்போம்..
சுந்தரவடிவேலு..

Wednesday, September 16, 2009

மனித இயல்புகள்...?

தேடல்களும்

தோல்விகளும்

எந்நேரமும் உடனிருப்பவை..

ஓர் இழையில் தேடுவதே

சலிப்பாகி, தேடுவதை

நிறுத்தி விடுகையில்...

கிடைக்கும் தேடியது..!

அவ்வாறே தோல்விகளும்...

--வெற்றிக்கான ஒவ்வொரு

பிரயத்தனத்தின் போதிலும்

போட்டி போட்டுக்கொண்டு வந்து

வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி

விட்டு ஜெயித்து விடுகின்றன

தோல்விகள்.....

பிற்பாடு, பின்னொரு நாளில்

சாவகாசமாக வருகிறது வெற்றி..!

தாமதமாகவே வந்தாலும் கூட

தேடியது கிடைக்கையிலும்,

தோற்றது வெற்றி அடைகையிலும்

ஓர் புது மெருகுடன் தான்

சந்தோஷம் மனசைக் கவ்விக்கொள்கிறது..,

தேடல்களும் தோல்விகளும் நம்முடன்

அத்யந்தமாகி நெடுங்காலம் வீற்றிருந்து

வந்தாலும் ஏதோ அன்னியமாகியது போல

உடனே அவைகளைப் புறந்தள்ள

ஆசையும் அவசரமும் படுகிறோம்...!!

சுந்தரவடிவேலு,திருப்பூர்.

மிகவும்...

மிகவும்
அவசரமாகக்
காத்திருக்கிறோம்..,
ரயில் வருவதற்காக..!

நிதானமாகப்
பயணிக்கிறோம்..,
ஜன்னலில் நகர்கிற
காட்சிகளை மிகவும்
ரசித்த வண்ணமே...!!

சுந்தரவடிவேலு,
திருப்பூர்.

Sunday, September 13, 2009

இசை குறித்து...

இசை என்பது பலருக்கும் ஓர் மேம்போக்கான விஷயமாகவே உள்ளது...

திரைப்படங்களில் வருகிற பின்னணி இசை குறித்து கூட மிக சிலர் தான் கவனம் தெரிவிப்பதாகக் கருதுகிறேன். பலரும் வெறும் பாடல்களின் ரசிகர்களாகவும் அவைகளை முனுமுணுப்பதிலேயே திருப்தி கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

என்ன இசை ஒலிக்கிறது , அது எந்த இசைக்கருவியில் இருந்து ஒலிக்கிறது என்கிற புரிதல் கூட அற்று இருப்பது எனக்கு ஓர் வகைப்படுத்த முடியாத அசூயை ஏற்படுத்துவதாய் உள்ளது. அப்படி இருப்பவர்கள் குறித்து எனகென்ன இவ்வளவு அசூயை, அக்கறை , கவலை ? நான் என்ன பெரிய இசை மேதையா? என்கிற உங்களது மௌனமான கேள்விகள் எல்லாம் எனக்குக் கேட்கிறது..

எனது ஆதங்கம் எதுவான போதிலும் அதனை உரிமையுடன் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை நானே எனக்கு வழங்கிக்கொண்டுள்ளேன் என்பது எவரையும் புன்படுத்தாதென்றே கருதுகிறேன்..

இந்த இசை உணர்தல் தன்மையை இன்னும் சற்று விஸ்தாரமாக சொல்ல ஆசை படுகிறேன். இப்போதைக்கு, இது ஓர் சின்ன முன்னுரையாய் இருக்கட்டும்...

Friday, September 11, 2009

ஆதலால்...

கவிதை புனைவதற்கு
நான் யோசிப்பவை எல்லாம்
என் கைகளுக்குக் கிடைக்காதவையே..

என் இழப்புக்களையும் ஏக்கங்களையும்
பிதற்றவே நான் கவிதைகளைப் பிரயோகிக்கிறேன்...
--ஆகவே, எனக்குக் கிடைத்தவைகள்
யாவும் கவிதைகள் அல்ல..!

