Wednesday, December 28, 2011

வெறியில்லாமல்------ காமம் குறித்து ....!!

காம இச்சை குறித்து ஏதேனும் எழுத வேண்டும் என்கிற கங்கணம் ரொம்ப நாளாக...
மிக இயல்பான, யதார்த்தமான உணர்வது என்ற போதிலும், ஏனோ மற்ற உணர்வுகளோடு ஒப்பிடும் யோக்யதை இல்லாதது போலவும், அநாகரிகம் போலவும் ஓர் மாயையை ஏற்படுத்துகிற விபரீதம் காம உணர்வுக்கு அதிகம் உள்ளது...

மனிதன் பூத்தெழ அதுவே ஆதார ஸ்ருதியான உணர்வு... எல்லா ஜீவராசிகளின் ஆதார ஸ்ருதியும் கூட..
ஒன்றிலிருந்து ஐந்தறிவு வரையிலான ஜீவராசிகளின் புணர்ச்சிகளோ , ஆளிங்கனங்களோ, அருவருப்பாகவோ ஆபாசமாகவோ புரிபடுவதில்லை நமது ஆறறிவுக்கு..!.


 மாறாக அவைகள் கவிதையாக, ரசிக்கிற சுவாரஸ்யத்திலுமாக நம்மைக் குதூகலத்திலும் ஆனந்தத்திலும் கொண்டாடச் செய்கிறது..
மனித காமம் மாத்திரம் மனிதனுக்கே நாலந்தரமாகவும், கீழ்த்தர உணர்வாகவும் புரிபடுகிறது... ஆனால் கண்டிப்பாக அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனும் காமவயப்படுகையில் மிகச் சீராக இயங்குபவனாக, புதுரத்தம் பாய்பவனாக, இதயம் சார்ந்த நோய்கள் குணமடைவதாக அறிவியல் ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன... பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு செக்ஸ் சர்வே எடுத்து அதனை கவர் ஸ்டோரி போட்டு, சர்குலேஷனை அதிகப் படுத்தி வழக்கத்துக்கு மாறாக விற்பனையில் சரித்திரம் படைக்கிற வியாபார உத்தி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..

இப்படியாக மனிதன் காமமே மனிதனுக்கு பெரும்புதிராகவும், மற்றவன் புணர்ச்சியை தரிசிக்கிற ஆர்வம் கொண்டதாகவும் , தன்னால் அவ்விதம் செயல் பட முடியுமா என்கிற கேள்விகளுடனும், முடியும் என்கிற நம்பிக்கையுடனும் , முடியாதென்கிற குற்ற உணர்வுகளுடனும் .... காமம் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தகுதியில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது..

தொடர்ந்து இவை குறித்து எழுதலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்...காமம் கடலை விடப் பெரிது.. கை அடக்கமாக  யாவற்றையும் விளக்கிவிட சாத்யமில்லை... 
அபிப்ராயங்களைப் பின்னூட்டமாக .... பின்னூட்டங்களை அபிப்ராயமாக ...
தெரிவிக்க வேண்டுகிறேன்.. நன்றி..

சுந்தரவடிவேலு..  

Wednesday, December 21, 2011

முதல் நாவல்... முதல் விருது..

காவல் கோட்டம் என்கிற தமிழ் நாவல் இந்த வருடத்தின் சாகித்திய அகாடமி பரிசு பெற்றிருக்கிறது... சு.வெங்கடேசன் என்பவரது முதல் நாவல், மற்றும் அவரது ஒரே நாவல் என்பது ஆச்சர்யமும் சந்தோஷமும் நிரம்பிய தகவல்..

முதல் நாவல், அதனையும் 1048 பக்கங்கள் எழுதி இருப்பது பெரிய சாதனை... அந்த சாதனைக்கு மட்டுமே கூட மற்றொரு விருதினை அவருக்கு அறிவிப்பது சாலப் பொருந்தும்... ஆனால் பலருக்கும் போல  வெறும் பக்கங்களை நிரப்புகிற புத்தி மட்டுமே அவருக்கு இல்லை... மிகப் பெரிய வரலாற்றுப் பதிவினை திணிக்க வேண்டும் என்கிற பிரக்ஞை அற்புதமானது..
A file picture of Tamil novelist Su. Venkatesan who won the Sahitya Akademi award, 2011. Photo: G. Moorthy.
அறிமுகமாகும் போதே இரட்டை வேடங்களில் நடிக்கிற அந்தஸ்து பெற்று விட்டதற்கான அதிர்ஷ்டம் போல ... நாவலும் பெரிது, அதற்கு உயரிய விருதான சாஹித்ய அகாடமி யும் கூட..

மற்றொரு ஆச்சர்யம் யாதெனில், இதுநாள் வரை இப்படி எந்த முதல் நாவலுக்கோ, அறிமுக எழுத்தாளர்களுக்கோ சா. அகாடமி விருது வழங்கியதாக வரலாறு இல்லை...
--ஆக, கொடுப்பவர் வாங்குபவர் அனைத்த தரப்பினருக்கும் இது ஓர் புது வகையறா அனுபவம்..

ஏற்கனவே களத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த விருதுக்காக எதிர்பார்த்துக் கிடந்திருக்கலாம்... குளத்தில் நாரை போல... ஆனால் கழுகாய் வந்து திமிங்கலத்தையே கவ்விக் கொண்டு பறந்து விட்டது போல அமைந்து விட்டது சு.வெங்கடேசன் பெற்ற விருது..

இனி, மேற்கொண்டு எழுதுகிற அதீத பொறுப்பு சு.வெ' வுக்கு கூடியிருக்கக் கூடும்... அதனை தக்க வைக்கிற வல்லன்மை அவருக்கு இருக்கவும் கூடும் என்று அனைவரையும் அனுமானிக்க வைக்கிறார்..

பொதுவாகவே எவை குறித்த வரலாறுகளும் இயல்பாகவே சுவாரசியம் ஊடுருவிக் கிடப்பது... அதே சமயம் வரலாறுகள் உண்மை போன்ற பொய்கள் போலவும் , பொய்கள் போன்ற உண்மைகளாகவும் ஒருங்கே தோற்றமளிப்பவை.. . ஆனால் நம்மை சிலிர்க்க வைப்பதில் வரலாறுகள் கிஞ்சிற்றும் குறைந்தவையல்ல...

கூடிய விரைவில் இவரது நாவலை வாசிக்கிற சூழல் உருவாக வேண்டும்..அதன் பிறகு இன்னும் தீர்மானமாக விமரிசிக்க முனைய வேண்டும்... அதற்கான காலம் அருகாமையிலோ தள்ளியோ.. அறியேன்..!!

வி.சுந்தரவடிவேலு.. 

Saturday, December 17, 2011

உடையாத கண்ணாடிகளும் உடைபட்ட பிம்பங்களும்...


 


 ட

இளம்ப்ராயங்களில்
-- என் வீட்டின்
கண்ணாடிகளில்
என் போன்ற இன்னொரு
மனிதன் உள்ளிருப்பதான
எனது கற்பனை
எனக்குள் ஓர் அற்புத
உணர்வுக் கிளர்ச்சியை
நிகழ்த்திக் கொண்டிருந்த
ஞாபகங்கள் இன்றுமுண்டு...


கண்ணில் பீளையும்
வாயில் ஜொள்ளும்
வறண்டு கிடக்கிற
என் அதிகாலை முகத்தை..

பல்துலக்கி
குளியல் முடித்து
உடலீரத்தை ஒற்றி
எடுத்த தேஜஸ் முகத்தை...

சாப்பிட்ட பின்
பள்ளி செல்லும் துரிதத்தில்
திட்டுத் திட்டாய்
காய்ந்து கிடக்கிற
பவுடரப்பிய முகத்தை...

---என்று எனது
எல்லா வகையறா
முகங்களையும்
முகஞ்சுழிக்காமல்
பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும்
என் வீட்டின் கண்ணாடிகள்...

வகுப்பறையில்
உட்கார்ந்து கொண்டு
எனது பிம்ப ஞாபகங்களில்
நானிருப்பேன்...
நான் தான் பள்ளிவந்து
சிரமப் படுவதாகவும்
என் பிம்பங்கள் எனது
வீட்டில் ஜாலியாக
இருக்கக் கூடுமென்று
விபரீதக் கற்பனை
செய்து கொண்டிருப்பேன்...

சாயங்காலம்
மறுபடி என் பிம்பங்களை
சந்திக்கிற ஆவலில்
நான் திரும்ப வீடு வருவேன்...


பள்ளிவிடுமுறை நாட்களிலும்,
காய்ச்சல் வந்து
பள்ளி செல்லாத நாட்களிலும்
என் போலவே
என் பிம்பங்களும்
என்னோடு விளையாடிக்
கொண்டிருக்கும்..!!


அதே கண்ணாடிகள்
இன்றும் எனது வீட்டில்
ரசம் போய் ஒதுக்கப்
பட்டுக் கிடக்கின்றன...
என் புதுக் கண்ணாடிகள்
யாவும் இன்றெனது
பகுத்தறிவு பிம்பங்களைப்
பிரதிபலிக்கின்றன...
--ஆனால் நான் மட்டும்
ரசம் போய்க் கிடக்கிறேன்...
எனது வீட்டின்
பழைய கண்ணாடிகள் போலவே..!!!

சுந்தரவடிவேலு..

Friday, December 9, 2011

திருப்பூர்.. திருப்பூர்

முந்தைய தேஜஸ் திருப்பூருக்கு என்றைக்குக் கிடைக்கும்? என்கிற கேள்வி, மறுபடி கிடைக்குமா ? என்கிற கேள்வி... கிடைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையோ? என்கிற சந்தேகக் கேள்வி..
இப்படி கேள்வியின் நாயகனாக விளங்குகிறது இப்போதைய திருப்பூர்...

