Saturday, November 29, 2014

ஆன்மீகக் குழப்பங்கள்..

எல்லா ஜீவராசிகளின் மூலாதாரங்களையும்  சற்று கண்மூடி யோசிக்கையில், நம்மில் பீறிடுகிற ஆச்சர்ய உணர்வு நம்மையே பிய்த்தெறிந்து விடும் போலும்..!
நமக்காவது ஆதாம் ஏவாள் முதற்கண் படைக்கப் பெற்றனர்.. பிற்பாடு ஆப்பிள் ஆதாமால் உண்ணப் பட்டு மனித இனம் பெருகிற்று என்கிற அந்த ஆறாமறிவு புனைந்து வைத்துள்ள கற்பனையையோ --ஒருக்கால்-- உண்மையையோ நாம் சேகரித்து வைத்திருக்கிறோம் உத்தேசமாக.. !

ஆனால் இன்னபிற ஜீவராசிகளுக்கு? அவைகளுக்கும் மனிதனே தான் ஏதேனும் கட்டுக் கதைகள் புனைந்தாக வேண்டும்.. புனைந்து அவைகள் தான் மிகவும் உண்மை என்பது போன்று நிரூபித்தாக வேண்டியுள்ளது..

இத்தனை கோடி ஜீவராசிகள் இருக்கின்றன..
நம் பெற்றோர் சேராமல் நாமில்லை.. நாம் சேராமல் நம் பிள்ளை இல்லை.. நம் பிள்ளைகள் சேராமல் நமக்குப் பேரன் பேத்திகள் இல்லை..
இதே முறை மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.. !

ஆனால்----

இந்த எல்லா ஜீவராசிகளும் பெற்றவர்களே இல்லாமல் முதல் உற்பத்தி ஒன்று நிகழ்ந்துள்ள அதிசயம் யோசிக்கையில், அங்கே தெய்வம் நம்பப் படுகிறது..

அதன் தொடர்ச்சியாக மக்களால் தெய்வங்கள் பல கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உட்படுத்தப் பட்டன.. உருவங்கள் பொறிக்கப் பட்டன.. கற்சிலைகள் செதுக்கப் பட்டன..
மனிதன் தெய்வங்களுக்கு பல பரிமாணங்கள் மற்றும்  பரிணாமங்களைக் கொடுத்தான்.. பல சக்திகளைக் கொடுத்தான்.. அரிவாளை, சூலத்தை, குத்தீட்டியை .. என்று உபகரணங்களை வழங்கினான். நிராயுதபாணியாக நின்ற கடவுளின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து முகங்களில் குரூரம் கொப்பளிக்கச் செய்தான்.. தவறு செய்கிற--- குற்ற உணர்வு கொண்ட நபர்களை மிரளச் செய்தான்.. ! இது இன்னொரு மனித சிற்பியால் புனையப் பட்ட ரௌத்ர தோரணை என்பதைக் கூடப் புரிந்தும் புரியாத ஒரு தன்மையில் பொறி கலங்கிப் போனான்.

அவனே சிலைகளைப் படைத்து அவனே அதற்கு பயந்து நெற்றியில் குட்டி காதுகள் கவ்விப் பிடித்து  'தோப்புக்கரணம் ' போடுகிறான்..
கோவணத்தைக் கட்டிவிட்டு 'ஆண்டிக் கோலம்' என்று அபசகுணம் போன்று அங்கலாய்க்கிறான் .. ராஜ அலங்காரம் செய்து விட்டு 'அதி அற்புத தரிசனம் என்று புளகித்துக் கொள்கிறான்..

கடவுளுமே இப்படித்தானே .... பாரபட்சங்களோடு தானே நம்மைப் படைத்திருக்கிறான்?? 

Wednesday, November 26, 2014

சின்னதாய் ஒரு சிந்தனை..

