Wednesday, September 30, 2009

தேக்கடியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்த கப்பல் கவிழ்ந்து முப்பது பேர்களுக்கு மேல் மூழ்கி இறந்த செய்தி கவலை அளிப்பதாக உள்ளது..

அறுபது பேர்கள் மாத்திரமே பயணிக்க தகுதி வாய்ந்த அந்தப்படகில் எண்பது நபர்கள் அமர்ந்து சென்றது ஓர் மெகா கேனத்தனம் என்றால் ... யானைகள் சூழ்ந்திருந்த ஓர் பிரதேசத்தைப்பார்பதற்காக எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்றாய் குழுமிய காரணத்தால் படகு மூழ்கியதாக சொல்கிறார்கள்..

வெளிநாடுப்பயனிகளும் அடக்கம் ... அது போக அநேகம் நபர்கள் கர்நாடக மாநிலத்தவர்கள் என்று செய்தி.. இப்படியா ஒட்டுமொத்தமாக முட்டாள் தனம் நிகழ வேண்டும்?

ஏறியவர்களுக்கும் விவஸ்தை இல்லை.. ஏற்றிய சுற்றுலா படகுக்காரர்களுக்கும் விவஸ்தை இல்லை...

விலை மதிப்பற்ற மனித உயிர்கள் .. விளையாட்டுப்போல விரயமாகி விட்ட இந்தக்கொடுமையான செய்தியை கேள்விப்பட்ட நேரம் பதைபதைக்க ஆரம்பித்த நெஞ்சம், இன்னும் அடங்கியதாகத்தெரியவில்லை...

என்னென்னவோ கனவுகளோடும் லட்சியங்களோடும் வாழ்க்கையை ரசனையோடு நகர்த்தியவர்களின் வாழ்வில் இப்படி ஓர் அலங்கோலமான விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால் விபத்தின் கோரப்பிடியில் சிக்குகிற வரைக்கும் அதனைக்குறித்த ப்ரக்ஞைகளோ ... ஏன்., கற்பனைகளோ கூட சில நேரங்களில் எவருக்கும் பிடிபடாத மர்மமாகவே இருந்து விடுகிறது..

மேற்கொண்டாவது யாவும் ஜாக்கிரதையாக நடந்து இவ்வித விபத்துக்களைத்தவிர்க்க வேண்டும் என்று சொல்வதே வரட்டுத்தனமாக இருக்கிறது...

ஏனென்றால் எவ்வளவு சொன்னாலும் பொய்யான ஓர் பைனான்சு கம்பெனியில் சென்று காசு பணங்களை சுலபத்தில் தொலைத்துப் புலம்பிச்சாகிற இந்த மூடர்கள் காகிதக்கப்பல்களில் கூட ஏறிப்போக முயல்வார்கள்...


சுந்தரவடிவேலு..

Tuesday, September 29, 2009

யாவும் மாயை...

அவதூறுகளும் கவலைகளும்ஆக்ரமித்துள்ள தருவாய்களில்எல்லாம் தனது கவிதைகளில்
அவைகளை பிரதிபலிக்க செய்வது கவிதை எழுதுபவர்களின் இயல்பு...

தங்கள் மனபாரங்களைஇறக்கி வைக்கிற தளமாய்விளங்குகிறது கவிதை... அதனைப்படித்து ரசிப்பவர்கள் அந்த பாரத்தை சற்று சுமக்கிறார்கள்., அதன் சோகம் கருதி விக்கித்துப்போகிறார்கள்., தங்கள் வாழ்விலும் முன்பொரு நாள் அவ்விதம் நிகழ்ந்து... ஆனால் அதனை இப்படி வார்த்தைப்படுத்த முயலாமல் வெறுமே உணர்ந்ததை .. இன்று அந்தக் கவிஞர் தன் கவிதையில் பிரதிபலித்திருப்பதைப்பார்த்து மெய் சிலிர்க்கிறார்..

தன் மன உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டதாக அவருக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். அதில் அந்தக் கவிஞர் நெக்குருகிப்போகிறார். தனக்கு நேர்ந்த அதே துன்பானுபவம் இன்னொரு நபருக்கும் நேர்ந்த விபரீதம் குறித்த சங்கடங்களையும் மீறி அதனை அவர் படித்துணர்ந்து நன்றியையும் வேறு தெரிவித்து விட்டார் என்பதால் தனக்கு நேர்ந்த துயர் கூட தூசி போல தட்டப்பட்டு அந்தப்புகழ் மெருகில் மூழ்கி விடுவது கவிதை எழுதுபவர்களின் இயல்பென்று அனுமானிக்கிறேன்.

