Tuesday, February 25, 2014

நீங்களே ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள்..

நான்கு வரியில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்தில் துவங்கி என்னையும் மீறி சகட்டு மேனிக்கு நீள்கிறது இந்த நய்யாண்டிக் கட்டுரை.., கவிதை என்கிற போர்வையோடு.. ..

சமீபத்திய என்னுடைய
பயமொன்று ...
நினைக்கவே
பயமளிக்கிறது.. !!

என்னுடைய
இத்தனை கால
பயங்களுக்கெல்லாம்
தலையாய பயம்
போல..
--இதற்கு
ஈடான பயமொன்று
முன்னர் முளைத்த
நாமதேயமே  இல்லை
போல...

பொதுவாகவே
அச்சம் மடைமை
என்பதை
ப.கோ.கல்.சுந்தரம்
சொல்லி எல்லாரும்
தெரிந்து வைத்திருக்கிறோம்..
அவ்விதமிருக்க
இதென்னடா புதுபயம்?

இத்தனை புதிர்
போட்டுத் தெரிவிக்கிற
தகுதி அந்த பயத்துக்கு
உள்ளதா என்பதும்
சந்தேகமே...!
--அந்த
பயத்தின் வீச்சு
என்போலவே கேட்கிற
யாவரையும் ஓர்
கலவரத்தில்
ஆழ்த்தக் கூடுமா
என்பதும் கேள்வியே..!!

நானுணர்ந்த விதமாக
யாவரும் உணர்வதில்
தான் என்னுடைய
உணர்வின் தகுதி
மேம்பாடு காண்கிறது..
அவ்வாறன்றி
நானொரு விதமாகவும்
இன்னொருவர் மற்றொரு
விதமாகவும் உணரக்
கூடுமெனில்
எனது உணர்வின்
பலவீனம் என்னை
மேலும் வெறுமையாக்கும்..

ஆனால்
இன்னொன்றும் இருக்கிறது..
நீ சொன்னதை
ஊர் ஏற்பது
என்பதும், ஊர் சொன்னால்
நீ அதனை ஏற்பதும்....
--இந்த யதார்த்த
சித்தாந்தத்தை மீறி
புதுவித சிந்தனை செய்
மனிதா
என்கிறது ஓர் அசரீரி
என்னிடம்...!

ஆகவே
எனது அந்த பயத்தை
2 ஆம் பத்தியில்
பிதற்றத் துணிந்து
இதோ ஆரம்பிக்கிறேன்..!!


------------------2---------------------

இறந்த பிற்பாடாக
எனது கடமைகள்
என்னவாக இருக்கக்
கூடுமென்பதே அந்த
பயம்..

இதனை சொல்லவா
இந்த இழுவை
என்கிற உங்களின்
கோரஸ் அசரீரி
எனது செவிப்பறையை
கிழிக்கிறது நார் நாராக..!

கல்லெறிகிற சாத்யம்
உள்ளதாயின் நானும்
என் கணினியும்
சில் சில்லாகி இருப்போம்?..

சரி விடுங்கள்..
இத்தனை காலம்
இப்படி ஓர் பயம் இல்லையாயின்
மேற்கொண்டு பயக்கப்
பழகுங்கள்...

களவையும் கற்று மறக்கச்
சொன்ன சமூகத்தில் ஜனித்தவர்
நாம்.. இந்த விபரீத பயத்தையும்
பயந்து மறப்போம்..

பிறவா பெருநிலை
உத்திரவாதமா?
ஏனெனில், அதுதான்
மிக உயர்ந்த கோரிக்கை போல,
பிரம்மாதமான பிரார்த்தனை
போல-- அநேகம் பேர்களும்
தெய்வத்தின் முன்வைக்கப்
பிரயத்தனிக்கின்றனர்..!

மனிதர்களின் பிரார்த்தனை
பைல்கள் மேலோக ஆபீஸில்
ஒருக்கால்
அடுக்கி வைக்கப் பட்டிருந்தால்
இந்தப் "பிறவா பெருநிலை"
பைல்கள் தான் பெருவாரியாக
அடுக்கி வைக்கப் பெற்றிருக்கக்
கூடும்.. !!

