Friday, February 27, 2015

பயணங்கள் முடிகிறது..

நம்முடைய அன்றாட பயணங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிற பேருந்துகளின் அவல நிலைமையை சற்றே இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..

முதற்கண் அரசாங்க ரீதியாக செயல்படுகிற பேருந்துகள் குறித்து சிலவற்றை சொல்கிறேன்..
எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஸ்லைடிங் ஜன்னல் கதவுகள் இருந்து வந்தன.. அவரவர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப , அப்படியோ இப்படியோ நகர்த்திக் கொண்டு நிம்மதியாக இருந்தனர் பொதுமக்கள்.. ஆனால், இப்போது மேலிருந்து பனால் என்று இறங்குகிற கண்ணாடி விண்டோ.. குழந்தையின் கையோ விரல்களோ தப்பித் தவறி வைக்கப் படுமாயின் சுலபத்தில் துண்டு ஆகிவிடக் கூடும். சில ஜன்னல் கதவுகள் மிக அவசரமாக இறங்கி பெரும் சப்தம் நிகழ்த்தும்.. சில ஜன்னல்களோ, என்ன இழுத்தாலும் கீழே இறங்காது.. அதையும் மீறி, கீழே அப்பாடா என்று கொண்டு வந்தாலோ, மறுபடி காற்று வரத் திறக்க வேண்டுமாயின் பகீரதப் பிரயத்தனப் படவேண்டும்.. 3 பேர்கள் சேர்ந்து எப்படியோ மேலே ஏற்றி நிறுத்தினாலோ, அந்த லூப்பைப் போட ஒரு போராட்டம்...

ஒரு கோட்டரைக் கவிழ்த்துக்  கொண்டு உட்காருகிற கபோதிகளுக்கு இதெல்லாம் பிரச்சினை  இல்லை.. காற்று வந்தால் என்ன, எக்கேடு கேட்டால் என்ன.. அந்த லாகிரி மப்பில் அண்ணன் குறட்டை போட ஆரம்பித்தால் , தான் இறங்க வேண்டிய  இடம் கூட கடந்து போய் வேறெங்கோ இறங்கி மறுபடி திரும்பி வந்தாக வேண்டும். குடிகாரப் பசங்களுக்குப் பக்கத்தில் உட்காருகிற நபர் தான் பெரிய துரதிர்ஷ்டசாலி.. அந்தக் கருமாந்திர வீச்சமும் அவ்வப் போதைய  அவனுடைய அனத்தல்களும் தாங்கவே முடியாது.. எழுந்து போய்  எங்கேனும் நின்று கொண்டால் கூட தேவலாம் போன்று ஒரு அசூயை வரும்..
ஆனால் அதையும் தாண்டி அசதி ஆட்கொண்டு 'போகுது போ' என்று அப்படியே  கிடக்க நேரும் .. ..
.
இருவர் அமரவேண்டிய இருக்கையில் இருவர் அமரலாம்.. மூவர் அமரவேண்டிய இருக்கையில் மூவர் அமரலாம் என்பது அரசாங்கப்  பேருந்துகளின்  தனிச் சிறப்பு.. சமயங்களில் ஏதோ ஒரு குண்டு வந்து சிக்கிக் கொண்டால், அம்புட்டுதான்.. மற்ற இருவர் கதியும் அதோகதி..
அனேக அரசாங்க பஸ்களில் டிஜிட்டல் ஸ்பீக்கர்களுக்கு வேலையே இல்லை.. பழைய காலத்து  வானொலி போன்று ஏதாவது கவைக்கு உதவாத பாடல்கள் முழங்கிக் கழுத்தறுப்பு நடக்கும்.. ஏதோ  நடுநடுவே இளையராஜாவின் கண்மணியே காதல் என்பது கற்பனையோ , என் வானிலே போன்ற பாடல்கள் ஒலிக்கும்.. அதுவும் இளையராஜாவுக்காக அல்ல, ரஜினி படங்கள் என்பதற்காக.. ஆனால் அதற்கடுத்த பாடலே, நாடு அதை நாடு நாடா விட்டால் ஏது வீடு  என்று சாகடிக்க ஆரம்பிப்பார்கள்.. அதுவும் கூட எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக அல்ல, எம்.ஜி.ஆர் க்காகவே.. !!

