Wednesday, March 20, 2013

பரதேசி விமரிசனத்தில் விட்டுப் போன முக்கிய பத்தி...

பொருட்களையும் , இடங்களையும் இன்னபிற அக்றிணை விஷயங்களையும் முன்னிறுத்தி பழமையை, அதன் பாரம்பரியங்களை திரையில் காட்சிகளாக மிளிர வைப்பதென்பது -- கிஞ்சிற்று மெனக்கெட்டால் - ராமநாராயணனே-- கூட கொணர்ந்து விடுவது சாத்தியப் பட்டுவிடும்.., ஆனால், இன்றைய காலகட்டங்களில், இன்றைய நாகரீகங்களோடு உழல்கிற அவ்வளவு மனிதர்களை வைத்து அந்நாட்களின் தன்மையோடு, அவர்களது முகங்களில் அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கச் செய்திருக்கிற ஒப்பனைக் கலைஞர்கள் ஆகட்டும், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகட்டும் ... இவர்களுக்கெல்லாம் ஓர் அற்புத தளமமைத்துக் கொடுத்த டைரக்டர் திரு.பாலா ஆகட்டும் .. எல்லாருமே இறைவனின் தூதர்கள் போன்றே புரிபடுகிறார்கள்...


Saturday, March 16, 2013

நெனச்சத எழுதறேன். -2- [பரதேசி சினிமா விமரிசனம்]

பரதேசி பார்க்க நேர்ந்தது.. அந்த ஆரம்ப கட்டங்களில் பாலா காட்டுகிற 1939 ஆம் வருடத்திய சாலூர் என்கிற பெயரிட்ட கிராமம், வெள்ளந்திகளின் கூடாரமாக இருக்கிறது.. அன்று வாழ்ந்து வந்த மக்கள் எல்லாருமே எங்குமே அப்படித்தானோ?
பாரதிராஜா காண்பிப்பது தான் கிராமம் என்றிருந்தவனுக்கு பாலா காண்பிக்கிற இந்த கிராமம் இன்னும் ஆழ்ந்து ஊடுருவுகிறது மனசை..

சினிமாத்தனம் என்கிற ஓர் தன்மைக்கு பலிகடா ஆகாமல் யதார்த்தங்களை மாத்திரமே தனது இயல்பாக மறுபடி தன்னை நிலைநிறுத்தியுள்ள பாலாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டத் தகும்..

இதற்கு மேலாக ஓர் ஈனத் தனத்தை காண்பிக்கவே முடியாது - என்கிற விதமாக அமைந்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக முரளியின் மகன் அதர்வா அசத்தி இருப்பது... அதற்கு ஈடாக நாயகியும் அசத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்..

இன்னபிற பாத்திரங்களும் அதே நேர்த்தியோடு பாலாவால் மிக இயல்பாக ஆட்டுவிக்கப் பட்டுள்ளன..

அந்தப் பழமையை வெள்ளித் திரையில் நெடுகவே திணித்திருப்பது அசாத்தியத் துணிச்சல்..

மதராசப் பட்டினத்தில் தனது பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் உயிர் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இப்படத்துக்கும் அந்தக் காரியத்தை செய்திருக்கிறார்.. பாலா போன்ற ரசனை மிக்கவர்களுக்கு இவ்வித அடையாளங்கள் கூடவா தெரிந்து விடாமல் போய்  விடும்?

ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் எடிட்டிங்கும் வசனங்களும் பாடல்களும் .. இன்னபிற எல்லா டெக்னிக்  விஷயங்களுமே பாலா போலவே இந்தப் படத்திற்கு ஒத்துழைப்புக்  கொடுத்துள்ளன என்று கூறலாம்..

கண்ணீர் நமது கண்களை விட்டு வெளியேறத் தடுமாறுகிற வகையிலே காட்சி அமைப்பின்  சோகங்கள் இறுகிக் கிடக்கின்றன.. பொத்துக் கொண்டு அழ வேண்டுமென்றாலும், சம்பவங்கள் நம் மனங்களை freeze ஆக்கி விடுவதால் வெளி வந்த பிற்பாடு  தான். உருக நேர்கிறது..

அந்த வெள்ளைக் காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் அடிமையாக  நமது அப்பாவி ஜனங்கள் அனுபவிக்கிற பேராவஸ்தை.. இதன் நடுவே வந்து உயிரை களவாடிப் போகிற அந்தக் கொள்ளை நோய்கள்.. விட்டு வந்த கிராமத்தை மறுபடி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கொடூரம்.. இங்கிருந்து தப்பிக்க முயல்கையில் அதற்கென இவர்கள் அளிக்கிற  கூடுதல் தண்டனைகள்.. மனைவிமார்களைக்  கபளீகரித்து, காம வேட்டை ஆடுகிற டீ எஸ்டேட் வெள்ளைக் கார முதலாளிகள்..

