Tuesday, March 30, 2010

dirty ego..

என் அகந்தை
என்  ரசனை சம்பந்தப்படாதது..
அது  அநியாயமான
வார்த்தைகள்  கொண்டது...
கவிதையாக  பெயர்க்க
யோக்யதை அற்றது..
மிகவும்  அநாகரீகமானது
என்  அகந்தை...
காலில் பீ அப்பியது போல.., 
உண்ணும்  சோற்றில் யாரோ
எச்சில் உமிழ்ந்தது போல..!!

மிகவும்  வீரியமாய் 
புடைத்து வருகிற பலவீனம் அது..
என் இயல்பேயான எளிமைகளையும்
மென்மைகளையும்                     
ஷணத்தில் துவம்சம் செய்து விடுகிற
சூறைக்காற்று..
மேற்கொண்டு என் இயல்புகளை
வெளிக் கொணர்ந்தாலும் 
சந்தேகிக்க வைப்பது ..


இனி முடிவு செய்து விட்டேன்..
என் அகந்தைக்கு முடிவு 
கட்ட வேண்டும் என்று..
ஆனால் இது எத்தனையாவது
தடவை என்பது தான் தெரியவில்லை..

சுந்தரவடிவேலு..




 

Sunday, March 28, 2010

nyaanangalum icchaigalum.. [FOUR-4]

எதை போகஸ் பண்ணினா சர்குலேஷன் ஜாஸ்தி ஆகும்னு நம்ம தமிழ் பத்திரிகைகளுக்கா தெரியாது..? இப்போதைக்கு நம்ம நித்யானந்தா இருக்கற போது வேற பிரச்சினை எல்லாமே ஜுஜுபி தான்.. ஆ ஊ நா பெட்டிக்கடைகளில் நோட்டீசா தொங்கறது நம்ம நித்தி தான்...

சொல்லப்போனா நக்கீரன் ஜூ வி குமுதம் ரிப்போர்டர் எல்லாமே நித்யாவுக்கு ராயல்டி தொகையே தந்தாகணும்... அவரும் தான் அதுக்கு தகுந்தாற்போல வெடுக்குனு உண்மையை ஒத்துக்கறாரானா அதுவும் இல்லை.. பாலியல் ஆராய்ச்சின்னு ஒரு டுபாக்கூரு நியாயம் அளக்கறாரு... அப்புறம் கட்டாயம் நேர்ல வந்து விளக்கம் அளிப்பாராமா... கிளிண்டனுக்காவது ஒரு ஜோடி ஷூ மாத்திரம் போய் விழுந்துச்சு.. இந்த அன்னாருக்கு பிஞ்ச செருப்புகளே போய் போய் விழும்...
என்னை கேட்டா மெடிக்கல் கான்பரன்ஸ் மாதிரி ஒரு ஓரமா அங்கன இருந்து ஒளிஞ்சுக்குனு பேசினா மச்சான் கொஞ்சம் அடி ஒதைல இருந்து தப்பிப்பார்னு தோணுது.. இந்த டெக்னிக் எல்லாம் நித்யாவுக்கு அத்துபடி.. நாம சொல்லியா தரணும்?

ஆமாய்யா .. பண்ணிட்டேன்.. மேற்கொண்டு இப்பிடி ஆகாம பார்த்துக்கறேன்... மன்னிக்க இஷ்டம் இருந்தா மன்னிச்சுடுங்க, இல்லையா .. என்னை ஆன்மீகத்திலிருந்து தள்ளி வச்சிடுங்க.. ஒரு ஓரமா நான் பாட்டுக்கு இருந்திட்டுப்போறேன்.. " என்று சொல்லித்தொலைந்திருந்தால் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கும்... நாயை உட்டுத்தொலைங்கடா என்றாவது மக்கள் ஒதுங்கி இருப்பார்கள்... இப்படி எதுவும் அற்று மறுபடி அதையும் இதையும் பேசி சொதப்பி, இப்ப ஆளாளுக்கு டின்னு கட்ட ரெடியா நிக்கிறாங்க.. எப்பிடி சமாளிப்பியோ நித்யா..
சொல்ல முடியாது.. மறுபடி நீ மக்களை வசியம் பண்ணி அல்வா தந்தாலும் தந்திடுவே.. .. எத்தனை அடிபட்டாலும் இன்னும் நம்ம மக்கள் புதுசு புதுசா பைனான்சு கம்பெனில காசை உட்டுக்கினு அதுக்கான சர்டிபிக்கட்டை வேற டிவி பேட்டியில சிரிச்சுக்கினே காட்டராணுக.. அதே மாதிரி உன் கிட்டயும் மறுபடி வந்து உய்ந்தாலும் சொல்றதுக்கு இல்லே..சும்மா நீ இல்லாத போது உன்னை செப்பல்ல அடிக்கனும்னு குதிப்பான்களே தவிர , நீ எதனாச்சும் ஒரு புது புருடா உட்டீனா உன் பாதத்தையே கழுவிக்கூட குடிப்பாங்க..

சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Thursday, March 25, 2010

அபத்தங்கள் குறித்த பட்டியல்..

கடனை வாங்கும்
போதுள்ள பவ்யம்
மேற்கொண்டு
இருப்பதில்லை
வாங்கியவர்களுக்கு..
கொடுத்தவன்
திரும்பப்பெறுவதற்கு
மேற்கொள்ளப்பட
வேண்டியதாகி விடுகிறது
பவ்யம்...

இருப்பதைப்பிடுங்கும்
ஆற்றல் நம்மை
சுற்றிலும் ஊடுருவிக்
கிடக்கிறது..,
கொடுக்கிற நம்
ஆற்றலைக்கூட
கொச்சைப்படுத்துகிற
பிச்சைக்காரர்கள்...
வழக்கத்துக்கு மாறாக
ரெண்டொரு நாட்கள்
சில்லறை இல்லை
என்று சொல்வதையே
அவநம்பிக்கை பிதுங்கப்
பார்ப்பர்...
சுற்றி இருப்பவர்களினிடத்து
நம்மைக் கேவலப்படுத்துவது
போல செய்வதில் அவர்களுக்கு
ஓர் அலாதி ஆனந்தம்...

இறைஞ்சுதல் என்பதே
ஈனத்தனம்...
கடவுளினிடத்து பக்தன்
இறைஞ்சுவது , கோவிலுக்கு
வெளியே இறைஞ்சுகிற
பிச்சைக்காரனை விட
ஓர் கேவலமான ,
தன்மானம் இழந்த செயல்
என்பேன் நான்...

இருக்கிற நிலைப்பாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதே
நாகரீகம்...
நல்லது மாத்திரமே
நடக்க வேண்டும் என்று
கெஞ்சுவதும்,
நடக்காமற்போயின்
இறைவனைத்தூற்றுவதும்
மகா அநாகரீகம்..!!

சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

Tuesday, March 23, 2010

ஞானங்களும் இச்சைகளும்..{3}

ஏதோ மக்கள் தியானம் யோகா என்று சற்று தங்கள் உடல் நிலைகளையும் மனநிலைகளையும் சரி வர பராமரித்து வந்தனர்... அதற்கெல்லாம் ஆப்பு வைத்தது போல நம்ம நித்யா அந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களையே சந்தேகப்படும் படி செய்து விட்டார்...
ஞானி பொய்யனாகலம் .. ஞானம் பொய்மை ஆகாது..!

நித்யாவின் இயக்கத்தில் இருந்து வந்த பல லட்ச பக்தர்களுக்கு தாங்கொணா தர்மசங்கடங்களை விளைவித்த பெருமை நித்யாவையே சாரும்..

இனி மற்ற ஞானப்போர்வையில் அக்குரும்புகள் செய்து வந்த ஆசாமிகள் எல்லாம் ஜரூரான ஜர்ரூரில் உஷாராகி, தங்களுக்கு சிசுருஷைகள் செய்து வந்த பணிப்பெண்களை அப்புறப்படுத்தி விட்டு வயோதிகர்களை நியமிக்கிற அவசரத்தில் இறங்கியிருப்பார்கள் என்று அனுமானிக்கிறேன்...

அவர்களெல்லாம் நினைப்பார்கள் : நித்யாவாவது ஒரே ரஞ்சிதாவோடு தான் சிக்கினார்.., நமக்கு எவனாவது காமெரா வச்சிருந்தானுகன்னா ? அடங்கோப்பா சாமி.. தப்பிச்ச்சமடா.. இனி மேற்கொண்டாவது காவி வேட்டி காவி சட்டையை கழட்டாமப்பார்த்துக்கணும்... கக்கூசுக்குள்ள போனாக்கூட ஜெட்டி கழற்றப்ப காமெரா இருக்கானு பார்த்துக்கணும்...
படுபாவிப்பசங்களா இருக்கானுக .. அதவிடக்கொடுமயடா சாமி இந்தக்காலத்து டெக்நாலாஜி...