சில அரசாங்கப் பேருந்துகள் வெண்ணையில் கத்தி வைத்த விதமாக அழகாக வழுக்கிக் கொண்டு போகும்.. சில வண்டிகளோ, நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வெரச்சுப் போய் .. "ஆள உடுங்கடா சாமி" என்ற விதமாக இறங்கி  ஓட நேரும் நமது ஸ்டாப் வந்ததும்..
இந்த ஒரு ரூபா 2 ரூபா பிரச்சினைகள் அவ்வப்போது முளைத்து கண்டக்டருக்கும்  பயணிக்கும் ஒரு மூன்றாம் உலகப் போரே நடைபெறும்..
அத்தனை சில்லறைகளை ஆட்டிக் கொண்டே அப்புறம்  இறங்கும் சமயத்தில் தருவதாக சொல்லி கடுப்பேற்றுவார் கண்டக்டர்..  பயணிகள் சிலரோ  அந்த ஒற்றை ரூபாயில் உலகையே விலை பேசுவது போன்று அத்தனை கறாராக இருப்பர்..

சில பேருந்துகளில் ரிலாக்ஸாக சாய ஒரு பிடிமானமான கைப்பிடி இருக்கும்.. அனேக பேருந்துகளில் அது இருக்காது.. ஒரு தோதில்லாமல் தான் மண்டையை  முன்சீட்டில் பதிய வைத்தாக வேண்டும்..

இனி நம்ம ஆஸ்த்தான ப்ரைவேட் பஸ்கள் பற்றி பிதற்றுவோம்..

மேலே, கீழே, ஒரே அமர்க்களம்.. சீலிங் டிசைன் சும்மா பின்னித் தள்ளும்.. பந்தாவான சீட்கள்.. கலர் கலரான ஃபோம்கள் ..
ஆனா மச்சி.. 2 பேரு குந்தி இருக்கற சீட்ல 3வதா ஒருத்தர் போயி ஒக்காந்தார்னு வைங்க. அவ்ளோ தான்.. செம இம்சை அது..
அதுவும் ஜன்னலோரத்துல ஒருத்தர் உட்கார்ந்திருப்பார்.. அப்புறம், இந்த ஓரத்துல ஒருத்தர் உட்கார்ந்திருப்பார்.. 3வதா வரும்  நபருக்கு நடுவில் தான்  இடம்.. காலை நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியவே முடியாது..ஒவ்வொரு சீட்டுக்கு அடியிலும்  ஸ்பீக்கரையோ
  அல்லது வேறு ஏதாவது கருமாந்திரத்தையோ நிரப்பி விடுவார்கள்.. இந்த அவஸ்தையில் சும்மா ஹோம் தியேட்டர் கணக்காக போன மாதம் ரிலீஸ் ஆகி ஓடுகிற விஜய் அஜீத் படங்கள் .. டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்..
சீட்டிங் நிம்மதி இல்லை, கூட்டம் பம்முகிறது.. குண்டியைக் கொண்டு வந்து முகத்தில்  இடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்.. மூவர் சீட்டில் இரண்டரைப் பேர்கள்.. மற்றும் இருவர் சீட்டில் ஒன்றரைப் பேர்கள்..

வண்டி பறக்கிறது.. கன்னாபின்னா வேகம்.. அதனை ரசிக்கிற சிலர், அதிலே பயக்கிற சிலர்.. பின்னாடி ஏறுகிறவர்களை முன்னுக்கு செல்ல சொல்லி கத்துவதும்  முன்னாடி ஏறுகிறவர்களை பின்னுக்கு நகர சொல்லி...
மக்களை ஜூஸாக்கி பிழிகிறார்கள்.. இரட்டை நடத்துனர்கள்..
ஆனாலும், ஒரு ஸ்டாப்பில் நிறுத்த சொல்லி கை காட்டுகிற நபருக்கு உடனே பஸ் நிற்கிறது.. தான் கட்டளை இட்டதும் நின்று தன்னை ஏற்றுகிற பேருந்தை பெருமையாகக் கருதி உள்ளே வருகிற அந்தப் பயணிக்கு உள்ளே புகுந்ததும் தான்  நாற்றம் புரிகிறது..
நிற்கக் கூட இடமற்ற இதனை எதற்கடா நிறுத்த வேண்டும்?

