Sunday, August 28, 2011

முத்தபுராணம்..



குழந்தைக்கான
முத்த ரசாயனமும்
மனைவிக்கான 
முத்த ரசாயனமும்
வெவ்வேறு வகை...
--அவை
வார்த்தைகளில் 
பிடிபடாத
அமிலங்கள்...

வேண்டுமானால்
பொத்தாம் பொதுவாக
இப்படி சொல்லலாம்..
குழந்தைக்கான
முத்தங்களில் உள்ளவை
பால் சேர்ந்த அமிலம்..
மனைவிக்கான
முத்தங்கள் கள் சேர்ந்தது
என்று...

இந்த உதாரணமே
என்னவோ ஓர் மென்மையான
மேன்மையான விஷயத்தை
கொச்சைப் படுத்திய
குற்ற உணர்வில் 
நெளியச் செய்கிறது...

"பச்சக்" என்று
வெறுமனே இதழ் 
கொண்டு பதிக்கிறோம்...
அது, நபர்கள்
மாறுபடுவதற்கு ஏற்ப
உணர்வு நிலைகளையும் 
மாறச்செய்கிறது...

காதல், காமம், பாசம்,
இந்த மூன்று தன்மைகளைத்
தாண்டி வேறு எந்த
உணர்வுகளுக்கும் 
இடமளிப்பதில்லை முத்தங்கள்...

வைப்பவருக்கு 
ஓரின்பம் என்றால்
வாங்குகிறவருக்கு நூறின்பம்....

தாமதிக்கப்படாமல்
பகிர்ந்தளிக்கப்படும் பண்டமாற்று
முத்தங்கள்...

திரும்பக்கிடைக்குமென்கிற
உத்தரவாதம் இல்லை என்றாலுமே
கூட, கொடுப்பதில் மட்டுமே
பேரின்பம் காண வைப்பவை முத்தங்கள்...

கொடுத்ததைக் காட்டிலும்
பன்மடங்கு திரும்பக்கிடைக்கிற
வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு...

சொல்லப்போனால் 
முத்தமென்கிற செயல்
ஒன்றுமேயில்லை தான்...

ஆனால் அத்தனை மாயைகளையும்
தாண்டி ஓர் பரமானந்தம்
அங்கே இடம் பெறுவது ஆச்சர்யம் தான்...  




அன்னா ஹசாரே

பிஜ்ஜா, பர்கர், சில்லி சிக்கன் சில்லி மஷ்ரூம் , போன்லஸ் பிஷ், சுக்கா ரொட்டி, கொத்து பரோட்டா, எக் நூடுல்ஸ், மட்டன் கிராவி, பன்னீர் பட்டர் மசாலா, .. இதெல்லாம் செரிக்க பெப்சி கோக் , லெமன் சோடா, இதையும் தாண்டி, உவாக் என்று வாந்தி....
 இப்படி வெறி பிடித்து சாப்பிட்டு அலைகிற கூட்டத்திற்கு நடுவே, முக்கால் நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருகிற ஓர் மாமனிதர் அன்னா ஹசாரே... இரண்டு வாரங்களாக இந்த தேசத்தின் நலன் காக்க, லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கப் போராடி அன்னம் தண்ணி உண்ணாமல் போராட்டத்தை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார்... இது ஏழை எளிய மக்களின் வெற்றி... பணப்பேய் பிடித்து திரிகிற கூட்டம் இனியேனும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு... 
காந்தியை பார்த்ததில்லை என்கிற  அநேகம் பேர்களுடைய ஏக்கங்களைப் போக்கி இருக்கிறார் அன்னா... 
ஆனால் இன்று பல தந்திர அரசியல் வாதிகள் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்... இவரது அஹிம்சையையே இம்சை என்று திரித்துக் கூறுவதற்கும், இவரையே ஊழல் வாதி என்று வதந்தி பரப்புவதற்கும் , கபட நாடகம் ஆடுகிறார் என்று பொய்யுரை கூறுவதற்கும் ... இவரது போராட்டத்தால் பாதிப்புக்கு உள்ளான பல பண முதலைகள் தயார் நிலையில் இருக்கின்றன.. 
இந்த நவீன யுகத்தில் நல்லதை கெட்டதென சொல்லவும், கெட்டதை நல்லதென சொல்லவும் பல மீடியாக்கள் உள்ளன... காலமும் கடவுளும் தான் நல்லதை நல்லதாகவே காண்பிக்கிற வல்லன்மை உள்ளவர்கள்... பார்ப்போம்...

