Sunday, December 30, 2012

கும்கி [review]

கும்கி பார்த்தேன்..
முன்பகுதியில் சில தடுமாற்றங்கள் இருப்பினும், தொடர்ந்து பயணிக்கையில் ஓர் ஒட்டுதல் பீரிட்டுவிடுகிறது..
அத்தப் பெரிய யானையையும் மேய்த்துக் கொண்டு, காதலையும் மேய்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை எந்த நடிப்பையும் காண்பிக்காமல் இயல்பாக செய்திருக்கிறார் பிரபு மகன் விக்ரம்ப்ரபு...

அந்தப் பச்சை பசேல் வெளிகளினூடே அம்மூவரும் வலம் வருவதும்... ஓர் முரடர்கள் நிரம்பிய கிராமத்துக்குத் தேவையான கும்கி யானையை, தன்னுடைய கோவில் யானை தான் "கும்கி "என்று பொய் சொல்லி ஒப்பேற்றுவதும்.. அதன் நிமித்தமாக அவர்கள் அந்த கிராமத்திலேயே தங்க நேர்வதும்.. அந்தச் சந்திலே நாயகன் காதல் சிந்து பாடுவதும்.. உடனிருக்கிற நபர் "யானை டுபாக்கூர் என்று தெரிந்தால் டின்னுக் கட்டிவிடுவார்களே மொரட்டுப் பசங்கள்" என்று நகைச் சுவையாக பயப்பதும்..
--நழுவுகிற நிமிடங்களை அப்டியே அலாக்காக யானை மீது உட்கார  வைத்து நமக்குப் படம் காட்டியிருக்கிறார்கள்...

இமானின் பின்னணி இசை மற்றும் அவ்வபோது ரீங்கரிக்கிற தெம்மாங்குகள் .. ரியல்லி சூபர்ப்..

கடினமான ஓர் திரைக் கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிற  பிரபு சாலமனாகட்டும், தனது காமெராவில் ஒளி ஓவியம் வடித்திருக்கிற சுகுமார் ஆகட்டும் .. இந்தக் காலகட்டத்தின் சினிமா உலகத்துக்கு சவால் விடுபவர்கள்..

ஓர் ஆங்கிலபாணி சினிமாவை மிக சுலபமாக நமது கண்முன் நிறுத்தியுள்ளார்கள்... ஆனால் இதற்கென அவர்கள் பட்ட கடின உழைப்பை நாமெல்லாம் மிக சுலபத்தில் அடையாளம் கண்டுகொண்டு வியக்கமுடியும். நன்றி.. 

அமெரிக்க நண்பனுக்கு ஓர் கடிதம்..


அன்பு செந்தில்.... சாம்..
வடிவேல் நான். நலம், நலமறிய அவா.    

செல்போனில் என்னோடு நீ உரையாடிய அந்நாளிலேயே , "பொன்னான உமது நேரத்தை என்னோடு உரையாட செலவிட்ட" மைக்காக நன்றி நவிலலாம் என்றிருந்தவன் ஏனோ தாமதப் பட்டுவிட்டேன்.. 

காலச்சுழலில் யாவரும் புலம்பெயர்வதே யதார்த்த நிகழ்வாக உள்ளது இந்தப் பிரபஞ்சமெங்கிலும் ..!. ஓர் பிரத்யேக பதின் வயதுகளில் யாவருமாக கூடிக் குழுமி .. பிரிவதற்கான வாய்ப்பே அசாத்தியம் போல ஓர் மாயை பின்னிப் பிணைவதும் பற்றிப் படர்வதும்.. பிற்பாடு ஓரிழையில் இவனெங்கோ அவனெங்கோ என்கிற விதமாக கடல் அலை போல காலம் இழுத்துக் கொண்டு போய் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தளத்தில் நிலை பெறச் செய்கிற இந்த வாழ்வின் மர்மம் சுவாரஸ்யம் நிரம்பியது.. இல்லையா செந்தில்??

என்போன்ற சிலரை எந்த அலையும் இழுக்கவியலாத ஓர் பாறைத்தன்மையில் படிந்து நிற்கவும் வைத்துவிடுகிறது..." இந்த சொந்த மண்ணை, இந்த இன்ப இந்தியாவை விட்டு எந்த சக்தியும் அடித்து சென்று விடமுடியாது " என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளமுடிகிறது..  "இத விட்டா நமக்கு வேற கதி இல்லை" என்று மாரடித்துக் கொள்ளவும் முடிகிறது..

என்னவோ இதையெல்லாம் இந்த ஷணத்தில் உமக்குச் சொல்லத் தோன்றிய மாத்திரத்தில் சொல்கிறேனே தவிர முந்தைய அனுமானங்கள்   எதுவும் இல்லை..

நண்பர்களை விட்டு சிலர் உன்போல தேசம் கடந்து விடுகின்றனர்... அங்கிருந்து உமது மகள் பல மைல் தூரங்கள் தள்ளிப் போய் படிக்கவேண்டிய சூழல்..

ஏனோ புலம்பெயர்தல்கள் என்பன வரமா சாபமா என்கிற தகுதிகளோடு ஒத்துப் போகாமல் ஓர் குழப்பமான தகுதியோடு நம் வாழ்வோடு ஊடாடிக் கொண்டு தானிருக்கிறது எப்போதும்..

மறுபடி நீ இந்தியா வருகிற காலம் இன்னும் சற்று நீண்டிருப்பதாக சொன்னாய்... ஏனோ, எனக்கது இன்னும் விலகிப் போனதான ஓர் கற்பனை.. 

நன்றி செந்தில்.. 

ப்ரிய 
வடிவேல்.. சுந்தர..

Tuesday, December 11, 2012

.என் முகத்தைப் பழிக்கிறது என் இதயம்..

என் இதயத்தில் எழுகிற உணர்வுகளுக்கும்

ரசனைகளுக்குமான  பொருத்தத்தில் 

எனது முகம் பிரதிபலிக்காததை --

 என் முகத்தைப் பிரதிபலிக்கிற

 என் வீட்டுக் கண்ணாடியில்

 என்னால் சுலபத்தில் அடையாளம் காணமுடிந்தது..


அகத்தின் மெருகை முகம் காட்டுமென்கிற பழமொழியைப் பொய்யாக்கி விட்டதான அனுமானம் எனக்கு, என்மீதும் என் முகத்தின் மீதும்.

எது எப்படியான போதிலும் என்னை விட்டு நழுவுவதற்கான வாய்ப்பே அற்ற எனது முகத்தை நானென் இதயத்தைப் பிரதிபலிக்கச் சொல்லிப் பயிற்றுவிக்கிற  பயித்தியகாரத் தனத்தில் ஈடுபடவேண்டிய ஓர் ரணகளம் அவ்வபோது நிகழத்தான் நிகழ்கின்றன..!


"டிப்டாப்" ஆசாமி ஜேப்படி செய்து மாட்டிக் கொண்டு மானம் கெடுவது போல, எனது மன உணர்வுகளுக்கான எவ்வித தேஜஸும் அற்று ... மாமிசக் கடையில் பீதியில் உறைந்துள்ள கோழியின் பீய்ச்சி அடித்த பொச்சு போல என் முகம்...


இவ்வளவு பேரவஸ்தைகளை ஓரங்கட்டுகிற முஸ்தீபில் தான் நான் என்னைப் பிரதிபலிக்கிற எந்தக் கண்ணாடிகளுக்கும் பாராமுகமாயிருக்கப் பிரயத்தனித்துப் பழகிக் கொள்கிறேன்.


என் முகத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடிகள் கல்லடி பட்டதுபோல  சுக்குநூறாகத் தெறித்து விடக்கூடுமென்கிற அபாண்ட கற்பனை எனக்கு..


என் முகம் சமைக்கப் பெற்றதற்கான காரணிகளாக அனுமானிக்கப் படுகிற பிரம்மன் ஆகட்டும், இன்னபிற தாதுக்களாகட்டும் -- ஒட்டுமொத்தமாகக் கூட்டு சேர்ந்து பெருந்துரோகம் இழைத்துவிட்டதாகவே எப்போதும் அரற்றிக் கொள்கிறது  என் இதயம்..!!


என் இதயம் விரும்புகிற முகங்களை தரிசிக்க நேர்கையில், அங்கலாய்ப்பில் விம்மிப் புடைத்துத் துள்ளி வெளியே குதித்து விடும் போல இதயம் என்னுள்ளே தத்தளிக்கிற போது .. என்னை முண்டமாக்கிவிட்டு எனது முகம் தற்கொலை செய்து கொள்ளுமோ என்றொரு அச்சமுண்டு... அந்த அச்சம் , என் இதயத்தில் ..!???

Monday, December 10, 2012

தவிர...

வாழ்க்கையைத் தவிர
யாவற்றுக்கும்
உத்திரவாதமிருக்கிறது...
--ஆனால்
வாழ்க்கை
பெரிய உத்திரவாதம் போல
மற்றவற்றின்
உத்திரவாதங்களுக்காக
நாமெல்லாம்
அதீதம் மெனக்கெடுகிறோம்..!