ஆனால் அரசாங்கப் பேருந்தோ, விசாலமாக இடமிருந்தால் கூட, பிரத்யேக நிறுத்தத்தில் தான் அவை நிற்கும்... கும்பலாக ஏறுவதை இம்சையாக உணர்கிற நடத்துனர்..
எத்தனை கலெக்ஷன் ஆனாலும் அதே சம்பளம் தான்.. என்கிற அசமந்தம்..

ஆனால், தனியார் பேருந்து நடத்துனர்களுக்கோ, கூட்டத்தை நிரப்புகிற அளவு போனஸ் .. கமிஷன் என்கிற அடிப்படை.. அது போக சம்பளம்..

இவர்களுடைய இந்த மாதிரியான சுயநல பிரச்சினைகளுக்கு பலிகடா ஆவது அப்பாவிப் பொது மக்கள் தான்..

இதெல்லாம் போக, போட்டி போட்டுக் கொண்டு துரித கதியில் பேருந்தை முடுக்குவது, டைமிங் மிஸ் ஆனால், டென்ஷன் ஆகி ஆக்ஸலரேட்டரில் இருந்து காலை எடுக்க மறப்பது.. , பிரேக்கை மிதிக்க மறப்பது.. பிறகு மரத்தில் மோதியும் டீலாவுள் கவிழ்ந்தும் மக்களை காயப் படுத்துவது, உசுரை எடுப்பது.. அதற்கென அரசாங்கம்... சுமாரான  காயத்துக்கு ரூ.25 ஆயிரம், சூப்பர் காயத்துக்கு ரூ.50 ஆயிரம் , சாவுக்கு ரூ.1 லட்சம் ...ஹோட்டல் மெனு போன்ற   அறிவிப்புக் கூத்துக்கள்.. !
நெஜமாலுமே இந்தப் பணமெல்லாம் கிடைக்குதான்னு பாதிக்கப் பட்டவங்க கிட்ட தெளிவா கேட்டா தான்  தெரியும்.. மத்தபடிக்கு நமக்கெல்லாம் தொலைகாட்சி மற்றும் பேப்பர் செய்தி தான்..

வேண்டுமானால், அந்த ரூ.25 ஆயிரம் மெனுவை முயன்று பார்ப்போமா? ஹிஹி.. ஐயோ ஐயோ..


Tuesday, February 24, 2015

அறிவு தவிர்..

பறக்கும் திராணி அற்றிருந்த 
அறியாமைச் சிறகுகளோடு 
நான் உச்சி சென்று 
குதித்திருக்கிறேன்.. 
வானம் தொட 
முயன்றிருக்கிறேன்.. 
அப்போதெல்லாம் 
காயங்களோ உடற்சேதாரமோ 
வலிகளோ நேர்ந்ததாக 
ஞாபகமில்லை.. 

இன்றைய முதிர்ந்த 
அறிவுச் சிறகுகளோடு 
மெல்ல நடந்தாலுமே கூட 
இடறுகின்றன கால்கள்.. 
காயங்களும் வலிகளும் 
கற்பனையில் வந்தே 
அதீத வலிகள் நிகழ்த்துகின்றன.. !

ஐந்தறிவு அஜாக்கிரதையோடு 
மின்சாரக் கம்பிகளிடையே கூட 
கண்ணாமூச்சி விளையாட 
சாத்தியப் பட்டிருக்கிறது.. 

இன்றைய பகுத்தறிவுகளும் 
ஜாக்கிரதை உணர்வுகளும்  
நான்கு பூட்டுக்களை 
வாசற்கதவுக்குப் போட்டும் கூட 
நடுவீட்டுக்குள் திருடன் வந்து 
கழுத்தில் கத்தி வைத்துவிட்ட 
பீதியுள் உறைந்து கிடக்க  
விழைகிறது.. !!

Saturday, February 21, 2015

ஒருதலைராகம்

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பூங்கா நாற்காலியில் 
ஒற்றையாக உட்கார்ந்திருக்கிறேன்.. 
நீ வந்தால் பரவாயில்லையே 
என்று.. 

சாயங்காலம் கரைந்து போய் 
அந்தியின் வெளிச்சம் 
சுட ஆரம்பிக்கையில் 
என் தனிமை அழத் துவங்கிற்று.. !

குலுங்கி அழ நேர்கையில் 
எல்லாம் உனது மடி 
என் ஞாபகத்துக்கு வரும்.. 
அருகில் நீ இருந்திருக்கும் 
பட்சத்தில் அதிலே 
சாய்ந்து அழலாம் என்றும்  
என் பிடரி முடியை 
நெருடுகிற உன் விரல்களின் 
ஆறுதல் நர்த்தனங்களும் .. 