இப்படி படம் நெடுக வலிகளும் வேதனைகளும் தர்மசங்கடங்களும் பிரச்னைகளும் ... படம் பார்க்கிற நாமும் வந்து ஓர் டீ எஸ்டேட்டில் மாட்டிக் கொண்ட ஒரு உணர்வு..

அவார்டுகளை வேண்டுமானால் குவிக்கக் கூடும், வசூலைக் குவிக்குமா என்பது கேள்வி தான்... ஏனென்றால் மிகப் பலரும் படம் பார்த்துவிட்டு வெளி வருகையில் இந்தப் படத்தை சலித்துக் கொள்வது தான் நாகரீகம் போல, ஒரு கடமை போல "ப்ச்" என்றும் "ச்சை " என்றும் கோரஸாக குலவை பாடி வந்தார்கள்..

அவார்டுகள் குவிவது போலவே , வசூலும் என்றைக்குக் குவியத் துவங்குகிறதோ அன்றைக்குத் தான் பாலாவுக்கு யதார்த்தமான வெற்றி.. அவார்டு கொடுப்பவர்கள் மாத்திரம் ஓர் படைப்பை  அங்கீகரிப்பதென்பது மிகவும் செயற்கையாகவும்  கவலையாகவும் உள்ளது..

நன்றி.. 

Friday, March 15, 2013

நெனச்சத எழுதறேன்..[ஒன்று]

தொடர்ந்து ஒரு தொடர்கதை போல எதையாவது எழுத வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் ஆசை வருகிறதெனிலும் , நடைமுறை சாத்தியம் என்பது எவ்வளவு கடினம் என்பதை என்னால் உணர முடியக் காரணம் நான் உண்மையாகவே ஓர் இயல்பான எழுத்தாளனில்லை...

இயல்பான எழுத்தாளன் இவ்வாறெல்லாம் பிதற்றாமல் தனது கதைகளை, கருத்துக்களை சொற்றொடர் பிசகாமல் செவ்வனே எழுதிக் குவிப்பான்.. சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கல்கி, அகிலன், புதுமைப்பித்தன், .. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இயல்பான எழுத்தாளர்களை.. ஆனால் அப்படி ஆக ஆசைப் படுகிற என் போன்ற ஏராள அமெச்சூர் எழுத்தாளர்கள் அதீதம் உள்ளனர்.. நாங்கள் பார்த்து குவிந்தோமேயானால் நாடு தாங்காது.. 

அவ்வபோது மதிக்கப் படுவதும் அங்கீகரிக்கப் படுவதும் எங்களுக்கும் நேர்கிற மின்சார தருணங்கள்....ஆனால், அனேக நேரங்களில், மிதிக்கப் படுவதும், எங்கள் கருத்துக்கள் எடுபடாமல் போவதும் அதன் நிமித்தமாக எங்களில் எழுகிற ஊற்றுப் போன்ற அவநம்பிக்கைகளும்.. "என்னங்கடா பொழப்பு இது?" என்கிற அவஸ்தைகளும் பல்பு பீஸ் போவது போன்ற தருணங்கள்.., மற்றும் மனதில் அமைதி [peace] பறிபோகிற தருணமும் கூட..

ஆனபோதிலும் இவ்விதப் பேரவஸ்தைகள் யாவும் ஓர் பிரத்யேக அனுபவத்துக்கு வந்து விடுகிறது.. ஆகவே, மிகவும் சுலபாகி விடுகிறோம்.. மேற்கொண்டு கெடுகிற மானங்களை சுரணையே இல்லாமல் கொண்டாடி விட முடிகிறது..

[இன்னும் நெனச்சத சொல்லப் போறேன்]

Monday, March 11, 2013

நிஜங்களின் நிழல்கள்...

காற்றும் வெளிச்சமும்
வருவதற்கென
கட்டப் பட்ட ஜன்னல்கள்
காறித் துப்பவும்
வாயைக் கொப்புளிக்கவும்
உபயோகத்துக்கு
மாறுவது போல..

சாமி சிலைக்கென
வெட்டப் பட்ட பாறைகள்
சில சிதைவுகள்
காரணமாக
படிக்கட்டுக்களாக
பரிணாம வளர்ச்சி[?]
கண்டன...

கோரஸ் பாட வந்து
பிரபலப் பின்னணிப்
பாடகனாகிற வாய்ப்பு..
சூப்பர் ஸ்டார்
ஆகிற கனவில் வந்து
குத்தாட்ட கும்பலில் கூட
 இடம்பெறக் காத்திருப்பது..

வழி நெடுக
எத்தனை பிள்ளையார்
கோவில்கள் இருந்தாலும்,
பிரச்சினைகள்
புடைசூழ்கையில் மாத்திரமே
பிரார்த்திக்கக்
குவிகின்றன கைகள்..

பிரச்சினைகளுக்குப் பிரார்த்திக்க
பிள்ளையார்கள் தேவையில்லை..
தெருச் சொறி நாய்களைக்
கூட "காப்பாற்று பைரவா "
என்கிறது மனது..