ட்டெறும்பை நசுக்கி துவம்சம் செய்யப் பிரயத்தனித்த என் 6 வயது மகளிடம் அவசரகதியாக நான் சொன்னேன்.. 
"பாப்பா அதை நசுக்காதே.. அப்புறம், அதை காணோம் என்று அதன் அம்மா எறும்பு தேடும்.. காணவில்லை என்று கவலைப் படும்.. செத்துப் போய் விட்டது தெரிய வந்தால் சோகத்தில் கதறி அழும்.. ப்ளீஸ் விட்டுடு பாப்பா.. "

இப்படி நான் சொன்னதும் அவள் அதை விட்டுவிட்டாள் .. எனக்குமே கூட நான் அப்படி ஒரு கற்பனையோடு சொன்னது சற்று ஆச்சர்யமாக இருந்தது.. 
அது நான் அனுமானித்தது போல கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே இருந்து விட்டால்?.. 

குட்டியைக் காணவில்லை என்று நாய் அலைமோதுவது இல்லையா?.. கன்று கண்ட பசு பாலை சுரப்பதில்லையா?.. பசுவைக் கண்ட கன்று பரவசமாகித் துள்ளிக் குதிப்பதில்லையா?

ஆனால் ஈக்கும் எறும்புக்கும்  மாத்திரம் எதுவுமில்லை போன்றே நமதறிவுக்கு எட்டுவது வேடிக்கையாக இல்லை?.. 
சுரவிய தேங்காயின் துகள் கீழே சிதறிவிட்ட அடுத்த நிமிடம் வரிசை கட்டிக் கொண்டு படர்ந்து விடுகிற எறும்புக் கூட்டத்தின் அறிவு கவனிக்கையில், நிச்சயம்  அவைகளுக்குள்ளும் ஒரு பிரம்மாண்ட உலகம் விரிந்து கிடக்கக் கூடும் என்கிற சிந்தனை துளிர்க்கிறது.. 

Monday, November 24, 2014

கமல்ஹாசன் ..

நவம்பர் 7.. கமல்ஹாசன் பிறந்த நாள்.
அன்று முதலே கமல் குறித்தும், அவரது இந்த அறுபது வயது காலம் வரைக்குமான சாதனைகளையும் என்னால் முடிந்த வரைக்கும் சொல்லிப் பார்க்கலாம் என்றொரு அவா பீறிட... ஆனால் அது இயலாமலே போய் விட்டது..    

பிறந்தநாள் முடிந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன..
அதனால் என்ன?.. கமல் குறித்து சொல்வதற்கு கால நேர அவகாசங்கள் எதற்கு?

விஜய் , அஜித்தை எல்லாம் டபுள் ஆக்ட் பார்ப்பதற்கே கந்தலாக உள்ளது..
சிங்கிள் ஆக்ட் செய்தாலே. அவர்களது காட்சிகள் மொக்கையாக உணரப் பட்டு, ஹீரோயினையோ , காமெடியனையோ காண்பித்தால் பரவா இல்லே என்று தோன்றுகிற அளவுக்குத் தான் உள்ளனர் இன்றைய சூப்பர் ஸ்டார்கள்..

ஆனால் அன்றைய ஸ்டாரான கமலோ .. இன்று நினைத்தாலும் புல்லரிக்கிற விதமாகத் தான் இருக்கிறார் மனசுள்..
தசாவதாரத்தில் 10 கேரக்டர்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனையோடு மிளிர்கிற அந்த சூட்சுமம் வேறெந்த தமிழ் நடிகர்களும் கனவோ கற்பனையோ கூட காண்பதற்கு சாத்தியப் படாத வகையிலே அமைந்திருந்தன என்றால் மிகையன்று.. !!

எந்த  பாவமானாலும் சுலபத்தில் அதனைப் பிரதிபலித்துக் காண்பிக்கிற கமலின் திறன்..
அண்ணாத்தே ஆடறார் குத்துப்பாட்டானாலும், வானிலே தேனிலா நளின ஸ்டெப்  ஆட்டமானாலும், சலங்கை ஒலி பரதநாட்டியப் பாடல்களானாலும் தத்ரூபமாக தன்னை அவைகளில் இழைத்துக் கொண்டு பணியாற்றுகிற அவரின்  சாமர்த்தியம் ... அவைகளை வர்ணிக்க வீரியம் போதாது வார்த்தைகளுக்கு.. !

