Saturday, April 24, 2010

மெளனமாக புறக்கனிக்கப்படுகிறேன்?

என் திறன்களுக்கான
தளங்கள் யாவும்
தகர்த்தெறியப்பட்டு விட்டதாக
அனுமானிக்கிறேன்..!


மறுபடி
புணரமைப்பதற்கான
சாஸ்வதங்கள் அறவே இல்லை
என்பதாக என்
அவநம்பிக்கைகள்
பிதற்றுகின்றன..!!


இந்த விளைவுகள் யாவும்
காலம் நிகழ்த்தியதாக
என் சோம்பேறி மனது
தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது..

திறன்கள் சோபையுறும்
என்று நம்பிய காலங்களில்
அதற்கான தளங்களை
அமைக்கிற
பொறுமையும் திறமையும்
அற்றிருந்தேன்..

--இன்று மெனக்கெட்டு
தளங்களை அமைத்து
என் திறன்களை அரங்கேற்றப்
பார்க்கையில் ....
-என் திறன்களும்
தளங்களும்
நவீன காலத்தின்
கேலி சித்திரங்களாக
இருப்பதாய் உணர்கிறேன்..!!

இன்றைய நவீனங்களுடன்
கை கோர்க்கிற திராணி
இழந்து கிடக்கிறது என் தன்மை..,
--இதனோடு தான்
பயணித்தாக வேண்டுமென்கிற
கட்டாயத்தை செருகி விட்டது
காலம்..!

-என் ஊனத்திற்கு
ஒரு மரத்திலான தடியே
போதுமானதாயிருக்கையில்
கால்களுக்கு சக்கரம் மாட்டி
உருள சொல்கிறது

காலம், சமூகம் எல்லாம்...



விந்தி விந்தியாவது
வாழ்ந்து விடப்பார்க்கிற என்னை
விரைந்தோடி மறைந்து விடு
என்கிறது நவீனம்...!!
                                                                ..
                                         
சுந்தரவடிவேலு...

காதலின் வசம்..

உன்னைக் காண்பதற்கான
ஆயத்தங்களோடு நானிருந்தாலும்
இப்போதைக்கு-
ஒத்திப்போடுவதற்கான                       
சந்தர்ப்பங்களே நிகழ்ந்த
வண்ணமாயுள்ளது...

உன் விலாசமெனக்கு
புரிபடாமல் இருந்தாலும்
உன்னை சுலபத்தில்
கண்டு பிடித்து விடுவேன்
என்கிற நம்பிக்கை
தீவிரமாயுள்ளது..!

முழு முகவரிகள் தெரிந்து
வைத்திருக்கிற நபர்களைக்
கூட நான் சந்திக்க
முயல்வதில்லை..

உன் நினைவுகளினூடே காலம்
கழிப்பதென்பது சற்று தர்ம சங்கடம்
தான் என்ற போதிலும் --- காலம்
உன் நினைவுகளைப் பிரதிபலித்தவாறே
என்னை ஓர் சுகந்த ஹிம்சையில்
செலுத்துகிறது..!!

பூ தடுக்கி
கல்லின் காலில் 
ரத்தம் வழிவதாக, 
நிலவைப் பார்த்து 
சூரியனுக்கு கண் கூசுவதாக...
--ஆயிரம் கவிதைகள்
எழுத முடிகிற என்னால்
--உன் பற்றி
எழுதும் போது மாத்திரம்
எந்தப்பொய்யும்
சொல்ல முடிவதில்லை...!!      ..
சுந்தரவடிவேலு...

Thursday, April 22, 2010

அனுப்பப்படாத காதல் கடிதங்கள்....

என் மதிப்பிற்குரிய காதலிக்கு...

நான் எழுதுகிறேன்.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுதுகிறேன்..
சற்றும் எதிர்பாராமல் கனவில் நீ வந்ததால் உடனே உள்ளொளி பொங்கி விழிப்புத்தட்டியது...
இருண்டுபோய் பிசுபிசுத்து ஒட்டிக்கிடக்கிறது உடலில் உயிர்... எந்த நேரத்திலும் பிய்ந்து போவதற்கான சாஸ்வதங்களுடன்...
ஷணத்தில் வந்து மறைந்த உனது முகம், கனவு முகம் என் உயிரை, என் வாழ்வை மறுபடி புதுப்பிக்கக்கிடைத்த  அங்கீகாரம் போல,  அத்தனை ஆசுவாசத்துடன்- நேரம் கூடப்பாராமல் உடனடியாக பேனா எடுத்து எழுதி விடத்தூண்டிய அவரசரம் ஆச்ச்சர்யமளிக்கிறது..
வெறுமனே வந்தாய்.. வார்த்தை கூடப்பேசவில்லை.. அதற்குள்ளாக விழிப்பு வேறு வந்து விட்டதே..பிறகு? உன்னைப்பார்த்தான பிறகு உறங்கிக்கொண்டிருக்க முடியுமா... அது கனவு தான் என்ற போதிலுமே கூட?.. அதுவும் கனவு என்பது விழித்த பிறகல்லவா தெரிகிறது!!

