Tuesday, December 31, 2013

புத்தாண்டுகள்.

ழுவுகிற
ஒவ்வொரு
வருடமும்
தூண்டிலில் சிக்காத
மீன் போல..
அல்லது சிக்கி
பிற்பாடு
நழுவுவது போல..

1999 நழுவி
2000 வந்த போது
என்னவோ
அதீதமாகப் பட்டது..
அந்த வருடம்
பிரத்யேகமாக
எல்லாராலும்
வரவேற்ற சூழல்
இன்னும் ஞாபகத்தில்.. !!




காலங்கள் நெடுகிலும்
பிரவகிக்கிற  மாயைகள்..
டிசம்பர் 31 இரவின்
அந்தப் பிரத்யேக
உணர்வுகள் ...

என்றோ ஓர் பிராயத்தில்
பிரம்மாதப் பட்ட அந்த
லயம் இன்னும்
மனவெளியில்...

அன்றைய நமது லயத்தில்
இன்றும் உணர்ந்து
குதூகலிக்கிற
பதின் வயதினர்
சுவாரஸ்யங்களை
அடையாளம் காணாமலில்லை ..!

நம் போலவே
அவர்களும் எதுவுமற்ற
ஓர் வெறுமை ஜனவரி 1-ஐ
சந்திக்கிற தருணத்தை
தரிசிக்கிற காலம்
நமக்கு வரலாம்..

.அவர்கள் நடுவயதிலும்
நாம் மூப்பிலும்
தொங்கிக் கொண்டிருக்கிற
ஷணம் அது..!!

Tuesday, December 17, 2013

ஆண்மை .............[2 பக்கக் கதை ]

அந்த வீட்டின் முன் திருவிழா கும்பல் சூழ்ந்திருந்தது..
கத்துவதும் கதறுவதுமாக அல்லோல கல்லோலமாய் இருந்தது..
எனக்கும் இன்று சற்று ஓய்வு என்பதால் அந்தக் குழாமில் இணைந்து பட்டும் படாமலும் குசலம் விசாரிக்க ஓர் சபலம் குடையத் துவங்கிற்று..
அடுத்த ஷணம், அதனை செவ்வனே நிறைவேற்றி அந்த நாராசாரத்தினுள் நானிருந்தேன்..

"பிரச்னை என்ன?" என்று நான் தொடுத்த அறிவுப் பூர்வமான கேள்விக் கணைக்கு எந்தப் பண்ணாடைக்கும்  ஓர் தெளிந்த பதிலை சொல்கிற ஆற்றல் இல்லாதது கண்டு நான் கடுப்பானேன்..

"என்னமோ நைனா... கும்பலா கீதுன்னு நானும் வந்து இருபது நிமிஷத்துக்கு மேல ஆகுது.. பிரச்னை இன்னான்னு புடிபடவே இல்ல... "
இந்த பதில் கூட சற்று நேர்த்தியாகப் பட்டது..
புதிதாக நுழைந்தவர்கள் என்னிடம் "என்னா ஸார் ?" என்று வினவத் துவங்கிய போது தான் அந்தக் கேள்வியின் எரிச்சல் எனக்குப் புரிபட்டது..

சில நாறப் பயல்களின் வியர்வை நாற்றங்களும், பல்துலக்காத வாய் நாற்றங்களும் அந்தப் பிராந்தியத்தினின்று கழன்று வெளி வருவது தான் சாலச் சிறந்தது  என்கிற மகோன்னத சிந்தனை துளிர்த்த மாத்திரத்தில் தெறித்துப் போய்  விழுந்தேன் வெளியே..

இன்று ஓய்வு என்கிற சாவகாசத்தோடு சற்று முன்னர் தான் அற்புதமான ஓர் ஷாம்பூ  குளியல் எடுத்திருந்தேன்... இனி மறுபடி குளிக்க வேண்டும் போலுள்ளது..