தீர்மானமாக எவ்வித பதில்களையும் எவராலும் பகிர்ந்தளிக்க முடிவதில்லை என்பதோடு அனுமானமாகக் கூட எதையும் சொல்கிற பொறுமையற்று மௌனித்துக் கிடக்கின்றனர் திருப்பூர் வாசிகள்..

இத்தனை வெறுமையில் சிலரின் அபிப்ராயம், கேட்பவர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கக் கூடும்..." இனி என்னவோ அவளவு தான்னு தோணுது"..
ஆனால் இது பரவாயில்லை.. அதாவது, " இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் ஆகணும் போல"

எது எவ்வாறாயினும் இப்பவுமே கூட, அங்கங்கே மொய்க்கிற கூட்டங்களை இல்லை என்று சொல்வதற்கில்லை... ஆலாய் பறக்கிற நபர்கள் இன்னும் இருக்கிறார்கள்... அவசரமான காரியமே இல்லை என்ற போதிலும் , நிதானமாகப் போனாலே போதும் என்கிற காரியங்களுக்கே பறந்தடித்துக் கொண்டு ஓடுகிற பேய் மனிதர்களும் உண்டு...

இன்னும் சிலரோ, தலை போகிற காரியங்களுக்கே நின்று நிதானமாக , கண்ணில் பெட்டிக் கடை பட்டால், பொறுமையாக ஒரு தம் இழுத்துவிட்டு... அலுவலகம் நெருங்குகையில் ஓர் அவசரமான பாவனை செய்து விட்டு.., "பயங்கர டிராபிக் சார்".. "பையனை ஸ்கூலில் விட்டுவிட்டு " என்று என்ன இழுவை போட்டு சமாளித்தாலும் , அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடுமளவுக்கு வாங்கிக் கட்டிக் கொள்வர்.. இல்லை இல்லை.. வாங்கி அவிழ்த்து விடுவர்..

திருப்பூரின் தலையெழுத்தே என்னிடம் தான் உள்ளது போல, ரொம்பவும் எதிர்பார்ப்போடு என்னிடம் கூட சிலர் இந்த ஊரின் நிலவரம் குறித்து கேட்கின்றனர்.., ஏதாவது தேறுமா?.. பழைய நிலைமை வருமா?..

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு அறிவுப் பூர்வமான , பகுத்தறிவு நிரம்பிய ஓர் பொன்மொழி{?} உள்ளது... அப்படி கண்ணடியில் திருப்பூர் சிதிலமானதாக என் 7 ஆம் அறிவு உணர்கிறது..
தமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஊர்காரர்களும் திருப்பூர் போனா பொழச்சுக்கலாம் என்கிற ஓர் தீவிர அபிப்ராயத்தில் இங்கே புடைசூழ்ந்த காலம் ஒன்றுண்டு.. இன்றைய சூழலில் அவ்வித அபிப்ராயம் செல்லாத நாலணா காசாகிவிட்டது..

இருந்த போதிலும், அதே நாலணா காசு ஆயிரம் ரூபாயாக மாறிவிடும் சூழல் உருவாகும்.., காலம் அதனை நிகழ்த்தும்...
நம்பிக்கை..நம்பிக்கை... எங்க ஊரை நானே நம்பலைனா அது என்ன பொழப்புங்கோ?  ..

Tuesday, December 6, 2011

கவனக்குறைவுகள்..


...

வானத்தை மூடுகிற
என் பிரயத்தனத்தில்
வீட்டுக் கூரை
ஒழுகுவதை 
கவனிக்கத் தவறி
விட்டேன்....


தெருவில் 
நனையாமல்
குடை பிடித்துக்
கொள்கிற நான்
என் வீட்டினுள்
முழுதுமாக
நனைந்து  விடுகிறேன்..


இப்படித் தான்---
வீட்டினுள் இம்சிக்கிற
எலிக்குப் பொறி
வைக்க மறந்து
வெளியில் இல்லாத
புலிக்கு 
வலை விரிக்கச்
செய்கிறது விதி..!!
!

சுந்தரவடிவேலு                

Monday, December 5, 2011

ஆன்மாவின் அவஸ்தைகள்..



உடல் சாம்பலாவதற்கான
காத்திருப்பில் கிடக்கிறது
ஆன்மா..
வானில் சுதந்திரமாக
திரிந்து பழகிய ஆன்மாவிற்கு
இந்த உடலும், அது
உலவும் பூமியும்
தாங்கொணா சலிப்பையே
தந்த வண்ணமாயுள்ளது..!

நூறாண்டுகள் என்கிற
மனித ஆயுளின்
அறிவியல் நிர்ணயம்
பெருஞ்சிறையாயுள்ளது
ஆன்மாவிற்கு..
இடைப்பட்ட ஆயுட்காலங்களில்
நோயென்றும் விபத்தென்றும்
எவ்வளவோ விஷயங்களை
மரணத்திற்கு அறிமுகப்
படுத்தப் பிரயத்தனிக்கிறது
ஆன்மா..!!

உடலை அதன் வியாதிகளை
குணப்படுத்துகிற மருந்துகள்
மீது ஆன்மாவிற்கு கோபம்..
"சிவபூசையில் கரடி"
என்று புலம்புகிறது தனக்குள்..

அகாலத்தில் மரணத்தை
அறிமுகப் படுத்திய
எவ்வளவோ 
வாலிப ஆன்மாக்கள்
வானில் சுதந்திரமாக
வலம் வர....
"கொள்ளுப் பேத்தி
கல்யாணத்தை கண்ணுல
பார்த்துட்டுப் போயிட்டா
என் ஆத்மா சாந்தியடையும்"
என்கிற
தொண்டுக் கிழங்களை
எரிச்சலோடு
தரிசிக்கின்றன --
இன்னும் பல
மேலெழும்ப அவஸ்தைப்
படுகிற பூமியின்
கிழ ஆன்மாக்கள்..!!










Friday, November 25, 2011

முற்றுப் பெறுகின்றன முரண்கள்..

முரண்களினூடே
இயங்கப் பெறுகிறது
வாழ்க்கை..
மிகவும் தெளிவிலிருப்பதாக
நினைத்துக் கொண்டே 
குழப்பங்களைப் 
பற்றிக் கொண்டு 
நீள்கிறது காலம்...


பற்றற்று இருப்பதாக
நினைத்துக் கொண்டு
புதிய உத்திகளோடு
சந்தையில் அறிமுகமாகிற்
பொருள்களைக் 
கையகப் படுத்துகிற
தாகம்... வெட்கமேயற்று
வியாபிக்கிறது மனசுள்...


மௌனத்தை 
மையப் படுத்த
முனைகயிலேயே,
எதையேனும் முணுமுணுக்கப்
பிரயத்தனிக்கிறது வாய்...


வேசி வீட்டு
பூஜையறையில் 
பிரசன்னமான  பக்தி--
கோவிலில் 
அவளை தரிசித்த
போது காணாமற்
போயிருந்தது..


மரணத்திற்கு
எதிர்மறையான 
இந்த வாழ்க்கை...
--மரணத்துடன்
ஒப்பிடுகிற தகுதியையே
இழந்து நிற்கிறது...

மரணம் தெளிவானது
எவ்வித முரண்களுமற்றது...!!


புதைப்பதா எரிப்பதா
என்கிற சர்ச்சைகள் யாவும்
மரணித்திருப்பவனுக்கு
சம்பந்தப் படாதது..!!!



Tuesday, November 22, 2011

அனுமானம்..



என் அலுவலகப்
பணியாளனிடம்
பவ்யமாக வாலாட்டி
அவன் வருடுவதற்காகத்
தலையைத் தலையைக்
கொண்டுபோகிறது                
அவன் வீட்டு நாய்...

கடந்த இரண்டு நாட்களாக
அலுவலுக்கு ஏன்
வரவில்லை என்று
சற்றுக் கடுப்பாகிக்
கேட்ட என்னைப்
பார்த்து---குரைக்கிறது
அவனுடைய நாய்..

பழி வாங்க நினைத்தானோ
என்னவோ .. குரைக்கிற
நாயை வேண்டாமென்று
கூட அடக்கவில்லை...
மாறாக...மௌனமானதோர்
ரகசியப் புன்னகையை
என்னால் அடையாளம்
காணமுடிந்தது
அவன் முகத்தில்...!!

மறுநாள்
அலுவல் வந்தவனிடம்
என் தேக்கமாகியிருந்த
காட்டம் அனைத்தையும்
காண்பிக்க நேர்ந்தது...

மாலை திரும்ப
வீடு வந்தபோதும்
வழக்கமான என் கடுப்பில்
உறைந்து காணப்
படுவர் மனைவியும்
குழந்தைகளும்...

நாய் ஒன்று மட்டுமே
எதிர்க்கத் துணிந்திருக்கிறது
என்னை...
அலுவலிலும் சரி
வீட்டிலும் சரி,
எல்லாருமே மிரண்டுதான்
காணப் படுகிறார்கள்
என்னைக் கண்டு...எப்போதும்..!!


அந்த நாய்
என்னைக் குரைத்ததைப்
பார்த்திருந்தால்
என் மனைவி குழந்தைகள்
முகங்களிலும்
என் பணியாளின் அதே
ரகசியப் புன்னகை
தவழ்ந்திருக்கக் கூடும்
என்று எனக்கேனோ 
தோன்றிக் கொண்டே 
இருக்கிறது...!!!


Saturday, November 19, 2011

கவிதைச் சிதறல்கள்..





உயிர்த் திரவம்
உடற்கோப்பையை
விட்டு சிந்தி விடுகையில்
எல்லா நாமதேயங்களும்
அனர்த்தமாகி விடுகிற
சம்பவம் அன்றாடம்
எங்கெங்கிலும்
நிகழ்ந்த வண்ணமே
உள்ளபோதிலும்
--ஏனோ இந்த
வாழ்க்கை மென்மேலும்
சுவாரஸ்யப்பட்டுக் கொண்டே
தானிருக்கிறது
எல்லாருக்கும்...