-கனவு மாதிரியே விழிப்பும் வந்து போவதாயில்லை..
விழிப்பு, அடர்ந்து படர்ந்து கிடக்கிறது.. கனவு மாதிரி சுகமாயில்லை விழிப்பு.. கவலை மை இழுக்குகிறது.., ஏக்கச்சேற்றை வாரி இறைக்கிறது ... வாழ்வை பயமுறுத்துகிறது...
தைரியங்களையும் சந்தோஷங்களையும் நீர்க்குமிழிகளாய் வைத்திருக்கிறது விழிப்பு..!!

விழிப்பு வாழ்வெனில், உறக்கம் மரணமோ?
ஆனால் மரண பயமே கூட விழிப்பில் தான் வருகிறது.., மற்றபடி உறக்கத்தில் வாழ்க்கை குறித்த பயங்கள் எல்லாம் எதுவும் வருவதில்லை...!!

நமஸ்காரம் காதலியே..           ..
உன்... பிரியமானவன்?

Tuesday, April 20, 2010

தத்துவப்பித்தனின் தத்துபித்துக்கள்

எவரேனும் நம்மை கவனிக்கவேண்டும், நம் இருப்பில் பேரானந்தமும் நம் இல்லாமையில் கடும் துயர்களும் அனுசரிக்கப்பட  வேண்டும் ... மிகப்பெருமையாக நாம் எல்லாராலும் பேசப்பட வேண்டும்,  எந்தத்தருவாயிலும் நம் பருப்பு வேகாமல் போய் விடக்கூடாது என்கிற அதீத பிரக்ஞைகள் ஒவ்வொருவர் வசமும்...
சின்ன தோல்விகள் கூட பெரிய கௌரவகுறைச்சல் போல மிகவும் சிரமப்படுகிறார்கள் பலரும்.. வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்கிற எழுதப்படாத சட்டங்களுள் சிக்கி தன் பயணங்களை மிகவும் சிரத்தை எடுத்து வாழ்கிற போக்கு ஒரு கோணத்தில் ஆரோக்யமாக உணரப்பட்டாலும் இன்னொரு கோணம், அந்தத்தன்மை ஏதோ ஓர் நோய்வாய்ப் பட்டதாகத் தான் புரிகிறது..
வெற்றி தோல்வி சகஜம் என்கிற மனப்பாங்கு வேண்டும்.. ரெண்டு விஷயங்களையும் அனுபவமாக, சுலபமாக எடுத்துக்கொள்கிற பக்குவம் வேண்டும்..
வெற்றியில் மட்டுமே கிறங்கிப் போயும் தோல்வியில் துவண்டு போயும் .. கிடப்பது அறிவீனம்...

இன்னும் சொல்ல முயல்கிறேன்...
நீங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்கிற வரை ..!!       

Wednesday, April 14, 2010

நிகழ்காலம் சுவாரஸ்யப் படுவதில்லை

வயோதிகம்-
எந்த இழையில் வந்து
இளமையைக் கபளீகரிக்கிறது
என்கிற புரியாத
புள்ளி விபரங்களோடு......

நரையைத்திரையிட
ரசாயனம் தேடும் கிழமனது..
கருப்பாய் நடிக்கத்துவங்கும்
நரைமுடிகள்...
-செயற்கை கருமை
குறித்து அடியாழக்
குற்ற உணர்வொன்று...!!

நிகழ்காலமென்பது
எல்லா ப்ராயங்களிலுமே
தொந்தரவாகவே தான்
உணரப்படுகிறது..,
16  வயதிலுமே கூட
கடந்து போயிருந்த
12 வயது குறித்த
கவலைகள் தான்..
திரும்ப அந்த வசந்தங்கள்
வரவே வராதே என்கிற
அநியாய ஏக்கங்கள்...
--அதனைக்காட்டிலுமான
வசந்தங்கள் தற்போதைய
அனுபவத்தில் இருந்தாலும்
கடந்து போன அந்த
எளிய வசந்தங்கள் கூட
வனப்பாகப் புரிபடுகிற ஒரு மாயை
புதிர்தான்...
வனப்பாகப் புரிபடுகிற அந்தப்புதிர்
ஓர் மாயை தான்...!!