அந்த சாயங்காலமே அந்த கும்பலின் பிரச்னைகளும் காரணங்களும் எனக்கு வந்தன.. அதாகப் பட்டது..
--தேசிங்கு ராஜன் மனைவி சிந்தாமணியை எவனோ அவளது நம்பரைத் தெரிந்து செல்போனில் கசுமாலமாகப் பேசி இருக்கிறான்.. இந்தப் பத்தினியோ, அதனை அவளது  வீர புருஷனிடம் பறைசாற்ற, அந்த புஜம் திரண்ட காளை ஒரு செமத்தியான ஐடியா கொடுத்திருக்கிறான்..
"அப்டியே ஜொள்ளு விடுற மாதிரி பேசி, நம்ம ஏரியாவுக்கு பயலை வர வச்சுடு.. அப்புறம் வந்ததும் டவுசரை கழட்டிடுவோம் .. இன்னான்ற ?" என்றதும் அவளும் ஆமோதித்து  பயலை வரவைத்து போட்டு பொரட்டி எடுத்திருக்கிறார்கள்..

பாவம் அவன் கெட்ட நேரம் .. இதென்னவோ ஊர்ல ஒலகத்துல நடக்காத சமாசாரம் மாதிரி போட்டு அந்த வாங்கு வாங்கிட்டாங்க.. அவனை அடிச்ச பசங்க அதுக்கு மேல  தப்பு தண்டா பண்றவங்க தான்னாலும் , என்னவோ ரொம்ப யோகியணுக  போல அந்த அப்ராணிய கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு, 108 ஐ வர வச்சு கொண்டு போற அளவுக்கு தாட்டிப் புட்டாக தாட்டி..

"நம்ம சிந்தாமணி கிட்ட எவனாச்சும் இனி வச்சுக்கிட்டேகன்னா பிச்சுப் போடுவான் இந்த தேசிங்கு.. ஆமா ன்னு மீசையை நெரவிக்கிட்டே  அவன் பேசுனதப் பார்த்தா  சும்மா ராஜ்கிரண் கணக்கா இருந்துச்சு "ன்னு சொன்னான் என்னோட எதிர் வீட்டு கணபதிசுப்பிரமணியம்..

'அடங்கொய்யாலே.. சான்சு கெடச்சா சிந்தாமணிய நானே கூட ஒரு கூட்டமில்லாத டுபாக்கூரு படத்துக்குகூட்டிட்டுப் போலாம்னு பிளான் போட்டிருந்தனே!' எனது  ஆண்மை அங்கலாய்த்தது...

                                                               [2]

அந்த சம்பவம் நடந்து முடிந்து ரெண்டல்லது மூன்று மாதங்கள் இருக்குமோ?..
அவ்வப்போது சிந்தாமணி கண்களால் என்னை வெட்டுகிறாள் என்றாலும், அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு பிற்பாடு, முன்னர் போல ஓர் நமட்டுச் சிரிப்பை நான் இப்போதெல்லாம் உதிர்ப்பதில்லை... 'எங்காவது நம்மையும் சிக்க விட்டு சிதிலப் படுத்திவிட்டால்?' என்கிற ஓர் அச்சுறுத்தல் மனதின் ஆழத்தில் வேரூன்றி விட்டது.. ஆகவே, எனது அற்ப சபலத்தை அவளிடம் விநியோகிக்கிற உத்தேசத்தை உதறித் தள்ளிவிட்டேன்..

இவ்ளோ பெரிய உலகத்தில் சிந்தாமணியை விட்டால் எத்தனை மணிகள் ஆட்டிக் கொண்டு கிடக்கிறதுகள் ??.. அதை டிங் டாங் என்று அடித்துவிட்டுப் போக வேண்டியது தானே..
நான் உதிர்க்காத சிரிப்பை அவள் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்ததாக எனக்கோர் அனுமானம், அவளது முகம் கண்டு.. ஆனால், நிச்சயம் ரகசியமாக எனது அந்த சிரிப்பை அவள் விரும்புகிறாள் என்பது ஊர்ஜிதமானால் சத்தியமாக சிரித்து வைத்து விட எனக்கொன்றும்  பிரச்னை இல்லை.. ஆனால் அதனை எப்படி ஊர்ஜிதப் படுத்துவது?..