Friday, August 26, 2011

இனியெல்லாம் கலியோ கலி??

 நடக்க நடக்க வேட்டி சேலையை உருவிக்கொண்டால் கூட அவை குறித்த பிரக்ஞை சிறிதும் அற்று செல் போனில் பேசிக்கொண்டு போகிறார்கள் ஆண்களும் பெண்களும்...
  காதலும் கள்ளக்காதலும் இன்னபிற தகாத சகவாசங்களும் .. தேகம் மனம் எல்லாம் சுடசுட பொசுங்கி விடுமளவிற்கு விவாதங்கள் நொடி இடைவெளி கூட அற்று காரசாரமாக நடக்கின்றன..
பொண்டாட்டி இன்னாருடன் இவ்விதம் பேசுகிறாள் என்கிற சமாச்சாரம் புருஷனுக்குத் தெரிந்தால் அங்கே கொலை விழும் அளவிற்கு, 
அதே விதமாக... புருஷன் பேசுவது மனைவிக்கு தெரிய வருமானால்...

இப்படி செல்போன் என்பது வாழ்க்கையின் கள்ளச்சாவியாக அநேகம் பேருடைய பெட்டிகளைத் திறந்து கொண்டிருக்கின்றது...
செல்போனை பொருத்தமட்டில் --
பிரயோகப்படுத்துகிற சாரார்களைக் காட்டிலும் அதிக விழுக்காடுகள் துஷ்ப்ரயோகம் செய்பவர்கள் தான் அதிகம் என்று குருட்டுத்தனமாக அடித்து சொல்லலாம்... 

..
, செல்போன் பேசுவதால் மூளைக்கு பாதிப்பு, இதயத்துக்கு பாதிப்பு, ஆயுள் குறைவு என்கிற அறிவியல் ஆய்வுகள் யாவும் நக்கலான செய்தியாக உலா வருகின்றனவே யன்றி அவை குறித்து பயப்படுவதோ கவலைப்படுவதோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை ..

      ..கலி முற்றப்போவதான அனுமானங்கள் சில வருடங்கள் முன்னர் இருந்தது... அப்படி எல்லாம் எதுவும் ஆகாது, எல்லாம் வதந்தி, மூடத்தனம் என்கிற ஆணித்தரமான விவாதங்கள் நிகழ்ந்தன... அப்படி எல்லாம் எந்தக் கலியும் வரப்போவதில்லை என்கிற தீர்ப்பு தான் ஜெயித்ததும் கூட...

  ஆனால் இன்றைய நிலை?... எதிர்பார்த்த கலியைக் காட்டிலும் இங்கே எல்லாம் படுதீவிரம் அடைந்து .... 

 கலி முற்றி ரொம்ப நாள் ஆகி விட்டதாகவே தோன்றுகிறது... 
நம்ம தலை எழுத்தைப் பார்த்தீங்களா? இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து தொலைக்கனும்னு இருக்கு... 

 ..    .. இனி எல்லாம் கலியோ கலி தான்... கலி பாகம் ஒன்று, பாகம் ரெண்டு , பாகம் மூன்று என்கிற ரீதியில் நீளும் என்றே தோன்றுகிறது...


Wednesday, August 24, 2011

இனிய தோழிக்கு...

உனக்கான 
அலங்காரத்தைக் 
காட்டிலும் நீ 
அழகானவள்...
எனக்குப் போலவே
உனக்கும் 
அது தெரியும்...

இன்னும் சொல்வதானால்
உன் மெருகை
குறைபாடாகக்
காண்பிக்கிறது 
உன் அலங்காரம்..
--ஆனால்
ஊருக்கது புரியாது...
அது மயில்தோகையில்
பூக்களை செருகி
அழகு பார்க்க முயலும்..!!

இயல்பான அழகான
தோகையை மட்டுமே
ரசிக்கிற பாங்கான
ரசனை ஊரிடம் இல்லை..

எனது உனது
ரசனைகளை ஒத்தே
உந்தன் கணவன் 
ரசனையும் இருக்குமேயானால்
நாம் இருவரும்
மிக மகிழ்வோம்...
--அல்லவெனில்
நம் அடுத்து
சந்திக்கிற
ஓர் சந்தர்ப்பத்தில்
அவரைக் குறித்தும்
கேலி பேசி
சிரிப்போம் என்றே 
அனுமானிக்கிறேன்... 