புகழ் என்பது வாழ்வாதாரம் இல்லை என்றாலும் அது மனசுள் நிகழ்த்துகிற கிறக்கம் லட்சம் வாட்ஸ் பல்பாகும்... பணம் எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது ஏதோ தற்காலிக சந்தோஷங்களை தூவி விட்டு ஓடி விடும்., ஆனால் புகழ் என்பது நிரந்தர வசந்தம் என்பது போல ரீங்காரமிடும்.. அதுவும் கழன்று ஓடிவிடக்கூடிய சாத்யக்கூறுகளுடன் தான் உள்ளது என்பதை பல விஷயங்களுக்காக பல முறைகள் புகழ் அடைந்தவர்கள் உணர்வார்கள்.. ஆரம்ப கட்ட புகழில் திளைப்பவர்கள் அதுவும் மாயை என்கிற நிதர்சனம் புரியாமல் குழம்பி பிற்பாடு பரிதாபமாகத்தெளிவார்கள்...!!



சுந்தரவடிவேலு

திருப்பூர்..

Sunday, September 27, 2009

விழா நாட்கள்..

சரஸ்வதி பூஜை இன்று..
இளம்ப்ராயங்களில் இந்த மாதிரியான விழாக்காலங்களில் மனசு உணர்ந்த ஓர் ரம்மியமான தன்மைகள், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை... அப்படி ஓர் உன்னத உணர்வில் கிறங்கிப்போயிருக்கும் இளமனது.. பட்டாம்பூச்சிக்குப் போல வண்ண வண்ணமாய் சிறகுகள் முளைத்துக் குதூகலித்த அதே விதமான தன்மைகளுடன் வாழ்க்கை நெடுக இருந்திருந்தால் ஆகாதா என்கிற பெரும் ஏக்கம் இன்று.... முதிர்ந்து கிடக்கிற மனசுக்குள் சருகுகளும், கவலை தோய்ந்த சலசலப்புக்களும்...!!
சுண்டலுக்கும் பொரிக்குமாக என் வீதியின் ஒவ்வொரு அழைப்பே இல்லாத வீடுகளுக்குள் எல்லாம் எங்கள் பிரவேசம் இருக்கும்... எவ்வித லஜ்ஜைகளும் அற்று இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிற யதார்த்தங்கள் எல்லாம் இன்று எங்கு ஓடி ஒளிந்து கொண்டனவோ அறியேன்...
பசித்திருந்தால் கூட பட்டினி கிடக்கிற பொறுமைகளும் சோம்பல்களும் இன்றைக்கு போல அன்றெல்லாம் இருந்ததில்லை... இல்லாத பசிக்கே எதையேனும் வாயில் போட்டு அரைத்து வயிற்றுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இளமை... அவ்வளவு அனாவசியமாக இருந்தாலுமே கூட அன்றைய நாட்களின் வீரியமும் விசாலமும் இந்தப் பிராயங்களில் இல்லை என்று தான் சொல்வேன். இந்த மனோபாவங்கள், சூழ்நிலைமைகள் யாவருக்குமே வாய்க்கிற பொதுவான உணர்வுக்குழப்பங்களா அல்லது பிரத்தியேகமாக என் போன்ற சில பயித்தியங்களுக்கு மட்டுமா புரியவில்லை..
--விழாக்காலங்களில் மனசை அதன் போக்கில் விடுகிற சந்தோஷங்களைக்கூட பயிற்றுவிக்க முடியாத சோபை இன்மையில் வறண்டு கிடக்கிற இந்தப்பருவம் ," பெரும் சாபம்" என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?
எல்லாரும் இப்படி இல்லை என்றே சொல்வேன்.. இன்னும் எத்தனையோ முதிர்ந்தவர்கள் இந்த மாதிரியான விழா நாட்களில் இன்னும் அதே பழைய உற்சாகம் குன்றாமல் அனுசரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... அந்த ஆரோக்யமான போக்கு ஏன் சிலருக்கு கைவரப் பெறுவதில்லை ?
நாம் பார்த்து கொண்டாடினால் தான் நம் குழந்தைகளும் அதே விதமாக அனுசரிப்பர்..
நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பேயறைந்தாற்போல முழித்துக்கொண்டிருந்தோமேயானால் நம் குழந்தைகள் இப்போதே இந்த மாதிரியான விழா நாட்களை பிரயோஜனம் இல்லாமல் உணர ஆரம்பித்து விடுவார்கள்...
ஆகவே, ஒவ்வொரு நாளையும் விழா போல அனுஷ்ட்டித்துப் பழக்குவோம் நம் குழந்தைகளுக்கு... நம் பகுத்தறிவுகளை இப்போதே அவர்களுள் திணித்து அவர்களையும் குழப்ப வேண்டாமே...!!


சுந்தரவடிவேலு.
திருப்பூர்..

Friday, September 25, 2009

பகல் கனவு .