டியூஷன் எடுக்கிற எனது மனைவியிடம் அவளது பையனோ பெண்ணோ படிக்க வருகிற சாக்கிலாவது எதையாவது அவளிடம் பேசிப் பார்க்கலாம். அதற்கும் வகையில்லாமல் அவளது குழந்தைகள் அவளது தாயினிடத்தில் வளர்வதாக தகவல்..
இதென்ன முறை என்று புரியவில்லை.. தான் பெற்ற குழந்தைகளோடு ஆனந்தமாக அளவாவிக்  கொண்டு இருக்காமல், எங்கேயோ எவரோ மேற்பார்வையில் வளர விட்டு, .... இப்படியும் சிலர் எதற்கோ இருக்கத்தான் செய்கிறார்கள்..

இப்படி சிந்தாமணி புராணம் பாடுகிற அளவு அவள் அப்டி ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால், அந்த சரும மடிப்புகளும் நெளிவு சுளிவுகளும் ஓர் இனம்புரியா வகையறா ரசாயனத்தை ராமனிலும் கூட பாய்ச்சக் கூடுமென்றே கூடுமானவரைக்கும் சொல்லிவிட முடியும்..

பிறகு...
அந்த முதல் பத்தியின் துவக்க சம்பவம் நடைபெற்று இன்று ஆறேழு மாதங்கள் ஆகி இருக்குமோ?.. இருக்கலாம்..

மறுபடி ஒரு சனிக்கிழமையின்  காலை பத்துமணி வாக்கில் அதே விதமான திருவிழா கூட்டத்தை அங்கே கண்டு அதிர்ந்தேன்..
'இப்ப எந்த மடையன்டா மாட்டினான்?' என்று குடைய ஆரம்பித்தது மண்டை..
'இவுளுக்கும் புருஷனுக்கும் வேற பொழப்பே இல்லையா?.. பாவம், அப்பாவிங்களைப் போட்டு இந்தத் தெராட்டு வாங்கறாங்களே?.. என்று என்னையும் அறியாமல் எனது உதடுகள் பிதற்றத் துவங்கிவிட்டன..

'இந்த விஷயத்தை இப்படி தூண்டில் போட்டு போட்டு ஒவ்வொரு மனுஷனையும் தர்மடி கொடுக்கறதுக்குப் பதிலா, ஒரு ஓரமா சைடு லாக் பண்ணாத மொபெட்டை நிறுத்தி  மறஞ்சிருந்து கவனிச்சு .. அதை திருட வர்றவனை லபக்குன்னு புடிச்சு ஒரு பொது மாத்து போட்டு சாவகாசமா  போலீஸ் கைல ஒப்படச்சா கூட அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா, எல்லாருக்கும் இயல்பான இந்த விஷயத்தை மையமா வச்சு அவனுக மானம் மரியாதையை வாங்கறது  இல்லாம கை கால் ஒடஞ்சு போற மாதிரி அடிக்கறதுங்கறது.., வன்மையாகக் கண்டிக்க வேண்டிய தந்திரம்..  !

சரி, இதையும் தான் பக்கம் போயி பார்த்துட்டு வருவோம்னு போனாக்கா..

அடங்கொய்யாலே.. விஷயமே வேற..
மூக்கச் சிந்திப் போட்டுட்டு அண்டர்வேரு தெரியற மாதிரி லுங்கிய ஒரு டப்பா கட்டு கட்டிக்கிட்டு மூலையில ஒக்காந்து பொட்டச்சி மாதிரி ஒப்பாரி வச்சுட்டு இருந்தான் தேசிங்கு..
"நா என்னடி கொற வச்சேன் சிந்தா.. இப்டி தனியா மச்சான  தவிக்க வுட்டுட்டு போயிட்டியே!"
ஒப்பாரியப் பார்த்தா என்னவோ பொண்டாட்டி செத்து நடு வீட்ல படுக்க வச்சிருக்கற மாதிரி தெரிஞ்சிது..

