Wednesday, December 24, 2014

k .பாலச்சந்தர்

இயக்குனர் சிகரம்..
எத்தனையோ அடிவாரங்களை கைபிடித்து உச்சியில் நிறுத்திய பெருமை இந்த சிகரத்துக்கு எப்போதும் உண்டு..
சார்த்தியே கிடந்த எத்தனையோ பத்தாம்பசலி ஜன்னல்களை தமது யதார்த்தக் காற்றை அனுப்பி திறக்க வைத்த தீர்க்கதரிசி..

வாழ்க்கை நெடுக வேலி எனப் படர்ந்து கிடந்த எவ்வளவோ இம்சை நிரம்பிய முடிச்சுக்களை சுலபத்தில் களைந்த சூத்திரதாரி.. !

காதலானாலும் காமமானாலும் தன்னுடைய படங்களில் மாத்திரமே அதன் வீரியம் முழுதையும் பிழிந்து திரையில் தாரை வார்த்துக் கொடுக்கிற பெரும் கலைஞன்.. நிழல்களை அப்படி தத்ரூபமாக நேசித்து, மற்றவர்களையும் தனது போக்கிலே பயணிக்க செய்த திறமைசாலி..

நிஜவாழ்வில் எவ்வித அவதூறுகளையும் சந்தித்திராத மாண்பு மிகு இயக்குனர் இவர்.. அகம்பாவமோ கர்வமோ எதுவாயினும் தன்னுள்ளேயே ரகசியப் படுத்தி, காமெராவில் இவர் கொணர்கிற கோணங்கள் யாவும் பெண்மை குறித்த மேன்மைகளையும் மென்மைகளையுமே அன்றி வேறொன்றறியோம் பராபரமே..!!

செல்லுலாய்டு என்கிற விஷயமே தமது வாழ்வில் புக நேர்ந்திடாத அன்றைய மகாகவியின் அனேக எழுச்சி மிகு கவிதைகளுக்கும் அற்புத தளங்களும் காட்சிகளும்  சம்பவங்களும் அமைத்துக் கொடுத்த நவீனகால பாரதி இந்த பாலச்சந்தர் ... 

இப்படியான செழுமை நிரம்பிய ஒரு கலைஞனுக்கு  காலம் மிகப் பெரும் ஆயுளைக் கொடுத்து நிறைவு வரைக்குமான அவரது படைப்புக்களை வெளிக் கொணர்ந்து  நம்மை எல்லாம் திகட்டத் திகட்ட ரசிக்கச் செய்து விட்டுத் தான் காலம் அவரை அழைத்துக் கொண்டது என்கிற உண்மையை உணர்வோமாக..!

யாரது பிரார்த்தனைகளும் அற்று இவரது ஆத்மா சாந்தி பெறக் கூடும் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை எனிலும், அதனையும் மீறி இவருக்காகப் பிரார்த்தித்து  விடுவதில் தான் எல்லாருக்கும் விருப்பம்.. !!




Thursday, December 18, 2014

கி.பி ..[one page story?]

அது பரம்பரைக் கோடீஸ்வரர்கள் பங்களா.. 
அங்கே கொடுத்து வைத்த பயல் ஒருவன்.. நான்கைந்து வருடங்கள் முன்னர் பதின்களைத் தொட்டிருக்கும் பதினாறு வயதுக் காளை .. 
கிருஷ்ணபிரஸாத் என்கிற நாமம்.. 
'மைனர் கி.பி.' என்றால் பங்களாவிலும் பயில்கிற பள்ளியிலும் மகா பிரபலம்.. 
வீட்டைத் துப்புரவு செய்கிற கமலா உடலுக்கு முடியலை என்பதால் தனது ஏழாப்பு படிக்கிற சரண்யாவை அன்று அனுப்பி வைக்கவே.. 
மைனருக்கு மண்டை காய்ந்தது.. !
"ஏன் உங்க அம்மா இன்னைக்கு வரலையா ?" என்று கேட்டான் சரண்யாவிடம் 
வந்ததும் வராததுமாக.. 
"ஒடம்புக்கு சரி இல்லேங்க சின்ன எஜமான் " என்றாள் .. 
"நாளைக்காச்சும் வந்துடுவாங்களா?"
"வருவாங்க எஜமான்"
தன்னுடைய மடிப்புக் கலையாத பைஜாமா , அதிலே தெளிக்கப் பட்ட ஃபாப்ரிக் செண்ட் , தனது உடம்புக்கு அடித்துக் கொண்ட பாடி ஸ்ப்ரே எல்லாம் வீண் என்பது போன்று "இச்' கொட்டி நகர்ந்து கொண்டார் மைனர்.. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு ..  