என்னுடைய நீ.. உன்னுடைய நான்...
நம்முடைய காதல்..
ஓர் நாள் இவ்வுலகில் நீ அற்று.. நான் அற்று..
நம் காதல் அற்று..
ஆனபோதிலும் இந்த அண்டவெளியில்
நீயும் நானும் காற்றாயாவது திரிவோமோ?
அப்போதும் சந்திப்போமோ..அடையாளம் காண்போமோ?
--அல்லது கண்டும் காணாமல் ஓடும் கயமையில்
இருப்போமோ?--ஒஹ்...நாம் அவ்விதம் செய்ய மாட்டோம்..மறுபடி நம் காதலை அனுஷ்டிக்கத்துவங்குவோம்...அனேகமாக அந்தக்காதல் நாம் பிரிவதற்காக இருக்காதென்றே கருதுகிறேன்..
வா...இந்தப் பிரபஞ்சக்காதல் ஆபத்தானது..எத்தனை நேசங்களைக் கொட்டிக்கொட்டி தீர்த்தாலும் நம்மை ஓர் இழையில் பிரித்து விட வைக்கும்..நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ இருக்கச்செய்து விடும்.. அல்லது இருவரையுமே இல்லாமல் செய்து விடும்..
இது மாயை நிரம்பிய பிரபஞ்சம்..நிரந்தரமற்றது.. நிம்மதிகளை நீர்க்குமிழ்கள் போல விநியோகிக்கிற பிரதேசம் இது... நிரந்தரம் என்பது வார்த்தை அளவில் மாத்திரம் ஊடுருவித்திரிகிற பிராந்தியம் இது.. வா.. இந்த ஈனப் பிரபஞ்சம் நம் அடர்ந்த காதலை அடை காக்க முடியாமல் தடுமாறும்..
--காற்றாகவாவது நிரந்தரமாக நாம் பிரியாமல் காதல் செய்கிற ஓர் பிராந்தியம் இந்த அண்டத்தில் எங்கேனும் இருக்கும்..அங்கே செல்வோம் வா..

Thursday, September 24, 2009

அநியாயம்...

பிழையற்ற உனது மௌனங்களும்
அபஸ்வரமான எனது ராகங்களும்
ஒருங்கிணைய முயல்கிற விபரீதம்
தாங்கொணா அசூயை ஏற்படுத்துகிறது
எனக்குள்..

பூவை ஒத்த உன் மென்மைகளும்
சற்றும் அதிர்ந்திராத உன் பேச்சுக்களும்
பாறை ஒத்த எனது தன்மைகளுக்கு
மலை அளவு முரணாய் உணர்வது
என் பெருந்தன்மை தான் என்றாலும்..,

--என் மீது மய்யல் கொண்ட உன்
பெண்மை மீது லஜ்ஜை எனக்கு...
--உனக்கான ஆண் உன்னதமானவன்,
பேரழகன், கட்டுக்குலையாத காளை
ஆண்களே வியந்து விரும்பும் மேன்மை மிக்கவன்...

நீ மிதிக்கக் கூட லாயக்கற்ற பாதை நான்.,
நான் துதிக்க மட்டுமே சமைக்கப் பெற்ற தேவதை நீ...
உன் சேலையில் நூலாகும் தகுதி கூட அற்றவன் நான்.,
நீயோ என்னை உன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாய்..!
அவிழ்த்து எறிய வேண்டுகிறேன்...!!

எனக்கானவள், மிக எளியவள், எழிலற்றவள்...,
நான் கிடைக்கவில்லை எனில் நீ மறிக்கப்போவதாகக் கேள்வி..
ஓர் சேற்றுப்பன்றி கிடைக்காமல் ஓர் புள்ளி மான் தற்கொலையா?
கோவில் கும்பாபிஷேகம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாய்
ஒண்டி நிற்கிற ஓர் சாதாரண பக்தனை......குறைந்த பட்சம்
சாமியைச்சுமந்து வருகிற பல்லக்காய்
மாற்றலாம்...! --ஆனால் நீ என்னை
சாமியாகவே மாற்ற முயல்வது.... உண்மையிலேயே
என்னை உணர்ச்சியற்ற சிலையாக்கி
விடும் என்றே அனுமானிக்கிறேன்....!!

Wednesday, September 23, 2009

எதையேனும் ...

ஏதேனும் எழுத வேண்டும் என்கிற தீவிரம் சில சமயங்களில் பாடாய் படுத்துகையில் எழுதி பிளாகில் போட்டே விடுவேன். இல்லையெனில் உறக்கமே வராது. அப்படி ஒரு அனாவசிய வேகம், வெறி... என்னவோ நான் பெரிய பிரபல எழுத்தாளன் ஆவது நின்று போவது போல ஓர் பறக்காவெட்டித்தனம்..
உண்மையில் சாதிப்பவர்கள் அமைதியாகவும் யதார்த்தமாகவும் இருப்பார்கள்..என் மாதிரி சில அரைவேக்காடுகள் தான் இப்படி கிடந்து சாகும்கள்...

அப்படியான ஓர் வெறி வேகம், இந்த ரெண்டொரு நாட்கள் வரவில்லை. ஆகவே எழுதுகிற ஆவல் அறவே அற்று வெறுமே இருக்கத்தோன்றுகிறது இப்போது..இந்த விதமான மன அயர்ச்சி கூட ஓர் பலவீனம் போல தோன்றும், இயல்பாக எதையேனும் எழுதுபவர்களுக்கு... ஆகவே சுய சமாதானத்திற்காகவேனும் எதையேனும் அனர்த்தமாக நான்கு வகையறா விஷயங்களை ஓர் தத்துவஞானி போல தூவி விட்டோமே யானால் பெரிய மகா புருஷன் போல பந்தா விட ஏதுவாகும்...