இனி நித்யா பக்தர்கள் எல்லாம் மாற்று சாமியார்களை தேடிப்போகிற சூழல் உருவாகி விட்டது.. அல்லது இந்தக்கருமாந்திரம் இதோட போகட்டும், இனி நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு கெடக்கலாம்... இன்னொரு பக்கம் போயி அந்த சாமியாரு வேற டைப்ல வேட்டு வச்சார்னா தாங்கவே முடியாது, இந்த தொந்தரவுக்கு நாமலே கூட சாமியாரா ஆகித்தொலஞ்சிடலாம், லேடீஸ் ஒன்லி பஸ் போல ஜென்ட்ஸ் ஒன்லி சாமியார் ஆகிட்டா கொஞ்சம் safe என்றாலும் இந்த ஹோமோசெக்ஸ் பிரச்சினை வேறு இருக்கிறது.. .

கோ எட் மாதிரி நடத்துனம்னா அதுக ஜோடி ஜோடியா அட்டூழியம் பண்ணிட்டு நம்மள போட்டுக்கொடுத்துரும்கள்...

ரிஸ்க் இல்லாம எந்த பிசினஸ்மே இல்லை தான்... அல்வா கடை ஆகட்டும் ஆன்மிகம் ஆகட்டும்...

சமாளிச்சுத்தான் பார்ப்போமே... அப்புறம் கடைசியா வேணும்னா மாட்டிக்கிலாம்.., அதுக்குள்ள நாலு சங்கதிகளைப் பண்ணிக்கிலாமில்ல...!!

சுந்தரவடிவேலு...


Saturday, March 20, 2010

ஞானங்களும் இச்சைகளும் {இரண்டு}

நித்யானந்தா பற்றி ஓர் நபர் சொல்கிறார் : நித்யா செஞ்சது என்னவோ பெரிய குற்றம் போலவும், மனித குலமே செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டது போலவும், எல்லாரும் லபோ லபோ என்று அடித்துக்கொள்வதை பார்க்கையில் மிகவும் அபத்தமாக இருக்கிறது... நான் ஒன்றும் அவருடைய சீடன் இல்லை, அவரது யோகாக்களையும் பின்பற்றுபவன் இல்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு ஞானி{?} இருப்பதே எனக்குத்தெரியும்...
ஆனாலும் நம்ம மக்கள் ரொம்பத்தான் இது குறித்து தாளித்து விட்டார்கள்.. நக்கீரனும் ஜூவி யும் செம சேல்ஸ்..

நான் சொல்கிறேன்: அவர் படுக்கட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஓர் புது காதலியுடன் , நியாயமான காதலுடன்.. அதனை விடுத்து ஓர் நடிகை மீது இந்த ஞானிக்கு என்னய்யா மோகம்?.. பலருடன் தன்னை பகிர்ந்து கொண்ட ஓர் பெண் இவள் என்று தெரிந்த பிறகு கூட அவளோடு என்னய்யா சல்லாபம்?.. எச்சிலை சுவைக்கிற சராசரி நபர் தான் இந்த நித்யானதா என்பது புரிகிறது.. ஓர் ஞானப்போர்வையில் இருந்து கொண்டு இப்படி உள்ளே முடை நாற்றத்துடன் இருந்து வந்தது கண்டனத்திற்குரியது... ஏதோ ஒரு காமெரா வைத்ததால் இந்த சின்ன நாற்றம் தெரிந்திருக்கிறது ... காமெரா வைக்காத முந்தைய இரவுகளில், எந்தெந்த நடிகைகளோ... எந்தெந்த வேசிகளோ....

பாலியல் குறித்த ஆராய்ச்சி... காமமும் ஒரு வகையான யோகா என்றெல்லாம் பிதற்றுவது கேனத்தனமாக உள்ளது...