தாற்காலிகமான
முகவரிகளில் நாம்
வசித்து வருகிறோம்...
ஆனால்
விண்ணப்ப படிவங்களில்
"நிரந்தர முகவரி"
என்கிற கட்டத்தில்
எதையோ பூர்த்தி
செய்துகொண்டிருக்கிறோம்...

யாரோ சொல்லி

உலகம் உருண்டை
என்று புரிந்துகொண்டுள்ளோம்..
யாரோ சொல்லி
இந்த பூமி
நவகோள்களில் ஒன்றென்று
அறிந்து வைத்திருக்கிறோம்..!

நாமென்ன சொல்கிறோம்?..
அவனம்பிக்கைகளைத் தவிர..!!

நாமென்ன செய்கிறோம் ?..
சும்மா இருப்பதைத் தவிர..!!!

Thursday, December 6, 2012

ஐந்து நக்ஷத்திர குடிசைகள்...

ங்கக் குப்பையில் 
நானெனது 
கந்தலைத் தொலைத்து 
விட்டேன்...
அம்மணத்தோடு 
அலைகிறேன்..!               

அறுக்கும் வைரங்கள் 
காலடியில்..
அதற்கு பயந்து 
லாரி டயரில் தைத்த 
செருப்பு..
அவ்வப்போது 
அலட்டிக் கொள்கிற 
ராத்திரிக் குளிர்...
குளிர் காய 
நெருப்பில் போட
கரன்சி சேமித்து 
வைத்துள்ளேன் 
ஏராளம்....

பிளாட்டினத் 
தட்டேந்தி 
அன்றாடம் பிச்சை..
-அமிர்தம் 
விழுந்தால் 
நாய்க்கு எறிவேன்..
பழைய சோறென்றால் 
பருக்கை 
விடமாட்டேன்..!!

Saturday, December 1, 2012

பயணம்

எனது பயணம்
மிகவும் நீண்டது..
தடைகள் எவை 
வரினும் 
அவைகளை 
சுலபத்தில் 
தகர்த்தெறிவது...!

ஜன்னலோர 
வயல்வெளிகள்..
மலைமுகடுகள்..,
துரிதமாக விரைகிற
முகில்கள்..

வாகன நெரிசல்களில்
நான் பயணிக்கிற
பேருந்தின் நிதானம்
பேரவஸ்தை எனக்கு..

துரதிர்ஷ்டவசமாக
எனது பயணங்கள்
யாவும்
இலக்கற்றவை..!!

Saturday, November 24, 2012

துப்பாக்கி------------------விமரிசனம்

இவ்ளோ லேட்டாக எவரும் துப்பாக்கிக்கு விமரிசனம் எழுதி இருக்க சான்சில்லை... இது நியாயமுமில்லை... இந்நேரம் ஏகப்பட்ட விமரிசனங்கள் அவர் அவர்கள் பிளாகில் படம் ரிலீசான திவாளி சமயத்திலேயே பட்டாசு கிளப்பி இருப்பார்கள் எல்லாரும்..

என்ன பண்ண?. இன்னைக்குத் தான் எனக்கு அந்த துப்பாக்கியை சுட அனுமதி கிடைத்திருக்கிறது... ஆகவே எனக்கான உளறல்களை விமரிசனம் என்கிற பெயரில் இங்கே கொட்டிவிடுவதில் ஓர் ஆத்ம திருப்தி... என் விமரிசனத்துக்காக எவருமிங்கே காத்துக் கிடக்கவில்லை  என்றபோதிலும் அப்படி காத்துக் கிடப்பதான ஓர் அலாதி கற்பனையில் கொஞ்சம் கொட்டித் தீர்க்க விழைகிறேன்...


சாத்தியப் படாத சங்கதிகளை செவ்வனே சுலபமாக அரங்கேற்றுகிற காரியம் தொன்று தொட்டு சினிமா கதாநாயகனால் மட்டுமே நிவர்த்தி செய்யப் பட்டு வந்திருக்கிற விஷயம் நமக்குப் புதிதில்லை என்ற போதிலும் அதையே எத்தனை முறை "ரிப்பீட்டு" அடித்தாலும் வாயைத்திறந்து பார்ப்பதையும் அதே வாயில் விரல்களைத் திணித்து விசிலடிப்பதையும் நாமெல்லாம் சலிக்காத வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்...

பத்துத் தீவிரவாதிகளையும் பத்து ராணுவ வீரர்கள் குண்டு வைத்திருக்கிற பத்து இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பதற்கு பதிலாக ராணுவவீரர்களின் துப்பாக்கிகள் வெடிக்கின்றன... நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் கூட்டிலும்  குண்டுகள் பாய்ந்து சரமாரியாக சாய்கிறார்கள் தீவிரவாதிகள்..... பிற்பாடு அந்த வெடிக்க இருந்த டைம் பாம்புகளை வெடிக்காமல் செய்து மக்களைக் காப்பாற்றுகிறார்கள்...

நிஜத்தில் இப்படி நிகழ்ந்தால் இதுபோல கின்னஸில் இடம்பெற வேண்டிய செயல் வேறொன்றும் இருந்திருக்காது... திரையில் இந்தக் கற்பனையைக் காண்கிற போது  "குடுத்த காசுக்குப் பரவாயில்லை" என்று காலரைத் தூக்கிக் கொள்கிற ரசிகர்களைப்  பார்க்கையில் "தமிழ்நாட்டில் என்றைக்கும் எம்ஜியார் ஆட்சிகள் தான்" என்று சம்பந்தா சம்பந்தமில்லாத ஓர் அனுமானம் குறும்பாக எட்டிப் பார்த்துப் போகிறது...

அந்தர் பல்டிகளும் அனாயாச நளின நடனங்களும் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல... அனல்பறக்க எல்லாவற்றையும் வள்ளலெனக் கொட்டிக் கொடுக்கிறார் இளைய  தளபதி... ஜோடியாக வருகிற காஜலும் சலித்த பிகரில்லை..சும்மா அலேக்காக கொடுத்த பாத்திரத்தை அழகாகத் தேய்த்துக் கழுவி பளபளக்க வைக்கிறார்..

நாயகனின் நண்பனாக வருகிற சத்யன் என்னவோ தூங்கி எழுந்த மந்தகாசத்திலேயே  படம் முழுக்க பவனி வருகிறார்... நக்கல் என்பதாக அவ்வபோது  என்னவோ பிதற்றுகிறார்... சிரிப்பு தவணை முறையில் வந்துபோகிறதே  தவிர கவு.மணி வடிவேல் ஜோக்குகள் போல ஓர் அடர்த்தி எதுவும் அவரிடம் தென்படவில்லை...

ஓர் வீரியமான இசையும் சில காமெரா ட்ரிக்குகளும் நமுத்துப் போன காட்சி அமைப்பைக் கூட மெருகேற்றி பிரம்மாதப் படுத்திவிடும் என்பதற்கான சாட்சி பல காட்சிகளில் தென்படுவது  திரைக் கதையின் பலவீனம்...

சிவாஜியில் ரஜினிக்கு வருகிற ஆரம்பப் பாட்டின் மெட்டை ஞாபகப் படுத்துகிற மாதிரி இதிலும் ஓர் ஆரம்பப் பாட்டு...

அதென்னடா யாரைப் பார்த்தாலும் பொசுக் பொசுக்கென்று போட்டுத் தள்ளுகிற வில்லன்கள் எல்லாருமே கதாநாயகனை மாத்திரம் கையைக் கட்டி வைப்பதும் , பிறகு கைக்கட்டை அவிழ்த்து ஒற்றைக்கு ஒற்றை மோதி நாயகனிடம் அடிவாங்கி சாவதும் ..... இதே கருமாந்திரத்தை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பதோ ...!!

விஜய்க்கு மிலிடரி ஆபீசராக வருகிற ஜெயராம் நக்கல்கள் தேவலாம்... ஒரு ராணுவ வீரன் சந்திப்பது தீவிரவாதிகளின் தளங்களையே தவிர எந்த இடத்திலும் ராணுவதளம்  படத்தில் காண்பிக்கப் படுவதில்லை...

விஜய் தனது காதலியிடம் காதலை அம்புட்டு சொல்வதும், கிஸ் பரிமாறிக் கொள்வதும்... அப்புறம் கடைசியில் காதலியை அம்போன்னு வுட்டுக்கின்னு மறுக்கா  ராணுவத்துக்குப் போறதும் .. அதுக்காக அம்முணி ரெம்பா பீல் பண்றதும் ... இது மாத்திரம் இயல்பா இருக்கணும்னு ஸ்க்ரீன்ப்ளே அமச்சவங்க, இதுக்கு முன்னாடி  சொதப்புன போதெல்லாம் ரொம்ப யதார்த்தமா சொதப்பிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.. 

Friday, November 23, 2012

மனச்சிதறல்கள் ....