அன்றைய களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி, நிழல் நிஜமாகிறது போன்ற படங்களில் இலக்கிய கூர்மை பொதிந்த வசனங்களோடு .. பிறகு சப்பாணிக் கிறுக்கனாக  16 வயதினிலே .. ஸ்ரீ தேவி யுடனான காதல் ரசம் ததும்பிய படங்கள்., அப்புறம் காலத்துக்கு ஏற்ற சிற்சில ஆந்திரக் கார மசாலாக்கள்..

இன்றைய நவீன யுகத்துக்கும் சுலபமாக விருந்து படைக்கிற அவரது ஆற்றல் நம்மை எல்லாம்  பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது..
கமலின் சமகாலத்திய நடிகர்கள் பலர் இருக்கலாம். நம்ம சூப்பர் ஸ்டார் உட்பட.. ரஜினியின் புகழும் சம்பாதியமும் வேண்டுமானால் கமலைக் காட்டிலும் பலமடங்கு எகிறி இருக்கலாம். நான் இங்கே வியாபாரங்கள் குறித்து பேச வரவில்லை..
அடர்ந்த கலைத்  திறன்களும் அவர்களுடைய மேதாவிலாசங்களுமே இங்கே அலசப் பெறுகின்றன..

பலரது ஆற்றல்கள் அடையாளப் படாமலேயே தொலைந்து போயிருக்கின்றன.. அல்லது களவாடப் பட்டுள்ளன.. களவாடியவர்கள் அதனை தன்னுடயாதாக தம்பட்டமடித்து அதன் நிமித்தமாக பிரபலம் கூட ஆகி இருக்கக்  கூடும்..
ஆனால் கமலுக்கு அப்படி எந்த அவதூறுகளும்  நிகழவில்லை என்பது  அற்புத விஷயம். அவரின் ஆற்றல்கள் உணரப் பட்டன.., படுகின்றன..!
அவரிடம் எவரும் களவாட முயன்று இதுவரை ஜெயித்ததில்லை.. அவரது தனித்துவம் என்பது நடிப்பு சம்பந்தப் பட்ட விஷயங்கள் மட்டுமன்று.. பல பரிமாணங்கள்  அவரை நம்மிடம் உயர்த்திக் காண்பிக்கின்றன..
அரசியல் விரும்பாத, அரசியல் புரியாத, அவரது கலைதாகம் , அந்த தாகத்தை இன்றளவும் அவர் ஒரு குழந்தை பால்பசியில் வீறிடுவது போன்ற தாகத்திலேயே  வைத்துக் கையாள்கிறார் என்பது பொருந்தும்..

சினிமாக்களில் சாதிவாரியாக  அவர் கையாண்ட விதம், அதற்கென அவர் பேசிய வசனங்கள் .. என்று பலவகயறா விஷயங்கள் பற்பல காட்டமான விமரிசனங்களுக்கும் எதிர்ப்பலைகளுக்கும் ஆளாகி, அவரை தர்மசங்கடங்களுக்குள் மூழ்கிடச்  செய்துள்ளன.., அந்தத் தடைகளை எல்லாம் சுலபத்தில் களைந்து விட்டு தமது கருத்துச் செறிவுகளை திரையில் மிளிரச் செய்த அவரின் மாண்பு மகத்தானதே..!!

 அவருக்கு வாய்க்கப் பெற்ற மனைவிகள், மகள்கள், மற்றும் இதர
தனிப்பட்ட அவரது வாழ்வுச் சூழல்கள்.. அவருக்கு தலைகுனிவையோ , நிமிர்ந்து  நடக்கிற வகையிலோ எவ்விதம் வேண்டுமாயினும் நிகழ்ந்திருக்கலாம்.. அவைகளைப் பொருட்டாக்கி அவரது கலை உணர்வுகளைக்  கொச்சைப் படுத்த முயல்வதோ, இன்னபிற துஷ்ப்ரயோகம் செய்வதோ  மற்றவர்களுக்கு மிக எளிதான நடைமுறை.. ஆனால், அதன் நிமித்தமாக ஒரு தேர்ந்த  கலைஞன் காயப் படக்கூடுமே என்கிற கவலையோ பயமோ கிஞ்சிற்று கூட அற்ற அவருடைய எதிராளிகள் மிகப் பெரும் வன்முறையாளர்களே எனில் அது மிகையன்று..!!

