Sunday, March 27, 2011

பொய்யான உண்மைகள்..

அநியாய பிரார்த்தனைகள்
எல்லாம் நிறைவேறவில்லை
என்பதற்காக ஆண்டவனைக்
கோபித்துக்கொள்கிற 
சிறுபிள்ளைத்தனங்கள் ...

கர்பக்கிரஹ சுவாமி 
எவ்வளவு அலங்கரிக்கப்
பட்டிருந்தாலும் ,
எதிரில் நின்று கும்பிடுகிற
பெண்களில் லயிக்கிற
பிறவிச்ச்சபலம்... 

கோவிலை விட்டு
வெளியே வந்த பிறகு
கூட, சுவாமியிடம்
என்ன வேண்டினோம்            .
என்கிற ஞாபகமே 
அற்ற மமதை...

கோபுரக்கலசத்தைக்கூட
கண்டு கொள்ளாமல் 
கோவிலைக்கடந்து
போகிற நாஸ்திகன்
மிகவும் மேன்மையானவன்
நேர்மையானவன் ..!

--கோவிலுக்குள் சென்று
வெறுமனே திரும்பி 
வருகிறவனை 
ஒப்பிடுகையில்....!!                  

Sunday, March 20, 2011

அரசியல் பேசிப் பார்க்கிறேன்...

வைகோ முதற்கண் பிரபாகரன் குறித்த சிந்தனைகளை வீசி எறிந்து விட்டு ஓர் தனித்தன்மையுடன் செயல் பட்டால் தான் அவரை குறித்து ஓர் நல்ல அபிப்ராயம் வரும் எல்லாருக்கும், --அதாவது ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளிடமும் சரி, பொது ஜனங்களிடமும் சரி... இன்னும் விடுதலைப்புலிகளுக்கு உடந்தையான ஓர் தன்மையையே எப்போதும் பிரதிபலித்துக் காண்பித்துக் கொண்டிருப்பது சற்றும் ஆரோக்கியம் அற்ற ஓர் போக்கு...இந்தப்போக்கில் இருந்து வெளி வந்து மாறுபட்ட சுயம்பாக செயல்பட்டாலே ஒழிய ம தி மு கா வோ வைகோவோ எவராலும் பெருவாரியாக மதிக்கபபடுவதற்கான சந்தர்ப்பமே மிக மிக குறைவு... கேப்டன் பிரபாகரன் போல நடித்த விஜயகாந்த் கூட ஜெயலலிதாவால் மதிக்கப்படுகிறார்...ஆனால் உண்மையாக கேப்டன் பிரபாகரன் போல ஆவதற்கு துடிக்கிற வைகோ புறக்கணிக்கப்படுகிறார்... இது தான் யதார்த்தம்...   

v . சுந்தரவடிவேலு..

Sunday, March 13, 2011

கிழமை குறித்த அவஸ்தைகள்..

சனிக்கிழமையின் 
சாயங்காலம் தான்
ஞாயிற்றுக்கிழமை குறித்த
முழுமையான பிரக்ஞையுள்
மூழ்க வைப்பதாகக்
கருதுகிறேன்...
--பிற்பாடு வருகிற
ஞாயிற்றுக்கிழமை
மதியம் வரை மாத்திரமே
வீரியம் மிக்கதாக... 
சாயங்காலம் சொல்லொணா
பீதி நிரம்பியதாக 
மாறி விடுகிறது 
பெரியவர் சிறியவர்
அனைவருக்கும்...!!

மறுபடி வேலைக்கு
ஆயத்தமாக வேண்டிய
அவஸ்தை பெரியவர்களுக்கு...
பள்ளிக்கூட அவஸ்தை 
சிறார்களுக்கு....

ஆடுகிற கண்ணாமூச்சியில்
கூட ஓர் தொய்வு...
சுலபத்தில் தோற்றுவிடுகிற
விளையாட்டுக்கள்...
இதே பயமும் சோம்பலும்
முந்தைய நாளின் சாயங்காலம்
காணோம்....

நாம் வேறு  வேலைக்கு
செல்ல வேண்டும்.. இந்த
சனியன்களை வேறு ஸ்கூலுக்கு
துரிதப்படுத்த வேண்டும்...
என்னாங்கடா கொடுமை..?

அப்புறம் புதன், வியாழன் 
என்று வருகையில் 
பாதிக் கிணறு தாண்டிய
உணர்வு...
வெள்ளி வருகையில் 
ஓர் மொக்கை சந்தோஷம்...

--சும்மா கிடக்கிற
என் போன்ற அறிவுஜீவிகளுக்கே
நாட்கள் குறித்து 
இத்தனை பிரக்ஞை 
மேலோங்கிக்கிடக்கையில் 
சம்பந்தப் பட்டவர்களுக்கு
சொல்லவும் வேண்டுமா?....?...

.

Tuesday, March 8, 2011

எல்லா உயிரினங்களும்....