எழுதுகிற திராணியே சமயங்களில் அவிழ்ந்து விழுந்துவிட்டது போல ஓர் மனவெறுமை... இன்னதை எழுதலாம் என்கிற சிந்தனைகள் வந்துவந்து போகின்றனவே அன்றி எழுதிக் குவிக்க கைகள் வரக்காணோம்..

சிலநாட்கள் கவிதை எழுதி, அதன் கருத்தை செதுக்கப் பிரயத்தனித்து... அது ஒவ்வாமல் வார்த்தைகளை செதுக்கி... பிற்பாடு எதுவும் எடுபடாதென்று மனசு ஓர் அபிப்ராயத்தை முன்மொழிய எழுதிய யாவற்றையும் அப்புறப் பட்டுத்தியாயிற்று...

அதன் பின்னர் சில கட்டுரை முயற்சிகள்... அவையும் விளங்காதென்று முடிவெடுத்து ... எட்டி உதைத்தாயிற்று..

எதையேனும் எழுதுகிற எவர்க்குமே இப்படி கவிதை கட்டுரைகள் அவ்வபோது காலிடறி கவிழ்ந்து விடச்செய்யும் என்கிற சங்கதி பலமுறை நிகழ்கிற அனுபவங்களே... மற்றவர்களுக்கு எவ்விதமோ அறியேன்., எனதனுபவத்தில் இது நான் எழுதத் துவங்கிய நாள்தொட்டு நிகழ்ந்து வருகிற விஷயம்...

இந்த எனது குறைகளையே கூட பிரத்யேகமான ஓர் விஷயமாக இங்கே வெளிச்சமிட்டுக் காண்பிக்க முயல்கிற என் எழுதும் திறன் பிரயோகிக்கப் படுகிறதா அல்லது துஷ்ப்ரயோகிக்கப் படுகிறதா என்கிற குழப்ப சந்தேகங்கள் என்னில் ஊடாடுகின்றன..


துப்பாக்கி சென்று பார்க்க ஓர் சூழலை உருவாக்க முயல்கிறேன்... நான் விஜய் அஜித் விக்ரம் எவருடைய ரசிகனும் அல்ல... நல்லா நடிச்சா நாயைக் கூட ரசிப்பேன்... ஓவர் ஆக்ட் கொடுத்துக் குளறுபடி செஞ்சா சிவாஜின்னாலும் டென்ஷன் ஆயிடுவேன் ... விஜய்க்காக அல்ல.., ஏழாவது அறிவை இயக்கிய இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் என்பதால்... நடிகர்களுக்காக ஓடி ஓடிப் படம் பார்த்த பிராயங்கள்  ஓடிவிட்டன... இன்றெல்லாம் விஷயமுள்ள டைரக்டர்களையும், உருப்படியான விமரிசனங்களும் உள்ள படங்களையுமே மனம் நாடுகின்றன... எந்த மேதாவி நடிகர்கள் நடித்துள்ள போதிலும் குலவையாக  விமரிசனங்கள் நாறுகையில்.. இலவச டிக்கட் கிடைத்தால் கூட தவிர்த்துவிடுமளவு  பக்குவப் பட்டுக் கிடக்குது மனசு...
-கிட்டத்தட்ட இப்போதைய மனிதர்கள் பலரும் இதே அலைவரிசையில் தான் இருக்கக் கூடுமென்கிற என் தீர்க்கதரிசனம் மெய்யானால் அரசமரப் பிள்ளையாருக்கு ஆயிரத்தெட்டுத்  தேங்காய் போட்டுடைக்கிறேன்... குறைந்தபட்சம் கனவிலாவது..!!

எனது மனைவியும் குழந்தையும் விஜெய் படம் பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடிப்பது ஒரு காரணமும் கூட... "என்னை விடவா உனக்கு விஜய்?" என்றொரு ஐ.எஸ்.ஐ. பிராண்ட் ஏக்கத்தோடு ஓர் நக்கல் தொனிக்கிற கேள்வி... "இப்படி சந்தேகமா ஒரு கேள்வி எதுக்கு? உங்களைவிடவா விஜய்?" என்கிற நய்யாண்டி  எனது மனைவியினிடத்து  ரசிக்க உகந்த விஷயம்...

இயக்குனர்கள் குறித்த பிரக்ஞையோடு படம் பார்க்கிற பெண்கள் சுஹாசினி மாதிரி விரல்களில் அடக்கம்... மிகப் பல பெண்களும் நடிகர்களின் பாவனைகளில் சிலிர்க்கவே தங்களை அர்ப்பணிக்கின்றனர்..


"தீவாளிக்கு ரிலீசாகி இருக்கிற ஓர் படத்தை குடும்பமாக சென்று பார்க்கிற ஓர் அற்ப விஷயத்தை சமுதாய உணர்வுகளோடு இழைக்க முனைவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது " என்கிற அறிவிப்பு வந்துவிடும் , இந்நேரம் நான்  ஓர் பிரபல அரசியல் தலைவனாக இருக்கும் பட்சத்தில்..(?)

Thursday, November 15, 2012

தினமலர் செய்திக்கு..

கடந்த இரண்டாண்டுகளில் ஐயாயிரம் பேர்கள் ரயிலில் அடிபட்டு சாவு என்கிற தினமலர் செய்திக்கு .. நான் அனுப்பிய வாசகர் கடிதம்..

இதற்கு முக்கிய காரணம் செல்போனே என்பதை சொல்லித்த்தான் தெரிய வேண்டுமா?.. அதென்ன கிரகமோ தெரியவில்லை... எந்த செல்போன் கடையைப் பார்த்தாலும் ஒயின் ஷாப்பை போலவே ஓர் பத்துப் பேர்கள் நின்ற வண்ணமாக உள்ளனர்... லேட்டஸ்ட் மாடல் போனை வாங்கி நண்பர்கள் மத்தியில் பெருமை பீற்றிக் கொள்வதில் ஓர் அலாதி ஆணவம் எல்லாருக்குமே... அப்புறம் தன்னை மறந்தவாறு ரோடு எது, ரயில்வே ட்ராக் எது என்பது புரியாமல் பந்தாவாக காதில் செருகிக் கொண்டு பேசியவாறு போகவேண்டியது.., அப்புறம் போய் சேரவேண்டியது... மேல போயும் கூட ஏதாவது லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன் வந்திருக்கா , சாம்சங் வந்திருக்கான்னு கேட்டாலும் கேட்டுக்கிட்டு இருப்பாங்க இந்த மக்கா... டெக்னாலஜி வளரவளர சாவு எண்ணிக்கையும் வளர்கிறது என்றே கருதுகிறேன்... போகிற போக்கில் குடும்பக் கட்டுப்பாடு விளமபரங்கள் எதுவும் நமக்குத் தேவைப் படாது.., செல்போன் விளம்பரங்களே போதுமானது., மக்கள் தொகையை பெருவாரியாக குறைத்துவிடும்... ஐயோ ஐயோ... இதற்கெல்லாம் தீர்வு வரவேண்டுமென்றால் செல்போன் கலாசாரம் ஒழியவேண்டும்.., முக்கியமாக இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்கள் வரத்து ஒழியவேண்டும்... ஆனால் சத்தியமாக இதற்கெல்லாம் எந்தக் காலத்திலும் சான்ஸே இல்லை... இதனை தடை செய்கிற சட்டமோ உரிமையோ கூட செல்லுபடியாகப் போவதில்லை... நம்ம மந்தை ஆட்டு மனநிலை கொண்ட மக்களும் திருந்தப் போவதில்லை... இந்த உலகம் அழியப் போகுது போகுதுன்னு ஒரு வதந்தி ரொம்ப நாளா உலாவிட்டே இருக்கல்ல?.. அதுக்கான உபகரணம் தான் இந்த செல்போன் போலும்....

Saturday, November 10, 2012

நரகாசுரனும் எங்க அப்பத்தாவும்..

 நரகாசுரன் 
செத்து .. கொண்டாடப் 
படுகிற தீவாளி,
எங்கப்பத்தா 
செத்ததால 
கொண்டாடப் படலே...!

பாழாப் போனவ 
நவம்பர் பத்தாந்தேதியா 
சாகணும் ?..
கொழந்தைக தெனத்தையும் 
கொண்டாடிட்டு 
நவம்பர் பதினஞ்சு 
போயித் தொலஞ்சிருக்கலாம்ல?           

போச்சு..
தீவாளியும் போச்சு..
கொழந்தைக தினமும் போச்சு..

நேரு தினத்தன்னிக்கு 
நாந்தான் நேரு வேஷம் 
போட்டு நடிக்கிறதா இருந்திச்சு..
இப்பப் பாருங்க..
ஆறாப்பு சி செக்க்ஷன் ல 
படிக்கிற சிவப்பிரகாசம் 
கட்றான் அந்த வேஷத்தை..

போட்டோல 
சிரிக்கிற அப்பத்தாவ 
கல்லெடுத்து ஒடச்சுடலாம் போல 
ஆத்திரம் எனக்கு...