புதிய உத்திகளில்
நாளொரு மேனியுமாய்
குவிகிற மின்சாதன
உபகரணங்கள்..
"இது தான் உள்ளதிலேயே
மிகவும் உன்னதமானது"
என்கிற பெருமிதம்
நிறைவுறும் முன்னரே
மற்றொரு மகத்தானது
முளைத்துவிடுகிறது
அதே சந்தையில்...

அப்பாவின் ரத்தக் கொதிப்பு
குறித்தோ, அம்மாவின்
சர்க்கரை அளவு குறித்தோ
எந்தப் பிரக்ஞையும்
அற்றவனுக்கு ..
கைபேசியில் பாட்டரி சார்ஜ்
குறைவது கவலையளிக்கிறது..
எதிர்முனையில் காதலி
குரல்வளை நசுக்கப்
படுவது போல பீதி உணர்கிறான்..

சார்ஜ் தீர்ந்த மறுகணம்
பிஸி க்கலாக சந்திக்க
அவசரப்படுகிறான் ...
ஆசுப்பத்திரிக்கு பெற்றோரை
ஆட்டோவில் அனுப்பிவிட்டு..!!

நோய் ஒருவிதமாகத்
தாக்குகிறதெனில், மகன்
வேறுவிதமாகத் தாக்குகிறான்
பெற்றவர்களை...

பெற்றோரை கவனிக்காத
சுரணை கூட அவனுக்கில்லை...
காதலி பேசுவதை
பக்கமிருந்து கவனித்தாகவேண்டும்.!!!

காதலியின் காய்ச்சல்
அவனை பாதித்த அளவுகூட
அப்பாவின் மரணம்
பாதிக்கவில்லை...

பின்னொரு நாளில்
அப்பாவின் இல்லாமை
அவனை பெரும் வெறுமையில்
செலுத்த உள்ளது..
--அதைவிட இப்போதைய
அவனது அசட்டையான
போக்கிற்காக வருந்தி
தனிமையில் போய்
தேம்பியழப் போகிறான்...!  

Friday, November 18, 2011

7 ஆம் அறிவு.... படவிமரிசனம்..

ஏழாம் அறிவு .. திரையரங்கு சென்று பார்த்தேன்... சினிமாவை
டிவி யில் பார்ப்பதையும், டிவிடி யில் பார்ப்பதையும் நான் விரும்புவதில்லை.., வருடத்திருக்கு ரெண்டு படங்கள் பார்த்தாலும் திரையரங்கு சென்று தான் பார்ப்பேன்... படம் எடுத்தவர்களுக்கும்  திரையரங்கு உரிமையாளர்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்கிற பத்தாம்பசலித் தனமெல்லாம் எனக்கில்லை...
 அந்த விசாலமான காலரி மனசுக்கு ஓர் சுகந்த உணர்வை , ஓர் வகைபுரியா உவகையை ப்ரவஹிக்க வைக்கிறது...
ரெண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஓர் தவம் போல குண்டியமர்ந்து உட்கார முடிகிறது... மலரும் நினைவுகளைப் பரப்பி ஓர் ரம்மிய சூழலை த்வனிக்க செய்கிறது..
இதே அரங்கிற்கு இளம் பிராயங்களில் கால்நடையாக , கால்களில் செருப்பு கூட அற்று , வேகிற வெய்யில் குறித்த பொருட்டற்று, சிட்டாகப் பறந்து வந்து தரை டிக்கட் எடுத்து முன்வரிசையில் இடம் பிடித்து பார்த்து ரசித்த படங்களின் பட்டியல்கள் நிழலாடும்...
இன்று உயர்ந்த வகுப்பில் மிக சாவகாசமாக உட்கார்ந்த வண்ணம் இடைவேளையில் தூரம் தெரிகிற தரை டிக்கட் ரசிகர்களை கவனிப்பது கூட அலாதி ...

உண்மையிலேயே ஏழாம் அறிவு பிரம்மிக்க வைக்கிறது... சூர்யாவின் தேர்ந்த நடிப்பும், ஸ்ருதிஹாசனின் சமூகப் பிரக்ஞை நடிப்பும், சிலிர்க்க செய்கிறது... இவைகளைக் காட்டிலும், முருகதாஸ் குறித்து வியப்பு மிக விரிகிறது... அந்தக் கொத்தவரங்காய் சைசில் இருந்துகொண்டு இத்தனை விஷயங்களை மிக அழகாக விஷுவல் செய்திருக்கிற பாங்கு ஆச்சர்யமூட்டுகிறது..

திரைக்கதையை ஆதிகால வரலாற்றோடும் தற்கால விஷயங்களோடும் இணைத்திருக்கிற திறமை பாராட்டுக்குரியது..

தமிழ்படங்கள் இப்படி ரசனைவீரியத்தோடு பிரவேசிக்கத் துவங்கி விட்டதை நினைக்கையில் ஆரோக்யமாக உள்ளது...
தாமதமாகப் போகாமல் சற்று முன்னராகவே சென்று துவக்கம் முதல் பாருங்கள்..அந்த ஆரம்ப கட்ட சம்பவங்கள் மிகவும் பிரயத்தனத்தோடு ஷூட் செய்யப் பட்டிருக்கிறது...
இடைச் செருகலாக வருகிற சர்க்கஸ் ஆகட்டும், ஸ்ருதியின் அந்த டி என் எ ஆராய்ச்சியாகட்டும் , சீனாவிலிருந்து நோய் பரப்ப வருகிற அந்த வில்லனாகட்டும், அவனுடைய ஹிப்னாட்டிஸத்தில் சிக்குண்டு தவிக்கிற நபர்களாகட்டும்... மிகவும் நேர்த்தியாக செதுக்கப் பட்டுள்ளனர் அனைவரும்..

இவை போக ஹாரிஸ் ஜெயராஜின் கூலான பின்னணி இசை, முன் அந்திப் பாடல், காதல் தோற்றதில் சூர்யா புலம்பிப் பாடுகிற பாடல், ரெண்டொரு பாப் ராப் என்று அனைத்தும் ஜில்லென்று இருந்தது..

நன்றி..

Wednesday, November 16, 2011

கனவுகளைத் தின்பவன்...


 


கனவுகளின் 
சம்பவக் கோர்வை
எப்போதும் எனக்கு
பிரம்மிப்பு..
ஓர் தேர்ந்த
திரைக்கதை போல.,
காட்சியமைப்பின்
யதார்த்தம் குலையாமல்
நிதர்சனத்தைக் காட்டிலும்
தெளிவும் பொலிவும்
இழைந்தன கனவுகள்..

யதார்த்த வாழ்க்கை
இங்கே நைந்த சேலையாய்
இருக்க, கனவுகள்
ஆயத்தப் பட்டாடையாய்
ஜ்வலிக்கிறது..

நிஜங்கள் இங்கே 
சுரணை இழந்து கிடக்கையில்
நிழல்கள் தொடு
 உணர்வில் நெளிகிறது...!

சினிமாவில் ஓர் சோகக்
காட்சிக்காக விசும்பிவிசும்பி
கைக் குட்டையை நனைத்தவன்
அப்பா செத்ததுக்கு
கண்ணீருக்குப் பதில்
எச்சிலைத் துப்பி --
கன்னத்தில் இழுக்க வேண்டியாயிற்று...

கற்பனைகளுள்
சுலபமாக அடியாழம் 
சென்று விடமுடிகிற என்னால்
உண்மைகளின் சமதளத்தில்
காலூன்றி நிற்கக் கூட
அனுமதி கிடைக்காத உணர்வு...

வெட்கப்படவும் 
ஒளிந்துகொள்ளவுமே 
அதிகம் பழகியிருக்கிறேன்...
யதார்த்தங்களோடு கைகுலுக்கவோ
புன்னகைத்து வரவேற்கவோ
பால்யம் தொட்டே
அன்னியப்பட்டு நிற்கிறேன்..

எல்லா நண்பர்களின்
வீடுகளுக்கும் அவர்களது
அனுமதியில்லாமலே கூட
சுலபத்தில் பிரவேசிக்க 
முடிகிற என்னால் ---
"நீ இருக்கிறாயா? 
உன் வீடு வரட்டுமா?"
என்று உரிமையில் கேட்கிற
நண்பனிடம் கூட 
வெளியே இருப்பதாக
சொல்லிவிட்டு
மல்லாந்து
படுத்துக் கிடப்பேன் 
என் அறையில்..!!
                                                               
சுந்தரவடிவேலு 

Monday, November 14, 2011

இது கதையல்ல நிஜம்..

சாந்த சொரூபமாகத் தான் வீட்டினுள் நுழைந்தேன்... மகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்... வழக்கம் போல பரஸ்பரம் நானும் என் மனைவியும் புன்னகைத்துக் கொண்டோம்... இது அனிச்சையாக அன்றாடம் வழக்கமாக நிகழ்கிற விஷயம்..
மகள் விழித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், என் வருகையை மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்பதோடு நான் அவளுக்காக என்னென்ன வாங்கி வந்திருக்கிறேன் என்கிற ரெய்டு நடக்கும்...
கடைசிக்கு ஓர் அஞ்சு ரூபா ஜெம்ஸ் மிட்டாயாவது இருக்கவேண்டும்.., இல்லையெனில் கேவலமாகப் பார்க்கும் என்னை அந்தப் பிஞ்சு...