சுந்தரவடிவேலு..   

Tuesday, April 13, 2010

not opening...

due to my system slow, nowadays i can,t post any ideas.. sometimes, it seems ok.. but most of the times, it is in dead. my network displays that a packets, which are sending frequently but not receiving properly.. i complained for airtel broadband persons and they all are blaming my computer and it must be fully want to be get serviced by my service person.. but my person blaming on airtel and they must solve it..
the only suffering innocent laughing man is me and i don,t know how to rectify this idiotic problem.. i don,t know further to complain with whom and so, i am calm nowadays.. very rarely pages are opening ... now also accidentally it opens and at this interval, i m complaining my ridiculous problems to you all.. please if any technical persons comes to my blog and read this, please convey me about this headache dilemma...


thanking you
sundaravadivelu.v

Friday, April 9, 2010

மலரினும் மெல்லிய... காமம்

வெள்ளிகிழமைகள் கோவில்கள் போவதுண்டு... சுவாமிகள் மீதான பக்திகளும் கும்பிட வரும் நறுமணப் பெண்கள் மீதான ஓர் இனம் புரியாத கவர்ச்சிகளும் கலவையான ஓர் அற்புத மனநிலையில் ஒவ்வொரு வெள்ளியும்.... சில நேரங்களில் கர்ப்பகிரஹத்தை கவனிக்கத்தவறி விடுவது கூட உண்டு., கும்பிட வரும் பெண்டிர்களை தரிசிக்கத்தவறுவதே இல்லை...
காமத்திற்கான பிரத்யேக நிறைவு வயது என்று எதுவும் இல்லை என்பது அறிவியலாக படிக்கையில் ஆனந்தமாக உணரப்பட்டாலும், நம்மை ஈர்த்த ஒரு சிட்டை , விவஸ்தை அற்று ஓர் கிழம் உரசிக்கொண்டு நிற்கிறதென்றால் வருது பாரு ஒரு சூடு... அறுபது டிகிரி செல்ஷியஸ் நு நினைக்கிறேன்...
பெரியவர் என்கிற போர்வையில் பலரும் தன சபலங்களை சற்றும் இங்கிதமே அற்று அரங்கேற்றுகிற காட்சிகளை பல பொது இடங்களிலும் கவனித்திருக்கிறேன்...

தன் மகளை ஒத்த வயதுள்ள பெண்களைக் கண்டாலும் கூட கண்களில் காமம் கொப்பளிக்க இருப்பதைப்பார்க்கையில் ak 47 எடுத்து ஒரு பிடி பிடிக்கலாம் என்று தோன்றும்...ஓர் இயற்கை உந்துதல் இது என்கிற நியாயம் ஒரு புறம் இருந்தாலும் , அப்படி என்ன ஒரு வெறி என்கிற அசூயை ... ஓர் தெரு நாயைப்போல...!!
நாமும் இப்படி தன்னை இழந்த ஓர் அஜாக்கிரதை தருணங்களை எதிர்காலமொன்றில் தரிசிக்கிற சூழல் ஏற்படக்கூடும்.. என்னைப்போலவே எவராவது  கவனித்து ப்ளாக் எழுதி மானத்தை வாங்கக்கூடும்... எது எவ்வாறாயினும் மலரினும் மெல்லிய அந்தக்காமத்தை துஷ்ப்ரயோகம் செய்கிற கேவலமான ஓர் தன்மைக்கு நான் இலக்காகி விடக்கூடாது என்கிற பிரார்த்தனை ஒவ்வொரு கோவில் பிரவேசத்தின் போதும் எனக்குள் ஏற்படாமல் இல்லை....

சுந்தரவடிவேலு....

Tuesday, April 6, 2010

பார்ப்போம்.. மேற்கொண்டு ..

அவ்வப்போது நாலாந்தரமாக என் எழுத்துக்களும் கருத்துக்களும் அமைந்து விடுவதுண்டு.... நாகரீகமாக சொல்லப்பட வேண்டிய ஓர் விஷயத்தை சேரப்பியது போல நாறி விடுகிறது என் தொனிகள்... அது எனக்கே தர்மசங்கடங்களையும் சற்று குற்ற உணர்வுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு...
எழுத்துக்கள் செயல்கள் யாவற்றிலுமே ஓர் மேன்மையை மென்மையை தெளிவை முன்னிறுத்த வேண்டும் என்கிற தீராத தாகம் கொண்டவன் என்ற போதிலும் என்னையும் மீறி உணர்ச்சிக்கு அடிமையாகி சண்டக்கோழி போல உளறி கிளறி கொட்டி விட வேண்டிய தன்மைக்கு இலக்காகி விடுகிறேன்...