நீ அருகில் இருந்திருக்கும் 
பட்சத்தில் நான் 
அழுவதற்கான சந்தர்ப்பமே 
இல்லையே என்கிற 
சுரணை வருகிறது...!

-ஆனால் 
நீ அற்ற  இந்தத் 
தருணம் .. 
எனக்கந்த சந்தர்ப்பத்தை 
அளித்துள்ளது.. 
ஆகவே, அந்தப் பூங்கா 
நாற்காலியில் குப்புறக் 
கவிழ்ந்து குமுறிக்  
கதறுகிறேன்.. 

நேரம் முடிந்தது 
என்று சொல்லக் 
காத்திருக்கிறான் 
பூங்கா காவலாளி.. 
அதுவும் போக, 
நான் அழுது முடிக்கட்டும் 
என்றும் அவன் 
காத்திருப்பதாகவே 
எனக்குத் தோன்றியது.. !!

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பொய்களை எல்லாம் 
மௌனமாகத் தான் 
முழங்கியாக வேண்டியுள்ளது.. !!!


Friday, February 20, 2015

கழியாத பழையன ..

னது முகம் 
கூட எனக்கு 
தெளிவான ஞாபகத்தில் 
இல்லை.. 

ஆனால் உன்னைக் 
குறித்தான ஏக்கம் 
அதே அடர்த்தியில் 
இன்னும் என்னில்.. 

மறுபடி உன்னை 
எங்கேனும் நான் 
பார்க்கும் பேறு கிட்டுமோ 
என்கிற தேடல் உண்டு 
என்னிடம்.. !

சாலைகளில் 
எதிர்ப்படுகிற சில 
பெண்களின் முகங்கள் 
உனது முகம் 
ஒத்தவையாக  உள்ளன..
அப்போது மட்டும் 
உன் முகம் உடனே 
எனது இதயத்தைப் 
பிய்த்தெறிந்து வெளிவருகிறது.. 

உன்னை அன்று 
பின்தொடர்ந்தது போன்று  
உன் மாதிரி பெண்களையும் 
இன்று பின்தொடர  நேர்கிறது.. 

அவை 
மலரும் நினைவுகளுக்காக 
மட்டுமே அன்றி வேறெதற்கும் 
அன்று.. !!

எனது சூழல் புரியாத  
அவர்கள்  என்னை 
ஒரு களவாணி போன்று  
கருதி  துரிதமாகிறார்கள் ..

எனக்கது வேதனையளிக்கிறது..
நீயே அவ்விதம் 
புறக்கணிப்பது போன்று  
அழுகை முட்டுகிறது.. !!

Wednesday, February 18, 2015

ராமராஜனும் ரஜினிகாந்தும் ..

மாநில முதலமைச்சராக நாற்காலியில் உட்காருகையில் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து சாதிக்கலாம் என்கிற நீண்ட பட்டியல் நிச்சயம் ராமராஜன் வசம் இருந்திருக்கக் கூடும்.. கரகாட்டக்காரன் பட்டிதொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய அந்தக் காலகட்டங்களில்..
ஆனால் காலமோ மக்களோ அதற்கொரு சாசுவதத்தை அவருக்கு அளிக்கவில்லை.. அடுத்த MGR கனவுகளில் ராமராஜன் மிதந்து கொண்டிருந்தார்.. ஆனால் அடுத்து அடுத்து வந்த படங்கள் ரா.ரா வுக்கு பெரும் ஆப்புகளாக அமைந்தன.. தங்கக் கனவுகள் துகள்களாகிப் பறந்தன.
இப்போது அந்தத் துகள்களும் வெறும் தூசிகளாகி... மூக்கிலேறி 'அண்ணன்' தும்மிக் கொண்டிருக்கிறார்.......Image result for ramarajan and rajinikanthImage result for ramarajan and rajinikanth