ஆகவே இதற்கு அப்ளை
செய்திருக்கிற எல்லாருக்குமே
இந்தப் பிறப்பின் ஆயுள் பலம் சற்று
அதிகம் என்பது எனது அனுமானம்..
ஏனெனில், அந்த பைல்களை
அலசி ஆராய யமதர்மனுக்கு
அதீத காலம் தேவைப் படுமன்றோ ??

ஸாரி .. அலசி ஆராய்வது சித்ரகுப்தன் தானோ?
நம்ம யமனுக்கு பபலோ மீது ஏறிக்
குந்திக்கினு .. கீழோகம் வந்து
என்மாதிரி ஆளுங்களை கபார்னு
இஸ்துக்கினு போறதுக்குத்தான்
டைம் சரியா இருக்கும்.. யெஸ்..,
நாங்கெல்லாம் இன்னும் இந்தப் பூ
ஒலகத்துல மறுபடி வந்து சிறப்பா பொறந்து
இப்ப இருக்கற விஷயங்களை எல்லாம்
எடிட் செஞ்சு சும்மா சூப்பரா ப்ரெஷ்ஷா
மறுக்கப் பொறக்கனும்னு அப்ளை பண்ணியிருக்கோம்..!!
ஹிஹி..


இப்ப தூக்கம் வருது நைனா.. தொடரும்.. ??

ஓர் சிறு திருத்தம்.

ஓர் சிறு திருத்தம்..

முந்தைய என்னுடைய இடுகையான "ஆண்களும் பெண்களும் -- சாட்டிங் கார்னர்".. எடிட் செய்து வெளியிட நினைத்திருந்தேன்.. ஆனால் அதற்குரிய பொறுமை இல்லை ஆதலால், அந்த இடுகையை நீக்கி விட்டேன்.. 

என்னவோ தெரியவில்லை, சற்றே யோசிக்கையில் அந்த இடுகையின் சாராம்சமும் நான் அதனை வார்த்தைப் படுத்திய விதமும் ஓர் இனம் புரியா அசூயை விளைவிக்கக் கூடுமோ என்கிற ஓர் சங்கடம் மனசை அரித்தமையால், தவிர்த்து விட்டேன்.. 





Wednesday, February 19, 2014

பாட்டும் ரசனையும்..

அவ்வப்போது பற்பல படங்கள் ரிலீசாகின்றன.. அவைகளினின்று பாடல்கள் வெளி வருகின்றன.. பாடல் சி.டி  யே  பட ரிலீஸ் போல வெளியிடப் படுகிறது..
முன்னொரு காலத்தில் இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள் இப்படி வெளி வருகையில் ஓர் திருவிழா போல கொண்டாடிய மலரும் நினைவுகள் மனசுள் நெளிகின்றன.. அப்படி கொண்டாடுவதற்கான அர்த்தங்கள் இருந்தன.. அவருடைய அந்தப் பாடல்கள் அப்படி தேன் வந்து பாய்ந்தது போல காதுகளில் பாய்ந்தன..

ஆனால் இன்றெல்லாம் அவ்விதம் எதுவும் இல்லை என்று அவசரக் குடுக்கை போல சொல்லி விடுவதற்கில்லை.... சினிமா தரங்களும் அதன் வீச்சான பாணிகளும் கதை அம்சங்களும் மிகவும் பிரம்மிக்க வைப்பது போலவே சில படங்களின் பாடல்களும் ஓர் புதுப் பரிமாணத்தில் பரிமளிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..

அந்தப் பிரத்யேகமான பாடல்கள் கேட்கிற எல்லாராலும் அவ்வித தன்மையோடு ரசிப்பதற்கு வாய்ப்பதில்லை என்கிற யதார்த்தம் தொன்று தொட்டு நிகழ்கிற விஷயம்..
மாற்று மாற்று ரசனையோடு, வேறு வகையான உணர்வுக் கலவைகளோடு அந்தப் பாடல்கள் அடையாளப் படுகின்றன..

உதாரணமாக என்னைக் கிறங்கடித்த பாடல் ஒன்று அதே கிறக்கத்தை மற்றொருவருள் விதைக்கக்  கூடுமா என்பது சந்தேகம் தான்..
அதனைக் கேட்டு நான் எனக்கு நிகழ்ந்த காதலோடு எனக்கு நிகழ்ந்த ஏக்கங்களோடு, ஏமாற்றங்களோடு .. இன்னபிற வார்த்தையுள் சிக்காத வகையறா உணர்வுகளோடு ஒப்பிடப்பட்டு ரசிப்பதில் எனக்கு அந்தப் பாடல் எடுபட்டுவிடுகிறது சுலபத்தில்.. மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் விதத்தில் அந்தப் பாடலின் வீரியம் என்னை மிகவும் பாதிக்க நேர்கிறது..