அப்பால தான் விஷயம் புரிஞ்சுது, நம்ம கோதண்டராமனோட பையன் லட்சுமிகாந்தன் சொல்லி..
"போன வாரம் எதுக்கால ஒருத்தன் பாச்சலர்னு சொல்லி குடி வந்திருக்கான். பயல் ஏதோ தனியார் வங்கியில அக்கவுண்டண்டு ன்னு புருடா விட்டுருக்கான்.. நம்ம தேசிங்கும் வெள்ளந்தியா பொண்டாட்டிய வுட்டே சோறு பரிமாறச் சொல்லி அனுப்பி இருக்காரு.. ஒரே வாரத்துல அவன் என்ன மருந்து  வச்சானோ, லபக்குன்னு அள்ளிக்கினு எங்க போனாங்கன்னே தெரியலை.. ''

என்னுடைய ஆண்மை மீது எனக்கு ஓர் கேவலமான பார்வை விழத் துவங்கிற்று ஏனோ உடனடியாக.. !!


                                                                 

Saturday, December 7, 2013

காமம்... செக்ஸ் .. புணர்ச்சி..

காமம் குறித்தான விஷயங்களை அலசி ஏதேனும் எழுதுகையில், அதற்கான தலைப்பை சற்றே கவர்ச்சியாக வைக்கையில் உடனே அது எல்லாரையும் கவரும் விதமாக அமைந்து "படித்தவர்கள்" பட்டியல் மிக நீண்டு விடுகின்றன..
ஆனால் சத்தான சாரமான விஷயமாக இருப்பினும் அதனை உருப்படியான தலைப்பற்று வெறுமே ஓர் மனதில் ஒட்டாத தலைப்பாக கொடுக்கிற பட்சத்தில், சீந்த ஆளில்லாமல் போகிறது ..

நான் இந்த பிளாக் எழுதுகிற ஓர் விஷயத்தை மட்டும் மையமாக வைத்து இந்தக் கருத்தை சொல்லவில்லை.. எல்லா ஊடகங்களிலும் இதே கதி தான் நேர்கிறது..

பிரபல இந்தியா டுடே கூட இதைத்தான் அவ்வப்போது செவ்வனே செய்துகொண்டு வருகிறது.. செக்ஸ் சர்வே என்கிற ஓர் பிரம்மாத தலைப்போடு வெளிவருகிறது.. அதற்கான விளம்பரங்கள் பல மாதங்கள் முன்னரே பிரபலமாகி விடுகிறது.. சொல்லப் போனால், அந்த இஷ்யூவை கடைகளில் காசு கொடுத்து மாத்திரமே வாங்கமுடியும்.. வழக்கமாக ரெஜிஸ்டர் போஸ்டில் வருகிற இதழ் நிச்சயம் மிஸ் ஆகிவிடும்.. போஸ்ட் மேனைக்  கேட்டால் ஏதேனும் ஜவாப் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்..

இப்படியாக, அந்த மனிதப் புணர்தல் ஓர் பிரத்யேக முக்கியத்துவம் பெறுவது இன்று நேற்றல்ல.., தொன்று தொட்டு நிகழும் ஓர் ஜொள் பிரளயம்.. 

காமம் ஓர் அலுக்காத கவிதை போல  மனிதனின் நிறைவுக் காலம் வரைக்கும் அவனைப் பற்றிக் கொண்டும், படர்ந்து கொண்டும் ஊடுருவி வழி நடத்துகிறதெனில் அது மிகையன்று..

காமம் மலரினும் மெல்லிய விஷயம் தான்.. ஆனால், அது இந்த சமூகத்தில்  பரவிக் கிடக்கிற விதம்  தான் அபத்தமானது.. கட்டிய மனைவியோடு பத்து செகண்ட் பேசவே சலிப்பைக் காண்பிக்கிற புருஷர்களும், கணவர்களிடம் தக்காளி தேங்காய்  மட்டுமே வாங்க சொல்லி விட்டு மேற்கொண்டு பேசுகிற
யோக்யதையே இல்லை என்பது போல உடனே துண்டித்து விடுகிற பத்தினிகளும்... கள்ளப் புருஷர்களோடும் கள்ளக் காதலிகளோடும் மாத்திரம் மணிக் கணக்கானது  நொடிகளாக நழுவுவது போன்ற லாவகத்தோடு பேசித் தீர்ப்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை..