னா பாருங்க..
துப்பாக்கி கொள்ளுப் பட்டாசு 
வாங்க எனக்காக 
சுருக்குப் பையில 
முடிஞ்சு வச்சதா 
எங்கப்பன் வந்து அந்தக் 
காசைக் கொடுத்தப்ப 
சிரிக்கிற அப்பத்தா 
போட்டோவைப் பார்த்து 
நான் ரொம்ப நேரமா 
அழுதுட்டேன்...

Thursday, November 8, 2012

அவசரக்காரர்கள்..

பரபரவென்று எதற்கெடுத்தாலும் சிலர் பதட்டப் படுவதைப் பார்க்கையில் என்னுள் அவர்கள் மீது ஓர் இனம்புரியா வெறுப்பு... எதற்கிந்த அவதி?.. அப்படி என்ன வாரிக் கட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல்...

இவர்களுக்கும் ரத்தக் கொதிப்பை கன்னாபின்னாவென்று ஏற்றிக் கொண்டு இவர்களை  சார்ந்த சாதுக்களையும் ஒருவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி.... இப்படியான நபர்களை நாம் சம்பந்தப் படாமல் புறமிருந்து வேடிக்கை பார்ப்பது தான் நமக்கு புத்திசாலித்தனம்... அல்லாமல் இவர்களை சார்ந்து நாம் ஏதேனும் காரியம் நிறைவேற்றவேண்டிய சூழல்கள் உருவாகுமாயின் அது நமது மிகப் பெரிய துரதிர்ஷ்டமென்றே கொள்ளவேண்டும்..

அவசரம் ஆத்திரம் ஒரு மனிதனுக்கு அறவே அனாவசியம் என்று வாதிக்க நான் இங்கே வரவில்லை.. தேவைகள் கருதி, அவ்விதம் நடந்தால் அது ரசிக்க உகந்த விஷயம்... அதுவன்றி ஒன்றுமில்லாத கவைக்குதவாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டு, படுத்தி.., களேபரமாகி, ஆக்கி... 


இவர்களை ஒருவிதமான சைக்கோ என்று தான் சொல்லவேண்டுமே தவிர சுறுசுறுப்பானவர்கள், வேலையை கச்சிதமாக  உடனடியாக நிறைவேற்றுகிற அசாதாரண நபர்கள் என்று வர்ணிப்பது இந்த முட்டாள் தனத்தை நாமே ஊக்குவிப்பது  போலாகும்... 


காலை பத்துமணி பரீட்சைக்கு அதே காலை ஒன்பதேமுக்காலுக்கு அவதிப் படுவதில் ஓர் அர்த்தமிருக்கிறது... ஆனால் ராத்திரி ஒன்பதேமுக்காலுக்கு இருந்து அவதிப் பட்டால் என்னவென்று சொல்வது?


பதறாத காரியம் சிதறாது, நிறைகுடம் தளும்பாது, சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது.. என்றெல்லாம் எத்தனை தத்துவார்த்தமாக இவர்களுக்கு விளக்க முயன்றாலும்  தனது தன்மையிலிருந்து வெளிவருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.. 


இப்படியான நபர்கள் அமைதியாக இருப்பதையே அநாகரீகமாக உணர்பவர்கள்... பதட்டமில்லாமல் பக்குவமாக ஒன்றை செய்துமுடிப்பதை கேவலமாகக் கருதுபவர்கள்... 


பாம்பாட்டி பாம்பு கொத்தித்தான் சாவான் என்பது போல, இவர்களது பதட்டமே இவர்களுக்கு  எமனாகி விடும் ஓர் தருணத்தில்... ஆனால் என்ன கொடுமை என்றால், அதனை உணர்கிற ஓர் சந்தர்ப்பத்தைக் கூட இவர்களுக்கு வழங்க காலத்திற்குப் பொறுமை இருப்பதில்லை... 


இன்னும் என்னென்னவோ இவர்கள் குறித்து சொல்ல அசைபோடுகிறது எனது மனநாக்கு... பார்ப்போம், அவ்வப்போது கிடைக்கிற சந்துகளில் எல்லாம் இவர்களது சிந்தினைப்  பாட முயல்வோம்...

Monday, November 5, 2012

கிழிசல் ....



டித்தல்  திருத்தலாகவே 
எல்லாமிருக்கிறது 
என்னிடத்தில்...!

ஆரம்பத்திலேயே 
தெளிவைக் கொணர்கிற 
சாதுர்யம் ஏனோ 
பிசகி விடுகின்றன 
எல்லாவற்றிலும் 
எல்லா தருவாய்களிலும்..!!

திருத்துவதென்பதை
ஓட்டுப் போட்டதாக 
உணர்கிறேன்..
ஆதலால்--
என்னிடம் 
திருந்தி இருக்கிற 
எல்லாமே 
ஓட்டுப் போட்ட 
பலவீனத்திலேயே 
உள்ளன...!
                                                                   
திருந்தப் பெறாத 
தவறுகள் கூட 
ஓர் பிரத்யேக 
தேஜஸில் மிளிர்வதாக 
அபிப்ராயம் எனக்கு...

ஆனால் 
பலவீனப் பட்டாலுமே 
கூடப் பரவாயில்லை..
தவறுகளை 
சரி செய்கிற 
சந்தோஷம் 
வேறெதிலுமில்லை..!!

Wednesday, October 31, 2012

போராடும் பெண்மணிகள்..



விஷுவலாக நாம் இந்தப் புகைப் படத்தை ரசிக்கிற நமது ரசனை பாராட்டத் தக்கது தான்... இதன் வாயிலாக மனசைத் தொடுகிற ஓர் கவிதையைப் புனைந்து அப்ளாஸ் வாங்கிவிடுவதும் கவிஞர்களுக்கு மிக சுலபம் தான்...

ஆனால் அவர்கள் அனுபவிக்கிற அவஸ்தையை நாம் சற்று கற்பனை செய்யவேண்டும்...
பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டிய குழந்தைகள் வீட்டில் இருப்பர்..
கணவன் நனையாமல் இருக்க அலுவல் வரை இந்த மிதிவண்டியில் அமர்ந்தவாறு குடையைப் பிடித்துக்கொண்டு  செல்லவேண்டும்... பிறகு தலைவர்  சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அலுவலிலே நிறுத்திவிடுவார்... அந்தப் பெண்மணி குடையைப் பிடித்தவாறு திரும்பி நடந்து  வீடுவந்து குழந்தைகள் பள்ளி செல்ல  துரிதப் படுத்தவேண்டும்...

பக்கத்து வீட்டுப் பார்வதி அக்காவை கொஞ்ச நேரம் குழந்தைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு  வந்திருப்பாள் இவள்... பார்வதியக்காவோ , "இதென்னடா சனியன்  போனது இன்னும் திரும்பி வரலை?.. இதுக வேற நொய் நொய் ன்னு அனத்துதுக...நமக்கு வேற ஆபீஸ்க்கு நேரமாச்சு.." என்று வெள்ளம் போகிற சாலை மீது  கண்களை மேயவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்..

தரக்கன் புறக்கான் என்று வெள்ளத்தில் கால்கள் இழுபட இந்தப் பெண் வருவதைப் பார்த்த  பார்வதிக்கு "அப்பாடா" என்றிருக்கும்...

அவசர அவசரமாக யாவற்றையும் ஒப்பேற்றி பள்ளிக்கு அனுப்பக் காத்திருக்கையில் சுரேஷின் குரல் ஒலிக்கிறது.."இன்னைக்கு ஸ்கூல் லீவக்கா" ..
பொடிசுக ரெண்டுக்கும் ஒரே கொண்டாட்டம், கும்மாளம்..
"இந்த ஈரத்துல இனி இதுகளை வச்சு மேய்க்கனுமே சாமி" என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது  அம்மாவுக்கு...  

புகைப்படம்: THE HINDU வில்..

Sunday, October 28, 2012

வாழைமரங்கள்.

சரஸ்வதி பூஜைக்காக..ஜோடி முப்பது ரூபாய் என்று கறாராக அடித்துப் பேசி விற்கப்பட்ட வாழைக்கன்றுகள் .. இருபத்தைந்து ரூபாய்க்குக் கூட குறைத்துக் கொடுக்கப் படவில்லை. எந்த பேரத்துக்கும் இறங்கி வராமல், அந்த பூஜை நேரம் நழுவ நழுவ ... ஜோடி இருபதாகி, பதினைந்தாகி, பத்தாகி .. ஐந்தாகி..

கேட்க நாதியற்று சாலைகள் எங்கிலும் அதே இரவில் வாழைத் தோப்பு போல வியாபித்து.. விடியலில் பார்க்கையில் .. வாழைத் தோப்பே எழுந்து நகரவீதிகளுக்கு ஊர்வலம் வந்து நிற்கிறதோ எனத் தோன்றும் அளவு .. நின்றிருந்தன..