டத்துக்கு படம் 'பஞ்ச்' டயலாக் பேசி ரசிகர்களை, பிற மக்களை இம்சித்து வந்த நம்ம ரஜினிக்கு இப்ப டோட்டலாவே ஆப்பு என்பது போல தான் அவரும் உணர்கிறார், மக்களும் உணர்கின்றனர்..
தன்னோட கடைசிப் படமா எந்திரனை அறிவிச்சு அழகா ஒரு மெகா ஹிட் கொடுத்த திருப்தியோட தன்னோட திரை உலக வாழ்வில் இருந்து விலகி, அரசியலில் தடம் பதித்திருந்தால் ரஜினியின் தீர்க்க தரிசனத்தை மெச்சலாம்.. ஆனா பாருங்க.. 3 ன்னு ஒரு 3 பட்டை நாமம் சார்த்துன மாதிரி ஒரு படத்தை மகளும் மருமகனும் சேர்ந்து ஒரு வழி செஞ்சாங்க.. அதுக்குப் பிறகு இன்னொரு மகள் தன்னோட பங்குக்கு கோச்சடையான் ன்னு ஒரு அனிமேஷன் படத்தை  எடுத்து கவுத்தாக.. இதெல்லாம் போதாதுன்னு ரஜினி  தன்னோட பங்குக்கு லிங்கா ன்னு ஒரு படத்துல நடிச்சு ... அது என்ன ஆச்சு ... இப்ப என்ன ஸ்டேட்டஸ் அப்டிங்கறதெல்லாம் உங்க எல்லாருக்கும் புரிஞ்ச விஷயம்..
இப்போதைய கண்டிஷன் என்னன்னா, ரஜினியோட சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறி. அரசியல் வாழ்க்கையும் கே.கு.. 

Sunday, February 15, 2015

அனேகன்

அனேகன் .. பார்த்தேன்.
இதுவரைக்கும் வழக்கிலே கேள்விப் படாத வார்த்தை.. அகராதியில் பிடித்திருப்பார்கள் போல.. நான், அநேகமாக எதற்காகவும் அகராதியைப் புரட்டுவதில்லை.. , அதுவும் குறிப்பாக தமிழகராதி எனக்கு மிக அந்நியம் .. !!
Image result for BURMA DHANUSH ANEGAN
இந்தப் படத்தை விமரிசிக்க ஒரு பிரத்யேகத் திறமை தேவைப் படுகிறது என்பது என் வாதம்.. நானெல்லாம் கத்துக்குட்டி ஆகவே, எமது விமரிசனத்தில் ஒரு மெச்சூரிட்டி இருக்குமா என்பது எனக்கே சந்தேகம் தான்.. 

3 பிறவிக் கதை.. அங்கங்கே அதற்கான தளங்கள் பிளவு பெறுவதும் சம்பவங்கள் கோர்க்கப் படுவதும் மஹா ஜிம்மிக்ஸ்.. 
தனுஷின் பர்மா கெட்-அப் .., அப்புறம் பலே பாண்டியா கெட் அப் , அண்ட் தென் , ப்ரெசென்ட் , ஐ மீன், நிகழ்கால ஐ.டி ஃபீல்ட் ஆஃபீஸ் கோயர் .. 

அனைத்துப் பிறப்புகளிலும் காதலியும் [ஏழேழு பிறவியிலும் ஒனக்கு நான், எனக்கு நீ தான் புள்ளே என்பது போல] நண்பனும் இன்ன பிறரும் ஒரே.. 

 அந்தந்தக் கால கட்டத்துக்கு ஏற்றார் போன்று வலம் வருகின்றனர்.. 

இந்தக் கூத்தெல்லாம் இதுவரைக்கும் தமிழ் சினிமா சந்தித்திராத  டிப்பிக்கல் சமாச்சாரங்கள்.. ஆகவே சுலபத்தில் வாய்க்குள் ஈ புகுவது கூட புலனாகாத வகையிலே  அலங்கமலங்க அண்ணாந்து பார்க்கிறோம்.. 

டப்பாங்கூத்து, மெலடி என்று பாடல்கள் வகையறா வகுத்துள்ளன.. 
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னிப் பெடலெடுக்கிற பீ.ஜி எம் .. [என்ன தான் பண்ணாலும் நம்ம ராஜா bgm மாதிரி எதுவும் மனசுல நிக்கறது இல்லேங்கறது இன்றைய பொதுவான யதார்த்தம்] 
இன்றைய நவீனத்துவ டெக்னிக்கோடு ஜொலிக்கிற ஒளிப்பதிவு.. நேர்த்தியான எடிட்டிங்.. என்று அனைத்து விஷயங்களுமே லக்ஸூரி பொதிந்துள்ளதை மறுப்பதற்கில்லை.. 