இன்னும் சிலர் சொல்கிறார்கள் : அவருடைய ஞான முறைகளை மாத்திரம் அனுசரிக்கச்சொல்லி... அவருடைய அந்தரங்கம் அவர் சம்பந்தப்பட்டது...
-- இப்படி சொன்னால் உடனே ஓகே என்று ஓடியா விட முடியும் நித்யா பின்னாடி?
என்னவோ ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

இனி என்ன சொல்லியும் நித்யா பருப்பு வேகப்போவதில்லை.. அம்புட்டுத்தான்... பணத்தையும் சொத்தையும் வேண்டுமானால் இன்னும் அவர் சம்பாதிக்க முடியும்.. ஆனால் இனி பழைய புகழோ பெயரோ கனவிலும் பலிக்காது...

கொடுமை என்னவென்றால் , இனி செக்ஸ் படம் எடுக்கிற மலையாளத்தான்கள் , நித்யானந்த சாமியாரின் உண்மைக்கதை என்று விளம்பரம் செய்து ஷகிலாவையும் கும்தாஜயும் பாடாய் படுத்துவார்கள்... கடுமையான கண்டனம் தெரிவித்த நாம் எல்லாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு காலைக்காட்சிக்கு queue கட்டி நிற்போம்...
கியூவில் நம்ம நித்தியாவேகூட மப்டியில் நிற்பார் என்றாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை..

பார்ப்போம்.. முடிந்தால் போகப்போக இன்னும் ஏதாவது ஓதுவோம்...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

இளையராஜா ரஹ்மான்...

இளையராஜா இருக்கிற வரை பாடல்களும் இசையும் தெளிவையும் பொலிவையும் கொண்டிருந்தன... இன்றைக்கு எல்லாமே டுபாக்கூராக உள்ளன.. விஸ்வநாதன் காலத்தில் tms . சுசீலா போலவும், இளையராஜா காலத்தில் spb . ஜானகி போலவும் இன்று ஒரு உருப்படியான பாடகர் இல்லை, பாடகி இல்லை.. அல்லது இருந்தும் கூட அவர்கள் போல தெளிவான அடையாளத்தோடு இல்லை... ஓர் மிக பிரம்மாணடமான குழப்பத்தை வெளிப்படுத்தி அதிலே சுலபத்தில் வெற்றியும் பெற்ற இசை அமைப்பாளர் ar . ரஹ்மான் என்றே சொல்வேன்.. slumdogmillionaire எண்பது சதவிகிதம் பேர்கள் இன்னும் பார்ததாகத்தெரியவில்லை.. ஆனால் அதிலே பங்காற்றிய ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிராமி என்று குவிகின்றன... இளையராஜாவின் திறமையில் 25 சதவிகிதம் ரஹ்மானுக்கு இருந்தால் அதிகம்... ஆனால் கண்டிப்பாக சொல்வேன்.. ரஹ்மானின் பத்து சதவிகித அதிர்ஷ்டம் கூட இளையராஜாவுக்கு இல்லை...
சுந்தரவடிவேலு.. திருப்பூர்...

Friday, March 19, 2010

ஞானங்களும் இச்சைகளும்...

நான் காலையில் நடைபயிற்சிக்காக என் ஊரின் ஒரு பள்ளி மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. பல வகையறாக்களில் அங்கே மனித குழாம்கள் ஒன்று கூடி நான்கைந்து பேர்களாகவும் ஏழு எட்டுப்பேர்களாகவும் சாரை சாரையாக எதையேனும் அரற்றியபடி அளவளாவிக்கொண்டே நடந்து கொண்டிருப்பார்கள்.. நடை பயிற்சியை காட்டிலும் அந்த உரையாடலும் அதன் கார சாரங்களுமே முக்கியம் போல மிகவும் சுவாரஸ்யமாக பேசிய வண்ணம் "ஏதோ" நடப்பார்கள்.. நான் எல்லா குழாம்களோடும் அவ்வபோது சேர்ந்த வண்ணம் நடப்பேன்.. கரண்ட் இஷ்யு என்னவோ அதனை அலசுவதில் கில்லாடிகள் மனிதர்கள்.. ஒரு ஜூனியர் விகடனோ நக்கீரனோ ஏற்படுத்தாத ஒரு வசீகரத்தை அவர்களின் விவாதம் ஏற்படுத்தி விடும்... பேச்சு சுதந்திரங்களும் கருத்து சுதந்திரங்களும் காற்றிலே மிதந்து என் காதுகளுக்கு விருந்தளிக்கும்.. என் கருத்தை ஒத்து எவரேனும் பேசும் பட்சத்தில் நானும் அதற்கு உடன்பாடாக என் பங்களிப்பிருக்குமே தவிர என் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் த்வநிக்கிற நபர்களிடம் நான் அளவு மீறாமல் பார்த்துக்கொள்வேன்..