இந்த எனது போக்கினை மாற்றி ஓர் நேர்மையான எழுத்தாளன் ஆகி விட ஆசை என்ற போதிலும், செய்முறைக்கு சாத்யமற்றுத்தான் போகும் என்று அனுமானிக்கிறேன்...
சொல்ல வருவதில் நேர்மையும் தெளிவும் வீரியமும் கருத்துக்களும் அடங்கி இருப்பது தான் ஓர் நல்ல எழுத்தாளனின் சீரிய அடையாளம்.., அல்லாமல் கத்துக்குட்டி போல நினைத்ததை எல்லாம் விவஸ்தைகள்  அற்று , யதார்த்தம் என்று நினைத்து கிறுக்கிக் கொண்டிருப்போமேயானால்  அதற்குரிய அவமானங்களை  சந்திக்கவும் தயார்நிலையில் இருக்க வேண்டியது தான்..

பார்ப்போம்.. மேற்கொண்டு ..   சுய பரிசோதனை

Monday, April 5, 2010

sorry brothers...

ரஹ்மான் இளையராஜா குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துக்களை எவரும் ஆமோதிக்கவில்லை, மாறாக சங்கடங்களைத் தெரிவித்திருந்தனர்.. இது எனது சொந்த கருத்து, என் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் உரிமை எவர்க்கும் இல்லை என்று முட்டாளைப்போல சண்டைக்கு நிற்க எல்லாம்  எனக்குத்தெரியாது... என் கருத்தில் பிறர்க்கு உடன்பாடில்லை என்றால் நானும் அதனை உடனே தவிர்ப்பதையே ஆரோகியமாக கருதுகிறேன்... எவர் மனதையும் புண் படுத்துவது எனது நோக்கமன்று...

அதனால் தான் அந்த போஸ்டே என் ப்லோகிளிருந்து ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது... மேற்கொண்டு எழுதுவதை ஜாகிரதையாக எழுத வேண்டும் என்கிற பொறுப்பு வருகிறது...
ஆனபோதிலும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்... எனக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர்... அவர் குறித்தும் அவர் இசை குறித்தும் எனது நண்பர்களோடு விவாதிக்கயிலும் கூட ... புறம் நின்று கவனிப்பவர்களுக்கு, என்னவோ பெரிய சண்டை நடப்பது போல இருக்கும்...

பேசினால் மட்டும் இல்லை, எழுதினால் கூட பிரச்சினை வந்து விடும் போல இருக்கிறது..
நன்றி...

--சுந்தரவடிவேலு...

Sunday, April 4, 2010

angaadit theru..

அங்காடி தெரு திரைப்படத்திற்கு ஆனந்தவிகடன் 47 மதிப்பெண்கள் தந்திருப்பது ஆரோக்யமாக படுகிறது... சென்று பார்க்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தி இருக்கிறது.. வசந்தபாலனின் வெயிலை சொக்கிப்பார்த்திருக்கிறேன்.. நல்ல படைப்பாளிகள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் தமிழுக்கு...
துரதிர்ஷ்டமாக அந்த மாதிரியான படைப்புகளும் படைப்பாளிகளும் அடையாளம் தெரியாமல் போய் விடுகிற குரூரம் அவ்வப்போது நிகழாமல் இல்லை., ஆன போதிலும் ஓர் நல்ல சக்தி ஒன்று அவர்களை அங்கீகரித்து விட வேண்டியது காலத்தின் லாவகத்தில் நடைபெறும்...

மூடு வாயை

ஒரு முறை
உன்னை அனிச்சையாக
தரிசிக்க நேர்ந்ததன் பொருட்டு
---ஒவ்வொரு முறையும்
அதே அனிச்சையை
எதிர்பார்க்கிறேன்...!!

என் அவநம்பிக்கைகளை
கிழித்துப்போட்டது உன் புன்னகை..
என் நிராசைப் பட்டியல்கள்
கசக்கி வீசப் பட்டன..
இனி வாழ்வு நெடுக
வசந்தம் பீடு நடை போட
ஆயத்தமாகி விட்டதாக
அடித்து சொன்னேன் நண்பர்களிடம்..!!

