Tuesday, October 15, 2013

ஓர் சிறு அபிப்ராயம்...

உயர்ந்த ஓர் தன்மையை சக மனிதர்களிடத்து பிரகடனப் படுத்திய வண்ணமே இருத்தல் மனசுக்கும் உடலுக்கும் மிக ஆரோக்யமான விஷயங்களாகப் புரிபடுகிறது.. 
எல்லாரும் நம்மையும் நமது நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கிற விதத்தில் நம்முடைய பழக்கங்கள் மிகவும் உன்னதமான ஓர் செறிவை கொண்டிருக்க வேண்டுமாக கண்களுக்குப் புலனாகாத ஓர் அசரீரியிடம் மன்றாடுகிறது அன்றாடம் மெளனமாக நம் மனது.. !!

நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலன்களைத் தாண்டி பிறவற்றைக் குறித்த பிற மனிதர்களைக் குறித்த பிரக்ஞைகள் நிரம்பி வழிதல் - நம்மை ஓர் மகத்தான பிறப்பாக இந்த சமூகம் அடையாளம் கொள்வதற்கான வழி...
நாம் பிரம்மாதமாக எல்லாருக்கும் புரிபட வேண்டுமென்கிற எவ்வித கொள்கைகளோ லட்சியங்களோ அற்று யதார்த்தமாகவே மென்மையான தன்மைகளோடு விளங்க வேண்டும்.. 

இவ்விதமாகவெல்லாம் வார்த்தைகள் கோர்த்து வெளிப் படுத்தத் தெரியாமல், செயல்ரீதியாகவே மேற்சொன்ன தன்மைகளோடு இயல்பாக இருக்கிற நபர்களை நான் அடையாளம் கண்டு வியந்திருக்கிறேன்.. 
நானெல்லாம் கூட, இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்கிற அவாவில் மாத்திரமே உள்ளேனே தவிர, நடைமுறையில் பல குளறுபடிகளோடும் அனாவசிய சூட்சுமங்களோடும் என் காலம் பயணித்த வண்ணம் உள்ளதே அன்றி, மேற்சொன்ன எந்த மெல்லிய தன்மைகளிலும் எனது நடவடிக்கைகள் இல்லை, அல்லது சொன்னவைகளில் சொற்ப சதவிகிதமே நான் அவ்விதம் என்பதை உத்திரவாதமாக என்னால் சொல்லமுடியும்.. 

இறுமாப்புகளும் அகந்தைகளும் இதயத்தை சீரழிப்பதாக அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு அறிவுறித்தினாலும் நாம் அநேகம் பேர்கள் அவைகளினின்று கழன்று ஓர் சாத்வீக வாழ்வினை அனுசரிக்கிறோமா என்பது "மெகா சைஸ் " கேள்வி தான்.. 


குறைந்த பட்சம் மேம்பாடு அடைகிற நோக்கிலேனும் இவ்வாழ்வினை செலுத்துகிற பிரயத்தனம் நம்வசம் வேண்டுமேயன்றி ... உயர்ந்த விஷயங்களில் கொஞ்சமும் லயிப்பற்று சோபையற்று இருப்பது அற்பத்தனமல்லவா??

2 comments:

  1. இந்த "மெகா சைஸ்" கேள்வி சிந்தித்தாலே மனம் பக்குவப்பட ஆரம்பித்து விட்டதாக அர்த்தம்...!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...