இந்த ஒரு வார காலமாக சுவாமி நித்யானந்தா புராணம் ஓயாத அலையாக எங்கு பார்த்தாலும் பாய்ந்த வண்ணம் உள்ளது...
நானும் எனது பங்கிற்கு எதையேனும் சொல்ல முயல்கிறேன்..

தொடரும்...

Tuesday, March 16, 2010

விழித்தவாறு கனவுகள்...

என் பிம்பத்தைப்
பிரதிபலிக்க மறுக்கிற
கண்ணாடி...
என் நிழல்களைப்
புறக்கணிக்கிற
வெளிச்சங்கள்...
-நான் சுவாசிக்க
மட்டும் காசு கேட்கிற
வெட்டவெளி...
நான் நீந்துவதை
நிறுத்தச்சொல்கிற
நீர்நிலைகள்...

இப்படி அவஸ்தையான
கனவுகள்...,
துணுக்குற்று விழித்தாலோ
மின்சாரம் தொலைந்து
மின்விசிறி நின்றிருக்கிறது..!
வியர்த்து நனைந்த
அவஸ்தையினூடே
மறுபடி உறங்க பிரயத்தனிக்கிறேன்...!!

அடுத்து வந்த கனவில்
கவர்ச்சி நடிகையை கற்பழிக்க
ஓடுகிறேன்...
ஓட்டத்தினூடே
முன்போல மீண்டும் இந்த முறை
துணுக்குற்று விழித்துவிடக் கூடாதே
என்று மிகவும் பயக்கிறேன்...!!!

சுந்தரவடிவேலு..

Thursday, March 11, 2010

விண்ணை தாண்டி வருவாயா? விமரிசன முயற்சி..

என் இளம்ப்ராயங்களில் என்னை நான் ஒரு சினிமா பிரியன் என்று சொல்வதைக்காட்டிலும் சினிமா வெறியன் என்று சொன்னால் தான் பொருந்தும் அளவுக்கு கண்ட படங்களையும் கண்டபடிக்குப்பார்த்து பொழுதுகள் ஒட்டித்தீர்த்திருக்கிறேன்.... ஆனால் இன்றைய சூழ்நிலைகளும் மனநிலைகளும் அவ்வித போக்குகளுக்கு அறவே முழுக்குப்போட வைத்து விட்டன.. அன்றைக்காவது படிக்கவேண்டியது இருந்தும் கூட அதனைத்தவிர்த்து படங்கள் பார்த்து வந்தேன்.. இன்று அந்த வேலையும் இல்லை, ஆனால் ஏனோ படம் பார்க்கிற மனோபாவம் முற்றிலும் பஸ்பமாகிவிட்ட முரண்பாடு எனக்கே ஓர் இனம் புரியாத தன்மையை எனக்குள் ஊடுருவச்செய்திருக்கிறது...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன்.. இதற்கு முன்னர் அயன் பார்த்ததாக ஞாபகம்.. அதற்கும் முன்னர் தசாவதாரம் பார்த்தேன் என்று நினைக்கிறேன்...

இன்னதென்று கதையை சொன்னால், சப்பை மேட்டராகத்தான் தெரியும்.. கீழே வீட்டில் இருக்கிற சிம்பு , மேல் வீட்டில் இருக்கிற த்ரிஷாவை லவ் செய்கிறார்.. புறக்கணிப்பது போல ஆரம்பித்து , பிற்பாடு சிம்புவின் காதலை த்ரிஷா ஏற்றுக்கொள்கிறார்.. பெண் வீட்டார் கிறிஸ்டியன்.. சிம்பு ஹிந்து... வழக்கமான கிறிஸ்துவர்களுக்கே உரிய எதிர்ப்பு.. விடாபிடியாக துரத்திக் காதலிக்கிற தமிழ்பட கதாநாயகன் .. காதல் எதுவும் வேண்டாம், நட்பு போதும் என்று நாயகி அபிப்ராயம் சொல்ல நாயகனும் அதனை ஏற்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் நாயகனுக்கு நாயகி தன உதடுகளை கடிக்க சொல்லி அனுமதி அளிப்பது .. நட்பு காதலாவது, காதல் காமத்தை நெருங்குவது...

