Thursday, October 24, 2013

தேங்கா பால் ..

சட்னிக்கு
உடைக்கப் பட்ட
தேங்காய்
இள நீர்ப்
பதத்தில்
பருப்பு இளைத்துக்
காணப்பட்டது..

தெருப் பிள்ளையார்க்குப்
போட்ட ஈடு காய்
பருத்த பருப்போடு
இனித்த சுவையில்
மண்ணில் சிதறி
உருண்டோடிற்று...

கடந்து செல்கிற
வாகனங்களால்
கசங்கி நசுங்கி
மண்ணோடு மண்ணாயிற்று.. !

சற்று முன்னர்
கறக்கப் பட்ட
மாட்டின் பால்
பாலபிஷேகமாக
கற்சிலை மீது
குடம் குடமாக ...

பசிக்கு வீறிடுகிற
குழந்தைக்கான பால்
பாக்கெட்டில் அடைந்து
கிடக்கிறது..
அதுவும் மாடு கறந்ததா
பவுடரில் பிறந்ததா??


Tuesday, October 15, 2013

ஓர் சிறு அபிப்ராயம்...

உயர்ந்த ஓர் தன்மையை சக மனிதர்களிடத்து பிரகடனப் படுத்திய வண்ணமே இருத்தல் மனசுக்கும் உடலுக்கும் மிக ஆரோக்யமான விஷயங்களாகப் புரிபடுகிறது.. 
எல்லாரும் நம்மையும் நமது நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கிற விதத்தில் நம்முடைய பழக்கங்கள் மிகவும் உன்னதமான ஓர் செறிவை கொண்டிருக்க வேண்டுமாக கண்களுக்குப் புலனாகாத ஓர் அசரீரியிடம் மன்றாடுகிறது அன்றாடம் மெளனமாக நம் மனது.. !!

நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலன்களைத் தாண்டி பிறவற்றைக் குறித்த பிற மனிதர்களைக் குறித்த பிரக்ஞைகள் நிரம்பி வழிதல் - நம்மை ஓர் மகத்தான பிறப்பாக இந்த சமூகம் அடையாளம் கொள்வதற்கான வழி...
நாம் பிரம்மாதமாக எல்லாருக்கும் புரிபட வேண்டுமென்கிற எவ்வித கொள்கைகளோ லட்சியங்களோ அற்று யதார்த்தமாகவே மென்மையான தன்மைகளோடு விளங்க வேண்டும்.. 

இவ்விதமாகவெல்லாம் வார்த்தைகள் கோர்த்து வெளிப் படுத்தத் தெரியாமல், செயல்ரீதியாகவே மேற்சொன்ன தன்மைகளோடு இயல்பாக இருக்கிற நபர்களை நான் அடையாளம் கண்டு வியந்திருக்கிறேன்.. 
நானெல்லாம் கூட, இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்கிற அவாவில் மாத்திரமே உள்ளேனே தவிர, நடைமுறையில் பல குளறுபடிகளோடும் அனாவசிய சூட்சுமங்களோடும் என் காலம் பயணித்த வண்ணம் உள்ளதே அன்றி, மேற்சொன்ன எந்த மெல்லிய தன்மைகளிலும் எனது நடவடிக்கைகள் இல்லை, அல்லது சொன்னவைகளில் சொற்ப சதவிகிதமே நான் அவ்விதம் என்பதை உத்திரவாதமாக என்னால் சொல்லமுடியும்.. 

இறுமாப்புகளும் அகந்தைகளும் இதயத்தை சீரழிப்பதாக அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு அறிவுறித்தினாலும் நாம் அநேகம் பேர்கள் அவைகளினின்று கழன்று ஓர் சாத்வீக வாழ்வினை அனுசரிக்கிறோமா என்பது "மெகா சைஸ் " கேள்வி தான்.. 


குறைந்த பட்சம் மேம்பாடு அடைகிற நோக்கிலேனும் இவ்வாழ்வினை செலுத்துகிற பிரயத்தனம் நம்வசம் வேண்டுமேயன்றி ... உயர்ந்த விஷயங்களில் கொஞ்சமும் லயிப்பற்று சோபையற்று இருப்பது அற்பத்தனமல்லவா??

Friday, October 11, 2013

காலச்சிதறல்கள்..


மழைக்காலம் 
தவறிய மழை.. 
ஆனால் அன்றாடம் 
அதற்கான அறிவிப்பை 
தூரத்து இடி முழக்கமாக 
பிதற்றி 
எல்லாரையும் ஓர் 
குழப்ப அனுமானத்தில் 
தவிக்க விட்டு 
நகர்ந்து விடுகின்றன 
மழைக்கான மேகங்கள்.. 
இங்கே தான் 
பொழியப் போவது போல 
பாவனை காட்டிவிட்டு 
எங்கோ போய் 
கொட்டி விடுகிறது.. 