எல்லா சூழ்நிலைகளுமே
மாறுதலுக்கு உட்பட்டதென்கிற
உத்திரவாதங்களோடு
நம்மோடு உலா
வந்துகொண்டிருக்கிறது..
மரணத்தைத் தவிர..!!


Saturday, March 9, 2013

மனிதனின் மன அமைப்பு....


 இந்த வாழ்க்கை பற்பல பரிமாணங்களில் எல்லாராலும் அனுசரிக்கப் படுகிறது.. ஒருவர் ஏற்கிற விதத்தில மற்றொருவர் ஏற்பதில்லை... அவர் அவர்களுக்கான அனுமானங்களோடு ஓர் பிரத்யேகமான சூழல் அனுபவப்படுகிறது..

உதாரணமாக  மலை வளைவுகளில் ரசனையோடு ஓர் டூ வீலரில் பயணிப்பவரும்  உண்டு... வெறுமனே  கடக்கப் பட்டால் போதும் என்கிற முஸ்தீபில் பயணிப்பவரும் உண்டு.. ரசனையோடு பயணிப்பவன் அந்த மலை முகடுகளையும் அங்கே அலைபாய்கிற முகில்களையும், அடர்ந்து படர்ந்திருக்கிற பசுமைவெளிகளையும் முழுதுமாக உள்வாங்கி தனது மனம் உடல் யாவும் அதில் உணர்கிற ஓர் மகோன்னத சிலிர்ப்பை உணர்ந்தவனாக இருக்கிறான்..
அதே சூழலில் அதே குளுமையில் வெறுமனே பாதை கடக்க மட்டும் அந்த டூ வீலர் இன்னொருவனுக்கு உபயோகமாகிறது...

இவ்விதமாக எல்லா விஷயங்களுமே ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதத்தில் புரிபடுகிற சமாச்சாரங்களாக உள்ளது..

ஆனால் ரசனைகளுக்கான அவகாசங்களும் உண்டு.. ஏதோ ஓர் அவசர தருவாயில், மனைவியோ மகளோ அம்மாவோ அப்பாவோ நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகி விடுகையில், சீதோஷ்ண நிலை என்ன ரம்மியமாக இருப்பினும் அவை குறித்த பிரக்ஞை மண்டையிலோ  மனதிலோ ஏறும் வாய்ப்பில்லை... அவர்களது ஆரோக்கியம் திரும்பப் பெறவேண்டும் என்கிற பிரார்த்தனைகள் மாத்திரமே பிரதான விஷயமாகி, சில்லென்ற தென்றல் சுரணையற்றதாகி விடுகிறது.. 

இந்தப் பற்றுகள் யாவும் நம்மைப் பின்னிப் பிணைந்து எவ்வித சுகந்த கால நிலைகளையும் சுலபத்தில் நரகமாக்கி விடுவது ஒருவித மன அமைப்பின் நிமித்தம் என்றே அனுமானிக்க நேர்கிறது.. 
ஆக , நரகம் சொர்க்கம் என்கிற சூழல்கள் யாவும் மனதை மையப் படுத்தியே புறத்தில் நாம்  உணரவேண்டி உள்ளதேயன்றி , புறத்தினை காரணிகளாக்கி நமது மன அமைப்பை மாற்றுவது சாத்யமா என்பது மனோதத்துவ ரீதியாக ஆராயப் படவேண்டிய  சிக்கல்கள் ... 

"பற்றற்று இருத்தல்" "எல்லாமே மாயை" "நிலையற்ற தன்மை" என்கிற விஷயங்கள் யாவுமே எல்லாராலுமே ஏதோ ஓர் காலத்தின் கட்டாயத்தில் மிகவும்  விரும்பப் பட்டும் யதார்த்தமாகவும் பின்பற்றி இருக்கக்  கூடும்.. ஆனால் இவைகளினின்றெல்லாம் மீண்டு வந்து , மறுபடி இந்த வாழ்க்கையின் மீதாக அபரிமிதப்  பற்று வைப்பதிலும் புளகித்துப் போவதிலும் தான் ஓர் சுவாரசியமே பொதிந்துள்ளதாக நமக்கொரு அடையாளம் பிடிபட்டுவிடுகிறது.. 

அந்த அடையாளத்தை என்றாவது ஒரு நாள் சில ஷணங்கள் தொலைத்துவிட விரும்புகிறோம்.. , அதிலே ஓர் மகோன்னதம் சீறிப் பாய்வதாக உணர்கிறோம்.. சரியான பாதைக்கு  வந்து  விட்டதாக கர்வம் கூடப் படுகிறோம்.... ஆனால் அவை யாவும்  ஓர் ஈசலின் ஆயுட்காலத்தோடு நம்மிடம் நீடித்திருப்பதை உணர்ந்து  மெளனமாக வெட்கிக்கூடப் போகிறோம்.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...