இப்படியான ஓர் வழக்கமான தமிழ் டுபாக்கூர் கதையை .. கவுதம், எ. ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் பரமஹம்சா.. மற்றும் பலர் சேர்ந்து படத்தை அற்புதமான கவிதையாக்கி தவழ விட்டிருக்கிறார்கள் என்றால் தகும்...
அழுத்தமான வசனங்கள், காட்சிகளுக்கு புது மெருகேற்றுகிற பின்னணி இசை.... சொக்க வைக்கிற சில பாடல்கள்..

பொதுவாக நான் சிம்பு படங்களை பார்த்ததில்லை, டிவியில் ஒளிபரப்பாகிற பாடல்களை மாத்திரம் பார்த்து கண்டபடிக்கு திட்டித்தீர்ப்பேன்.. இவனெல்லாம் ஒரு நடிகன், இவனுக்கு ஒரு பாட்டு... ராஜேந்தரை விட பய்யன் லூசான் என்றெல்லாம் ஓர் ஆணித்தரமான அனுமானங்களை சிம்பு குறித்து வைத்திருந்தேன்...
--ஆனால் அவை அனைத்தையும் பொடி தவிடாக்கி விட்டான் சிம்புப்பயல் என்று தான் சொல்ல வேண்டும் இந்தப்படத்தில்... இவ்வளவு முதிர்ந்த இலக்கிய ரீதியான உணர்வுகளை மிக சுலபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிற அவரின் திறன் பாராட்டத்தக்கது.. ஆனால் என்ன, இந்த தன்மையை தொடர நமது இயக்குனர்கள் விட மாட்டார்கள், மறுபடி அதே குத்துப்பாட்டு ஆட வைத்து பையனை வீண் செய்து விடுவார்கள்..,
சிம்புவை பாராட்டினால் எவ்வளவு தகுமோ அதே அளவு தகும் த்ரிஷாவை பாராட்டினாலும்... மிக நேர்த்தியான சூழ்நிலைகளுக்கு ஏற்ற பாவனைகளை பிரதிபலித்து அசத்தி இருக்கிறார் த்ரிஷா..

முடிவு சற்றே குழப்பினாலும், கொஞ்சம் பொறுமை காத்து கவனிப்போமேயானால் , அங்கு இழையோடுகிற ஓர் சோகமும் அதிர்ச்சியும் ரொம்பவே நம்மை திக்கு முக்காட செய்து விடும் என்பதில் ஐயம் எதுவுமில்லை...!!

--சுந்தரவடிவேலு...

வெளிச்சம் வெறுப்பவன்...

இருள் எனக்குள் விளைவித்த விந்தைகள் வெளிச்சங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் தன்மை... இருள் என்பது சுயம்பு.. அதன் அடர்த்தியையும் அதன் பிரம்மாண்டத்தையும் , எந்த வெளிச்சத்தினாலும் அடக்கவோ நிரப்பவோ சாத்யமில்லை..
எல்லைகளற்று பரவி என்றும் ஓர் நிதர்சனமாய் சத்தியமாய் எங்கெங்கிலும் பரவி வியாபித்துக்கிடக்கிறது இருள்... வெளிச்சங்கள் இயற்கையின் பிரயத்தனங்களிலும் மனிதர்களின் செயற்கை பிரயத்தனங்களிலும் தற்காலிகமாக வந்து போகிற விருந்தாளியே யன்றி .. இருளைப்போன்று என்றென்றும் வீற்றிருப்பதில்லை..

கருமை படர்ந்த இந்த இருட்டு சாம்ராஜ்யத்தில் சூரியன் ஓர் சிறு பொறி... எத்தனை கோடி சூரியன்களையும் சுலபத்தில் கபளீகரம் செய்கிற வல்லன்மை இருட்டொன்றை தவிர வேறெந்த சக்திகளுக்கும் சாத்யமில்லை.

விழிகள் மூடி
நிற்கிறேன்...
இருளை தரிசிக்க.!!
சூரியனை விட
இருட்டுக்கூசுகிறது
எனக்கு..