சூரியனையே கூடக் குறைகூறும் கயவர்கள் இருக்கத்தானே இருக்கிறார்கள்??  ஆனால் அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்கிறவர்களும் அதைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்  என்பதை ஞாபகம் வைப்போம்.. !!

Friday, November 21, 2014

வெள்ளை இருட்டு..

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்..

வெளிச்சம்
அணையக் காத்திருக்கிறது..
இருளோடு ஐக்கியமாக
முயல்கிறது..

இருட்டுக்கு ஒன்றும்
வெளிச்சம் தேவைப் படாது.
வெளிச்சம் மட்டுமே
எப்போதும் இருட்டை
விரட்டுகிற முயற்சியிலேயே
இருட்டோடு கரைந்து போகும்.. !!


Sunday, November 16, 2014

எச்சரிக்கைமணி ....

களிர் பேருந்துகள் போன்று மகளிர் கோவில்கள் வரவேண்டும்.. 
ஆண்களுக்குத் தனி என்பதாக கோவில்கள்.. 
அங்கே பக்தி எண்ணங்கள் மாத்திரமே பிரசன்னமாகும்.. எதிரினங்களின் அவஸ்தை அற்று இரு பாலரும் தத்தம் பிரார்த்தனைகளை கடவுளின் முன்பு சமர்ப்பித்து விட்டு வெளிவருகிற வாய்ப்பாக அது அமையும்.. 

அல்லது குறைந்த பட்சம் இந்தக் கோவில் இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்... வேண்டுமானால் தம்பதி சகிதமாக வரலாம்..  தனித்து வருகிற ஆண்களோ பெண்களோ வேறு வேறு நாட்களில் தான் அனுமதிக்கப் பெறுவர் .. 

நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியப் படாத இப்படியான திட்டங்கள் மனசுள் சூழ்கின்றன.. 
ஏனெனில், கோவில்களில் பக்தியைக் காட்டிலும் காமம் கரைபுரண்டோடுகிறது.. சபலிஷ்டுகளின் ஆதிக்கம் பெருவாரியாக இருப்பதை கவனிக்க நேர்கிறது.. உண்மை பக்தியோடு வருகிற சிலரின் மனங்களைக் கூட சலனப் படுத்துகிற விதமாக தவறானவர்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

நமது ஹிந்துக் கோவில்களுக்குப் போய் விட்டுத் திரும்ப மசூதி வழியாக வருகையில் அங்கே நிகழ்கிற தொழுகைகள் ஆண்களை மட்டுமே சார்ந்து நிகழ்வதால் இவ்வித அவா நமக்கும் எழுகிறதோ என்று தோன்றுகிறது.. 
பெண்களற்ற அந்தப் பிராந்தியம் ஆண்களின் பக்தி எண்ணங்களில் திளைப்பதாகப் படுகிறது.. 

இந்த வரைமுறை நமது கலாசாரத்தில் இழந்து காணப் படுவது புதிராக உள்ளது.. இதே முறை, நமது பக்தி மார்க்கத்திலும் புகுந்திருக்கும் பட்சத்தில் கோவில்கள் மன அழுக்குகள் குவிந்து காணப் பட்டிருக்காது.. 

ஐயப்பன் கோவிலுக்கு  மாலை அணிந்து போவது கூட உண்மையான பக்திப் பிரயாணமாக மனசு ஏற்கிறது.. ஒருக்கால் அந்தக் கோவில் நமது மாநிலம் பெயர்ந்து  கேரளத்தில் வீற்றிருப்பதால் அவ்வித ஒழுக்கவிதி கைகூடிற்றோ என்னவோ .. இருக்கலாம்..  .அதுவே நமது மாநிலத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில்  விதிகள் இன்னும் தளர்த்தப் பெற்று வேறு பல வக்கிரங்கள் நிகழ ஏதுவாக  அமைந்திருக்கலாம்.. நல்லவேளை.. !