திருவிழாவுக்கு அழைத்துவரப் பட்ட குழந்தைகள் .. வாழைக் கன்றுகள்..
பிறகு பெற்றவர்களே விட்டுவிட்டு சென்றது போல அப்பாவிகள் போல நின்றிருந்தன கன்றுகள்...

வழக்கமாக எச்சிலை அந்தஸ்தோடு மட்டுமே குப்பைத்தொட்டிக்கு வருகிற இலைகள்..... இந்த சரஸ்வதி பூஜை காலங்களில் மட்டும் சுத்தமாக வந்து விழுந்து கிடக்கும்..

ஹிந்துக்களின் பல சுவாரசிய விழாக்களில் இந்த ஆயுத பூஜையும் ஒன்று... தனது இருப்பிடங்களை, தொழில்புரிகிற நிறுவனங்களை அதற்கு உபயோகமாக இருக்கிற உபகரணங்களை .. இன்னபிற அனைத்த விஷயங்களையும் சுத்தப் படுத்தி புணரமைக்கிற இந்த விழா ஓர் தலையாய விழா என்றே சொல்லவேண்டும்..
இதுவும் கடந்து, குழந்தைகளின் எழுத்தறிவை ஆரம்பித்து வைக்கிற வித்யாரம்பம் என்கிற ஓர் விழாவினையும் இதனோடு இணைத்து ஓர் பரவசக் கிளர்ச்சியை  நிகழ்த்துகிற இந்த விழாவினை எவ்வளவு மெச்சினாலும் தகும்..

இது முடிந்து ரெண்டோரு வாரங்களில் தீபாவளி ... பிற்பாடு பொங்கல்..
இப்படி ஓர் குறிப்பிட்ட சிறு சிறு இடைவெளிக்குப் பிற்பாடு ஒவ்வொரு ஆனந்த விழாவையும் திணித்திருக்கிற  ஹிந்துக்களின் பண்பாடு ஓர் அலாதி சுகந்தம்...

அந்த இடைவெளியைக் கூட விழாவாக வரித்து நாம் வாழப் பழகுவோம்..
விழாவினையே ஹிம்சையாக மாற்றிவிடுகிற சில கயமை நிரம்பியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்... அப்படியானவர்களைக் களைந்து அவர்களுக்கும் வாழ்வின் ஆரோக்கிய  தன்மைகளைப் பயிற்றுவிப்போம்..

இதனை எனது சின்ன மெசேஜ் ஆக இங்கே பதிக்க விரும்புகிறேன்.. நன்றி..

Saturday, October 20, 2012

வார்த்தைகள் அற்ற கவிஞன்..

வார்த்தைகள்
பிடிபடாமல் ஓர்
நல்ல கவிதை ...
மனசுக்குள்..!

தேடிக் கிடைத்த 
வார்த்தைகள் யாவும்
அந்த உணர்வுகளை
நிரப்புகிற
திறன்கள் அற்றுத்
திணறுகின்றன..!!

ஆகவே
மௌனம் சிறந்ததென்று
முடிவாயிற்று..
என் தனிப்பட்ட
மனசுக்கு அதுசரி...
வாசிப்பவர்கள் உணர
வார்த்தைகள் இட
வேண்டுமல்லவா??

இப்போதைக்கு
முடியாதென்று
சொல்லிப் பார்க்கிறேன்...
"இவ்வளவு தானா
உன் திறன் ?"
ஏளனமாகக் கேட்கின்றன
எல்லாரது கண்களும்..

"அவகாசம் கொடுங்கள்..
அம்சமாக எழுதிவிடுவேன்"
சொல்லிவிட்டு
நழுவித் தொலைகிறேன்..

இப்படி எழுதி
எப்படியோ ஒரு
கவிதை ...
எனது கவிதைகளின்
எண்ணிக்கையில்
கூடிவிட்டது..??!!


Saturday, October 13, 2012

பயணங்கள் முடிவதில்லை...----- திருமலை நாயக்கர் மஹால் ---- மதுரை.

எப்போது மதுரை செல்ல வாய்க்கையிலும் திருமலை நாயக்கர் மகாலை சென்று ஓர் தரிசனம் செய்துவிட்டு வருவது எனது சுபாவம்...
மனத்தைக் கொள்ளை கொண்டு கபளீகரித்து விட்ட அதன் கட்டிடக் கலை.. அதனை வர்ணிக்க என் வார்த்தைகளுக்குத் திறனில்லை என்பதை விட அதற்கான வார்த்தைகளே இல்லை என்னிடம்...

ஆத்திசூடி மறந்து போய் ஊமையாக, மெளனமாக, பிரம்மித்துப் போய் பேயறைந்தார் போல நிற்பேன் அதன் பிரும்மாண்டத்தில்...
எனது அற்ப வார்த்தைகள் நிரப்பி அதன் வசீகரத்தை விளக்க முனைவதே என்னுள் ஓர் லஜ்ஜை ஏற்படுத்தும்... ஆதலால் மௌனமே உத்தமம் என்பதாக எதுவும் அது குறித்து நான் இதுவரை எழுதியதில்லை...

எப்படி இது சாத்யம் ஆயிற்று?.. நம்மால் ஒரு சின்ன சுவரை எழுப்பவே ஆயிரத்தெட்டு யோசனை செய்து, கடைசியில் அதுவும் தவிர்க்கப் பட்டு வெட்ட வெளியாகவே இருந்து விட  அனுமதிக்கிற பரந்த எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன்... ஆனால் ஆயிரத்தெட்டு தூண்களை அலேக்காகக் கொண்டு வந்து நிறுத்தியது போல அங்கங்கே நிறுத்தி அசத்தி இருக்கிறார்களே...

இது ஓர் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையா?.. கூடிப்பேசி திட்டமிட்ட ஓர் குழுவின் யோசனையா?.. எது எவ்வாறாயினும், இதற்கான முழுமுதல் ஆற்றலும் திருமலை நாயக்கரையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க நியாயமில்லை..

வியப்பு நம்முள் தாண்டவமாடுகிறது... 
எத்தனை எத்தனை நபர்களும், யானைகளும், துவக்கம் முதலே செயல்பட்டு இந்தப் பிரம்மாண்டத்தை  சாத்தியப் படுத்தியிருக்கக் கூடும்?

தான் மிகப் பெரிய கட்டிடம் கட்டிவிட்டோம் என்று அகம்பாவத்தில் உலவித் திரிகிற பொறியியல் வல்லுனர்களும், தன்னைப் போல எவரும் இதுவரை வீடே கட்டவில்லை  என்று பிதற்றித் திரிகிற பலரும் இந்த தி.நா மகாலை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட்டு வரவேண்டியது மிக அவசியம்...
நிச்சயம் வெளியே வருகையில், தனது அனுமானம், அகம்பாவம், ஆணவம் எல்லாம் மௌனமாகக் கரைந்து.. ஓர் மகா ஞானி போல பற்றற்ற தன்மையோடு வெளிவருவதற்கான  எல்லா சூட்சுமங்களும் அடங்கியுள்ளன இந்த மகாலில் எனில் அது மிகையே அன்று.. !!.. 

Tuesday, October 9, 2012

இருளிலும் புலனாகிற வண்ணங்கள்...

நிசப்தங்களின் 
நாராசாரம் ... 
வெடித்தே விடும் போல 
இதயம் ...!

ஏதேனும் 
உளறலோ 
அனர்த்தக் கூப்பாடோ 
கவைக்குதவாத 
கதறல்களோ 
எதிர்பார்க்கிற காதுகள்..!

பயித்தியம் போல 
எவருமற்றுப் புன்னகைக்கிற 
காட்டுப் பூக்கள்...
கவிஞனை எதிர்பார்க்காமல் 
கவிதை காண்பிக்கிற 
முழுநிலா...

-இருளிலும் 
புலனாகிற வண்ணங்கள்...

தெளிந்து நெளிந்தோடுகிற 
மழைநீர்...
தாகமிருந்தும் அருந்தும்
பிரயத்தனமில்லை...                

--மின்சாரம் பறிபோய் ....
குப்பைக் காற்றை 
விநியோகித்த மின்விசிறி 
நின்று போய் .....
ஆழ்ந்த உறக்கம் 
தடம்புரண்டு ..
அதன் நிமித்தம் 
நிகழ்ந்த ஓர் அற்புதக் 
கனவில்... 
இப்படியெல்லாம் 
ஓர் இன்பாவஸ்தை.....!

அரைத்தூக்கமும் 
அவிழ்ந்து போய் 
பானை ஜலம் மொண்டு 
பருகினேன்...
கனவில் புரண்ட 
மழைநீர் - எனது வீட்டின் 
பானையில் வந்து 
நிரம்பிய கற்பனையோடு..!! 

Friday, October 5, 2012

கொடிகள் கிழிவதில்லை ....