வெளியே சுற்றி விட்டு வீட்டினுள் வருகையில் கைகால் முகம் எல்லாம் நன்கு அலம்பி விட்டு சொட்டுகிற ஈரத்தை ஈரிழைத்துண்டால் துடைத்து விட்டு அதன் பிறகே என் மகளை எடுத்து ஆசை தீர முத்தங்கள் பரிமாறிக் கொஞ்சுவது எனது வழக்கம்...
சமயங்களில் இந்த சுகாதாரம் குறித்த பிரக்ஞையை  மறக்க வைத்து விடும் அவளது வரவேற்பு... வேர்வையிநூடே அவளைத் தூக்கிக் கசக்கி அந்த சின்னக் கன்னங்களை எனது மூக்கு போட்டுப் புரட்டி எடுத்துவிடும்..அப்போதைய அவளது சிரிப்பின் வீச்சு என் கொஞ்சுகிற வெறியை இன்னும் மேம்படுத்தும்..

சட்டையை அவிழ்த்து ஹாங்கரில் மாட்ட மறந்து ... மகளிடம் மாட்டிக்கொள்வேன் பல சமயங்களில்... சட்டைப் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டாள் என்றால் அவ்வளவு தான்... என் லைசென்சு, என்
ஏ டிஎம் கார்டு, இன்னபிற என் காகித சமாச்சாரங்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு ... கடைசியில் ரூபாய் நோட்டுக்களுக்கு வருவாள்..
போட்டுக் கசக்குவாள்.. எனக்கு டென்ஷன் ஆகிவிடும்... சாமான்யத்தில் வாங்கிவிடவும் முடியாது.. கிழித்து விடமாட்டாள்.., பயக்கவேண்டாம் என்று மனைவி வேறு அட்வைஸ்... அதை டைவெர்ட் செய்ய மாற்று சம்பவம் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்... இப்படி என் மகளின் நிமித்தம் பல innovation நடக்கும் அன்றாடம்..

பசியில் சாப்பிட உட்காருகையில் ருசி குறைபாடு கண்டு என் ஆண்மை பொங்கி எழும்... பசி ருசியறியாது என்பது எதிர்காலத்தில் நான் பிச்சைக்காரன் ஆன பிறகு வேண்டுமானால் ஒத்து வரும்... இப்போதைய அவகாசத்தில், கருவேப்பிலையும் கடுகையும் கூட அனுபவித்து ரசித்து ருசிக்கிற மனோபாவத்தில் நானிருக்கிறேன்...
இன்றும் அப்படித்தான் நிகழ்ந்து விட்டது... சாந்த சொரூபமாக உள்ளே வந்தேனா, மகள் தூங்கிக்கொண்டிருந்தாளா, .. கைகால் முகம் அலம்பி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேனா, சரியான பசி... சாப்பிட ஆரம்பித்தாலோ, சாம்பார் சரியில்லை, ரசத்தில் தூக்கலாகப் புளி... நாறுகிற மோர்... பிள்ளையைப் பார்த்துக்கொண்டு பொரியல் செய்ய நேரமில்லையாம்..

கன்னாபின்னாவென்று திட்டியாயிற்று...பாப்பா தூங்குகிற ஸ்மரணை கூட அறுந்து கத்தியாயிற்று...
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள், என் கதறலில் துணுக்குற்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது எனக்குள் ஓர் லஜ்ஜையை ஏற்படுத்திற்று., என் நடத்தை மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயையை கிளறவைத்தது..

தூங்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையை மிக மெனக்கெட்டு சற்று முன்னர் தான் தூங்க வைத்தவளுக்கு மீண்டும் அவஸ்தையைக் கொடுத்து விட்டேன்... இனி அது சாமான்யத்தில் தூங்காது... நை நை என்று அரற்றி  எடுத்து விடும்..
என் கோபங்கள் யாவும் வடிந்ததோடு, அழும் என் மகளைக் கொஞ்சுவதற்கான முஸ்தீபில் நான் இறங்க நேர்ந்தது...

என் மகள் மீதான என் மனைவியின் ஒருங்கிணைப்பும் ஐக்கியமும் என்னுள் பிரம்மிப்பை ஏற்படுத்துபவை... என்ன பசியிலும் குழந்தை சாப்பிடாமல் அவள் சாப்பிட்டதில்லை... யதார்த்தமாக ஒரு தும்மல் போட்டாலும் கூட அது குறித்து கவலை கொண்டு , அதற்கான மருந்தை தயார் செய்கிற துரிதம் அவளிடம்...

 அங்கும் இங்கும் வெளியே சுற்றித் திரிந்து விட்டு உள்ளே வந்து குழம்பு ரசம் சரியில்லை என்று மனைவியைத் திட்டுகிற சம்பவம் புதிதல்ல... ஆனாலும் ஒவ்வொரு முறையும் அது ஓர் குற்ற உணர்வையும், மேற்கொண்டு அப்படி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்தையும் ... சுமந்தவாறே தான் திட்டித் தீர்க்க வேண்டியுள்ளது...

 என் ரௌத்ரத்தை சமாளித்தாக வேண்டும், குழந்தையின் அடத்தை சரிக் கட்டியாக வேண்டும்... இப்படி அவஸ்தையான பொறுப்புகள் கூடிக்கொண்டே தான் போகின்றன என் மனைவிக்கு...

 குழந்தையைக் காட்டிலும் பிரத்யேகமாகக் கொஞ்சத் தோன்றும் என் மனைவியை... சமயங்களில்..! அதற்காக அவள் வெட்கப் படுவாள் என்றெல்லாம் யோசிப்பதில்லை..

. இன்னும் என்ன, கொஞ்ச நேரத்தில் சாம்பாருக்காக கத்தித் தீர்க்கப் போகிறோம்..அதற்குள்ளாக எதற்கு கொஞ்சவேண்டும்? என்கிற காரணத்தாலேயே அந்தத் திட்டம் இன்னும் தள்ளித் தள்ளிப்  போய்க்கொண்டிருக்கிறது..!!

Sunday, November 13, 2011

டெலிவிஷனும் குழந்தைகளும்...

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை brilliant box ஆக அறிமுகப் படுத்துங்கள்...
நம்முடைய தப்பித்துக் கொள்கிற தந்திரங்களுக்காக எந்நேரமும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட் வொர்கயும் போகோ வையும் திணித்துக் கொண்டிருக்காதீர்கள்... டிஸ்கவரியை, அனிமல் பிலாநெட்டை, செய்தி சானல்களை பழக்கப் படுத்துங்கள்..
அப்போது தான் அவசரத்துக்கு நாம் ஏதாவது செய்தி கவனிக்க வேண்டுமானால், தப்பிக்க முடியும்... அவர்கள் போக்கிலேயே அவர்களின் ரசனைக்கு மட்டும் விருந்து படைத்துக் கொண்டிருந்தோமேயானால், நம்மை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் குழந்தைகள்...

குழந்தைகளுக்கு டெலிவிஷனை வேடிக்கை பார்க்கிற ஜன்னலாகப் பயன்படுத்தப் பழக்காதீர்கள்.., மாறாக, அதனை ஒரு emergency exit ஆக உபயோகித்துப் பழக்குங்கள்...
கண்கள், மனது, கல்வி, விளையாட்டு, இவை அனைத்தையும் பாழ் செய்கிறது டிவி..

நாமும் மடத்தனமாக அந்தக் குப்பை நாடகங்களில் ஒன்றுவோமேயானால் , அது குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும்... நாம் அந்த நாடக நேரங்களை மறந்தாலும் கூட அதுகள் அலாரமடிக்கத் துவங்கிவிடும் அந்த நேரம் வருகையில்...

ஆகவே பெரிசுகளும் கொஞ்சம் சிறுசுகளை மனசில் வைத்து செயல்படுவது சாலச் சிறந்தது...
நம் காலத்தில், அதாவது நாம் படிக்கிற காலத்தில், கரகரப்பான வானொலி அலைவரிசைகள் தவிர வேறு நாதியில்லை... அந்த அரைமணிநேர பாடல்களுக்காக விவசாய நிகழ்ச்சிகளை சகித்துக் கொண்டிருப்போம்... இன்னபிற அனத்தல்களைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கிடப்போம்.. விட்டால் அந்த அரைமணிநேர சினிமா பாடல்கள் பறிபோய்விடுமே..!..
ஆனால் இன்றோ... எம் பி த்ரீ என்ன, ப்ளூ டூத் என்ன, ... இன்னும் இத்யாதி என்னக்கள்..
வெள்ளிக்கிழமை ஏழரை டூ எட்டு ஒரு நான்கைந்து பாடல்கள் ஒளியும் ஒலியுமில் வைப்பார்கள்... அது சில  சமயங்களில், அதரப் பழசாக வந்து மண்டை காய்ச்சும்...மற்றொரு வெள்ளியில்  சற்றும் எதிர்பாராமல் புத்தம் புதுசாக அன்று ரிலீஸ் ஆன படப் பாடல்கள்... பாடல்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் ஸ்டில் நம் டிவி திரையில் விழுவதே பெருமையாக இருக்கும்...

இப்படி எல்லாம் ஓர் கட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து வளர்ந்து வந்தோம் என்று சொல்வது தவறு... டெக்னாலஜி அந்த அளவு மட்டுமே வளர்ந்திருந்தது.... அன்றைக்கும் இன்று மாதிரியே எல்லாம் பிரம்மாண்டமாக இருந்திருந்தால் வேண்டாம் போ என்றா சொல்லி இருப்போம்?...