அம்மாவாசை, பிரதோஷம், பவுர்ணமி என்று மாதங்கள் தோறும் தொடர்ந்து வருகிற  விழாக்கால கோவில் கூட்டங்களில் .. சரி , இருபாலருமே வரட்டும்.. 
ஆனால், பெண்கள் வலதுபுறம், ஆண்கள் இடதுபுறம் என்கிற ஒரு முறை கூட தீவிரமாக  பின்பற்றப் படாத விதமாக எல்லாரும் கலந்து இருபுறங்களிலும் அலைமோதுகிற விதத்திலேயே  கோவில் நிர்வாகங்கள் அனுமதிப்பது என்ன நியாய முறை என்று புலனாகவில்லை.. !

வியர்வைக் கசிவினூடே விபூதி வாங்க அவசரப் படுவதும், அதிலே தள்ளுமுள்ளு நடந்து பெண்களின் உபகரணங்கள் களவாடப் படுவதும் பிறகு குய்யோ முறையோ  என்று புலம்பித் தீர்ப்பதும், .. இதே விதமாக, பிரசாத விநியோகங்களின் போதிலும் .. 'குப்பைத் தொட்டியில் எச்சிலை விழுந்ததும் அதனைக் கவ்வ  தெறித்தோடுகிற நாய்க் கூட்டங்கள் '  போன்று முந்தியடிப்பதும்.. 

மிக சாதாரண அடிப்படை ஒழுக்கங்கள் கூட நாமின்னும் கற்காத இந்தத் தருணத்தில் .. நமது குழந்தைகள் தமிழ் படிப்பதையும் பேசுவதையும் கூட தவிர்க்கச் சொல்லி  ஆங்கிலத்தில் பிதற்ற வேண்டுமென்கிறோம்.. அதற்காக அகமலர்கிறோம்.. 

எல்லா அநாகரீகங்களையும் ரகசியமாக சுலபத்தில் அரங்கேற்றி விடுகிற நாம், நமது சந்ததிகள் மாத்திரம் உயர் ரக வாழ்வினை அனுசரிக்க வேண்டுமென்று  மெனக்கெடுகிறோம்.. 

நம்முடைய முடைநாற்றம் நமது பிள்ளைகளுக்குத் தெரிய வருகையில் நமது மூஞ்சிகளில் ஒன்று அவர்கள் காரி உமிழ்வார்கள்.. அல்லது அவர்களும் நம்மோடு கைகோர்த்து  சேற்றுள் இறங்குவார்கள்.. !

ஜாக்கிரதை..!!!

Tuesday, November 11, 2014

பரஸ்பர...

நாமெல்லாம் 
மரணத்தின் குழந்தைகள்....!

நாம் கோபிக்கிறோம் 
மதிப்பதில்லை 
வரவேற்க விரும்புவதில்லை 
என்பதற்காக 
மரணங்கள் நம்மைக் 
கோபிப்பதில்லை ... 

நம்மை எல்லாம் 
மதித்து வரவேற்கிற 
மாண்பு மரணத்திடம் 
என்றென்றும் நிரம்பித் 
ததும்புகிறது.. 
ஒரு குழந்தையினுடைய 
உதைகளைப் போன்று 
நமது எதிர்ப்பை 
ரசிக்கின்றது மரணம்.. 

பள்ளி செல்ல அடம்பிடிக்கிற 
எல்.கே.ஜி. குழந்தைகளாகிறோம் 
மரணத்திடம் நாம்.. 

வாழ்க்கையின் வலிகளை 
நிறைவு செய்துவிட்டுப் 
புறப்படத் தூண்டுகிற மரணத்தை 
ஏனோ நாமின்னும் 
பரமவைரி போன்றே பாவிக்கிறோம்.. 

உடலெனும் பையில் 
உயிரை ஜேப்படி செய்கிற 
மரணத் திருடனை 
தண்டிக்கிற போலீஸ் 
ஏழேழு லோகங்களிலும் காணோம்.. 

இன்னும் இன்னும் 
பிறப்புண்டு என்கிற 
நம்பிக்கைகளும் 
பிறவா வரமே வேண்டும்
என்கிற பிரார்த்தனைகளும் 
தொன்று தொட்ட 
நிகழ்வாகத் தொடர்கின்றன.. 

ஒரே பிறப்பு 
ஒரே மரணம் 
என்கிற கணக்கு மட்டுமே 
உள்ளதென்ற உண்மை ....