Indian Stock Market Shares
Indian Stock Market Shares


Indian Stock Market SharesIndian Stock Market Shares
Indian Stock Market Shares
மற்ற நாடுகளோடு நமது இந்தியாவை அவ்வப்போது ஒப்பீடு செய்து ஓர் மௌனமான குற்ற உணர்வில் மனதை நனைய விடுகிற அனுபவம் இந்த தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்தான ஓர் அனுபவமென்றே கருதுகிறேன்...
Indian Stock Market Shares
ஆனாலும் இந்த மூவர்ணக் கொடி கண்டு மனசுள் எழுகிற பரவச உணர்வை எந்த இந்தியனாலும் புறக்கணிக்க முடியாது...

உலகத்தில் உள்ள அனைத்த நாடுகளின் கொடிகளும் அந்தந்த நாட்டு மக்களின் மனதுள் ஓர் மிகப் பெரும் ஆளுமை செய்த வண்ணம் பறந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
Indian Stock Market Shares
நாம் இங்கே நமக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்வதில் தான் ஓர் உன்னதம் பொதிந்துள்ளதாக உணர்கிறோம்..

ரத்தம் ஒரே நிறம், எல்லா மக்களும் ஒரே இனம், நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள், என்றெல்லாம் வீராவேசத்தோடு பல முழக்கங்களை கிளப்பினாலும், காற்றிலே பறக்கிற கொடியைக் கூட வேறுபடுத்தி அடையாளம் காண்பிப்பதில் தான் .. பேதங்களின் மீதாக மனிதனுக்குள்ள இயல்பான ரகசியமான காதல்  பகிரங்கப்படுகிறது..

வானம் மாதிரி ஒரே அடையாளம் எவருக்கும் சுவாரஸ்யப் படுவதில்லை... பிறை மாதிரி, பௌர்ணமி மாதிரி, உதயசூரியன் மாதிரி, அஸ்தமன சூரியன் மாதிரி, நட்சத்திரங்கள் மாதிரி, முகில்கள் மாதிரி,வானவில் மாதிரி...இப்படி பல வகையறா அடையாளங்களை அலசுவது தான் அவனது ரசனைக்கான பெருந்தீனி... இதனையெல்லாம் விடுத்து ஓர் சாவகாச தருணத்தில் வானத்தை மட்டுமே ஏகாந்தமாக ரசிக்கிற பாங்கும் மனிதன் வசம் உண்டு..! அந்த ஓர் தன்மையின் போதில் தான் அவனது பிரக்ஞை சமத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறது... பிறகு அவனையும் அறியாமல் பாகுபடுத்துகிற பந்தாட்டம் அவனுள் புகுந்து அதற்குமிதற்குமாக விளையாடத் தூண்டுகிறது.

இவன் கத்திக் கதறித் தான் இனி இந்தியாவே வாழப் போவது போல.. , "இந்தியா வாழ்க".. "வாழிய பாரதம்".. "வாழ்க இந்தியா.. வளர்க அதன் புகழ்" என்றெல்லாம் அரற்றித் தீர்ப்பதில் அவனது தேசபக்தி பூர்த்தியாகிறது அவனுள்...
-பிடித்த கொடியை விடாமல் இருப்பதும், கொடியைக் காப்பதும்,.. கொடிகாத்த குமரன் போல கொடிநாட்ட முயல்வதும்...

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் கொடிகளைத் தவிர எல்லாமே கிழிந்து விடுகின்றன... ஆனால் கிழிந்துவிடுகிற பலவீனத்தில் இருப்பது போல தெரிவதென்னவோ கொடிகள் மாத்திரமே..!!













Thursday, October 4, 2012

என் அபிப்ராயம் சரியா??

இளம்பிராயம் சிறுபிள்ளைத் தனங்களின் ஓர் அற்புதத் தளம்..
அந்தத் தளத்தில் நின்றவாறு நமது அனாவசிய சேஷ்டைகளை
அரங்கேற்றினோம்... நமது அதிகப் பிரசங்கங்களை முழங்கித் தீர்த்தோம்..

திருக்குறள் வலியுறுத்திய நாவடக்கம் குறித்த பிரக்ஞையற்று-- வந்தது வார்த்தை என்று வாயோயாமல் உளறிக் கொட்டிக் கிளறி அலப்பறை செய்தோம்... கீ கொடுத்தால் சுற்றுகிற பொம்மைகளாக, தூண்டிவிட்டால் எரிகிற நெருப்பாக, கவைக்குதவாத விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி கறார் பேசி அரசியலாக்கினோம்..

ஆனால் ஓர் இழையில் இந்த மடத்தனங்கள் எல்லாம் நமது அறிவுக்கு "மடத்தனம்" என்று புரிகிற தருணம் எல்லாருக்கும் வாய்க்கும்... அப்போதைய நமது தர்மசங்கடங்களின் வீச்சு மழைக்கால மின்னலின் அதீதத் தன்மையோடு நம்மில் பதுங்கி நம்மைக் கிடுகிடுக்க வைக்கக் கூடுமென்றே எனக்குத் தோன்றுகிறது...

அவ்வித சிறுபிள்ளைத் தனங்களை அடையாளம் காணமுடியாமல் கூட சிலரது வளர்ச்சி இருந்துவிடுமோ என்றொரு சந்தேகம் எனக்குண்டு... அப்படியாயின் அது சாபமென்றே கருதுகிறேன்... அப்படி அடையாளம் காணவே முடியாத வகையில் அவனது வளர்ச்சி இருக்கும் பட்சத்தில்  அது வளர்ச்சி என்று கொள்ளவே லாயக்கில்லை என்றும் , அவன் இன்னும் அந்த சிறுபிள்ளைத்தனங்களின் இழையினின்று  அறுபடவில்லை என்றுமே அனுமானிக்க வேண்டியுள்ளது..

அவன் தான் கரைவேட்டி கட்டி ராயல் என்பீல்ட் புல்லட்டில் வலம்  வருகிற திவ்யமான அரசியல் வாதி என்று என்னால் அடித்து சொல்லமுடியும்... மனரீதியாக ஓர் பக்குவம் பெற்று நாகரீகமாக நடந்து கொள்கிற மனிதனுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் மதிப்போ மரியாதையோ இந்த சமூகத்தில் வந்துவிடுவதில்லை.., ஆனால், இந்தக் கரைவேட்டி ஆசாமிக்கு அலேக்காக எல்லா சீர்வரிசையும் நிகழ்ந்து விடுகிற கொடுமை தமிழ்நாடெங்கிலும் பட்டிதொட்டி எல்லாம் அரங்கேறுகிறது..

வார்டுக் கவுன்சிலர் ஆகிறான் முதற்கண்... பிறகு, எம்.எல்.எ. தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெயிக்கிறான்... எம்.பி ஆகிறான்... இப்படி நீள்கிறது அவனது செல்வாக்கும் அரசியல் வாழ்க்கையும்... வாயும் குண்டியும் சேர்ந்து பேசுகிறான்., தொகுதிக்கு அதை இதை எதையும் தன்னால் செய்து  சாதிக்கமுடியும் என்று பேசி, பேசிய வண்ணமே சாதித்தும் காண்பிக்கிற அவனது மாண்பில் மயங்கி மக்களும் அவனுக்கு சுலபத்தில் அடிபணிந்து விடுகிற  சூழ்நிலை கண்கூடு... அப்புறம் ஓர் கட்டத்தில் மக்களை சந்திக்கவே முடியாத ஓர் பெரும்பதவியில்  அவன் காலடிவைத்து மலரும் நினைவாகக் கூட தனது தொகுதிக்குத் திரும்ப  வந்து தரிசனம் செய்யாத அவனது கயமை மொத்தமாக உணரப்படும்.... இவனையா  இவ்ளோ தூக்கிக் கொண்டாடினோம் என்று லபோதிபோ என்று அடித்துக் கொள்கிற அப்பாவி மக்கா  ஒரு பக்கம்.... , இவன வச்சு நாமுளும் பெரிய ஆளா ஆகிடலாம் என்று கைத்தடி ஆகி, கூஜாவாகி, மானம்கெட்டு மரியாதை கெட்டு .. காசு பணம் மட்டும் கொறபாடு இல்லாத .. பச்சோந்தி வர்க்கம் ஒரு பக்கம்....!!


"

Friday, September 21, 2012

ஏதோ சொல்ல வருகிறேன்..

எல்லாம் மாயை என்கிற சித்தாந்தம் இந்த வாழ்வு குறித்த ஓர் வகையான வெறுமையான அபிப்ராயமேயன்றி, அவ்வித சித்தாந்தம் அப்படி ஒன்றும் ஆரோக்கியமான தன்மையாகத் தெரியவில்லை...

எவ்வளவோ அரிய பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இவ்விதமாக எதிர்மறையாக இந்த வாழ்வினை அனுசரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடைய சாதனை நிச்சயம் சாத்தியப் பட்டிருக்காது.. 

சாதிக்க வேண்டுமென்கிற அக்கறை அற்றவர்களும் சாதிப்பதை தனது பிரக்ஞையுள் கொணர்ந்திராதவர்களுமே இவ்வித அற்ப முடிவினை உடனடியாக எடுத்து கவிதையும் கதையும் புனைந்து கொண்டிருப்பர்....