நாற்பது தாண்டியும் மூக்குக் கண்ணாடியின் தேவை நம் அநேகம் பேர்களுக்கு இல்லை.. ஆனால் இன்றைய வாண்டுகள் முக்கால் வாசிக்கு கிழங்கள் போல சோடாப்புட்டி அவசியமாகி விடுவது வேதனையாகவும் விபரீதமாகவும் இருக்கிறது...
                                      ..
நாம தான் கஷ்டப் பட்டுட்டோம்..நம்ம குழந்தைகளாவது ஜாலியாக வளரட்டும் என்கிற போக்கு, நம்மில் பலருக்கு ஓர் நேரத்தில் முளைத்து விடுகிறது...
இருக்கட்டும்.., அதில் தவறில்லை..
ஆனால் அந்த சுதந்திரத்தில் - சில நாசுக்கான கட்டுப் பாடுகளைத் திணிப்பதும் மிக அவசியம்...
நன்றி..

சுந்தரவடிவேலு..

Wednesday, November 9, 2011

திருடனின் நேர்மை...

நகைக்
கடையில் 
ஒன்றரைப் பவுனை
ஒழுங்காகத் 
திருடியவன்
--பெட்டிக்
கடையில்
எள்ளுருண்டை 
திருடி 
பிடிபட்டு
அடி வாங்கினான்...

இதற்கு முன்னர்
என்னென்ன 
திருடி இருக்கிறாய்
என்கிற விசாரணைக்
கேள்வியில்...
நல்ல வேலையாக
"கடலை மிட்டாய்"
என்று மட்டும் சொல்லி
டபாய்த்து விட்டான்...

"ஓடிப் போடா
அற்பத்திருடா "
என்று விரட்டியடிக்கப்
பட்டான்...
அடுத்தநாள் மறுபடி
நகைக் கடையில்
தன் கைவரிசையைக்
காட்டினான் 
நாலு சவரனில் 
சங்கிலி திருடி...

இந்த முறை
எள்ளுருண்டைக்கு 
ரெண்டு ரூபாய் 
கொடுத்துச் சாப்பிட்டான்
அவன்..!!

Sunday, November 6, 2011

ஜீவா இளையராஜா..

இசைஞானி இளையராஜா அவர்களுடைய துணைவியார் ஜீவா அவர்கள் மாரடைப்பு நிமித்தம் சமீபத்தில் காலமானது குறித்து கவலை உணர்கிறோம்...

ஜீவா என்கிற பெண்மணி இளையராஜாவின் மனைவி என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் இல்லாத ஓர் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே அனுமானிக்கிறோம்...
--ஓர் ஆணின் ஆளுமைக்கும் அவனது திறன்களுக்கும் மௌனமான பின்புலமாக இருந்து க்ரியா ஊக்கிகளாக செயல்படுவது பெண்கள் என்று பொதுவாக ஓர் கருத்து உண்டு...
அந்த வகையில் இளையராஜாவின் வீரிய இசை ஞானத்துக்கு ஒருகால் ஜீவா என்ற பெண்மணி பின்புலமாக இயங்கியிருக்கக் கூடும்... 
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான துணை, இனி இந்த உலகில் இல்லை என்கிற சோகம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல.., அவரது இசையிலும் பாடல்களிலும் அயராமல் லயிக்கிற நம் அனைவருக்குமே...!!

அன்னக்கிளி முதற்கொண்டு ஆரம்பித்த அவரது இசைப் பயணம், இன்றும் மெருகோடும் அழகோடும் விளங்கி வருகிறதென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை... 
தமிழ் பாடல்களின் அழகியலுக்கு ராஜாவின் இசையே அடிநாதமாய் விளங்குகிறது... மற்ற பாடல்கள் பல இருப்பினும், அவை கூட இளையராஜாவின் இசை வருடியிருக்கக் கூடாதோ என்கிற ஏக்கத்தைப் பரப்புகிற விதமாகவே அவரது இசை நமக்குள் ஓர் கிறக்கத்தைப் பரப்பியிருக்கிறது என்பதில் மிகையோ அய்யப்பாடோ இல்லை...!!


ஒரு துறையில் வல்லுனராக பெயரெடுத்த ஓர் நபரை பொதுவாக நாம் வியந்து கூறுகிற ஓர் வாசகம் யாதெனில் : ''இவுரு மாதிரி ஒருத்தன் இனி தான் பொறந்து வரணும்"..  என்பது..
அப்படிப் பார்க்கையில், இளையராஜா மாதிரி ஓர் இசை வல்லுநர் முன்பு பிறக்கவுமில்லை, அவருக்கே பிறந்த கார்த்திக்கோ, யுவனோ கூட இல்லை..


பீதொவனும் பாக்கும் மொஜார்டும் ஓர் குறிப்பிட்ட இசைக் கோர்வையில் மட்டுமே வல்லுனர்களாக விளங்கி , அந்த ஓர் பிரத்யேகமான சொனாட்டக்களை மட்டுமே அபிவிருத்தி செய்து அவைகளில் புதுமை புகுத்தி பெயர் வாங்கினார்கள்... ஆனால் இளையராஜா, எல்லா பரிமாணங்களையும் மிக யதார்த்தமாக, மிக வீச்சாக , மிக வசீகரமாகக் கையாண்டார் என்றால் அது மிகையன்று... அவர் கையாண்ட அனைத்த வகை இசையுமே குறிப்பிட்ட அந்த சூழல்களின் வெளிப்பாடாகவும்,  மனித மனங்களின் வார்த்தைகளால் விளக்கவொண்ணா கடின உணர்வுகளை தன் இசையால் வெளிக் கொணர்ந்ததாகவுமே கொள்ளலாம்... 
அத்தனை வகையறா இசை முறைகளையுமே மிக லாவகமாக மிக நேர்த்தியாக மிக ரசிக்கிற வகையிலே ராஜா பிரசவித்தார்... 


பி ஜி எம் . என்று சொல்லப் படுகிற பின்னணி இசை உலகில் இளையராஜா தவிர வேறெந்தத் திரைப்பட இசை அமைப்பாளர்களுக்கும் இடமில்லை... 


இப்போது ஒலிக்கிற புதுப் பாடல்களை கேட்பதே சாபம் போல உணர வைக்கின்றனர் இன்றைய இசை மேதைகள்... ஒரு முறை கேட்டு மறுமுறை கேட்கவே காதுகள், மனசு எல்லாம் சலிப்புணர்கின்றன... ஆனால் இன்றும் இளையராஜாவின் எத்தனையோ பாடல்களை, எத்தனை முறை திரும்பக் கேட்டாலும் அதே பரவசம் மேலும் மேலும் அடர்த்தி தான் காண்கின்றன...


ராமராஜன் படங்களுக்கும் டப்பாங்குத்து நடக்கிறது...சங்கீதத்துவம் ததும்பும் சலங்கை ஒலி போன்ற கர்னாடக பாணி படங்களுக்கும் மிருதங்கம் மிரள்கிறது.. . 
இப்படியாக எல்லா கலவையான ரசனைகளிலும் தன்னை தன் இசையை மாற்றி அமைக்கிற வல்லன்மை இளையராஜாவுக்கு அமையப்பெற்ற வரம்... 


திருமதி ஜீவா இளையராஜா ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்... மேற்கொண்டும் அவரது ஆத்மா , ராஜாவின் திறன்களுக்கு பின்புலமாக நின்று செயல்படட்டும்..

சுந்தரவடிவேலு..

Thursday, November 3, 2011

காதல் கேன்சர்

சரிந்து விடக்கூடிய
சாத்தியமுள்ள 
விளிம்புகளில் கூட
மிக சாதுர்யமாக
உன்னுடன் 
நடந்து விட முடிகிற
என்னால் --
தெளிவான 
தேசிய நெடுஞ்சாலையில்
தடுமாற நேர்கிறது
நீ என்னைப் 
புறக்கணிக்கையில்...!

தங்கத்திரவமாக
ஊற்றெடுக்கிற 
காதல் ரசாயனம்
உடலின் மற்ற
நோய்க்கிருமிகள்
அனைத்தையும்
அழிக்கிற வல்லன்மை
கொண்டுள்ளது...

--ஆனால்
காதல் என்கிற
நோய்க்கிருமி
நம்மைத் 
தின்று தீர்ப்பதை
நம்மாலேயே 
உணர முடிவதில்லை
என்பதை விட
உணரவே பிடிப்பதில்லை...??

சுந்தரவடிவேலு 

Monday, October 31, 2011

மழைக்கால ஞாபகங்கள்..

மழையின் ருசியில்
மயங்கியது நாக்கு...                             
...
சின்னத் தூறலில்
நனைவதற்குக் கூடத்
தடை விதித்த 
பால்ய காலங்கள்
மலரும் நினைவுகளாய்
இப்போது நனைந்துகொண்டே...!

ஒவ்வொரு மழையிலும்
ஓடிப்போய் நனையவே 
என் ரசனைகள் பருத்திருந்தன...
ஆனால் தடை விதிப்பதைக்
கடமையாயும் கெளரவமாயும்
கருத்தாய்க் கொண்டிருந்தனர்
பெற்றோரும் மற்றோரும்...!

சிணுங்கிக்கொண்டே விலகி நிற்பேன்..
போகப்போக என் அடம் 
அவர்களுக்கு பெரிய இம்சையாகவே,
குடைகொடுத்து இறக்கிவிடுவர்
மழையில் என்னை..
என் குடையை  கொஞ்சம் மட்டும்
நனைய விட்டு
 முழுதுமாக
நான் நனைந்து...மேற்கொண்டு
குடை  நனையாமல் 
பார்த்துக் கொள்வேன்...!!

மழையில் நனைகிற என்
திமிரை எவராலும் எப்போதும்
அடக்கவே முடிந்ததில்லை...

மழை வருகிற முஸ்தீபில்
வானம் பூச்சாண்டி காட்டுகிற
போதெல்லாம் , மக்கள்
ஏன் அப்படி துரிதம்
காட்டுகிறார்களோ  என்று
எரிச்சல் வரும் எனக்கு...

இத்தனை ஜாக்கிரதை
காட்டுகிற மக்கள்
சளி காய்ச்சல் என்று
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில்
குவிகிறார்கள்...