பரஸ்பரம் பிறப்புக்கும் 
இறப்புக்கும் மட்டுமே 
புரிந்த உண்மையாகக் 
கூட இருக்கக் கூடும்.. !!   ??...                                                                                                                                                                                                                                           

Wednesday, November 5, 2014

ரூம் போட்டு யோசிச்சேன்.. ??

முன்குறிப்பு.. 
boss .. இது என்னோட ஸ்மால் இமேஜினேஷன்.. எங்கயாச்சும் என்னோட ஓன் எக்ஸ்பீரியன்ஸ் ன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க.. 

பைக்கில் போய்க் கொண்டிருக்கையில், சூப்பர் ஃபிகர் ஒன்று தன்னை சில பல கி.மீ. தள்ளி ட்ராப் செய்ய சொல்கையில், எவனாவது 'ஸாரி மேடம் .. நீங்க நடந்தே போங்க.. நான் மாட்டேன்' என்று சொல்கிறவன் இந்தப் பிரபஞ்சத்தில் தேடினாலும் கிடைப்பானா?

'நடக்க முடியாமல் தள்ளாடுகிற ஒரு நோயாளியை, ஒரு வயதான கிழவன் கிழவியை மாத்திரம் தான் என்னால் ட்ராப் செய்ய  முடியும்.. நீங்கள் வேறு யாரையாவது ட்ராப் செய்யச் சொல்லுங்கள்' 
என்று சொல்கிற மனிதனை எப்படிப் பட்ட பேரழகியும் மணந்து கொள்ளலாம்.. 
ஆனா நைனா, நாட்டுநடப்பு அப்டி இல்லே... பேஞ்ச மழைக்கு இளப்பு வந்து மூச்சு விடறதே சிரமமா இருக்கற அம்மாவ அவசரமா ஆசுபத்திரிக்கு பைக்ல வச்சு கூட்டிக்கிட்டு போற போதே, ஒரு வத்தல் ஃபிகர் கையைக் காட்டி 'அண்ணே.. அவசரமா ராயல் தியேட்டர் போகணும்.. படம் போட்ருவான் .. ஆயாவ கொஞ்சம் வெய்டிங்ல போட்டுக்கிட்டு ட்ராப் பண்ணிடுங்க' என்றாலே போதும்.. 
'அம்மா நீ அப்டியே அந்த மரத்தடியில குந்திக்கினு இரு.. இந்த பாப்பாவ விட்டுட்டு வந்துடறேன்.. அப்டி யாராச்சும் உன்னை ஆஸ்பத்திரியில போயி விடறதா இருந்தா ஓகே சொல்லி ஏறிக்க .. நான் டைரக்டா அங்க வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.. பெட்ரோல் போட ஒரு அம்பதோ நூறோ சுருக்குப் பய்யில இருந்தா குடு'.. என்பான் என்றால்..  

-இப்டி ஒரு மனுஷனை குஷ்டம் புடிச்ச விபச்சாரி கூட கட்டிக்க மாட்டாள்.. 

ஆனா உலகம் அப்டியா இருக்கு?.. செட் ஆகற சல்லி ஃபிகர் கூட, பார்ட்டி வெய்டானவனா ன்னு தான் ஸ்கேன் பண்ணிப் பார்க்குதுக.. இருக்கற கோவணத்தையும் உருவி ரிப்பனா கட்டிக்கத்தான் நெனைக்குதுக தவிர, 'இந்தா.. உன்னோட பொண்டாட்டி புள்ளைங்களுக்கு எதாச்சும் வாங்கிட்டுப் போ' ன்னு அன்பா ஆதரவா எந்தப் பொம்பளையும் பேசறதா காணோம்.. 

அப்டி பேசறவளா, பேசி மனசார செய்யறவளா இருந்தா நிச்சயம் அவளை 2 வதா கூடக் கட்டிக்கலாம்.. ?? ஹிஹி.. 


Monday, November 3, 2014

கத்தி.. film review..

கத்தி பார்த்தனுங்கண்ணா ....
கழுத்தை அறுத்துட்டாங்க.. விஜய் , முருகதாஸ், அனிருத், இப்படிக் கூட்டுக் கலவையோடு கூட்டுக் களவாணிகள் போன்று மனுஷனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டிருக்கிற இவர்களது கைங்கர்யம் தாங்கலைப்பா  ரகம் ...