மறுபடி நாளை சந்திப்போமா? (பெரிய சாலமன் பாப்பையா இவரு...)

Saturday, September 19, 2009

மனிதம்...

சமயங்களில் நம்மை மிகவும் நேசிப்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய கொடுமையான சூழல்கள் வாய்த்து விடுவதுண்டு..அது நமது திட்டம் தீட்டுதல்கள் என்கிற தன்மைகளை எல்லாம் மீறி மிக இயல்பாக, மிகவும் நியாயம் போல அநியாயத்திற்கு நிகழ்ந்து விடும்... அந்த வலிகள் வார்த்தைகளுக்கும் அப்பாலாய் கடினமான ஓர் உணர்வாய் மனசுள் படிந்து இறுகி, பின்னொரு நாளில் நம்மை நேசித்தவர்களை மீண்டும் நாம் அடைய நேர்கையில் .. இறுகிய யாவும் இளகி அவிழத்துவங்கும்... அன்று அவர்கள் நேசிக்கையில், அதனை நாம் புறக்கணிக்க நேர்ந்ததை காலத்தின் சதி என்பதாக அவர்களும் உணர்ந்து அதே நேசத்தை அவர்கள் காண்பிக்கையில் .. முழுதுமாக லே சாகி விடுவோம்...!

தவிர்த்திருக்கவே சாத்யப்பட்டிருக்காத அந்தப் புறக்கணிப்புக்கள் குறித்து பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு நேசங்களை அடர்த்தி செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆரோக்யமான தன்மை..

இன்னும் சில சந்தர்ப்பங்களில், வீரியமே அற்ற ஓர் விஷயத்திற்காக மனஸ்தாபம் கொண்டு பல வருடங்கள் பேசாமலே இருப்போம்.. அந்த சிறுமைகளை ஓர் இழையில் இருவருமே உணர்ந்து மீண்டும் உறவாட நேர்கையில் , அந்த நீண்ட அற்புதமான இடைவெளியை வெற்றிடமாக்கி விட்ட சூன்யம் இருவர் வசமும் மௌனமாய் அவஸ்தை கொள்ளச்செய்யும்...!

வாழ்க்கை மிகவும் குறுகியது...உன் மரணம் தான் நீண்ட ஆயுள் கொண்டது...உன்னுடைய தன்மைகளை அனுசரித்தே உன் மரணம் காலத்திற்கும் மறக்கப்படாமலிருக்கும்... நீ அற்பமானவனாக வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்கிற காலத்திலேயே மறக்கப்படுவாய்...!!

இப்படியாகப்பட்ட வாழ்க்கை சூழலில் பரஸ்பரம் நேசங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து வருவதே பரம சுகம்.. அதையே நமது சந்ததிகளுக்கும் பயிற்றுவிப்பதை தலையாய கடமையாகவும் கொண்டோமேயானால் அமைதியும் நிம்மதியும் எங்கெங்கிலும் ஊடுருவிக்கிடப்பதைக் காண்போம்.

இன த்வேஷங்களும் காழ்ப்புணர்வுகளும் தீவிரவாதங்களும் மலிந்து வருகிற இன்றைய சமூக சூழலில், மனித உணர்வுகளையும் , மனித உயிர்களையும் போற்றத்தக்கதாக மதித்துப்பழக வேண்டும் என்பதே நமது எல்லாருடைய ஆவல் என்று கருதுகிறேன்...

மறுபடி பகிர்வோம்... சுந்தரவடிவேலு..

Friday, September 18, 2009

ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைத் தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாதென்றே கருதுகிறேன். தமிழ் மொழி மட்டுமே தெரிந்திருந்து ஜெயகாந்தனை இன்னும் தெரியாமல் இருக்குமேயானால், தமிழைத் தெரிந்து வைத்திருப்பதே வீண் என்று சொல்வேன்.
எனக்கு முதலில் அறிமுகமான கதைப்புத்தகமே அவருடையது தான். அவருடைய கதைகளையும் அதன் நியாய தர்மங்களையும் உணர்ந்து சிலிர்க்கிற அனுபவங்கள் மகோன்னதமானவை...!
மற்ற எழுத்தாளர்கள் எனக்குத்தெரிந்து வெறுமனே வீரியமாய் மட்டும் எழுதுவார்கள், மேடையில் ஓர் ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல உரையாட முடியாமல் அதிகம் தளும்புவார்கள். ஆனால் நிறைகுடமான ஜெயகாந்தன் எழுதுகிற அதே வீரியத்துடன் மேடைகளிலும் பட்டை கிளப்புவார்..
தயவு செய்து அவரது சிறுகதைகளையும் நாவல்களையும் படிப்பீர்களாக...
இன்னும் அவர் குறித்து அதிகம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை விளம்பரப்படுத்துவது பூக்கடை விளம்பரம் போலாகி விடும்..பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?

சுந்தரவடிவேலு..

Thursday, September 17, 2009

இசை குறித்து.. இசை குறித்து....இசை..