ஆனால் அதே பாடல் எந்த சுரணையுமற்று, வெறுமனே முணுமுணுகிற தகுதி கூட இழந்ததாக இன்னொருவருள் அடையாளப் பட்டு விடுகையில் எனக்கோர் தேவையற்ற தாழ்வு மனப்பான்மை துளிர்க்க நேர்கிறது.. அல்லது, அந்த நபரைக் காட்டிலும் எனது ரசனை மிகவும் மேம்பட்ட விதமாக என்னுள் ஓர் அனுமானத்தை ஏற்படுத்துகிறது..

இப்படியாக கறுப்புவெள்ளையில் துவங்கி ஈஸ்ட்மேன் கலர் படங்களின், மற்றும் அதனைத் தாண்டிய இன்றைய நவீன பாணிப் படப் பாடல்கள் வரை பற்பல படப் பாடல்கள் இதே விதமாக என்னில் ஊடுருவி என்னை இம்சித்து வருகின்றன.. என்னைப் போலவே அனைவருக்கும் இப்படியான ஓர் பிரத்யேக அனுபவங்கள் இந்தப்  பாடல்கள் விஷயத்திலே நேர்ந்த வண்ணமே இருக்கக் கூடும்..

சினிமா என்கிற ஓர் நிழல் மீடியா ஏற்படுத்துகிற தாக்கம் தான் மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதென்று  உணர்கிறேன்.. மற்ற எந்த அலைவரிசைகளும் ஏற்படுத்தாத ஓர் பிரத்யேக உணர்வுக் கிளர்வுகளை இந்த சினிமா .. அறிமுகமான நாள் தொட்டு ஏற்படுத்தி வருகிறது என்பதில் கிஞ்சிற்று  ஐயங்களும் எவர்க்குமில்லை....!

ஆரோக்கிய சூழல்களும் சீரழிவுகளும் சரிவிகிதமாக.. 

Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா...

பாலுமகேந்திரா...
சினிமாவை அதீதம் நான் ரசித்து வந்த பிராயங்களில் மிகவும் என்னை ஈர்த்த இயக்குனர்... என்னை மட்டுமல்ல, அன்றைய சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன்வசப் படுத்திய தமிழகத்தின் சத்யஜித்ரே என்று சொன்னாலும் தகும்..

மென்மையும் மேன்மையும் ஒருங்கே இழையோடுகிற அவருடைய அந்தத் திரைக் கதை அமைப்புகளும் காட்சி அமைப்புகளும் ஓர் அற்புதக் கிறங்கடிப்பை  மனசுள் நிகழ்த்தும்.... நீலகிரி சென்று அவர் எடுத்த படங்கள் அனைத்தும் நம்மையும் அந்தப் பிராந்தியங்களில் உலவவிடும்..
அந்தப் பசுமையினூடே  நாமும் சுகந்தமாகப் பயணிக்கிற ஓர் மாயையைத் தோற்றுவிக்கும்.. !

நாம் பார்ப்பது மாட்னி ஷோவாகவே இருந்தாலும் வெளியே பழுத்த வெய்யில் அடித்துக் கொண்டிருந்தாலும், மின்விசிறி இல்லாமல் அரங்கினுள் வியர்த்து வழிந்தே கொண்டிருந்தாலும் .. இவருடைய படங்கள் நம்மை ஸ்வெட்டர் போட வைக்கும்..! அப்படி ஓர் பனித் தூவலாய் அப்படி ஓர் மழைத் தூறலாய் நம்மைக் குளிர்விக்கிற சாத்யக் கூறுகள் கொண்டிருந்தன..