நமது பிரபஞ்சம் நவகோள்களுள் ஒன்றென்பதையும், மற்ற எட்டுக் கோள்களும் மனிதர்கள் வசிக்கும் லாயக்கற்றவை என்பதையும் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் மூளை எம்மாத்திரம், தண்ணி அடித்துவிட்டு தனது வீடே மறந்து போய் மல்லாந்து கிடக்கிற அற்ப மனித மூளை எம்மாத்திரம்?..

       
மூளையின் வடிவமும் அதன் இயக்கங்களும் வேண்டுமானால் மாறுபாடற்று இருக்கலாம்... ஆனால் அதன் சிந்திக்கிற ஆற்றலும் திறனும் அதற்குரிய ரசாயனங்களும் வெவ்வேறு வகையறாவில் வியாபித்துள்ளன..

பிரக்ஞை தொலைந்து மல்லாந்து மாயை என்று உளறுபவன் உளறலை ஏற்பது நமது   கேனத்தனம் ...
விண்வெளியில் அன்றாடம் நிகழ்கிற பற்பல அற்புதங்களை செய்தியாகப் படிப்பதற்கும் கேட்பதற்கும் கூட ஓர் மனநிலையற்று எருமைமாடு  கணக்காக நம்மையும் அறியாமல்  நாமெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சன  உண்மை..

Monday, September 17, 2012

முக்கிய அறிவிப்பு..

நீர்நிலைகளை அசிங்கப் படுத்துவதிலும், பார்த்தாலே அருவருத்துக் குமட்டி வாந்தி எடுக்க வைப்பதிலும் இந்தியர்களுக்கு ஈடு இந்தியர்களே என்பது எனது அசைக்க முடியாத வாதம்..

அமாவாசை நாளில் இறந்து போன நமது முன்னோர் வரக்கூடும் என்கிற ஓர் அனுமானத்தில் ஆற்றோரங்களில் அனுஷ்டிக்கப் படுகிற சடங்குகள் .. தர்மசங்கடங்கள்... நமது எல்லா அசிங்கங்களையும் நீரில் விட்டொழிக்க வேண்டுமென்கிற  விடாப்பிடியான நமது மூட நம்பிக்கைகள்...

நீரில் விட்டுவிட்டால் நம் எல்லா பாவங்களும் தொலைவதான கேவலமான ஓர் ஐதீகம்... 
மனோவியல் ரீதியாக நாம் சுலபத்தில் இயங்குவோம் என்பதை இந்த விற்பன்னர்கள் நன்குணர்ந்து வைத்துள்ளனர்... ஆதலால் தான் மிக சுலபத்தில் அங்குமிங்குமெங்கிலுமாக நாமெல்லாம் ஆட்டுவிக்கப் படுகிறோம்..

இவ்வித மூடத் தனங்கள் குறித்து சிலர் ஓர் வித அசூயையுடனும், இதற்கு நாமும் பலிகடா ஆகிவிடக் கூடாதென்கிற அதி பிரக்ஞையுடனும் இருந்தாலுமே கூட அவரது அருகாமையில் அவரையும் அவரது அபிப்ராயங்களையும் குழிதோண்டி புதைப்பதற்கென்றே சில ஜன்மாக்கள் வலம் வரும்... அவைகளின் கண்டிப்பை மீறமுடியாத ஓர் மாய வலையம் நம்மீது பின்னப்பட்டு ... கடைசியில் ... தண்ணி தெளித்து ஆடு தலையை ஆட்டியே விடுவது போல ... ஓங்கி ஒரே போடில் முண்டத்தை தனியாகத் துடிக்க வைத்து ரசிப்பார்கள் படுபாவிகள்...

ஓர் அறிவுப் பூர்வமான ஆக்கப் பூர்வமான மனிதனே ஈரத்துணியோடு அரசமர விநாயகனை  வலம் வந்துகொண்டிருப்பான், பற்கள் கிடுகிடுக்க..

என்னவோ கருமத்தை செய்து விட்டுப் போ... நதியை ஏனடா நாசமாய்ப் போக வைக்கிறாய்? .. 

வெளிநாட்டு நீர்நிலைகளை கவனி.. அதன் தூய்மை.. அதன் மேன்மை... அங்கெல்லாம் எவரும் சாவதில்லையா? அமாவாசை வருவதில்லையா? அப்படி இருந்தும்  எவ்வித அசிங்கங்களும் நிகழ்வதில்லை... 

ஜப்பானின் பைக்கை காரை தன்வசப் படுத்தி பந்தா காண்பிக்க மாத்திரம் மனசு  பாடுபடுகிறதே தவிர , அவர்களது தனிமனித ஒழுக்கத்தை, சுகாதாரத்தை, சுயமரியாதையை கடைபிடிக்க வேண்டுமென்கிற உணர்ச்சி நம்மில்  மேலோங்காதது , ஓர் கீழ்த்தரமான செயல் என்பது கூட நமக்கு  உறைப்பதில்லை... 

Friday, September 14, 2012

அபத்தம்...

மிக நான் உன்னிடம்
எதிர்பார்த்ததெல்லாம்
என் மீதான காதல்
கலந்த பார்வைகளை
மாத்திரமே...

உன்னைக் கவிழ்த்துவிட்டதாக
நம்பிக்கையோடு சொன்ன
என்னை
-விருந்து வைக்கச் சொல்லி
நச்சரித்து
இன்பமாகத் துன்புறுத்தியது
நண்பர் குழாம்...

இந்தக் கூத்தெல்லாம்
நடந்து முடிந்து
கிட்டத்தட்ட இரண்டொரு
ஆண்டுகள் கழிந்துவிட்டன...

இன்றைக்கு
என் மனைவி நீ இல்லை..வேறொருத்தி..
உன் கணவன்-
அன்று எனது காதல் வெற்றிக்காக
நச்சரித்து விருந்து வைக்க
சொன்ன நண்பர்களில் ஒருவன்..


Wednesday, September 12, 2012

நான் எழுதாத இரண்டு நல்ல கவிதைகள்..

ஒரு சிறு அழகிய கவிதை..


மழையில் நனைந்த போது --
 பார்ப்பவர்கள் 
என்னைத் திட்டினர்...

என் தலையைத் 
துவட்டியபடி 
மழையைத் திட்டினாள் 
என் அம்மா..

மற்றுமொரு கவிதை....  தனக்குச் 
                                                   சோறூட்ட வருகிற 
                                                    பிஞ்சு விரல்களை 
                                                     ரசித்துக் கொண்டே 
                                                      உண்ண மறக்கின்றன 
                                                       பிளாஸ்டிக் பொம்மைகள்.

இந்தவாரக் குங்குமம் இதழில் மேற்கண்ட இரண்டு கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.. மிகவும் ரசித்தேன்.

வழக்கமாக நான் விகடன் தவிர எந்த வார இதழ்களும் வாசிப்பதில்லை.. விகடனைக் கூட மிக அரிதாக, கைக்குக் கிடைக்கிற பட்சத்தில் மட்டுமே ..
அதிலும் நான் எந்தக் கவிதைகளையும் தேடித் பிடித்து படிப்பவனல்ல..
அதையும் தாண்டி இவை என் கண்ணில் பட்டு என்னை மிக ரசிக்க வைத்தன . இனி, மற்ற பத்திரிகைகளையும் படிக்க வேண்டும், மற்ற கவிதைகளையும் தேடித் பிடித்து படிக்கவேண்டும் என்ற ஆசைகளைத் தூண்டிவிட்டன, குங்கமும் அதன் இரண்டு சிறு கவிதைகளும்...

ஆனால் நான் சோம்பேறி .. அப்படி எல்லாம் படிப்பேன் என்று எனக்கே நம்பிக்கை இல்லை .. பார்ப்போம்.




























Monday, September 10, 2012

புதிய பார்வை..



இந்தப் புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
நிச்சயம் ஓர்
சந்தோஷமான கவிதை
வரப்போவதில்லை...

ஆனால் இந்தப்
புகைப்படத்திலுள்ள
குழந்தைகளுக்குப்
போல சந்தோஷம்
வேறாருக்கும்
இருக்கப் போவதுமில்லை...

இந்தப் புகைப்
படத்திற்கு முந்தைய
இதற்குப் பிந்தைய...
இவர்களது அவகாசங்கள்
யாவும் சத்தியமாக
ஆனந்தக் குறைபாடற்றுத்
தான் இருந்திருக்கக் கூடும்...

ஆனால்
கவிதை எழுதுகிற நாம்
இவர்கள் சேற்றில்
விழுந்துவிட்டதாகப்
புனைகிறோம்...
இவர்கள் கவலைப்
படுவதாக
கவிதையை நடிக்க
வைக்கிறோம்...