Saturday, August 20, 2011

அசந்தர்ப்பக் கவிதைகள்...

எழுதுகிற
சந்தர்ப்பங்கள் 
வாய்க்காத போது
ஏதேதோ அர்த்தம்
நிரம்பிய சிந்தனைகள்
வழிந்தோடும்...                      
யாவற்றையும் மனதில்
நிறுத்தி மற்றொரு 
தருணத்தில்
எழுத்தில் கொணர்வதற்கு
முனைகையில் 
என்ன சிந்தித்தேன்
என்பதே மறந்து
புதியதாய் ஏதேனும் 
சிந்தித்துக்கிறுக்க வேண்டிய
நிர்ப்பந்தங்களுக்கு
தள்ளப்பட்டே எனது
அனேக கவிதைகள் 
பிறக்கின்றன...

செயற்கைக் கருவுறுதல்
மாதிரி... அல்லது
அவசரத்துக்குத் தத்தெடுத்த
மாதிரி... 
இப்படியாக என் கவிதைக்
குழந்தைகளை நான் 
உணர நேர்வது சற்று 
சங்கடமே...
--ஆயினுமே
அவைகள் எனது
குழந்தைகள் தாமே... 

நான் மறந்து விட்ட
மற்றும் என்னை 
மறக்கடிக்க செய்த
அந்தப் போக்கிரி
சிந்தனைகளைக்காட்டிலும்
என்னையும் ஓர் 
கவிதை கோதாவில்
நிறுத்தி கவிஞன் அந்தஸ்த்தை
பெற்றுத்தர முனைகிற
உடனடி சிந்தனைகளை
உடனடி கவிதைகளை
என் மானத்தைக் 
காப்பாற்றிய குழந்தைகளாக
உணர்கிறேன்...

இந்தக் குழந்தைகள்
கூட என்றோ என்
மறக்கப்பட்ட சிந்தனைகளாக
இருக்கக் கூடும்.., 
இன்றைய மறந்து
விட்ட சிந்தனைகளுமே கூட
இன்னுமொரு தருவாயில்
இதே மாதிரி 
என் மானத்தைக்
கப்பலேற்றாமல் 
காப்பாற்றுமென்றே கருதுகிறேன்.. 

Tuesday, August 16, 2011

தெய்வத் திருமகள் படம் superb..

தெய்வத் திருமகள் படம் பார்த்தேன்... அற்புதம் என்று ஒரு வார்த்தையில் அவசரப்பட்டு சொல்லத் தோன்றுகிறது... ஆனபோதிலும், என்னால் இயன்ற அளவிற்கு அந்த அற்புதங்கள் என்ன என்று சற்று விலாவாரியாக விவரிக்கத்தோன்றுகிறது.. 
ஏற்கனவே இந்தப் படம் குறித்து பல வார மாத தின இதழ்கள் விமரிசனம் செய்திருக்கலாம்.., நீங்களும் அவைகளைப் படித்திருக்கலாம்... 
எனது விமரிசனம் அவைகளை விட தெளிவாயிருக்கும் என்று சொல்வதற்கில்லை.. இதையும் தான் படித்து விடுங்களேன்...

விக்ரம் நடிப்பு சொல்லி மாளாது... துவக்கம் முதல் நிறைவு வரைக்கும் அதே அப்பாவித்தனமான மனோபாவங்களை முகத்தில் பிரதிபலிக்க செய்து பிரம்மிக்க வைக்கிறார்.... வக்கீலாக வரும் அனுஷ்காவின் நடிப்பு கூட சொல்லும் படியாக யதார்த்தமாக உள்ளது.. உதவியாளராக வரும் சந்தானமும் நன்றாக செய்துள்ளார்.. அந்த ஆரம்ப கட்ட நகைச்சுவை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.. படம் போட்டு பத்து நிமிஷம் கழித்து வருபவர்கள் உள்ளே சிரித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும், மற்றும் அந்த நகைச்சுவைக்குள் ஒன்ற முடியாமல் திணற வேண்டும்.. ஆகவே, படம் துவங்கும் முன்னரே உள்ளே இருப்பது உத்தமம்..