இன்றெல்லாம் வெளியே குளிர் வாட்டி வதைத்தாலும் திரை அரங்கினுள் நம்மை வறுத்து எடுக்கிற விதமாக படங்கள் வருகின்றன.. என்ன தான் பற்கள் தந்தி அடித்துக் கொள்கிற வகையிலே a/c  போட்டாலுமே கூட சுரணை அற்ற கதைகளும் திரைக் கதைகளும் நம்மை வெறுப்பில் ஆழ்த்தி  உப்புசம் அடிக்க வைக்கிற சூழலை ஏற்படுத்தித்  தான் விடுகின்றன... சில படங்கள்... அதற்கென வேறு ஆன்லைனில் 20 ரூ. சேர்த்து  120ரூ கொடுக்க வேண்டி ஆகி விடுகிறது.... இந்த உப்புசமும் சேர்ந்து கொள்கிறது.. !!

Friday, February 14, 2014

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும் ... சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இப்படி ஒரு ட்ரை இது வரைக்கும் யாருமே பண்ணியதில்லை என்று சொல்லலாம்.
அப்டி ஒரு அமைதியான சூழல்.., வழக்கமான கமெர்ஷியல் நெடி கிஞ்சிற்றும் அற்று ஓர் சுகந்த தென்றலை சுவாசிக்கிற சுவாரசியம் படம் நெடுகிலும்...

ஏதோ ஓர் சூழலில் அந்த லாகிரி தடை பட்டுவிடுமோ என்கிற உத்தேசமும் சந்தேகமும் மனசில் எழுந்த போதும், அப்படி எல்லாம் துவண்டு போக விடமாட்டோம் என்கிற விதமாக ஒருவகை மென்மை இழையோடுவதை ஆச்சர்யம் விழி பிதுங்க தரிசிக்க நேர்கிறது.. !!

ஆர்ப்பாட்டமில்லாத அப்பட்டமான அப்பாவி பண்ணையார்.. ஜெயப்ரகாஷ்.. வாவ் போட வைக்கிறார் மௌனமாகவே.. பால்ய நண்பர் ஒருவரின் நிமித்தம் அங்கே வந்து சேர்கிற பியட் பத்மினி கார்.. அது அங்கேயே இருந்து... நமக்கெல்லாம் அளிக்கிறது 2-அரை மணிநேர விருந்து..

விஜய் சேது.. மச்சான் அவார்டுகளுக்குக் குறி எதுவும் வைக்க வேண்டியதே இல்லை.. அவார்டுகள் இவரைக் குறி வைத்து வந்து வந்து விழும்.. அம்புட்டு யதார்த்தம்.., அம்புட்டு நேர்த்தி.. சினிமா உலகிற்கு வி.சே ஒரு பெரிய வரம்..
தய செஞ்சு பு.சாலித்தனமா செய்றதா நெனச்சுக்கிட்டு யாரும் முப்பது ரூபா dvd  வாங்கி பார்க்காதீங்க.. பாவம் விகடன்ல வேணா மார்க் ரொம்புமொ என்னவோ டிக்கட் கல்லா காத்து வாங்குது..

ஆரம்பத்துல இருந்தே தரமான படங்களுக்கு மக்கள் அளிக்கிற ஆதரவு இம்புட்டு தான்..
வெந்தும்  வேகாம இருக்கற அற வேக்காட்டு சனியங்களுக்குத் தான் உய்ந்து உய்ந்து ப்ளாக் ல டிக்கட் வாங்கிகினு வருவாங்க. இந்த மாதிரி படங்கள ப்ரீயா காட்னா கூட மொகறைய சொய்ங்னு அப்பால திரும்பிக்குவாங்க..

இன்னொருவாட்டி பாக்கலாம்னு ஐடியா பண்ணிக்கினு இருக்க இருக்கவே ங்கொய்யாலே, வந்துடிசய்யா நம்ப இஸ்டாலின் ஸன் படம்.., இன்னாது..,இது கதிவேலன் காதலோ  இன்னாவோ.. அதுக்கு இப்பிருந்தே விஸில்  சும்மா ங்குய் ங்குய் ன்னு பறக்குது.. 

Thursday, February 13, 2014

இலக்கு ...

எனது சில 
ந[ண்]பர்களின் 
பட்டியலில் 
அவர்களோடு 
ஒப்பிடுகையில் 
நான் மிக 
சிறந்தவன் என்கிற 
ஆணவம் 
அனாவசியம் 
என்கிற போதிலும் 
அதென்னவோ ஓர் 
சுவாரசியம்..!!