அப்புறம் தனுஷின் அனாயாச  நடிப்பு.. அந்தந்த காரக்டாராகவே மிக இயல்பாக மாறி  விட்டிருப்பது ரசிகர்களுக்குக் குதூகலம்.. நாயகியும் எல்லா பிறவி தனுஷுக்கும் ஏற்றார் போன்று வருவது இன்னொரு ஆச்சர்யம்.. 

இப்படி இல்லாத நடக்காத நடக்க முடியாத  சம்பவங்களைப்  புனைந்து விருந்து படைத்துள்ள k v .ஆனந்துக்கு அப்ளாஸ்.. 
இப்படி எல்லாம் நடந்தா எப்டி ஜாலியா இருக்கும்? ஒருக்கால் இப்படி எல்லாம் தான் நடக்குமோ? என்கிற ஆசைகளும் அனுமானங்களும் நமக்குள் ஒரு புது டெம்போவை  ஏற்றுகிறது என்றால் அது மிகையன்று.. 

லாங் இண்டர்வல் விட்டு கார்த்திக் வந்து கொஞ்சம் ஜாலி செய்கிறார்.. அவரது நடவடிக்கைகள் படத்தின் சென்ஸிடிவ் சஸ்பென்ஸ்.. அதை இங்கே உடைத்து உங்களது வாச்சிங் மூடை அப்செட் செய்ய வேண்டாமே.. 

அரதப் பழைய அரைத்த மாவுகளை  அரைத்து நம்மையும் போட்டு அரைத்தெடுக்கிற  எவ்வளவோ  அரைவேக்காட்டுப் படங்களுக்கு மத்தியில் இப்படியான  மைண்ட் புலோயிங் இமேஜிநேஷனும் தேவை தான்.. ஜாலி லாகிங்..  என்ஜாய் டியூட்ஸ்.. யா.. லேடீஸ்க்கும் பிடிக்கும்.. ஏன்னா, என்கூட என் மனைவியும் வந்திருந்தாள் .. ரசித்ததாக சொன்னாள் .. 

Saturday, February 14, 2015

நாஸ்திகனின் பக்தி..

சுவாமியைப் பிரார்த்திப்பதில்
என்னிடம் உண்மையில்லை..
அவ்வப்போது
சுவாமியை நிந்திப்பதில் கூட
தைரியமில்லை..

எதிலேனும் தோல்வி தழுவுகையில்
காரணம் சுவாமி
என்று கூப்பாடு போடுகிற நான்
எதையேனும் வென்றெடுக்கையில்
எனது திறன் என்று
மார் தட்டிப் புளகிக்கிறேன்..

சுவாமிக்கு ஆராதனை நடக்கையில்
குழந்தையின் பிஞ்சுக் கரங்களைக் கூப்பி
கர்ப்பக்கிரகம் பார்த்துக் கும்பிடச்
சொல்லி அறிவுறுத்துகிறாள் தாய்..
நானோ
பிரார்த்தனையின் போது
எவளது முகம்
மிளிர்கிறதென்று
எதிர்வரிசையை நோட்டமிடுகிறேன்.. !!

சுவாமி கோபிப்பாரோ என்கிற
பயங்களும் சந்தேகங்களும்  இருப்பினும்
என்னை மட்டும் மன்னித்து விடுகிற
உத்தேசம்  கடவுளுக்கு எப்போதும் உண்டென
நம்புவதுண்டு நான்..
நம்பிக்கை தானே வாழ்க்கை?

அர்ச்சகர் விநியோகித்த விபூதி குங்குமம்
எவள் நெற்றிக்கு அம்சம்
என்கிற எமது அடுத்த ஆராய்ச்சி
துவங்கி விடும்..

எனக்குப் பின்னாடி நிற்பவர்கள்
முன்னுக்கு என்னை
நகரச்சொல்லி துரிதப் படுத்துவர்..

என்னைத் தாண்டி நகரச் சொல்வேன்
பின்புற நபர்களை..

அடுத்த தீபாராதனைக்கு
புதிதாக வருகிற பெண்களை
நான் பார்த்தாக வேண்டி இருக்கிறது...!!






Tuesday, February 10, 2015

சம்பந்தமில்லாதவர்கள்..