அந்தக் குழந்தை எக்ஸ்ட்ரீம்லி சூபர்ப்... என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன்.. என்ன ஒரு யதார்த்தம்.... கதைக்களமாகட்டும், பின்னணி இசை ஆகட்டும், ஒளிப்பதிவு , டைரக்ஷன் .. எல்லா அம்சங்களுமே அம்சம்... பல கட்டங்களில் கண்களில் நீர் கசியும்... ஆகவே கண்டிப்பாக ஒரு கைக்குட்டையை ரெடி யாக வைத்துக்கொள்க..

சலங்கை ஒலி, பூவே பூச்சூடவா போல என்னை மறுபடி மறுபடி பார்க்கத்தூண்டுகிற படமாக இது அமைந்துள்ளது... கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது அரங்கு சென்று பாருங்கள்.. பிற்பாடு சாவகாசமாக ஒரு நாள் DVD யில் அல்லது சன் டிவி யில் பார்க்கலாம்.. நன்றி..

Thursday, August 11, 2011

காதல் குறிப்புகள்..2

காதலில் பெரிய நிபுணன் போல காதல் குறிப்புகள் என்கிற தலைப்பில் பெரிய தொடர் எழுதிக் கிழிப்பவன் போல...நாலு வரி எழுதி விட்டு "தொடரும் " என்று நிறுத்தி இருக்கிறேன்... மறுபடி எப்படி அதனை தொடர்வது, எவ்விதம் தொடர்வது என்றே புரியவில்லை.... 
எழுதுவதென்பது பெருந்தவம் .. சும்மா தொடரும் என்று சொல்லி விட்டு ஒன்றையும் தொடராமல் இருப்பது அழகல்ல... 
ஆகவே, எனக்கு தெரிந்த காதல் சங்கதிகள் யாவற்றையும் இதோ .., திணிக்கப் பிரயத்தனித்து விட்டேன்.. 
எப்படித்தான் ஜெயகாந்தன், சுஜாதா .. இத்யாதி எழுத்தாளர்களும் எத்தனை தொடர்கதைகள் புனைந்துள்ளனர்... அவர்கள் போடாத "தொடரும்" களா?.. நான் ஒரு தொடரும் போட்டுவிட்டே இந்தப் புலம்பு புலம்புகிறேன்.. 
அவர்களெல்லாம் தான் உண்மையான எழுத்தாளர்கள்... 
சரி, விஷயத்துக்கு வருவோம்..

காதல்...
மனிதனுள் விளைகிற ஓர் நாகரீக உணர்வு... எவ்வளவோ உணர்வுகள் மனசுள் ஆலவட்டம் போட்டாலும், தம்பட்டம் அடித்தாலும்.. காதல் போன்ற ஓர் உன்னத உணர்வு வேறில்லை... 
ஆனபோதிலும், உறவினர்களை சற்று நிலை குலைய செய்து விடுகிறது காதல்.. பாவம், எல்லாரும் மிகவும் வருந்தவும் வேதனைப்படவும் நேர்ந்து விடுகிற உணர்வாக .. ஓர் விஷத்தன்மையோடு மறுபுறம் வினோத பிரசன்னம் செய்கிறது காதல்.. 

அப்பாடி.. இனி அடுத்த முறை எழுதலாம்.. இப்போது விடை பெறலாம்..


தொடரும்            

Sunday, August 7, 2011

காதல் குறிப்புகள்..

ஒன்று.. 
காதல உணர்வுகளின் முன்னிலையில் , காம உணர்வுகள் மிகவும் பின்தங்கியும் , வேண்டாத உணர்வுகள் போலவும் புரிபடுவது ஆச்சர்யமே... மனிதனில் காதல் உணர்வுகள் பூ பூத்த மாதிரி., காமம் பழுத்துத் தொங்கும் பழம் மாதிரி... இப்படியாக காதலும் காமமும் பல வகையறா வர்ணனைகளுக்கும் கற்பனைகளுக்கும் அந்த நாள் முதல் இலக்காகிக்கொண்டு வருகிறது...
இவ்விதமெல்லாம் எவ்வித கற்பனைகள் இல்லாதவர்களுக்குமே கூட காதலும் காமமும் இதே சேவைகளைத் தான் செய்துகொண்டு வருகிறது... இன்னும் கவிதை கதை புனைகிற மனோபாவம் உள்ள நபர்களுக்கு இவ்வகை உணர்வுகள் வெறும் வாய்க்கு கிடைத்த அவல் மாதிரி .....

தொடரும்...             

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...