என்னவோ நாட்டை திருத்தறேன் பேர்வழி என்று இருக்கறவனை கொடஞ்சு எடுத்துட்டாங்க..
தெளிவில்லாத பாடல்கள்.. , எரிச்சலூட்டும் இரைச்சல் பின்னணி இசை. 

டபுள் ஆக்ட் விஜய் .. எதற்கு டபுள், எப்டி டபுள் என்பவை எல்லாம் அன்றைய எம்ஜியார் சிவாஜி படங்களில் தான் விளக்கியாக வேண்டும்.. இங்கெல்லாம் அது ஹ்ம் ஹ்ம் ... 

ஒருத்தர் பரம சாதுவாம், படிப்பாளியாம்.. இன்னொருத்தர், ஜெயில் கைதியாம், ஆனால் அந்தப் படிப்பாளி விஜய்க்கு பதிலாக வந்து கச்சை கட்டிக் கொண்டு அசத்துகிறாராம்.. 

படம் நெடுக அத்தனை விவசாய வயோதிகர்கள்.., அவர்களது அஹிம்சைப் போராட்டங்கள், அரசாங்கத்தை திருப்புவதற்கான தற்கொலைகள்.. 
விவசாயிகளின் அன்றாட அல்லல்களை, மேற்கொண்டு நாட்டில் விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டுமென்கிற அதி தீவிரப் பிரச்சாரமாக இந்தப் படம் பிரதிபலித்துக் காண்பிக்க வேண்டுமென்று மிகமிக மெனக்கெட்டு இருக்கிற முருகதாஸ் குழுவுக்கு பாராட்டுக்கள் எனிலும், அவர்கள் அனுமானித்த மாதிரி அப்படி பிரம்மாதவாகவெல்லாம் இந்தப் படம் எதையும் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.. 

படத்தின் ஆரம்ப அரைமணி முக்கால்மணி நேரங்கள் பக்கா அமெச்சூராக ....
முந்தைய பல ஹிட் படங்கள் கொடுத்த ஒரு தேர்ந்த டைரக்டரின் எந்த அடையாளங்களும் அற்று , ஒரு சாதாரண குறும்படம் எடுக்கிற மண்டு டைரக்டரின்  காட்சி அமைப்பு போன்று சொதப்பலாக இருந்தது.. 

பிற்பாடு மெஸேஜ் ஒன்னு சொல்றேன் பாருன்னு சொல்றாரு சொல்றாரு.. நெசமாலுமே பட டைட்டில் மாதிரியே தான் படமும்.. 
கொஞ்சம் ஷார்ப்பா கத்தியத் தீட்டி கழுத்தை அறுத்திருந்தா கூட உடனடியா செத்துப் போயிருக்கலாம்... ஆனா, ஒரு மொன்னக் கத்திய வச்சுக்கிட்டு போட்டு ராவுன ராவுல நம்மை எல்லாம் கொத்துசுரா கொலையுசுரா ரணகளம் பண்ணுன புண்ணியம் முருகதாஸ் விஜய் குழுவையே சாரும்.. 

இதையெல்லாம் பார்த்த பெறகு விவசாயிக பண்றாங்களோ இல்லையோ நாம  சூஸைட் பண்ணனும் போல ஒரு வெறி, ஒரு வெறுமை படம் விட்டு வெளி வருகையில் படர்வதை தவிர்க்க முடியவில்லை.. 

ஆனால், நல்லவேளையாக ஆண்டவன் நமக்கெல்லாம் வாரி வழங்கி இருக்கிற அந்த மறதி  என்கிற ஆயுதத்தை வைத்துக் கொண்டு முடிந்த வரைக்கும் இந்த மாதிரியான படங்களுக்கு உபயோகிக்க வேண்டியாகிறது.. இதையெல்லாம்  மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பவன், நிச்சயம்  முருகதாஸுக்கு  அசிஸ்டன்ட் ஆக சேர்ந்து கொள்ளலாம்.. 

ஐயோ ஐயோ.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...