உலகின் எல்லாப் பிராந்தியங்களிலும் இதே கள்ளக் கதைகள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை... அரற்றித் தான் என்ன பயன்?

இதனிடையே ராமர்களும் சீதைகளும் இல்லாமல் இல்லை.. ஆனால், ராவணர்கள் பெருவாரியாக விரவிக் கிடக்கிற இந்த சாக்கடையில் --அவர்கள் அடையாளப் படாமல் இருக்கிறார்கள்.. அல்லது தாமரை என, தாமரை இலை என ஜொலித்துக் .கொண்டிருக்கிறார்கள்.

ஓர் தேர்ந்த சினிமா விமரிசனம் போல, இந்தக் காமம் குறித்து தர்க்க ரீதியான  விமரிசனங்கள் மிகவும் அவசியம்.. சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற விதமாக இந்த ஒழுங்கீனத்தை நாம் பதிவிறக்கம் செய்வது அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.. நான் ஓர் சிறிய வட்டத்துக்ககுள்ளாக இருந்து கொண்டு இத்தப்  பெரிய விஷயத்தை வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முன்வைப்பது  எனது அவசரமும் அதிகப் பிரசங்கமும்  ஆகக் கூடும்.. 

Tuesday, December 3, 2013

பேஸ் புக்கில் ஒருவர்.....


பேஸ் புக்கில் ஒருவர் பதிவிறக்கம் செய்திருந்த பழமொழி.. இந்த ஓர் கருத்தினை எவர் தெரிவித்திருந்தாலும் அதற்காக நாம் நன்றி நவில்வோம்.. வாழ்க்கை நெடுக அச்சுறுத்தல்களும் தர்மசங்கடங்களும் வியாபித்துள்ள இந்தக் கால கட்டத்திலே, மனசை சற்றே லேசாக்குவது போன்ற பொன்மொழிகள் மனிதனுக்கு மிகப் பெரிய டானிக்.. 

பீதிகளும் வேதனைகளும் சதா ஈக்கள் போல நம் மனதை மொய்த்த வண்ணமே உள்ளதாயினும், அவைகளினின்று கழன்று ஓர் புத்துலகம் தரிசிக்க முயல்வது நமது அனைவரின் தலையாய கடமையாகும்.. !!

எல்லா சலுகைகளையும் எல்லா வசதி வாய்ப்புகளையும் சிலருக்கு ஆண்டவன் சுலபமாக நியமித்துவிடுகிறான்.. அல்லது அவைகளை நியமித்தது ஆண்டவன் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.. அல்லல்கள் அனுபவிக்கிற சிலருக்கும் அதனை நியமித்தது கடவுள் என்றே கூண்டில் நிறுத்த முயல்கிறோம்..!

இப்படி நமது அற்ப பிரச்னைகளுக்கெல்லாம் காரணகர்த்தா ஆண்டவனே என்று தீர்மானமாக சொல்வது ஆன்மீகப் பண்பாகுமா?.. ஆத்திகவாதியின் தர்மமாகுமா?.. இவர்களோடு ஒப்பிடுகையில் கடவுளை நம்பாத நாத்திகவாதி உயர்வானவனாகப் புரிகிறான் ..

Monday, December 2, 2013

காதலை..!!

எனது கனவுகளை
சூறையாடி விட்டாய்.. 
எனது கவிதைகளைக் 
கசக்கி எறிந்து விட்டாய்.. 

எனது ரசனைகளைக் 
காயப் படுத்திவிட்டாய்.. 
எனது நம்பிக்கைகளை 
நாசமாக்கி விட்டாய்.. 

என்னையும் எனது 
மன உணர்வுகளையும் 
துவம்சம் செய்வதில் 
அப்படி என்ன சுவாரஸ்யம் 
உமக்குப் பெண்ணே?

இத்தனை செய்து விட்ட 
உன்னால் ஒன்றை மாத்திரம் 
ஒன்றுமே செய்ய முடியவில்லை.. 
உன் மீதான எனது காதலை..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...