இத்தனை கிழிக்கிறவன்
என் மகள் நனைகையில்
பதறாமலா இருக்க முடிகிறது?
அவசரமாகக் கைக்குட்டை
எடுத்து அந்த சின்ன
மண்டையைத் 
துவட்டி விடாமலா இருக்க முடிகிறது??...

Saturday, October 29, 2011

மானக்கேடு...



இன்னும் இரண்டு 
அல்லது மூன்று
மாதங்கள்
 கால்களுக்கு வரக்கூடும் 
என்கிற தகுதியில் 
என் கால் செருப்புகள் 
உள்ள நிலையில்...
மற்றொரு புதுஜோடி
செருப்புக்கு அவசியமும்
அவசரமும் என்ன என்கிற
கேள்வி என் மனைவியினிடத்து...

கண்காட்சி ஸ்டாலில்
மிகத் தரமானதென்று
உத்தரவாதமாகக் கூவியதைத்
தொடர்ந்து அலைமோதிய 
கூட்டத்தில் நானும் 
மயங்க நேர்ந்ததை விளக்கும்
பொறுமையற்று --
"வாங்கியாச்சு , விடு"
என்று மட்டும் சொன்னேன்...

ஒரு வருடம் வரக்கூடும்
என்று நம்பி ஒன்றரை
வருடம் வரை வந்த
ஒரு ஜோடி செருப்பு 
ஒரு அவசர நடையில் அறுபட்டு
தெருவோரம் ஓரங்கட்ட வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது 
சில வருடங்கள் முன்னர்...
--பிற்பாடு
பொருளாதார பலவீனமோ
அல்லது அந்த செருப்பை இழந்த
வேதனையோ... மேற்கொண்டு
சில மாதங்கள் வெறுங்காலோடு
தான் திரிந்து வந்தேன்... 

அப்போதெல்லாம் என் 
செருப்பில்லாத கால்கள்
குறித்த எந்தப் பிரக்ஞையும்
அற்றிருந்த  என் மனைவி
 இன்று
எனது முன்ஜாக்கிரதையை
கேவலப்படுத்துகிறாள் ..!!

அவளிடமுள்ள 
ஐந்து ஜோடி செருப்புகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்கிற அவளது
குழப்பங்களை மட்டும் ரகசியமாய்
அன்றாடம் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
மானங்கெட்டுப் போய்...!!!

சுந்தரவடிவேலு..            

Tuesday, October 25, 2011

பகிரங்க ரகசியம் ....


 --

எல்லா கூட்ட நெரிசல்களிலும்
எல்லா ஆண்களும் 
"தன் முழங்கைகளை பெண்கள் மீது
யதார்த்தமாக ஸ்பரிசிப்பது எங்கனம்?"
என்று ஒரு புத்தகம் போடுமளவு
விஷயங்கள் வைத்திருந்தனர்...

--அதே யதார்த்தங்களுக்கு
பெண்களும் உடந்தை போல
பரஸ்பரம் ஸ்பரிசங்கள் நிகழ்ந்தன..!

கணவன் மார்களோடு வந்த சில பெண்கள்
முறைப்பதாக நடிக்க வேண்டியாயிற்று...
மனைவிகளோடு வந்த சில ஆண்கள்
மனைவிக்குப் பின்னாடி நடந்து 
உரச வேண்டியாயிற்று...!!

தனித்து வந்த இரு பாலருக்கும்
உரசுவதென்பது 
பதற்றமற்ற சுதந்திர நிகழ்வாயிருந்தது..!!

உடன்பாடோடு தனிமையில்
தழுவிக் கொள்வதற்கான 
நிகரில்லை என்றாலுமே கூட
"யதார்த்தம் போன்ற உரசல்களுக்கு"
என்று ஓர் பிரத்யேகமான ரசாயனம்
எல்லோரிலும் சற்று 
வீரியமாகவே வியாபித்துள்ளது தான்..

உணர்வுகள் நிமித்தமாய்
புலன்களுள் புடைத்தெழும் நெருப்பானது
வேள்வி ஜ்வாலைகளுக்கு
சற்றும் குறைந்ததன்று...!!!

சுந்தரவடிவேலு..

Monday, October 24, 2011

கனிமொழி...

நான் எந்தக் கட்சிக்காரனும் அல்ல... என் சிறு மனிதாபிமானம் மட்டுமே இதனை எழுதத் தூண்டிற்று...

மகளின் கைகள் கம்பித்திரி பற்றி இருக்க....
எரிகிற தீபத்தில் அதன் முனையைக் காண்பிக்க..
சற்று நேரத்தில் பூக்க இருக்கிற தீப்பொறி குறித்த
மகிழ்ச்சியைக் காட்டிலும், அதன் நிமித்தமாக --
அந்த மகளின் முகத்தில் பூக்கும் சந்தோஷத்
தீப்பொறியில் குதூகலித்த அந்த தீபாவளிகள்...!!

இன்று--
அதே மகள் கம்பிகளைக் கைப்பற்றி இருக்க..
துக்கத்தீப்பொறி தந்தையின் நெஞ்சுக்குள்...!!
கொப்பளித்துக் கசிந்த அந்தக் கண்ணீர்ச் சூட்டில்
கன்னங்கள் வெந்தன...!!


Saturday, October 22, 2011

நிரந்தரம் என்கிற தற்காலிகம்..

உடலுக்கு நோயென்று ஏதேனும் வருகையில்....
"பற்றற்ற தன்மை" மீதாக ஓர் தனித்துவமான பற்று
வந்து விடுகிறது நமக்கு... இது சற்று வினோதமே..!!

ஆரோக்யமான தருவாய்களில் அல்லாத ஓர் வெறுமையுணர்வு..
பீதி கலவையான ஓர் ஆழ்ந்த அமைதி... நோயில்..!
வாழ்வின் அடர்த்தி நைந்து..,
அறுபடக் காத்திருக்கிற உத்தரவாதமில்லாத
வீணைத்தந்தியின் சாயலில்...

தற்காலிகமான ஆரோக்யமே கூட
நிரந்தரமென்பதான ஓர் மாயத் தோற்றத்தை
நம் எல்லோரின் வசமும் ஏற்படுத்தி விடுகிறது..!!

நிரந்தரமாகி விடுகிற சில நோய்களுமே கூட
தற்காலிகமானது என்பது போல, 
மிகத் துரிதமாக குணமாகி விடுகிற பாவனையிலேயே
மரணம் வரையிலுமாக சமாளித்து வந்து விடுகிறது நம்முடன்..!!!

பணம் சம்பாதிக்கிற ... பொருளீட்டுகிற..
நமது வினய வியாக்யானங்களும் ...
சம்பாதிக்கவே  தடுமாறுகிற நமது பலவீனங்களும்--
மரணத்தின் முன்னிலையில் 
எவ்விதத் தகுதியுமற்றவைகளாகி விடுகின்றன...!!


Saturday, October 15, 2011

கடவுளும் மனிதர்களும்...{நய்யாண்டி}

நம் நிலை குறித்து சந்தோஷப்படுகையிலும் சரி, வேதனைப் படுகையிலும் சரி.. சுலபத்தில் கடவுளைக் காரணம் காட்டி விடுகிற போக்கு நம்மில் பலருக்கும் உண்டு... சந்தோஷப் படுகையிலும் கூட சற்று மறந்து விடுவோம்.. ஏதேனும் சங்கடம் வருகிறபோது மாத்திரம் உடனடியாகக் குற்றவாளிக்கூண்டில் நாம் நிறுத்த முயல்வது கடவுளைத் தான்...
செல்லாத பத்து ரூபாய் கொடுத்து பேருந்தில் பயணிக்க முடியாது.., சினிமா பார்க்கமுடியாது, டீ கடையில் டீ குடிக்க முடியாது... இங்கெல்லாம் அந்தப் பத்து ரூபாய்க்கு இத்தனைப் பிரச்சினை இருக்கையில்.... பூசாரி காண்பிக்கிற தட்டில் போடவோ , கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தவோ சாமி எந்தத் தடையும் போடுவதில்லை... 


--இப்படியாக கடவுளாகப்பட்டவர், எது நாம் செய்தாலும் பொறுத்துப் போகிறவராக இருக்கிற காரணமாக ... நமது பிரச்சினைக்கும் இவரே காரணம் என்று அவர் மீது குண்டு போடுபவராக நாம் இருக்கிறோம்..

வாய் திறந்து பேசுபவராக கடவுள் இருக்கும் பட்சத்தில், நாம் செய்கிற அக்கிரமங்களுக்கு நின்று கொள்ளாமல் அரசன் போல அன்றே கொன்று விடுவாரென்றே அனுமானிக்கிறேன்..
என்னா கொடும சார் இது? என்பது போல, சினிமாவுக்கு செல்கையில் டிக்கட் கிடைக்கணும் என்று சாமியிடம் வேண்டினால் கூடத் தேவலாம்..., நான் போயி உட்கார்ந்த பிற்பாடே படம் போட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்...

எங்க ஊரு பஸ் இன்னும் போயிருக்கக் கூடாது சாமி... நான் படிச்ச கேள்வி பதிலே எக்சாம்ல வரணும் சாமி, இன்னைக்கு என்னோட ஆளு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணினா, உனக்கு ஒரு ஈடு தேங்கா சாமி..

சாமி என்பவர் முன்னர் இவ்வுலகில் இருந்தாரா என்கிற ஆய்வுகள் புளித்துப்போனவை... இப்போதும் இருக்கிறார் என்கிற நம்பிக்கைகள்...
-- இருக்கிறார் .. ஆனால் எதுவும் பேசாமல், நாம் நம் இஷ்டத்துக்கு எதனை செய்தாலும் பேசாமல்... 