தாயினிடத்து 
சிப்பிக்குள் முத்து போல 
ஆரோக்கியமாக 
பத்திரப் பட்டுக் கிடந்தோம்.. 

வெளி வந்த 

சில வருடங்களில்.. 

நோயெனும் 

தீவிரவாதியிடம் 
சிக்கிய பிணைக் கைதிகளாக 
மாறின நம் உடல்கள்.. !!

அல் -கொய்தா போன்ற 

ஆஸ்பத்திரிகளும் 
ஒசாமா பின்லேடன் போன்ற 
டாக்டர்களும் 
நோய்களின் தோழர்களே அன்றி 
ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களா 
என்ன??

வலி நிரம்பிய வாழ்க்கைகள் 

கைநழுவப் பார்த்தாலும் 
இறுகப் பற்றி வாழ முனைபவர்கள்
மனிதர்கள்..  
வலியற்ற மரணங்கள் 
ஆலிங்கணம் செய்ய வந்தாலும் 
புறந்தள்ளும் அவசரகதியில் தான் 
நம் அனிச்சை செயல்கள் அனைத்தும்....!!

குண்டுவைத்துத் தகர்க்கிற  

துர்க்குணம் நிரம்பியவன் 
கால்களைப் பற்றியேனும்  
வாழ்ந்து விடுமளவுக்கு 
இந்த வாழ்க்கை சுவாரஸ்யப் 
பட்டுப் போகிறது எல்லாருக்கும்.. 

நித்தரையினூடே இழைய வருகிற 

இயல்பான மரணத்தைக் கூட  
உடனடியாக அடையாளம் கண்டுணர்ந்து 
துப்புரவாக்கும் துரிதம் நம்மில்.. 

ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் 

அற்று நம்மை அள்ளிப் போட்டுக் 
கொண்டு போய்  விடும் ஒரு எதிர்பாரா 
தருவாயில் மரணம்... 

"இஸ்மாயிலுக்குத்  தர வேண்டிய 
ஐம்பதாயிரம் ஆகட்டும் 
ஆறுமுகம் நமக்குத் தரவேண்டிய 
அறுபதாயிரம் ஆகட்டும் 
ஜோசப் மனைவி இசபெல்லா 
அடகுக்கு வைத்திருந்த 
தோடாகட்டும்  "
மேற்கொண்டு 
எந்தக் கணக்கு வழக்குகளும் 
செத்தவனுக்கு இனி சம்பந்தமில்லை.. !!



Monday, February 9, 2015

"என்ன பொண்ணுடா இவ?"

முள்ளால் முள் எடுப்பது போன்று.. 
எமது உறக்கத்தைக் கலைத்தது 
அவளின் உறக்கம்.. 

பேருந்தின் நெடிய பயணம்.. 
ஆழ்ந்துறங்கிய வண்ணம் 
ஜன்னலோர இருக்கையில் நான்.. 

கண்டக்டரின் விசில் நமைச்சலிலோ 
டிரைவரின் திடீர் பிரேக்கிலோ 
கொடூரமாகக் கறைகிற ஸ்பீக்கர் முழக்கத்திலோ 
என் பொன்னுறக்கம் உதிர நேர்ந்தது.. 

நான் தூங்க ஆரம்பித்திருந்த சமயத்தில் 
உட்கார்ந்திருந்த வெற்றிலை பாக்குக் கிழவியே 
என் முந்தைய சீட்டில் இருந்திருக்கும் பட்சத்தில் 
எமது பேய்த் தூக்கம் மறுபடி தொடர்ந்திருக்கும்.. 
ஆனால், ஏதோ ஒரு நிறுத்தத்தில் கிழவி இறங்கிப் போய் 
அந்த இடத்தில் ஒரு  அமர்க்கள அழகி ஒருத்தி .. 
அதுவும் என்போலவே  உறங்கிக் கொண்டிருந்தாள் .. 
ஏதோ ஒரு நாராசாரத்திற்கு எனக்குத் தட்டிய  விழிப்பு 
அவளைத் தட்டவே இல்லை.. !!

தெளிவான அவளது உறக்கம் எனக்குள் சுவாரஸ்யம் ஏற்றி 
எமது உறக்கத்தை நமுத்துப் போகச்  செய்தது.. 
இனி நான் செத்தாலும்[?] தூங்கப் போவதில்லை 
என்கிற உத்திரவாதம் என்னாலேயே எனக்கு வழங்கப் பட்டது.. !