இசை குறித்து விளக்கமாக பின்னொரு நாளில் சொல்கிறேன் என்று பெரிய இசைஞானி போல உளறி விட்டேன் என்று கருதுகிறேன். நான் சொன்னதற்காக நீங்களும் ரொம்பத்தான் கன்னத்துக்குக் கை கொடுத்துக் காத்திருப்பதாக எனக்குக் கற்பனை வேறு...தமாசுடா சாமி...
இப்படித்தான், வாழ்க்கையில் நிறையப் பேர் தன்னை பலரும் கவனிப்பதான மாயையில் மல்லாந்து கிடக்கிறார்கள்... நாய் கூட சீந்தாது என்கிற உண்மை தெரிய வருகையில் ஒரு "மண்டக்கொடச்ச்சல்" ஒன்னு வரும் பாருங்க...அதெல்லாம் அய்யா ரொம்பவே அனுபவிச்சாச்சு...

--இருந்தாலும் நமக்குத்தெருஞ்ச ரெண்டு விஷயத்தை ஒரு பண்டிதன் பாணியில பீத்திக்கிற ஒரு சுகம் இருக்கே....அதையும் அனுபவிச்சா தாம்பா புரியும்...

இசை... வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வுகளை நம் மனசுகளுக்குக் கொணர்ந்து சேர்க்கிற வல்லன்மை கொண்டவை...
...அந்தப் பியானோவின் அனாயாச சிணுங்கல்கள் .. எப்படிப்பட்ட அடியாழக் காதலையும் உணர்த்தி விடும் ஆற்றல் கொண்டவை.
...அந்த சக்சொபோனின் மெல்லிய கதறல்கள், யாதொரு சோகத்தையும் கவிதையாக்கி விடுகிற வீரியம் கொண்டவை..
வயலின் மற்றும் கித்தாரின் மீட்டல்களாகட்டும், உதடு குவித்து காற்றினை ஊடுருவச்செய்து "ஒலியில் கலைடாஸ்கொபெ" காண்பிக்கிற புல்லாங்குழல் ஆகட்டும்,
கால்களையும் தலைகளையும் கோமாளிகள் போல ஆட்டிக்கொண்டே இருக்கச் செய்கிற தபேலா ஆகட்டும்...
எந்தக் கருவிகளும் அதன் அதன் பிரத்யேக தன்மைகளில் சோடை போவதே இல்லை...
---இதனையெல்லாம் கவனிக்கிற ரசிக்கிற ஆற்றல்களில் தான் சிலர் தவறி விடுகின்றனர்...
குறிப்பாக, திரைப்படங்களில் பின்னணி இசையை மிகவும் கவனிக்க வைத்த புகழ் இளயராஜாவைத்தவிர வேறு ஒரு இசை அமைப்பாளருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்....
இதனையெல்லாம் நான் சொல்லி என்ன ஆகப்போகிறது... அப்படி நீங்கள் கவனித்துத்தான் என்ன ஆகப்போகிறது..?
அவனவனுக்கு 1008 பிரச்சினைகள் தலைக்கு மேல் இருக்கிறது...இசையை கவனி, வெங்காயத்தை கவனி .....ன்னு -- இவன் சள்ளை தாங்கலைப்பா..

மறுபடி சந்திப்போம்..
சுந்தரவடிவேலு..

Wednesday, September 16, 2009

மனித இயல்புகள்...?

தேடல்களும்

தோல்விகளும்

எந்நேரமும் உடனிருப்பவை..

ஓர் இழையில் தேடுவதே

சலிப்பாகி, தேடுவதை

நிறுத்தி விடுகையில்...

கிடைக்கும் தேடியது..!

அவ்வாறே தோல்விகளும்...

--வெற்றிக்கான ஒவ்வொரு

பிரயத்தனத்தின் போதிலும்

போட்டி போட்டுக்கொண்டு வந்து

வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி

விட்டு ஜெயித்து விடுகின்றன

தோல்விகள்.....

பிற்பாடு, பின்னொரு நாளில்

சாவகாசமாக வருகிறது வெற்றி..!

தாமதமாகவே வந்தாலும் கூட

தேடியது கிடைக்கையிலும்,

தோற்றது வெற்றி அடைகையிலும்

ஓர் புது மெருகுடன் தான்

சந்தோஷம் மனசைக் கவ்விக்கொள்கிறது..,

தேடல்களும் தோல்விகளும் நம்முடன்

அத்யந்தமாகி நெடுங்காலம் வீற்றிருந்து

வந்தாலும் ஏதோ அன்னியமாகியது போல

உடனே அவைகளைப் புறந்தள்ள

ஆசையும் அவசரமும் படுகிறோம்...!!

சுந்தரவடிவேலு,திருப்பூர்.

மிகவும்...

மிகவும்
அவசரமாகக்
காத்திருக்கிறோம்..,
ரயில் வருவதற்காக..!

நிதானமாகப்
பயணிக்கிறோம்..,
ஜன்னலில் நகர்கிற
காட்சிகளை மிகவும்
ரசித்த வண்ணமே...!!

சுந்தரவடிவேலு,
திருப்பூர்.

Sunday, September 13, 2009

இசை குறித்து...