உள்ளார்ந்து வேரூன்றி கிடக்கின்றன
சந்தேகங்கள் இன்னும்...
உன் புன்னகை கிழியக்கூடும்,
என் வசந்தங்கள் அழியக்கூடும்.., -
--உன்னிடம் பேச ஆரம்பித்த
மூன்றாம் நாளே இதை சொல்ல
வாய் திறந்தேன்..!!

கிடைத்திருக்கிற கிஞ்சிற்று
நிம்மதியையும்
கோழி கழுத்தை திருகி எறிவது
போன்ற முட்டாள்தனத்தை
எதற்கு செய்ய வேண்டும்
என்கிற காதல் அறிவு எனக்கு...

சொல்வதற்கில்லை.,
இந்த முறை காலத்திற்கு
என்னை ஏமாற்றும் விருப்பம்
இல்லாதிருக்கலாம்..!!

சுந்தரவடிவேலு...

Saturday, April 3, 2010

nothingness..வெறுமை...

வெறுமையின் வீச்சில் ரசனைகள் பொசுங்கின... காலத்தின் மௌன ஓலமாய் வெறுமை ஓர் பேரண்டமாய் வியாபித்து வார்த்தைகளுள் பிடிபடாத ரகளைகளை மனசுள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது...
கானலின் தகிப்பு போல ஜொலிக்கிறது வெறுமை... நிழலைக்காட்டிலுமான சூனியத்தில் வெளிச்ச வேஷம் தரித்துக்கொண்டு மினுமினுக்கிறது வெறுமை... ஏதோ புயலுக்கான  சமிக்ஞை போன்றும் புலனாகிறது, பெரிய ரணகளம் நிறைவுற்றதற்கான தடயம் போலவும் பாவனை காட்டுகிறது வெறுமை...

அதன் தன்மையில் விக்கித்து நிற்கையில், அதன் தீவிரத்தில் உடைந்து கிடக்கையில், அதன் நுட்பத்தில் மூர்ச்சையாகிக்கிடக்கையில்...
சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சலித்துக்கொள்கிறார்கள்.., சாணி மாதிரி சும்மா கிடப்பதாக அபிப்ராயம் தெரிவிக்க அவசரப்படுகிறார்கள்... வெறுமை யினின்று மீள்வதற்கான வழி வகைகளை செய்ய வக்கற்று, வார்த்தைகளால் சாகடிக்க முயன்று பார்க்கிறார்கள்...

நீர்வீழ்ச்சி போலவும் உணரப்பட்டது வெறுமையை... எரிமலை குழம்பாகவும் உணரப்படுகிறது... எல்லா பரிமானங்களுக்கான  யோக்யதைகளுடனும் வெறுமை இருப்பது சற்று வினோதம் என்ற போதிலும் , அதனின்று வெளிப்பெயர்ந்து ஓர் தொழில் முனைபவனாக , எதையேனும் சாதிக்கிற தாகம் கொண்டவனாக , குறைந்த பட்சம் ஓர் நாய்க்கு அடிமையாக இருப்பதற்கான முஸ்தீபாவது கொண்டிருந்தால் தான் பெற்றவளும் பிறந்தவளும் கட்டியவளும் மதிக்கிற சூழல் இந்த சமூகத்தில்..

சுந்தரவடிவேலு..

Thursday, April 1, 2010

same like that....

எத்தனை தீவிரமாகக்
கண்காணித்தும் தப்பி
விடுகிற திருடன் போல
--உன் முகம்
உன்னைப் பார்க்காத
போதெல்லாம் மறந்து
விடுகிறது...

ஐந்தாம் வகுப்பிலேயே
1330 குறள்களையும்
கரதலப்பாடமாக
மனனம் செய்து அசத்திய
என் அசாத்ய திறன்கள்
எங்கே ஓடி ஒளிந்தனவோ
புரியவில்லை...

இப்படியெல்லாமா காதல்
என்னை மக்குப்பயலாக்க வேண்டும்?
--குட்டிக்கொள்கிறேன் என் மண்டையை நான்..

எதிரில்  நீ தரிசனம் தருகிறாய்..
மறந்து போகும் போதெல்லாம்
குட்டிக்கொள்வது என் பால்ய
ப்ராயந்தொட்டு வந்த வழக்கம்..
அப்படி குட்டுகையில் ஞாபகமும்
வந்துவிடும்...

அப்படியே தான் உணர்கிறேன்
இப்போது குட்டிக்கொள்கையில்
நீ எனக்கு தரிசனம் தந்ததையும்..!!

சுந்தரவடிவேலு....

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...