இவர்களுக்கு அறிவு வந்து
வாழ்நாளில் இவர்கள்
அறிகிற கவலை
என்பது ... நாமெல்லாம்
அனுபவிக்கிற
பெருங்கவலைகளின்
சிறு துகள்களே அன்றி
வேறொன்றுமல்ல...

என்ன.. நாமெல்லாம்
காருக்குள் அழுதுகொண்டு
போய்க் கொண்டிருப்போம்..
இவர்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
தேரிழுப்பவர்கள்....!!
--------*************--------

Saturday, September 8, 2012

தாடிக் கொம்பு..

முதல் முறையாக திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சௌந்தர ராசப் பெருமாள் கோவில் அமைந்துள்ள தாடிக்கொம்பு என்ற இடம் சென்றிருந்தேன்.. தேய்பிறை அஷ்டமிக்கு அங்கே இருக்கிற பைரவர் மிக விசேஷம் என்று சொல்லக் கேள்வி. .. பொதுவாக பைரவர் ஈஸ்வரர் கோவில்களில் தான் வீற்றிருப்பார்.. ஆனால் இங்கே பெருமாள் கோவிலில் இருப்பது தான் இவ்வளவு விசேஷத்துக்கு காரணமாக அமைந்ததோ என்னவோ..18

கூட்டம் அப்படி மொயப்பதைப் பார்த்தால் பெருமாளும் பைரவரும் கீழிறங்கி வந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ....
அடேங்கப்பா... என்று வியக்கத் தூண்டுமளவு சும்மா கூட்டம் அப்படி பம்முகிறது... 
2619152228
நாமெங்கே பார்க்கப் போகிறோம் என்று ஓர் சந்தேகம் வரவே, சரி திரும்பி விடுவோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டேன்... 
திருப்பூரிலிருந்து மெனக்கெட்டு இம்புட்டு தூரம் வந்துட்டோம், பார்க்காமப் போனா என்ன அர்த்தம்... மறுபடி இனி எப்ப வருவோம்?.. அல்லது வருவதென்பது என்ன நிச்சயம்?.. இப்படியெல்லாம் அறிவுப் பூர்வமாகத் தோன்றவே , எப்டியாச்சும் தரிசனம் பண்ணிட்டே போயிடலாம் என்று முடிவெடுத்து , சௌந்தரராசப் பெருமாள், சௌந்தரவல்லித் தாயார், காலப் பைரவர் என்று .. ஒரே ஸ்ட்ரோக்கில் மூவரையும் தரிசித்தாயிற்று.. வெளியே வந்தாயிற்று..24

எல்லா விஷயங்களும் இப்படித்தான்.. நாம் பார்த்து என்ன முடிவெடுக்கிறோமோ, அது தான் அங்கே நடக்கிறது.. . 
முடியாது நடக்காதென்று முடிவேடுத்தோ மேயா னால் .. அது முடிகிற மாதிரி இருந்தால் கூட  முடியாமலே போய் விடும்..
சத்தியமாக முடியாது என்றாலும் , முடியுமென்று ஓர் முடிவை எடுத்த் விட்டால்  அது முடிந்தே விடும்... 
இதொன்றும் புதுத் தத்துவம் போல தெரியவில்லை.. மிக யதார்த்தமான ஒரு நடைமுறை என்றே எனக்குத் தோன்றுகிறது.. 

ஓர் கூட்டமில்லாத நாளில் இந்தக் கோவில் சென்றிருந்தால் இவ்வளவு தத்துவங்களுக்கு இங்கே  வேலை இல்லை .. எல்லா சாமிகளும் ப்ரீ யாக இருப்பார்கள், நாமும் அப்டியே ஹாயாக தரிசித்து விட்டு வந்திருக்கலாம்... ஆனால் இந்த நம்பிக்கை சம்பந்தமான எந்தக் கண்செப்டுகளும்  உதயமாகி இருக்காது... ஹிஹி..
27

காதலின் அடுத்த தளம்..

அங்கும் இங்குமாக காதலர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஓர் தீரா ஏக்கம்... நமக்கிந்த சுகந்த அனுபவம் வாய்க்காமல் போயிற்றே என்று...
அதற்கான மெனக்கெடல்கள் என்வசம் இல்லை என்று முழுதுமாக சொல்லி விட முடியாது... என் மெனக்கெடல்கள் யாவும் நனைந்த பட்டாசுக்கு நெருப்பைச் செருக முயன்ற மாதிரியே அன்றி வெடிக்கத் தயாரிலிருந்த பட்டாசுகளுக்கு நெருப்பை  நான் காட்டவில்லை... கால ஈரத்தில் அவை நமுத்துப் போயின நாளடைவில்... பட்டாசும் நமுத்து தீக்குச்சியும் நமுத்து ....

என் காதலை வர்ணிக்க முனைகையில்-- என் பேனா- காகிதம், இப்போது இந்த கணினி .. எல்லாமே சத்தமில்லாமல் எங்கேனும் ஓர் மூலையில் மூக்கை சிந்தி அழுதவண்ணம் இருக்கக் கூடுமென்பது எனதெண்ணம்..

ஒரு ஒடுங்குன டப்பா மூஞ்சியை வைத்துக் கொண்டு ஒய்யாரமான ஒருத்தியைக் கவிழ்த்துப் போட்ட அவனுடைய சாதுரியம் எனக்கு அதிசயம், ஆச்சர்யம்... என்ன தேஜஸ் அவனிடம் கண்டாள்  அந்த அழகிய பெண்?.. அவளது கால் தூசின் சமானம் கூட அவன் இல்லை, ஆனால் அவனில் லயித்து...,  தன்னை முழுதுமாக அவனுள் புதைத்து... காதல் புரிகிறாளே ...! செய்வதறியாது திகைக்கிறேன்..!!

-இந்தத் திகைப்பு ஏதோ ஒரு ஜோடியை மட்டுமே கண்டல்ல... ஏகப்பட்ட ஜோடிகள் இந்த தினுசில் தான் இருக்கின்றன...
எக்ஸ்க்ளூஸீ வாக ரெண்டொரு ஜோடி மட்டுமே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்... அதிலொரு ஆத்மதிருப்தி...
எது எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு மனசு போகுதா?.. நமக்குத்தான் இதெல்லாம் வாய்க்கலே.. வாய்ச்சதாவது  வெளங்குதான்னு ஒரு நோட்டம்    போடறதுல ஒரு  த்ரில்..

இந்தப் பெண் நமக்கு கிடைப்பாளா?.. இவளது தேகம் நம் சொந்தமாகி, இவளை முழுதுமாக வருடி இன்ப ரசத்தில் கிறங்கும் தருணம் நிகழுமா?.. அல்லது எல்லாமே வெறும் ஆசை கற்பனையோடு  முடிவு பெற்று விடுமா?.. ஹய்யோ.."
என்றெல்லாம் சதா கவலை கொண்டு, பசித்தும்  சாப்பிடாமல் படுத்தும் உறங்காமல்,  குளிக்கத் தோன்றாமல், குளிப்பதை நிறுத்த முடியாமல்... இப்படியான பேரவஸ்தைகளுக்குப் பிற்பாடு அந்தப் பெண் தனது மனைவியாக அமைந்தால்..? அதற்கீடு இவ்வுலகில் வேறொன்றுண்டோ??

மனைவி பேரழகியாகக் கிடைத்த பிற்பாடு அவளைக் காதலிக்கிற சுகம் கூட ரெண்டாம் பட்சம் தான்.. முந்தைய அனுபவத்தை ஒப்பிடும் போது ...

ஆனால் காதல்கள் ஆரம்பத்தில் மட்டுமே  கிறக்கம்  நிரம்பி வழிவதாகவும் ஆன் தி வே .. குண்டி துடைக்கிற கல்லாக மாறி நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம், பல இடங்களில்...

பெற்றோரின் மானக்கேடான உணர்வுகளும் அதன் நிமித்தமான சபிப்புகளும் தங்கள் குழந்தைகளை அந்த கதிக்கு நிறுத்தி விடுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றும் அளவு காதலர்களின் வாழ்வு வளமிழந்து போய் விடுவது சற்று வேதனையே..

ஆனால் நகை விற்கிற விலையைப் பார்த்தால், என்னைப் போல-- காதலிக்க வராத குழந்தைகளைக்  கண்டு பெற்றோரே கவலைப் படுமளவு காலம் மாறுகிறதோ என்று  கவலையோடு சிரிக்க நேர்கிறது...

"ஹேய் .. எரும மாடே.. அவன் உன்னைப் பார்த்து எவ்ளோ அழகா ஸ்மைல் பண்ணினான்.. நீ என்ன லூசு மாதிரி எந்த ரியாக்ஷனும் இல்லாம போயிட்டிருக்கே?"
இப்படி, தாய் மகளை -காதலிக்காததற்கு- சங்கடப்பட்டு சலித்துக் கொள்கிற காலம் நெருங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, விண்ணை முட்டுகிற விலைவாசிகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எகிறிக் கொண்டிருக்கிற நகை விலையும் ..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...