இசை என்பது பலருக்கும் ஓர் மேம்போக்கான விஷயமாகவே உள்ளது...

திரைப்படங்களில் வருகிற பின்னணி இசை குறித்து கூட மிக சிலர் தான் கவனம் தெரிவிப்பதாகக் கருதுகிறேன். பலரும் வெறும் பாடல்களின் ரசிகர்களாகவும் அவைகளை முனுமுணுப்பதிலேயே திருப்தி கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

என்ன இசை ஒலிக்கிறது , அது எந்த இசைக்கருவியில் இருந்து ஒலிக்கிறது என்கிற புரிதல் கூட அற்று இருப்பது எனக்கு ஓர் வகைப்படுத்த முடியாத அசூயை ஏற்படுத்துவதாய் உள்ளது. அப்படி இருப்பவர்கள் குறித்து எனகென்ன இவ்வளவு அசூயை, அக்கறை , கவலை ? நான் என்ன பெரிய இசை மேதையா? என்கிற உங்களது மௌனமான கேள்விகள் எல்லாம் எனக்குக் கேட்கிறது..

எனது ஆதங்கம் எதுவான போதிலும் அதனை உரிமையுடன் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை நானே எனக்கு வழங்கிக்கொண்டுள்ளேன் என்பது எவரையும் புன்படுத்தாதென்றே கருதுகிறேன்..

இந்த இசை உணர்தல் தன்மையை இன்னும் சற்று விஸ்தாரமாக சொல்ல ஆசை படுகிறேன். இப்போதைக்கு, இது ஓர் சின்ன முன்னுரையாய் இருக்கட்டும்...

Friday, September 11, 2009

ஆதலால்...

கவிதை புனைவதற்கு
நான் யோசிப்பவை எல்லாம்
என் கைகளுக்குக் கிடைக்காதவையே..

என் இழப்புக்களையும் ஏக்கங்களையும்
பிதற்றவே நான் கவிதைகளைப் பிரயோகிக்கிறேன்...
--ஆகவே, எனக்குக் கிடைத்தவைகள்
யாவும் கவிதைகள் அல்ல..!

கவிதைகள் அல்லாதன
சுலபத்தில் என்னை சேர்ந்திருக்கும்-என்
இதயம் அதில் சோர்ந்திருக்கும்...,

கவிதை குறித்த ப்ரக்ஞை அற்றவன்
வாழ்வில் கூட நான் ஏதேனும் கவிதையை
உணர்கிறேன்..., ஆனால்
கவிஞ்ஞன் என்ற இறுமாப்பில்
இறுகியவன் வாழ்வில் - சஞ்சலம் தான் தெரிகிறது...!!

நான் தேடுகிற கவிதைகள்
ஒருக்கால் எனக்குக் கிடைக்கிற பட்சத்தில்
அதன் மேன்மைகளை இழக்க நேர்ந்து
"கவிதைகள் அற்றன"வாகி விடுமோ
என அஞ்சுகிறேன்...

--நீ எனக்கு
அற்புதமான
கவிதையாக புரிபட்டாய்...
பார்வையிலிருந்து மறைந்தும் விட்டாய்..
மீண்டும் நான் தேடினாலும்
கிடைக்காதவளாகி விடு..
கவிதைகள் உன் வசம்
இழக்க நேர்வதை நான் விரும்பவில்லை..!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

வாழ்ந்து பார்ப்போம்....

வாழ்க்கை...சமயங்களில் மகா சுவாரஸ்யமாகவும் , சமயங்களில் சவக்கிடங்காயும் மாறி மாறித் தெரிகிற கலைடாஸ்கோப்...
எல்லையற்ற பேரின்பம் பரவிப்படர்ந்து கிடப்பதான தோற்றங்களை ஏற்படுத்தி, யாவுமே மாயைகளும் கானல்களும் என்ற மாபெரும் வெறுமைகளை யதார்த்தமாக உணர்த்தி வேதனைகளையும் வெறுப்புகளையும் வியாபிக்க வைக்கிற இந்த வாழ்க்கையை--கடமைக்காக வாழும் கலையை நாம் எல்லாருமே கற்றும் தானிருக்கிறோம்...
அந்தக் கலை கை கூடாத கோழைகளே தற்கொலை என்கிற ஆயுதத்தை பிரயோகித்து, இந்தக் கிஞ்சிற்று காலம் கிலுகிலுப்பை ஆட்டி கிளுகிளுப்பூட்டுகிற இந்தப் பூ போன்ற வாழ்வினை துஷ்ப்ரயோகம் செய்து
விடுகின்றனர்...

Wednesday, September 9, 2009

ஜன்னல்..

முன்குறிப்பு: எல்லாரும் எதையாவது ஜன்னலைத்திறந்து வெளியே தேடுவார்கள்..,
நான் ஜன்னலையே தேடுகிறேன்....

என் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே
என் அறை ஜன்னலைத்தேடிக்கொண்டிருக்கிறேன்...
--எனது பொழுதுகளை
அதிகம் அபகரித்துக் கொண்டவை அவை..!