நெற்றியில் 
கைகளை வெட்டி 
புருவந்தூக்கி 
வானத்தை அலசுகிற 
பெரிசுகள் 
'மழை உறுதி'
என்று தீர்க்கதரிசனமாகப் 
பேசுவது 
நக்கலாகி விடுகிறது 
பேரன் பேத்திகளிடம்.. 

ஆகவே இனி 
சொட்டச்சொட்ட 
நனைந்தாலும் 
மழை வந்து விட்டதாகக் 
கூட சொல்கிற 
உத்தேசமில்லை அவர்களுக்கு..!

சித்திரையில் 
பனிப் பொழிவையும் 
ஆடியில் அடைமழையையும் 
ஐப்பசியில் கடும் வெயிலையும் 
இப்போதெல்லாம் 
எவரும் ஆச்சர்யமாகப் 
பேசுவதில்லை.. !!

Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. cinema review

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தேன்.. விகடனில் 51 மார்க் கொடுத்ததைப் பார்த்து.. 
விகடன் ஐம்பது மார்க் கொடுத்து கமெர்ஷியலாகவும் ஹிட் ஆனவை பாலச்சந்தர் படங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.. 
இப்போது ஐம்பது மதிப்பெண்கள் பெறுகிற அனேக படங்கள் விமரிசனம் விகடனில் வெளி வருவதற்கு முன்னரே அரங்கை காலி செய்து விடுகின்றன... 
ஓநாயும் கிட்டத் தட்ட அதே நிலைமையில் இருப்பது போல தான் பட்டது.. தியேட்டர் மொத்தமும் முப்பது பேர்கள் இருந்தால் அதிகம்.. 
Onayum Aatukuttiyum Movie Photos - Image 35 of 35
நிஜமாகவே படம் அந்த மதிப்பெண் பெறுகிற தகுதியில் தான் உள்ளது.. 
மிஷ்கினின் இந்த அபாரத் துணிச்சல் போற்றத் தக்கதே.. சொந்தக் கதையோ, பிற மொழித் தழுவலோ எதுவாயினும் தமிழுக்கு இவ்வித insertion தேவை என்றே தோன்றுகிறது.. 

குத்துப் பாடல்களும் அறிவு கெட்ட கானா பாடல்களும் வார்த்தைகள் புரிபடாத கதறல் பாடல்களுமே கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்திலே எவ்வித அதிர்வேட்டுப் பாடல்களோ ஆடம்பர நளின நடனங்களோ இல்லாதது இதமாக இருந்தது.. 

படம் நெடுக ஓடுவதும் துரத்துவதும் துரத்தப் படுவதுமாகவே நீள்கிறது.. அதனூடே நிகழ்கிற சம்பவங்களும் சங்கடங்களும் இருக்கையின் நுனிக்கே நம் குண்டிகளைக் கொணர்ந்து விடுகின்றன.. 

இசைஞானியின் அந்த மேற்கத்திய பாணி மெல்லிசை மனதைப் பிசைவதும், கண்களில் கசிவதும் .. வார்த்தைகளுக்குப் பிடிபடா உணர்வுகள் அவை.. 

அந்த இருட்டும் வீதி விளக்கு வெளிச்சங்களும் மிஷ்கினின் நேசத்துக்குரிய காட்சி அமைப்புகளோ..? உலகத்தில் சூரியன் மற்றும் பகல் என்று எதுவுமே இல்லை என்கிற விதமாக ஓர் குளிர்ந்த சீதோஷ்ணத்தை மையப் படுத்தி நம்மையெல்லாம் குளிர்வித்துத் திணறடிக்கிறார்.. 

இன்னும் எவ்வளவோ சொல்லியாக வேண்டும் இந்தப் படம் குறித்து.. ஆனால் விமரிசிப்பில் கைதேர்ந்தவர்கள் எழுதிய பல விமரிசனங்களை இந்தப் படம் குறித்து எல்லோரும் படிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.. 

என்னுடைய கத்துக் குட்டி விமரிசனம் எவரையும் நிச்சயம் நிறைவடைய செய்யாது என்பதை நான் நன்கறிவேன்.. ஏனெனில், ஆழ்ந்த பல விஷயங்களை என் அவசர மனம் register  செய்யத் தவறி இருக்கக் கூடும்.. நீங்களும் அவ்விதமே இல்லாமல் சற்று சுலபத்தில் உள்வாங்குகிற திராணியோடு இருக்கக் கூடும்.. தயை செய்து திரை அரங்கு சென்று பாருங்கள்.. என்ன நல்ல ப்ரிண்ட் ஆனாலும் dvd யில் பார்ப்பதைத் தவிர்ப்பது -அதுவும் குறிப்பாக இந்த மாதிரிப் படங்களையாவது-- நமது மனித நாகரீகத்தை நிச்சயம் மேலும் மேம்படுத்தும்.. நன்றி..