கவிதைகள் அல்லாதன
சுலபத்தில் என்னை சேர்ந்திருக்கும்-என்
இதயம் அதில் சோர்ந்திருக்கும்...,

கவிதை குறித்த ப்ரக்ஞை அற்றவன்
வாழ்வில் கூட நான் ஏதேனும் கவிதையை
உணர்கிறேன்..., ஆனால்
கவிஞ்ஞன் என்ற இறுமாப்பில்
இறுகியவன் வாழ்வில் - சஞ்சலம் தான் தெரிகிறது...!!

நான் தேடுகிற கவிதைகள்
ஒருக்கால் எனக்குக் கிடைக்கிற பட்சத்தில்
அதன் மேன்மைகளை இழக்க நேர்ந்து
"கவிதைகள் அற்றன"வாகி விடுமோ
என அஞ்சுகிறேன்...

--நீ எனக்கு
அற்புதமான
கவிதையாக புரிபட்டாய்...
பார்வையிலிருந்து மறைந்தும் விட்டாய்..
மீண்டும் நான் தேடினாலும்
கிடைக்காதவளாகி விடு..
கவிதைகள் உன் வசம்
இழக்க நேர்வதை நான் விரும்பவில்லை..!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

வாழ்ந்து பார்ப்போம்....

வாழ்க்கை...சமயங்களில் மகா சுவாரஸ்யமாகவும் , சமயங்களில் சவக்கிடங்காயும் மாறி மாறித் தெரிகிற கலைடாஸ்கோப்...
எல்லையற்ற பேரின்பம் பரவிப்படர்ந்து கிடப்பதான தோற்றங்களை ஏற்படுத்தி, யாவுமே மாயைகளும் கானல்களும் என்ற மாபெரும் வெறுமைகளை யதார்த்தமாக உணர்த்தி வேதனைகளையும் வெறுப்புகளையும் வியாபிக்க வைக்கிற இந்த வாழ்க்கையை--கடமைக்காக வாழும் கலையை நாம் எல்லாருமே கற்றும் தானிருக்கிறோம்...
அந்தக் கலை கை கூடாத கோழைகளே தற்கொலை என்கிற ஆயுதத்தை பிரயோகித்து, இந்தக் கிஞ்சிற்று காலம் கிலுகிலுப்பை ஆட்டி கிளுகிளுப்பூட்டுகிற இந்தப் பூ போன்ற வாழ்வினை துஷ்ப்ரயோகம் செய்து
விடுகின்றனர்...

Wednesday, September 9, 2009

ஜன்னல்..

முன்குறிப்பு: எல்லாரும் எதையாவது ஜன்னலைத்திறந்து வெளியே தேடுவார்கள்..,
நான் ஜன்னலையே தேடுகிறேன்....

என் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே
என் அறை ஜன்னலைத்தேடிக்கொண்டிருக்கிறேன்...
--எனது பொழுதுகளை
அதிகம் அபகரித்துக் கொண்டவை அவை..!

என் அறைப்புழுக்கத்திற்கு
வெளிக்காற்றை சலிக்காமல்
விநியோகித்த சதுரம் அது..

எதைச்செய்தாலும்
ஓர் இழையில் மனசுக்கு
அலுப்புத் தட்டத்
துவங்கி விடும்..,
அப்போதெல்லாம் எனக்கு
சலிப்பில்லாமல் வெளி வேடிக்கை
காண்பித்த ஜன்னல்..

மின்சாரம் பறிபோய்
தொலைக்காட்சிப் பெட்டி
அணைகிற போதெல்லாம்
அதைவிட சுவாரசியங்களை
காட்சிகளாக்கிய ஜன்னல்...

வெயிலை அறைக்குள்
சதுர கோலமாய் அழகு படுத்திய ஜன்னல்...
மழை வருகையில்
நனைந்திருக்கிற ஈர வீதி காட்டி
கவிதை எழுதத் தூண்டிய ஜன்னல்..
---இன்று
புணரமைக்க இடிக்கப் பட்டிருக்கிற
எனது வீட்டின் இடிபாடுகளில் எங்கோ
தொலைந்து போனது போல
கண்களுக்குப் புலனாகாமல்
கவிதை கிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது..