அப்படி நம் செய்கைகள் குறித்து உடனடி விமர்சனம் செய்கிற சாமி இப்போது இருக்குமேயானால் ... அது பேஜார் சாமி... 
சாமி கல்லாக இருக்கிற வரைக்கும் தப்பித்தார்...ஏதோ ஒரு நேரத்தில் கோபித்துக் குற்றவாளிக் கூண்டில் சாமியை நிறுத்தினாலும், இன்னொரு முறை ஜட்ஜ் ஆக உட்கார வைத்து கை கட்டி வாய் பொத்துகிற பக்குவமும் மனுஷப் பசங்க கிட்ட உண்டு... 

யுகம் யுகமா ஒவ்வொரு தினுசா இவுங்க வேண்டுறதை எல்லாம் சாமியும் பார்த்துக்கிட்டே தான் இருக்கார்...
ஸ்தபதி செதுக்கிய சிலை தான் என்றாலும், அதனையும் மறந்து .. அந்தக் கல்லையும் சாமியாக பாவித்துப் பார்க்கிற மனிதனின் பெருந்தன்மை, நிச்சயம் சாமிக்கே சிலிர்க்க வைக்கிற சமாச்சாரம்....

செதுக்கிய ஸ்தபதியே கோவில் திருவிழா கூட்டத்தில் வரிசையில் நின்று தான் சாமியைப் பார்த்தாக வேண்டும்... 
அட நீங்க வேற... அந்த சாமியே வந்து நடுவில் புகுந்தாலும், .. "யோவ்.. யார்யா அது.. இங்க நிக்கிறவங்க என்ன இளிச்சவா பசங்களா? நீங்க தான் ரொம்ப புத்திசாலியா?.. பின்னாடி வாயா லைன்ல..."   

Monday, October 10, 2011

இன்று வந்ததும் அதே நிலா?? SHORT STORY....

இரண்டாமாண்டு கல்லூரி சென்று கொண்டிருக்கிற எனது மகளின் தோழி, என்னை காதல் வசப்படுத்திய விபரீதத்தை நான் எனது டைரியில் எழுதுவதைக் கூடத் தவிர்க்க வேண்டியாயிற்று...



"அங்கிள்" என்று வெள்ளந்தியாக என்னிடம் பேசுகிற, அப்பா ஸ்தானத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிற அந்த என் மகள் போன்ற பெண்ணிடத்து என் பொருந்தா காதல் மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயை...

குற்ற உணர்வோடு சரிவர சாப்பிடக்கூட பிடிபடாமல் அலுவல் கிளம்புகிறேன்... என் நடவடிக்கையின் மாறுதல்களை சுலபத்தில் அடையாளம் கண்டு கேள்வியாகப் பார்க்கிற என் மனைவியின் முகம் ஓர் அவஸ்தை என்றால், என் தன்மை குறித்த எவ்வித சந்தேகங்களும் அற்ற என் மகள் சுபா முகமாகட்டும், அந்தத் தோழிப் பெண் கவிதா வாகட்டும்... பேரவஸ்தை எனக்கு...!!

இவ்வித சூழல்களோடு டிவி நாடகமோ, சினிமாவோ வேண்டுமானால் சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உண்மையாக எனக்கே நடக்கிறதென்றால், .. எங்கே போய் கொட்டித் தீர்க்க?

சில விஷயங்கள் ஓர் பிரத்யேகமான பின்புலத்தோடு தான் நடக்கிற சாத்தியம் கொண்டுள்ளன... இந்த விஷயமும் அப்படி ஓர் பின்புலத்தோடு தான் நிகழ்கிறது என்கிற உள்ளுணர்வொன்று என்னுள் கிளர்ந்து கொண்டே தான் இருக்கிறது... 
இந்த மாதிரியான காதல் உணர்வுகள் யாவும் ஓர் பிராயத்தில் எனக்குள் நேர்ந்தவை தான்... ஒரு தலையாகவும், பிறகு இருதலையாகவும் அந்த அனுபவம் அடர்த்தி கண்டது... அதில் சிலிர்த்து இறுகிய இருதயம் இன்னும் அதே பாறையின் திணவில் தான் என்னுள் படிமானமாகிக் கிடக்கிறது..

காதல் இருதலையாகிக் கூட தோல்வி காண நேருமாயின் அது மாபெரும் சாபமன்றோ?... ஒருதலைக் காதல்கள் கூட வெற்றிவாய்ப்பினை எட்டிப்பார்த்த சம்பவங்களை எல்லாம் தரிசித்து வியந்தவனுக்கு... இருவரும் ஓடி ஓடி ஆசை தீரக் காதலித்த ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறுபட்டுப் பிரிவதென்பது உலகமகா சோகமல்லவா??

அதற்கான காரணிகள் பெற்றோர் என்றால் கூட ஜீரணிக்கலாம்..., சம்பந்தப் பட்ட காதலியே காரணம் என்றால்?.. அப்படி ஆயிற்று என் காதல் கதை... என் தகுதியும் செல்வாக்கும் அவளுக்கு நான்காம் தரமாகி விட்டன... அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் அந்தஸ்த்தை ஒப்பிடுகையில்..!!

பெண் பார்க்க வருகிற வைபவத்தையே ஓர் இழவு சேதி போல என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்... எப்படியோ அதனைத் தவிர்க்கச் சொல்லியும், ஊருக்குள்ளேயே அவர்களை விடாமல் விரட்டி விடுமாறும் தான் என்னிடம் அழாத குறையாக கட்டளைகள் விடுத்துக் கொண்டிருந்தாள்...நான் தான் கேனப்பயல், "விடுடி .. சும்மா பொலம்பாதே.. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. நீயும் பார்க்கற மாதிரி பார்த்துட்டு புடிக்கலைன்னு சொல்லிடு" என்று புத்திசாலி போல ஐடியா கொடுத்தேன்..

ஆனால் வந்தது ஆப்பு... மாப்பிள்ளையின் ஆஜானுபாகு, அரசாங்க உத்தியோகம், சம்பளம், எல்லாம் அம்மணியை தலைகுப்புறத் திருப்பி விட்டது.. மேற்கொண்டு என்னைப் பார்ப்பதை ஓர் இழவு போல உணர ஆரம்பித்து விட்டாள்...

என்னென்னவோ செய்யத் திட்டமிட்டு , "என் கையால உன்னை கொல்றேன் பாரு" என்றெல்லாம் வீர சபதமேற்று...
ஓர் தருவாயில்--- சீ போடி நாயே..போயும் போயும் உன்னைக் கொன்னு என்னோட வாழ்க்கையை நான் தொலச்சுக்கனுமா? என்கிற தீர்மானத்தில், என் வாழ்க்கையை வேறு கோணத்தில் நான் செலுத்த நேர்ந்த .. ... அந்த சம்பவங்கள் யாவும் நிழலாடுகிறது... 

இன்று எனக்கும் ஓர் நல்ல மனைவி, வெளியூரில் படிக்கிற மகன், உள்ளூர் கல்லூரியில் படிக்கிற மகள் என்று நேர்த்தியாகத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது... ஆனால் பாருங்கள் --

இப்படி ஓர் காதல் இப்பொழுது...
அதற்கான காரணத்தை நான் திடீரென்று ஓர் நடுராத்திரியில் தூக்கத்தின் நடுவே உணர நேர்ந்தது... 
--அந்தக் கவிதாவினிடத்து, என் முன்னாள் காதலி கல்பனாவின் முகச்சாயல்..

முன்னாளில் உயிருக்கு உயிராகக் காதலித்த ஓர் பெண்ணின் முகம் இவ்வளவு தாமதமாக நினைவில் எழுகிற விபரீதம் அதிசயமாக இருக்கிறது எனக்கு... அந்த முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அல்லவா கல்பனா அங்கே வந்திருக்க வேண்டும்?.. அப்படி அப்பட்டமாகவா  இருக்கும் முகம்? ஏதோ சாயல்கள் தானே??


இந்தக் குழப்பங்களின் நிமித்தமாக எனக்கு கவிதாவை உடனடியாகப் பார்த்தாக வேண்டும் போல அவசரம் தொற்றிக்கொண்டது...

என்னவோ சொல்லி வைத்தாற்போல கவிதா அடுத்த நாள் அவள் அம்மாவோடு என் வீடு வந்தாள்... அவள் அம்மா, ---- கல்பனா..

என்னைப் பார்த்துக் கும்பிட்டாள்... நானும் பதிலுக்குக் கும்பிட்டேன்..
எனக்கு உடனடியாக ஞாபகம் வந்து விட்டது.. அவள் என்னை சுத்தமாக மறந்து விட்டாள் போலும்..!!  எந்தப் பழைய சங்கதிகளும் அவளில் பிரதிபலிக்கவில்லை..

--கல்பனாவிற்கு மறப்பதென்பது அப்போதும் சரி, இப்போதும் சரி .. பெரிய விஷயமில்லையே!!!

வழக்கம் போல மறுபடி ஒரு நாள் கவிதா என் மகள் சுபாவைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தாள்.. 

அனிச்சையாக நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.. அவளும் பதில் புன்னகை செய்தாள்..  இந்த முறை அவளது புன்னகையில் அந்தப் பழைய வெள்ளந்தி மறைந்து விட்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு..!!


Wednesday, October 5, 2011

எங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}

உண்மை சம்பவம் கூட இவ்வளவு வேதனைகளும் கோரங்களும் நிரம்பி இருக்குமா என்பது சந்தேகமே... ஆனால் திரைக்காக மெனக்கெட்டு , அதனைப் பார்க்கிற ரசிகர்கள் எல்லாரையுமே சிறிது நேரம் திகைக்கவும் வேதனைப்படவும் வைத்து விட்டார் டைரக்டர்... இது அவருக்கும் அவரது திரைக்கதைக்கும் மிகப்பெரிய வெற்றி என்ற போதிலும், ஓர் தாங்கொணா சோகத்தை இப்படித் தத்ரூபப்படுத்துகிற முயற்சி வேண்டாமென்றே தோன்றுகிறது.....