என் அறைப்புழுக்கத்திற்கு
வெளிக்காற்றை சலிக்காமல்
விநியோகித்த சதுரம் அது..

எதைச்செய்தாலும்
ஓர் இழையில் மனசுக்கு
அலுப்புத் தட்டத்
துவங்கி விடும்..,
அப்போதெல்லாம் எனக்கு
சலிப்பில்லாமல் வெளி வேடிக்கை
காண்பித்த ஜன்னல்..

மின்சாரம் பறிபோய்
தொலைக்காட்சிப் பெட்டி
அணைகிற போதெல்லாம்
அதைவிட சுவாரசியங்களை
காட்சிகளாக்கிய ஜன்னல்...

வெயிலை அறைக்குள்
சதுர கோலமாய் அழகு படுத்திய ஜன்னல்...
மழை வருகையில்
நனைந்திருக்கிற ஈர வீதி காட்டி
கவிதை எழுதத் தூண்டிய ஜன்னல்..
---இன்று
புணரமைக்க இடிக்கப் பட்டிருக்கிற
எனது வீட்டின் இடிபாடுகளில் எங்கோ
தொலைந்து போனது போல
கண்களுக்குப் புலனாகாமல்
கவிதை கிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது..

பின் குறிப்பு:
ஒரு வழியாக மீட்கப்பட்ட எனது அறை ஜன்னல், புனரமைப்பிற்குப் பிறகாக மீண்டும் எனது
அறையிலேயே புதுப்பிக்கப்பட்டது..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

Tuesday, September 8, 2009

இந்தியன் பயங்கள்....

நின்று கொண்டிருக்கிற
பேருந்தைக் கடப்பதென்றால்
சற்று பயக்காமல் இருக்க முடியாது...
எந்த ஜன்னலோரத்தில் எந்தக் கிழவி
வெற்றிலை பாக்கு எச்சில் உமிழப்
போகிறாளோ...
கடைசிக்கு, சிகப்பில்லாமல்
வெறும் எச்சிலைத் துப்பினால் கூட
தேவலாம்...!(?)
ஓர் டுபாக்கூர் மெஸ்ஸில்
பசியோடு பரோட்டாவை வாயில்
வைக்கையில் ,
வாஷ் பேசீனில் , எதாவது ஓர்
விவஸ்தை கெட்ட ஜன்மம்
காரி உமிழ்ந்து வாயை கொப்புளிக்குமோ
என்று பயக்காமல் இருக்க முடியவில்லை...!!
பொண்டாட்டியோடு ஓர்
குறுக்கு வீதியைக் கடக்கையில்
ஒரு இங்கிதம் கெட்ட
நாய், சிறுநீர் கழிக்க ஜிப்பைத்
திறந்து தொலையுமோ என்று
எப்படி சார் பயக்காமல் இருப்பது?
--அதே குறுக்கு வீதியில்
நாம் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கையில் ,
ஏதாவது ஒரு நாய்
தன் பொண்டாட்டியைக்
கூட்டிக் கொண்டு வந்து விடக்கூடாதே
என்று பயக்காமலும் தான்
இருந்து விட முடிகிறதா சாரே?

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Saturday, September 5, 2009

சுதந்திரம்...

நிழல்கள் குறித்த
அதீத ப்ரக்ஞை எனக்கு..
-நிஜங்களைப் புறக்கணிக்கிறேன்
என்பதே புரியாமல்...!
...அனிச்சைகள் மீதான
எதிர்பார்ப்புகளால் ,
நிகழ்கிற நிதர்சனங்கள் குறித்து
சற்றும் ப்ரக்ஞை இல்லை எனக்கு...
வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டே
வீட்டு விலாசம் தொலைந்த
கவலையில் என் அறை ஜன்னலோரம்
நான்....
வீடு ஜப்திக்கு வந்த போது
விலாசம் கிடைக்கப் பெற்றது...

--வெளியுலகம்
ஜன்னலற்றும் இன்னலற்றும்
இருக்கக் காண்கிறேன்...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

தொழில் தர்மம்...