மாயை என்பதாக வாழ்க்கை புரிபடுகையில் , பற்றற்ற தன்மைகளை குறி வைக்கிறது மனது..., வாழ்க்கை மீது பற்று அபரிமிதம் ஆகிற பொழுது, மாயை என்பதே புரியாமல் போகிறது...
எல்லா தன்மைகளும், எல்லா நிகழ்வுகளும் ஓர் இழையில் எல்லாருக்கும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது ...
மரணங்களும் மயானங்களுமே பேராசைகளையும் அகம்பாவங்களையும் சற்றேனும், தாற்காலிகமாகவேனும் தணிக்கிற வல்லன்மை கொண்டவையாக உள்ளன...
மற்றபடி மறுபடி வீடு திரும்பி குளித்து விட்டு உள்ளே நுழைகையில், அதே மனவியாதிகள் சுலபத்தில் தொற்றிக் கொள்கின்றன...!!

சிலரைத்தான் "இந்த வாழ்க்கை மாயை" என்கிற கூற்று அபரிமிதமாகத் தாக்கி
புத்தராகவும் , ஞானியாகவும் மாற்றுகிறது...
-- பலரையும் இவ்வித சிந்தனைகள் கிஞ்சிற்று மட்டும் உட்புகுந்து விட்டு உடனடியாக வெளியேறி விடுகிறது...
எந்த லஜ்ஜைகளும் அற்று "ரெண்டு ரூபாய் கூட குறைக்க முடியாது"என்கிற விதத்தில் விவாதம் செய்து வியாபாரத்தில் களமிறங்க முடிகிறது...

ஆனால் அப்படி பேரங்களோடும் விதண்டாவாதங்களோடும் சச்ச்சரவுகளோடும் வாழ்கையில் தான் இந்த வாழ்க்கை உயிர்ப்போடும் உன்னதத்தோடும் புரிபடுகிறது... எல்லாம் மாயை என்று விலகி நிற்பது உயிருடன் புதையுண்டதாக ... அசுவாரஸ்யமாக ..... அநாவசியமானதாக.... இன்னபிற இம்சைகளாக --- உணர்ந்து விட ஏதுவாகிறது...??

மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித உயிர் மகத்தானதாக நாம் பிதற்றிக்கொள்கிறோம்... 
--எல்லா உயிரினங்களும் அதனதன் பாஷைகளில் இப்படித்தான் பிதற்றிக்கொள்ளும் என்று அனுமானிக்கிறேன்...

வி. சுந்தரவடிவேலு...             ..

Monday, March 7, 2011

வேறுபாடுகள்.....

அனிச்சையாக 
நிகழ்கிற சந்தோஷங்கள்
மிகவும் வீரியம்
குறைந்தவை...!..
--இலக்கு நிர்ணயித்தபடியும்
குறிக்கோளை அடைய
பிரயத்தனித்தவாறும்
பெறப்படுகிற சந்தோஷங்கள்
உழைப்பின்
இனிக்கிற  வியர்வையோடும்
ஆயுள் அடர்த்தியோடும்
உடன் இருப்பவை...

--அனிச்சை சந்தோஷங்கள்
காட்டாறாய் பிரலாபித்து
சற்று நேரத்திலேயே 
கானலாக மாறுபவை..,
--குறிக்கோள் வைத்து
நிகழ்கிற சந்தோஷங்களோ
கானல் போல தென்பட்டு
கடைசியில் கடலாகி
அடியாழம் சென்று 
முத்தெடுக்க வைக்கும்
சாதுர்யம் நிரம்பியவை..!!

..

Friday, March 4, 2011

அற்ப மனிதனின் டைரியில் இருந்து.

கோவிலுக்குள் 
நுழையும் பொழுதே
வெளியே நிறுத்தியிருக்கிற
மொபெட் குறித்தும்
அதனடியே 
விடப்பட்டுள்ள .
காலணிகள் குறித்துமான
சிந்தனைகள்...
--ஒற்றை லாக் 
மட்டும் போட்டிருக்கிறேன்..,
ரெண்டையும் போட்டிருக்கலாமோ?
--பிய்ந்து போகிற
தருவாயில் இருக்கிற
பழைய செருப்பை
போட்டு வந்திருக்கலாமோ...,
போன வாரம் தான்
வாங்கிய புது ஜோடியை
போட்டு வந்திருக்கிறேன்...


மறுபடி மெனக்கெட்டு
திரும்பிப்போய் 
மொபெடின் ரெண்டாவது
லாக்கை போட்டு வந்திருக்கலாம்..
அந்தப்புது ஜோடி செருப்பை
மொபெடின் சைடுகவரில்
செருகி விட்டு வந்திருக்கலாம் ..

இந்த சிந்தனை 
ஓட்டங்களின் நடுவே 
சுவாமியின் முகம் 
ஜ்வலிக்கிற தீபாராதணை...

--புது செருப்பும் 
மொபெடும் அப்படியே 
இருக்க வேண்டும் என்கிற
பிரார்த்தனையே 
பிரதானமாகி  விட்டபடியால்
சில நாட்கள்
முன்னர் ஓடிப்போன 
மனைவி திரும்ப சீக்கிரம்
வர வேண்டும்
என்கிற பிரார்த்தனை
விட்டுப்போயிற்று...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...