பின் குறிப்பு:
ஒரு வழியாக மீட்கப்பட்ட எனது அறை ஜன்னல், புனரமைப்பிற்குப் பிறகாக மீண்டும் எனது
அறையிலேயே புதுப்பிக்கப்பட்டது..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

Tuesday, September 8, 2009

இந்தியன் பயங்கள்....

நின்று கொண்டிருக்கிற
பேருந்தைக் கடப்பதென்றால்
சற்று பயக்காமல் இருக்க முடியாது...
எந்த ஜன்னலோரத்தில் எந்தக் கிழவி
வெற்றிலை பாக்கு எச்சில் உமிழப்
போகிறாளோ...
கடைசிக்கு, சிகப்பில்லாமல்
வெறும் எச்சிலைத் துப்பினால் கூட
தேவலாம்...!(?)
ஓர் டுபாக்கூர் மெஸ்ஸில்
பசியோடு பரோட்டாவை வாயில்
வைக்கையில் ,
வாஷ் பேசீனில் , எதாவது ஓர்
விவஸ்தை கெட்ட ஜன்மம்
காரி உமிழ்ந்து வாயை கொப்புளிக்குமோ
என்று பயக்காமல் இருக்க முடியவில்லை...!!
பொண்டாட்டியோடு ஓர்
குறுக்கு வீதியைக் கடக்கையில்
ஒரு இங்கிதம் கெட்ட
நாய், சிறுநீர் கழிக்க ஜிப்பைத்
திறந்து தொலையுமோ என்று
எப்படி சார் பயக்காமல் இருப்பது?
--அதே குறுக்கு வீதியில்
நாம் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கையில் ,
ஏதாவது ஒரு நாய்
தன் பொண்டாட்டியைக்
கூட்டிக் கொண்டு வந்து விடக்கூடாதே
என்று பயக்காமலும் தான்
இருந்து விட முடிகிறதா சாரே?

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Saturday, September 5, 2009

சுதந்திரம்...

நிழல்கள் குறித்த
அதீத ப்ரக்ஞை எனக்கு..
-நிஜங்களைப் புறக்கணிக்கிறேன்
என்பதே புரியாமல்...!
...அனிச்சைகள் மீதான
எதிர்பார்ப்புகளால் ,
நிகழ்கிற நிதர்சனங்கள் குறித்து
சற்றும் ப்ரக்ஞை இல்லை எனக்கு...
வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டே
வீட்டு விலாசம் தொலைந்த
கவலையில் என் அறை ஜன்னலோரம்
நான்....
வீடு ஜப்திக்கு வந்த போது
விலாசம் கிடைக்கப் பெற்றது...

--வெளியுலகம்
ஜன்னலற்றும் இன்னலற்றும்
இருக்கக் காண்கிறேன்...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

தொழில் தர்மம்...

அவரவர்களுக்கு வாய்த்த ஓர் தொழிலை மய்யப்படுத்தி -சம்பந்தப்படாதவர்கள் மீதெல்லாம் திணிக்கிற இயல்பு--- மனிதம் சார்ந்தது...
-முடி திருத்துகிற சலூன்காரர் தன் கடையை கடக்கிற நபர்களின் முகங்களைப் பார்ப்பாரோ இல்லையோ மண்டைகளை நிச்சயம் கவனிப்பார்.. தினத்தந்தி படிக்க வருகிற நபரைக்கூட , ஷேவிங்கா கட்டிங்கா என்பது போல பார்ப்பார்..
--அடுத்து தையல்காரர்....
ஆள் பாதியை மதிக்காமல் ஆடை பாதியை மட்டுமே அலசிக்கொண்டிருப்பார்..
--கசாப்புக் கடைக்காரர்..
கத்தரிக்காய் வாங்கக்கடந்து போனால் கூட "லெக்பீஸ் சார்...?" என்று கேட்டு மனசை அலை பாய வைத்து விடுவார்...
செருப்புத் தைக்கிறவர்-----
அப்போது தான் பாட்டாவில் புதியதாய் வாங்கி கால்களில் மாட்டியிருப்போம்..,
வார்அறுந்து தொங்குகிறதா என்று நோட்டம் விடுவார்..
விட்டால், காலையும் செருப்பையும் சேர்த்துக் கோர்த்து தைத்து விடுவார்...
--இப்படியாக எல்லாருமே அவர் அவர்கள் தொழில் தர்மங்களை தவமாய்க் கருதி வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் , எனக்கு விபரீதமாய் ஒன்று தோன்றுகிறது..
---நாமெல்லாம் சுடுகாட்டைக் கடந்து செல்கையில் , அங்கிருந்து வெட்டியான் நம்மைப் பார்ப்பான்..எதிர்காலப் பிணங்களாக?...
எதிகாலப் பிணங்களாக பார்த்தால் கூட தேவலாம்.. அவனும் தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டுபவனாக நிகழ்காலப் பிணங்களாகவே பார்க்க ஆசைப்பட்டால்?.....??