இன்னும் விமானத்திலும் சொகுசுக் கப்பல்களிலும் பயணம் மேற்கொண்டு மாபெரும் விபத்துக்களுக்கு உள்ளாகி மரணிப்பவர்களை யோசிப்போமேயானால் இந்த உலக வாழ்க்கை அற்ப புல்லைக் காட்டிலும் கேவலமாகப் புரிபடத் துவங்கி விடும்.... தியான முறைகளும் யோகா முறைகளும் இம்மாதிரியான பற்றற்ற தன்மைகளை ஊக்குவிப்பதில் தான் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றன... ஆனால் இம்மாதிரி எந்த விபரீதங்களும் நிகழாமலே அம்மாதிரியான பற்றற்ற தன்மைகளுள் பயணிப்பதற்கான தளங்களை அமைத்துத் தருகின்றன...

ஆனால் இயல்பில் ஒரு மனிதன் இவ்வித கோர சம்பவத்திற்கு பிற்பாடே வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் பிடிப்பையும் இழக்க நேர்கிறது...அதுவும் கூட, சில வாரங்களோ மாதங்களோ...மீறினால் சில வருடங்களோ...!!

ஆனால் பற்றற்ற தன்மைகளை பின்பற்றுகிற குழாமிடம் பொருளீட்டுகிற திறன் இருக்குமா மற்றும் எதையேனும் புதிதாகக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு நன்மை பயக்க வைக்குமா  என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்...

பற்றும் வேண்டும், பொது நல நோக்கும்  வேண்டும், எதையேனும் சாதித்து அதனை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கிற மாண்பு வேண்டும்...

ஓர் படத்தை விமர்சிக்கத் துவங்கி, வேறெதையோ யோசிக்க நேர்கிற அளவு ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது எங்கேயும் எப்போதும்...

ஜெய்யின் நடிப்பு ஓர் அற்புதமென்றால், அஞ்சலியின் நடிப்பு ஓர் அற்புதம்... அது போக சென்னையை கண்டு மிரள்கிற, மிகவும் யதார்த்தமாக சந்தேகப்படுகிற அனந்யாவும், அவரது guide ஆக செயல்பட்டு காதலனாகிறவராகட்டும், ஆனந்யாவின் அக்கா, ஜெய்யின் அம்மா, ... 

இத்தனை பாத்திரங்களை வடிவமைத்து, அவர்களுக்கெல்லாம் ஓர் முந்தைய 
சுவாரஸ்யமான வரலாறுகளைப் பதிவு செய்து,.. இவர்களுடைய அந்த வரலாறுகளோடு இந்தக் கொடுமையான விபத்துக்களை இணைத்து நமக்குக் காண்பிப்பது கண்ணீர் வரவழைக்கிறது..

பேருந்தில் பயணிக்கிற அந்தப் புதுமணத்தம்பதிகள், துபாய் சென்று திரும்புகிற தந்தை, அவருக்கான அவருடைய மகளின் போன் கால், ...

ஐயோ...தமிழில் இப்படி ஒரு படம் .. யாரும் இது வரை பார்த்திருக்க வாய்ப்பில்லை...

Tuesday, October 4, 2011

வெப்பம்...


 

என் அந்தரங்க டைரி
வீட்டில் அங்கும் இங்குமாக
எறிந்தபடி தான் கிடக்கிறது...

என் டீன் வயது
சபலங்கள் துவங்கி,
ஓர் பிராயத்தில்
நான் காதல்வசப்பட்டது,
என் காதல் வெற்றிபெற்றது
பிற்பாடு தோல்வியுற்றது,
இன்னபிற எனது
சேஷ்டைகள் அனைத்தும்
அடங்கிய அந்த டைரியை
நானே மறுபடி வாசிக்க
பயப்படுவேன், மற்றும்
சங்கடப்படுவேன்...

மலரும் நினைவுகளில்
உழல அவ்வப்போது
அவா பிறக்குமேயானாலும்
அந்த டைரி தவிர்த்து
பிறவற்றில் லயிக்கவே முனைவேன்...!!

அப்படியான
அந்த டைரியை
மாற்று நபர் படிக்க நேர்கையில்
அதன் நிமித்தமான எனது
தர்மசங்கடங்கள் சொல்லி மாளாது..
பல முறைகள்
அதனை எனது பெட்டியில் 
அடைப்பதற்கான திட்டம் வரும்..
ஆனால் ஏனோ அது
நடைமுறை சாத்யப் படாத
விதமாகவே முடிந்து போகும்..

சில விஷயங்கள் 
சுலபத்தில் தீர்வு காண்பவை..,
ஆனால் ஒருவித சோபை யின்மையால்
அது நிறைவேறாத , 
நிறைவேறும் வாய்ப்பே அற்றதாக
நிலைபெற்றுவிடுகிற தன்மை
ஆச்சர்யமானது..

அப்படித்தான் அந்த எனது
டைரி, மனைவி கண்ணிலும்
வீட்டிற்கு வருகிற நபர்கள்
கண்ணிலும் ஊசலாடிக்கொண்டே
இருப்பது, எனக்குள் ஓர் வகை
அச்சத்தை உண்டு பண்ணிக்கொண்டே 
இருக்கிறது...

ஒரு நாள் தீவிர முடிவெடுத்து
எறிந்து கிடக்கிற அந்த 
டைரியை எரித்துவிடுவதே
உசிதம் என்று கருதி
--அதற்கு முன்னர்
ஒரேமுறை அதனைப்
படித்துவிட முடிவுசெய்து..
படித்து முடித்து....

ஒருவழியாக
எனது பீரோவின் 
உள் அறையுள் வைத்துப்
பூட்டப்பட்டது அந்த டைரி...

"இன்னும் கொஞ்சம் 
பாக்கி இருக்கிறது படிக்க, 
அதற்குள் அந்த டைரியை
எங்கே போட்டீர்கள்?"
என்று என் மனைவி 
கேட்ட போது..
நான் உயிரோடு எரியூட்டப்
படுவதாக உணர நேர்ந்தது...!!!    

Monday, September 26, 2011

ஒவ்வொரு வீதியிலும்...

விதிகளின் நிமித்தமான
பேதங்கள் அபேதங்கள்
யாவுமே --
காரண காரியங்களுக்கு
அப்பாற்பட்டவை...

பேரன் பேத்தி எடுத்த
பக்கத்து வீட்டுத் தாத்தா
இன்னும் தீவிர
புணர்ச்சியில் ஈடுபடுகிற
சங்கேதம் அனைத்தையும்
என் செவிகள் உணரும்...

ஐந்துமாதக் குழந்தை
வயிற்றில் இருக்கையில்
பைக் விபத்தில் சில மாதங்கள்
முன்னர் இறந்து போன
இளவயதுக் கணவன்
எதிர் வீட்டில்...

கள்ளக்காதலைக் 
கண்டும் காணாத
வீரப்புருஷன் ஒரு வீட்டில்..

நல்ல மனைவியை
சந்தேகப்பட்டுக் கொல்லாமல்
கொல்கிற கொடூரன்
இன்னொரு வீட்டில்...

மூன்றாவதும் பெண்ணாகவே
பிறந்ததால் தொட்டில்
குழந்தை அமைப்பிடம்
ஒப்படைக்கிற தீர்மானம்
ஒரு வீட்டில்...

கல்யாணமாகி
வருடம் ஆறாகியும்
புழுப்பூச்சி இல்லை என்று
சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற
தம்பதி ஒரு வீட்டில்....

குதூகலம் கும்மாளம்
ஒரு வீட்டில், 
குடிகாரன் தொந்தரவு
மற்றொரு வீட்டில்...

ஒவ்வொரு வீட்டிலும்
இத்தனை வில்லங்கத்தை
வைத்துக்கொண்டு --
ஒன்றுமே நடக்காத மாதிரி
நாசுக்காய் நீண்டு
கிடக்கிறது வீதி...!!  

பலூன்காரனும் குழந்தைகளும்....


விற்பதற்கு முன்னர்
வெடிக்காமலிருக்க 
வேண்டும்!....
விற்றபின் வெடிக்குமானால்
பிரச்னையில்லை...
அடுத்த பலூனுக்கு
உடனடி ஆர்டர் கிடைக்கும்...!!

அவன் தாத்தா பலூன் 
விற்ற காலங்களில்
ஊதி ஊதியே 
சாகவேண்டியாயிற்று...
--அவன் அப்பன்
சோம்பேறி .. 
ஆள் போட்டு 
ஊதவைத்துக்கொண்டிருந்தான்..

நவீன காலம்
அவனை ஊதுவதை 
சுலபமாக்கியிருந்தது..
சைக்கிள் பம்பும்
இன்னபிற காற்றுநிரப்பும்
உபகரணங்களும் 
சந்தையில் சல்லிசாகக் 
கிடைக்கப் பெற்றன...

எல்லா குழந்தைகளும்
அவனது பலூனுக்காக 
அழுதுகொண்டிருக்கையில்
அவனுக்கேனோ 
இன்னும் குழந்தைப்
பேறில்லை...

அவன் மனைவி
அடிக்கடி தூக்கத்தில்
உளறு வாளாம்..
"அந்த மஞ்ச பலூன்
யாரு கேட்டாலும் 
கொடுத்துடாதீங்க.. நம்ம
பாப்பாவுக்கு வேணும்"
அடுத்த ஒரு நாளில்
அதே மாதிரி 
சிகப்பு பலூனுக்கு...

-இதனை எங்களிடம்
சொல்லிக்கொண்டு 
சிரிப்பான்...
அவனது உள் அழுகையை
நான் அறிவேன்..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...