அப்படியாக 
எனது பட்டியலில் 
இடம் பெற்ற 
எல்லாரது 
சுய அபிப்ராயங்களும் 
தரவரிசையில் 
என்னைப் போலவே தான் 
அவர்களே 
முன்னிலை வகுப்பர் 
என்பதில் ஐயப் பாடென்ன?...

"எனக்கு நாந்தேன் 
பெரிசு" என்கிற 
யதார்த்த இறுமாப்பு..!!

மற்றவனைப் புரட்டிப் 
போட்டுப் பின்னுக்குத் 
தள்ளிவிடுகிற அவசரம்.., 
தான் மட்டுமே 
முன்னின்று கொடி 
நாட்ட வேண்டுமென்கிற 
வெறி, வேகம் 
--பண்பற்ற 
மனிதப் பண்பு..!

தோற்ற வலிகளில் 
துவண்டிருப்பவனை 
முன்னுக்கு நிறுத்த 
வேண்டுமென்கிற 
மாண்பு 
என்றைக்கு முளை 
விடுகிறதோ 
அன்றைக்குத் தான் 
துவங்குகிறது 
இந்த உலகம்..!!

Tuesday, February 11, 2014

காதல் கிறுக்கன்.. கிறுக்குக் காதலன்..

நீ ஞாபகம்
வருகையில்
மட்டுமே எனக்கு
கவிதை புனைகிற
சாமர்த்தியம் வருகிறது.. !

மற்றவற்றை
மற்றும் மற்றவர்கள்
எவர் குறித்த
பிரக்ஞைகளும்
கவிதைகளுக்கான
சமிக்ஞைகளாகப்
புரிபட்டாலும்
வார்த்தைகள் புலனாவதில்லை..!!

ஆனால் உன்
முகம் பிரசன்னமான
ஷணம் தொட்டு
கசிய ஆரம்பித்து
விடுகிறது என்
கவிதை ஊற்று...

பிற்பாடாக
பிரளயம் எடுக்கிறது
கவிதை..
எழுதுகிற எனது
பேனா முனையே
தெறித்தோடி விடுகிற
புயல் மையங்கொண்டு
விடுகிறது எனது
விரலிடுக்கில்..!

நான் மரணமடைந்து
இரண்டு மணி நேரம்
ஆகியிருக்கும் பொருட்டுக்
கூட.. அங்கே
நீ வந்து என்னை
ஸ்பரிசிக்கும் சாத்தியம்
உள்ள பட்சத்தில்
சிலிர்த்துக் கிடக்கிற
என் கட்டை
சூடுணரக் கூடிய
வாய்ப்பு 99 சதவிகிதம்
இருப்பதாக
ஆய்வறிக்கை சொல்கிறது..

மிச்சமுள்ள
1 சதவிகிதம்
உமது வருகையின்
நிமித்தம் மூர்ச்சையாகி
இருப்பேன் என்று
சொல்கிறது
இந்தக் கிறுக்குப் பயபுள்ள.. !!

Friday, February 7, 2014

ஓ மை டெத்.... ஐ லவ் யூ...ஹிஹி

சிலருக்கு  ஓர் பிரம்மாத சூழல் அமைந்து நமக்கது வாய்க்காத போது, காலத்தின் நயவஞ்சகம் பெரிதாகப் புரிந்த மாதிரி ஓர் காழ்ப்பு..
நமது பலவீனங்களுக்கு, நமது நோய்வாய்ப் பட்ட தன்மைகளுக்கு .. சற்றும் சம்பந்தப் படாத காலத்தினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற அவசரம் அநியாய அனாவசியம்...

காலமென்கிற மாயையிடம் நமக்கோர் பக்தி இருக்க வேண்டுமேயன்றி, அதனை ஓர் பரமவைரி போல சித்தரித்துப் பார்க்கிற அசிங்கம் நேர்ந்து விடக் கூடாது..

எத்தனைப் பெருந்துன்பம் நேர்கையிலும் காலம் அதைப் புரிந்து விட்டதாக அனுமானிக்கிற போக்கு நம்மில் விலக வேண்டும்.. நமது ஆளுமையில் காலத்தினை வசீகரமான அடையாளமாக வைத்திருக்க வேண்டுமேயல்லாது,  மசை பிடித்த நாயைப் போல கருதி கல்லடிக்கக் கையோங்கக் கூடாது.