Friday, September 4, 2009

என் 1998-ஆம் வருட உளறல்கள்....

என் நிழலுக்கும் ஸ்மரணை உண்டு.. என் நிழலை நீ ஸ்பரிசிக்கையில்....

என் நிஜத்தை முள்ளே தைத்தாலும் நோகாதடி.... உன் பார்வைகள் என்னைத்தவிர்த்தாலோ மொத்தமும் நோகுதடி...

என் கனவில் வந்து நீ என் கன்னம் அறைந்தாய்... விழித்துப்பார்த்தால் உன் விரல்களின் ரேகைகள்...

உன் சுவாசக்காற்றில் வண்ணங்களைக் காண்பவன் நான்... இலக்கணப்பிழைகளுடன் என்னைச்சூழ்ந்திருப்பவர்கள் உளறிக்கொண்டே கிடக்கிறார்கள்..,

இலக்கண சுத்தமான உனது மௌனம் , என் கவிதைகளுக்கு தீனி போடுதடி...

சுந்தரவடிவேலு...

சொதப்பி விட்டது..

மெனக்கெட்டு ஓர் சிறு கட்டுரை எழுதி போஸ்ட் செய்ய முயன்றேன். என்னுடைய நேரமோ என்னவோ எழுதி போஸ்ட் செய்கையில் font மாறி என்னென்னவோ காசா மூஸா என்று தோன்றி, பிரசுரிக்கவே யோக்யதை அற்றுப்போய் விட்டது. மறுபடி அதே போல எழுத முயன்றால் சலிப்பாயுள்ளது..

நாளை வேறு ஏதேனும் முயல்கிறேன்.

நன்றி...

Wednesday, September 2, 2009

குசும்பு...

கற்று மறக்கலாம்


என்று களவாடச்


சென்றால்...


கவலைகள் கூட


மறக்கும் போலும்.,


களவுகள் தொடர்கின்றன...!


இந்த வாழ்க்கை நெடுகிலும்


நான் களவாடக் காத்துக்


கிடக்கிறது எல்லாமே...


எவர் கண்ணிலும் படாமல் எடு


என்கின்றன, நான்


திருடும் அனைத்தும்...


--அது அக்றிணை ஆகட்டும்


உயர்திணை ஆகட்டும்,


எல்லாமே என்னை ஆர்வமுடன்


திருடச்சொல்கின்றன...


என்னை அடைவதில் ஓர்


நிம்மதி இருப்பதாக அவைகள்


வாய் ஓயாமல் பிதற்றுகின்றன..




-A 3 போலீஸ் ஸ்டேஷனில்


வைத்து எஸ்.. ராஜா


என்னை விசாரித்த போதுகூட


இதே உண்மையைத்தான்


யதார்த்தமாகச்சொன்னேன்..


அண்ணன் நம்பலையே...


அடுத்த 15 நாட்கள் கழித்து


மறுவிசாரணை என்ற


கடுப்பேற்றும் அறிவிப்புடன்


உள்ளுக்குள்ளே நான்..




(அண்ணே..ஒரு சின்ன கற்பனை தான்..


எங்கனயாச்சும் F.I.R. file பண்ணிடாதீங்க அண்ணே...)




நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...