அதே கோடீஸ்வர பங்களா.. 
26 வயதாகிற நம்ம "மேஜர் கி.பி." 
அப்போது தான் தனது கல்லூரி நண்பர்களோடு தமது 'ஆடி' காரில் பக்கத்துப் பிக்னிக் ஸ்பாட்டுக்கு சென்று விட்டுத் திரும்பினார்.. 
யாருடனோ சிரித்தவாறு மொபைலில் பேசியவாறே உள்ளே புகுந்த மேஜர், கமலாம்மா தமது அறையை துடைத்துக் கொண்டிருந்தது கண்டு டென்ஷன் ஆகிப் போனார்.. 
"ஏம்மா இன்னைக்கு சரண்யா வரலையா?"
"நாளைக்கு  வந்துடுவாய்யா.. இன்னைக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியலை"
"நாளைக்கு முடியாட்டியும் அனுப்பி வையுங்க.. எங்க ஃபேமிலி டாக்டரை வரவச்சு பார்க்கறோம்"
"சரிங்க  சின்ன எஜமான் . ரொம்ப நன்றிங்க.. "


Tuesday, December 16, 2014

ஒரு விவசாயி எழுதிய காதல் கவிதை..

என் கன்னக் காடுகளில் 
உன் முத்தமழை.. 
என் சேற்றுக் கன்னங்களில் 
உன் முத்தத் தாமரைகள்... 
என் தேனடைக் கன்னங்களில் 
உன் முத்தத் தேனீக்கள்.. !!

மழை பெய்த என் 
கன்னக் காடுகளில் 
உமது முத்த வெள்ளாமை.. !

பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில் 
ஊடுபயிராய் உமது முத்தங்கள்.. 

இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய 
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற 
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும் 
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்.. 
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!

Sunday, December 7, 2014

உள்காயங்கள்..

சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு சிறு கவிதை.. என்னுடைய கவிதையின் கரு சிலருக்குப் புரியாமலும், சிலருக்குப் புரிந்தும் புரியாமலும் , நன்கு  புரிந்த சிலருக்கு எரிச்சலும்... ]

.. 
எனக்குள்ளான கவிஞனை 
பெண் ஒருத்தியே 
எப்போதும் தட்டி எழுப்புகிறாள்.. !

பூப் பெய்து விடும் முன்னரே 
மூப்படைந்தது போன்ற 
என் அவசர கவிதைகள் 
குறித்து எப்போதும் 
கவலை எனக்கு..!!
ஸ்ருங்காரமும் ஒய்யாரமும் 
ஒருங்கிழைய நான் புனைய 
முனைந்த  போதிலும் 
அரிதாரம் உதிர்ந்துபோன 
சுருங்கிய முகத்துடனும் 
ஊன்றுகோலுடனுமே 
தட்டுத் தடுமாறுகிறது 
என் கவிதை.. !!

ஆன்மாவின் விலாசமாக 
அமையக் கூடுமென்று 
நான் அனுமானித்திருந்த 
எனது கவிதை, 
எலும்புக் கூடாக 
பயமுறுத்துகிறது மனதை..!

சாமானியர்கள் புரிபடாமலும் 
புரிந்தவர்கள் எரிச்சலுற்றும் 
தடம்புரண்டும், புரையோடியும் 
படுகாயமாகிக் கிடக்கின்றன 
கவிதைகள்.. 
அப்படியாக மூர்ச்சையாகிக் 
கிடக்கிற எனக்குள்ளான 
கவிஞனை ஏன் தான் 
அவ்வப்போது இந்த 
அழகிய பெண்கள் தட்டித் 
தட்டி எழுப்பி எனக்குள் 
ஒரு ஸ்மரணையையும் 
தாங்கொணா வலிகளையும் 
கொணர்ந்து இம்சிக்கிறார்களோ 
புரியவில்லை...!!

Tuesday, December 2, 2014

ஒரு எளியவனின் கவிதை..

ஒரு எளிய 
மனிதன் சிந்திப்பது 
கூட 'கவிதை' யாகலாம்.. 
ஆனால்,  
ஒரு பிரபல கவிஞனின் 
வெறுமை ஒருக்காலும் 
கவிதையாகாது .. !!

ஆனால் 
புனைகிற ஆற்றலற்ற 
எளியவனின் சிந்தனை 
ஒரு நல்ல 
கவிதையாக மலர 
சாத்யமற்றுப் போகலாம்.. 
 அதே வேளையில் 
--வெறுமையின் 
வெப்பத்தைக் கூட 
தனது கவிதைத் 
திறனால் 
பனிக்கட்டிக்குள் 
திணித்து கவிஞன் 
படைத்து விடலாம்..!!?

வாழ்க்கையே இப்படித்தான்.. 
அனுபவங்களின் நிமித்தமாக 
அசாத்திய சூழல்கள்  கூட 
வசப் பட்ட  சுலபத்தில் அமைந்து 
விடக் கூடும்.. 

அனுபவமின்மையால் 
கிடைக்கப் பெற்ற 
அற்புத சந்தர்ப்பங்கள்  கூட 
கைநழுவிய பழமாக 
சேற்றினுள் புதையுண்டு 
போக நேரும்.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...