அவரவர்களுக்கு வாய்த்த ஓர் தொழிலை மய்யப்படுத்தி -சம்பந்தப்படாதவர்கள் மீதெல்லாம் திணிக்கிற இயல்பு--- மனிதம் சார்ந்தது...
-முடி திருத்துகிற சலூன்காரர் தன் கடையை கடக்கிற நபர்களின் முகங்களைப் பார்ப்பாரோ இல்லையோ மண்டைகளை நிச்சயம் கவனிப்பார்.. தினத்தந்தி படிக்க வருகிற நபரைக்கூட , ஷேவிங்கா கட்டிங்கா என்பது போல பார்ப்பார்..
--அடுத்து தையல்காரர்....
ஆள் பாதியை மதிக்காமல் ஆடை பாதியை மட்டுமே அலசிக்கொண்டிருப்பார்..
--கசாப்புக் கடைக்காரர்..
கத்தரிக்காய் வாங்கக்கடந்து போனால் கூட "லெக்பீஸ் சார்...?" என்று கேட்டு மனசை அலை பாய வைத்து விடுவார்...
செருப்புத் தைக்கிறவர்-----
அப்போது தான் பாட்டாவில் புதியதாய் வாங்கி கால்களில் மாட்டியிருப்போம்..,
வார்அறுந்து தொங்குகிறதா என்று நோட்டம் விடுவார்..
விட்டால், காலையும் செருப்பையும் சேர்த்துக் கோர்த்து தைத்து விடுவார்...
--இப்படியாக எல்லாருமே அவர் அவர்கள் தொழில் தர்மங்களை தவமாய்க் கருதி வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் , எனக்கு விபரீதமாய் ஒன்று தோன்றுகிறது..
---நாமெல்லாம் சுடுகாட்டைக் கடந்து செல்கையில் , அங்கிருந்து வெட்டியான் நம்மைப் பார்ப்பான்..எதிர்காலப் பிணங்களாக?...
எதிகாலப் பிணங்களாக பார்த்தால் கூட தேவலாம்.. அவனும் தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டுபவனாக நிகழ்காலப் பிணங்களாகவே பார்க்க ஆசைப்பட்டால்?.....??

Friday, September 4, 2009

என் 1998-ஆம் வருட உளறல்கள்....

என் நிழலுக்கும் ஸ்மரணை உண்டு.. என் நிழலை நீ ஸ்பரிசிக்கையில்....

என் நிஜத்தை முள்ளே தைத்தாலும் நோகாதடி.... உன் பார்வைகள் என்னைத்தவிர்த்தாலோ மொத்தமும் நோகுதடி...

என் கனவில் வந்து நீ என் கன்னம் அறைந்தாய்... விழித்துப்பார்த்தால் உன் விரல்களின் ரேகைகள்...

உன் சுவாசக்காற்றில் வண்ணங்களைக் காண்பவன் நான்... இலக்கணப்பிழைகளுடன் என்னைச்சூழ்ந்திருப்பவர்கள் உளறிக்கொண்டே கிடக்கிறார்கள்..,

இலக்கண சுத்தமான உனது மௌனம் , என் கவிதைகளுக்கு தீனி போடுதடி...

சுந்தரவடிவேலு...

சொதப்பி விட்டது..

மெனக்கெட்டு ஓர் சிறு கட்டுரை எழுதி போஸ்ட் செய்ய முயன்றேன். என்னுடைய நேரமோ என்னவோ எழுதி போஸ்ட் செய்கையில் font மாறி என்னென்னவோ காசா மூஸா என்று தோன்றி, பிரசுரிக்கவே யோக்யதை அற்றுப்போய் விட்டது. மறுபடி அதே போல எழுத முயன்றால் சலிப்பாயுள்ளது..

நாளை வேறு ஏதேனும் முயல்கிறேன்.

நன்றி...

Wednesday, September 2, 2009

குசும்பு...

கற்று மறக்கலாம்


என்று களவாடச்


சென்றால்...


கவலைகள் கூட


மறக்கும் போலும்.,


களவுகள் தொடர்கின்றன...!


இந்த வாழ்க்கை நெடுகிலும்


நான் களவாடக் காத்துக்


கிடக்கிறது எல்லாமே...


எவர் கண்ணிலும் படாமல் எடு


என்கின்றன, நான்


திருடும் அனைத்தும்...


--அது அக்றிணை ஆகட்டும்


உயர்திணை ஆகட்டும்,


எல்லாமே என்னை ஆர்வமுடன்


திருடச்சொல்கின்றன...


என்னை அடைவதில் ஓர்


நிம்மதி இருப்பதாக அவைகள்


வாய் ஓயாமல் பிதற்றுகின்றன..




-A 3 போலீஸ் ஸ்டேஷனில்


வைத்து எஸ்.. ராஜா


என்னை விசாரித்த போதுகூட


இதே உண்மையைத்தான்


யதார்த்தமாகச்சொன்னேன்..


அண்ணன் நம்பலையே...


அடுத்த 15 நாட்கள் கழித்து


மறுவிசாரணை என்ற


கடுப்பேற்றும் அறிவிப்புடன்


உள்ளுக்குள்ளே நான்..




(அண்ணே..ஒரு சின்ன கற்பனை தான்..


எங்கனயாச்சும் F.I.R. file பண்ணிடாதீங்க அண்ணே...)




Tuesday, September 1, 2009

உன்னிடத்தில் மட்டும்..

உன் நிபந்தனைகளுக்குக்
கட்டுப்படுவதையே
சுதந்திரமாய் உணர்கிறேன்...
உன் யாதொரு வேண்டுகோளுக்கும்
இணங்கிடும் அவசரம்
எப்போதும் என் வசம்...!

என் எல்லா வட்டாரங்களும்
கல்லுளி மங்கனாய்
என்னை அபிப்ராயித்திருக்க,
--உன்னிடம் மாத்திரம்
என் தாமதத்தை நான்
மிகவும் அநாகரிகமாய் உணர்கிறேன்..!!

உன்னிடம் மட்டுமே
எனக்குப் பறந்து காண்பிக்க
வேண்டுமென்று தோன்றுகின்றது.,
--சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...