அவளது படுக்கையறை சம்பவம் .. சுலபத்தில் 
அதனை அருகாமையில் தரிசிக்க நேர்ந்ததில்  
என்னை மூர்ச்சையாக்கும் முஸ்தீபில் என்னில் பெருமூச்சு.. 
"என்ன பொண்ணுடா இவ?" என்று விஷால் ஏதோ படத்தில் 
பதறுகிற மாதிரி பதறும் எனதிதயம்... !

காற்றுக்கு மிதக்கிற அவளது மென்கேசம் ..
அவளின் நாசி நேர்த்திக்கு ஈடாக மறுத்தது  அந்த ஒற்றைக் கல் மூக்குத்தி.. 
சீராக அவள் உள்வாங்கி வெளிவிடுகிற நிசப்த மூச்சு.. 
எமது குறட்டையோடு ஒப்பீடு செய்யப் பட்டுக் குட்டிக் கொண்டது மனது.. 

அவளின் அந்த அற்புத உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள  என் தோள் துடித்தது.. 
அப்படியே அவளைச் சாய்த்துக் கொள்ள என் மடி முண்டியடித்தது.. 
குயிலெனக் கூவும் அவள் உறக்கத்துக்காக 
என் நரியூளை உறக்கத்தை  தீயிட்டுப் பொசுக்கத் துணிந்துவிட்டேன்.. 
மெல்லிய சாரலாக நனைக்கிற அவளது உறக்கத்துக்காக 
என் பேய்மழை உறக்கத்தை நிறுத்திவைக்கிற முடிவெனக்கு .. !

"ஏம்மா .. எறங்கற ஸ்டாப் வந்தா கூட உங்களுக்கெல்லாம் தூக்கம் கலையாதா ?" என்கிற நாசுக்கற்ற கண்டக்டரின் நாறவாயை 
நாய்க்கு வெட்டிப் போடவேண்டும் என்று என்னில் மூள்கிற கோபம்.. 

அழகிய பூவை  செடியிலிருந்து வெடுக்கென்று பறித்துப் போட்டு அதனை காலில் வேறு  நசுக்கிய மாதிரி பதறி விழித்தாள் அந்தப் பெண்.. 

நானும் இறங்கிக் கொண்டேன் அவளது நிறுத்தத்திலேயே.. 
3 அல்லது 4 மணிநேரப் பயணம் நான் இன்னும் அடைய வேண்டிய தூரம்.. 

அடுத்த பேருந்துக்குக் காத்திருக்கிறேன்.. 
அவள் பின்னாடியே போய் விடமுடிகிற  சாத்தியக் கூறுகளை அனாவசியத்துக்கு  அலசிக் கொண்டிருக்கிறேன் .. 

ஒரு ஈயாக மாறியிருந்தால்  போயிருக்க முடியும் என்று அடுத்த பேருந்தில் பயணிக்கையில்  யோசிக்க முடிந்தது என்னால்.. !!

Saturday, February 7, 2015

தருணங்கள்..

ந்தப் பிரத்யேக 
இசை என்னை 
மிகவும் பாதித்ததற்கான 
காரணி 
நீ மட்டுமே என்ற போதிலும் 
உனக்கும் அந்த 
இசைக்குமான தொடர்பை 
ஒரு சாவகாசத் தருவாயில் 
நான் யோசிக்கையில் 
மகத்தான ஓர் மாயையில் 
மனது பிடிபட்டுக் கிடப்பது 
எனக்குப் புரிபடுகிறது.. !!

தையேனும் எதனோடாவது 
தொடர்புப் படுத்திப் பார்க்கிற 
கற்பனைப் பிரவாகம் 
ஒருவகை லாகிரி வஸ்து...!

யர்ந்த ரக அந்த 
இசைக் கோவையில் 
உன் முகமும் அதன் 
புன்னகை உட்பட்ட 
இன்னபிற வகையறா 
உணர்வுக் கிளர்வுகளும்.. 
--அவைபோக 
உமது உடல்மொழிகளும் 
மிக இயல்பாகவே 
இழைந்து கொண்டது  
அப்படி ஒன்றும் 
முரண்பட்டதாகவோ 
புறக்கணிக்கப் பட 
வேண்டியதாகவோ 
தோன்றவில்லை 
மற்றுமொரு சாவகாசத் 
தருவாயில்....!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...