Wednesday, October 2, 2013

ராஜா ராணி --- சினிமா விமரிசனம்..

ராஜா ராணி .. பார்த்தேன்!
மவுன ராகத்தை இன்னும் கொஞ்சம் ஜிலேபி பவுடர் கேசரி பவுடர் எல்லாம் கலந்து அரைத்திருப்பது டவுசர் பையனுக்கும் புரியும்.. 

இந்தக் கரண்ட் ட்ரெண்டுக்கான எல்லா உல்டா லக்கிடி வேலைகளையும் சளைக்காமல் செவ்வனே செய்திருப்பது பாராட்ட உகந்த செயலா, கண்டனத்திற்கு உட்பட்ட செயலா என்பது குழப்பமெனிலும்--நமக்கென்ன பாஸ்.. டைம் நல்லா பாஸ் ஆச்சு.. அதானே முக்கியம்?.. 
கண்டனம் தெரிவிப்பது, நஷ்ட ஈடு கேட்பது இதெல்லாம் நம்ம மணிரத்னத்தோட பிசினஸ்.. 

இப்பத்தான் சமீபத்துல கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு நம்ம பாகியராஜ் படா பேஜாராகி அழாத கொறையா சிரிச்சுட்டே பேட்டி எல்லாம் கொடுத்திட்டு இருந்தாரு.. அவுருக்கும் பாவம் இப்ப டைம் பாஸ் ஆறதுக்கு இது கொஞ்சம் சூடா இருந்திச்சு.. 

மணியும் இப்ப அதே மாதிரி பிரீயா தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்.... அட்லி.. கொஞ்சம் அலேர்டா இருந்துக்கறது உசிதம்.. 
படம் சும்மா ஹாஸ்ய ரசம் போட்டு வழிந்த வண்ணமே இருப்பது ஓர் தனி மெருகு என்றால்.. நயன்தாராவின் நடிப்பும் அந்த இரண்டாம் நாயகி நஸ்ருவோ நஸ்ரியாவோ .. செம தூள்.. இந்தக் கரண்ட் டைம் யூத் பாய்ஸ் ரொம்பவே சரண்டர் ஆகி .. குவார்டர்லி லீவ் முடிஞ்சு ஸ்கூல் ரி-ஓபன் ஆனதுக்கப்புறமும் ஆப்சன்ட் ஆகறதுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம்..!!

ஜெய் அந்தக் கீச்சு வாய்சை வைத்துக் கொண்டு அடிக்கிற லூட்டி ரொம்பவே யதார்த்தம்.. ஆ ஊ ன்னா கண்ணுல தண்ணி பீச்ச அழறதும், யாராச்சும் கேட்டா கண்ணுல வேர்த்திருக்குன்னு சொல்றதும் .. ஸோ கியூட்..

ஆர்யாவின் எக்ஸ்ப்ரஷன் மாறாத முந்தைய படங்களின் அதே பாவனை நடிப்பு.. கொஞ்சம் மாத்தி  யோசிங்க ஆர்யா... நல்லா லட்டு லட்டா சிட்டுக ஜோடியா கெடச்சா மட்டும் போதாது.. ஸ்டைலை மாத்தலைனா .. அப்புறம் ரசிகர்கள் மாத்திடுவாங்க.. ஹீரோவை.. !

எடிட்டிங் போடோக்ராபி எல்லாமே ரொம்ப மெச்சூர்.. 
ஜி.வி.பிரகாஷோட இசை கூட மெச்சூர் தான்.. ஆனா பாட்டு தான் மோஸ்ட்லி எல்லாமே அமெச்சூர்.. ப்ளீஸ் பிரகாஷ்.. முந்தைய சென்னப்பட்டிணம் பாடல்கள் மாதிரி ஏன் தெளிவா இல்லை? அந்த அளவு ஏன் ஷைனிங் இல்லை?.. 

சத்யராஜ் மறுபடி ஒரு ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாரு போல.. இவ்ளோ பெரிய காரெக்டரை சும்மா அல்வா சாப்பிடறது போல.. அலேக்கா விழுங்கறாரு.. வைஸ் வெர்சா .. சந்தானமும் அதே..!

நல்ல பாமலி என்ட்டர்டைனர் .. வெளியலையே நேந்திரம் சிப்ஸ், பொட்டடோ சிப்ஸ், பிஸ்கட் எல்லாம் பாக் பண்ணிட்டு குடும்ப சகிதமா போனா ரெண்டரை மணி நேரம் சும்மா கும்முன்னு கழியும்.. இன்டர்வல்ல தியேட்டர் ஸ்டால்-ல எதனாச்சும் வாங்கித் தின்னோம்னா .. அப்புறம் மேற்கொண்டு படம் பார்க்கற மூடே அப்செட் ஆகிடும்.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...