வெளிச்ச்சத்திருடன்
திறக்கச்சொல்லி
தட்டுகிறான்
என் விழிக்கதவுகளை..
--கதவுகள் திறக்கிறேன்..
அற்ப அற்ப விஷயங்களை
அடையாளம் காண்பித்த
வண்ணம் இருந்தன வெளிச்சங்கள்..!!!


சுந்தரவடிவேலு..

Thursday, March 4, 2010

ஒ..நித்தியானந்தா... வாழ்க உமது ஆன்மீகத்தொண்டு...

அனேக சாமியார்களின் ரகசிய அறைகள் இப்படித்தான் இருக்கக்கூடும், ஆனால் அங்கெல்லாம் காமெராக்கள் பொருத்தப்படவில்லை..அவ்வளவே..
போதனைகளை மாத்திரம் அட்சரம் பிசகாமல் அள்ளி வழங்குகிறார்கள்.., பிற்பாடு உள்ளே போதைகளில் திளைக்கிறார்கள்...?

ஏதோ சின்ன வயசு.. நீங்க மட்டும் அவரு ஆசிரமத்துக்கு பொண்டாட்டி புள்ளைங்களோட பிக்னிக் மாதிரி போறீக, வாரீக.. அவரு சும்மா மைக்க புடிச்சுட்டு நாயம் அளந்துட்டு மட்டும் இருந்தா போதுமா? வேற எதையாவது புடிக்கனும்னு அவருக்கும் ஆசை வரக்கூடாதா என்ன!!

இன்னும் ஏதேதோ சொல்லத்தோணுது... ஆனா ஒன்னும் சரிவர பிடிபட மாட்டேன்குது... பார்ப்போம்.. மேற்கொண்டு ஏதாவது இதுபத்தி எழுத முடியுதான்னு ... அதுக்குள்ள வேற மேட்டர் வந்துருச்சுன்னா இதனோட சூடு போயிடும்... சரி சரி, நாம் என்ன பெரிசா சூடா சொல்லிக்கிழிச்சிடுறோம்... அவன் அவன் சூடா செஞ்சே கிழிக்கிற போது...

Monday, March 1, 2010

அந்தரத்தில் சுவடு தேடுபவர்கள்..

சில விஷயங்கள் மனசுள் அனாவசியமான ஓர் படிமானம் அடைந்து விடுகிறது..
என் மோட்டார் பைக்கின் எண்கள் ஓர் நீங்கா படிமானம்.. வங்கியின் அக்கவுண்ட் நம்பர்., எ.டி.எம் நம்பர், பான்கார்ட் , காஸ் கனெக்ஷன் ... இப்படி பட்டியல்கள் நீளும் ஒவ்வொருவருக்கும்...
ஆனபோதிலும் பைக்கின் நம்பர் ஓர் மந்திரம் போல மனசுள் பதிந்து விடுகிறது.. நம் பைக்கின் எண்கள் கொண்ட பிற வாகனங்களை என்றேனும் அசந்தர்ப்பமாக பார்க்க நேர்கையில் ஓர் மௌனமான மனசிலிர்ப்பு.. அந்த அதே எண்கள் கொண்ட வாகனம் ஓட்டுகிற நபரிடம் ஓடிச்சென்று எனது நம்பரும் இதே என்று சொல்லி விட வேண்டும் போன்ற கற்பனை அவசரம்.. ஆனால் அப்படி கேனத்தனமாக செய்ததில்லை...
யந்திரத்தன்மையுடன் நகர்கிற இந்த வாழ்க்கையில் அவ்வப்போது இம்மாதிரியான அல்ப சந்தோஷங்களை அனுபவிக்கிற ரசனைகள் எத்தனை பேரிடம் உள்ளது என்பது ஓர் கேள்விக்குறி தான்... இரவு வானத்தில் நிலவைக்கூட என்றோ ஒரு நாள் அதிசயமாக பார்த்து, என்னவோ நிலாவையே இவுரு தான் கண்டுபிடித்த மாதிரி கவிதையெல்லாம் வேற எய்துவாக.... அமாவாசை அன்றைக்கு எங்கடா நெலாவக் காணோம்னு வேற பொலம்பி சாகடிப்பாக...

காசு பணம் ஒன்றே குறிக்கோளாக உள்ள எவ்வளவோ பேர்கள், தன வீட்டுக் குழந்தையின் புன்னகையைக்கூட தரிசிக்கப்பிடிக்காத சாபத்தில் உழல்வர்...

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...