எல்லாருக்குமான அற்புதங்களும் அசிங்கங்களும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து.. அற்புதம் நிகழ்ந்தவருக்கு அந்த நேரம் நல்ல நேரமாகி, அசிங்கம் நிகழ்ந்தவருக்கு அதே நேரம் கெட்டு விடுகிறது... இந்த யதார்த்தம் எல்லாருக்குமான அன்றாட நிகழ்வு. 

தொன்று தொட்டு நாமெல்லாம் தரிசித்து வருகிற மரணம்.. மரணங்கள்... நமது பிரக்ஞையில் குறிப்பிட்ட ஷணங்கள் மட்டுமே ஓர் அதிர்ச்சியையும் சோகத்தையும் விளைவித்து விட்டு பிற்பாடு ஓர் சகஜ ஸ்தாயிக்கு சுலபத்தில் திரும்பி விடுகிறோம்.. செத்தது அப்பனுக்கு பிள்ளை ஆகட்டும், பிள்ளைக்கு அப்பன் ஆகட்டும்..., எல்லா உறவு வகை துயர நிகழ்வுகளும் அதே தகுதியோடும்  அதே கால அளவுகளோடும் தான் ...!  

மற்றொரு நாள்---, பிற்பாடு---- , எதிர்காலத்தில்-----, நம்மையும் அந்த மரணம் வந்து ஆறத் தழுவிக் கொள்ளும் என்கிற நிதரிசன உண்மை ஓர் வதந்தி போலவும் ஓர் கிசுகிசு போலவும் தான் நம் எல்லோரிலும் ஊடுருவிக் கிடக்கிறது.. அது ஒரு வகையில் உண்மையும் கூட.. ஏனெனில், அப்படி ஆறத் தழுவுகிற அந்த மரணத்தை நாமுமே ஆலிங்கனம் செய்து.. பிரபஞ்சத்தை விட்டுப்  பெயர்ந்த ஸ்மரணையே அற்று அண்ட வெளியில் மேலெழும்பிப்  போய்க் கொண்டிருப்போம்...

மேற்கொண்டு உயிருடன் உலவுபவர்கள் தான் நமது இல்லாமையைப் போஸ்டர் ஒட்டியும் பொரி தூவியும் குதூகலிப்பர்..!!?




Sunday, February 2, 2014

புத்தகக் கண்காட்சி...

ரெண்டொரு நாட்கள் முன்னர் எங்கள் ஊரில் நிகழ்ந்து வருகிற புத்தகக் கண்காட்சிக்கு செல்ல நேர்ந்தது..

நூற்றுக் கணக்கான கடைகள் எங்கிலும் அடுக்கி வைக்கப் பெற்றிருந்த லட்சக் கணக்கான புத்தகங்களை  ஆயிரக் கணக்கான பேர்கள் வந்து வந்து தரிசிப்பதை பார்க்கையில் புத்தகங்களின் மீதான மக்களின் பேராதரவை மிகவும் ரசிக்க முடிந்தது..

அவர்களினூடே நானும் புத்தகங்களை ஆர்வமாக மேய அவா கொண்டு மேய்ந்தேன்.. என்னை ஈர்த்த சில புத்தகங்களை எடுத்து அங்கங்கே சில பக்கங்களை நுனிப் புல்  மேய்வது போல மேய்ந்து பொழுதோட்டுவது பேரானந்தம்.. விலை போட்டு வாங்குகிற சாசுவதம் இல்லாத பு.க்களை சற்றே ஆர்வம் சீறிட வாசிக்கிறேன்.. வாங்குகிற சாத்ய விலைகள் உள்ள பு.க்களை "அதான் வாங்கப் போறோமே.. வீட்ல போயி படுத்துட்டே படிச்சுக்கலாம் " என்று அவைகளை வாசிப்பதை தவிர்த்து... ஹிஹி.. வாங்குவதையும் தவிர்த்து மறு கடைக்குத் தாவினேன்..
என் மாதிரியான அற்ப குணம் நிறைந்தவர்கள் பலரையும் என்னால் அடையாளம் காண முடிந்தது.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கொப்ப..!!

பாதி விலை போட்டு விற்பனை செய்கிற பழைய பு.கடைகளுக்கு சென்று புத்தகம் வாங்கவே பேரம் பேசுகிற சுபாவம் என்னுடையது.. புதிய பு.க்களை முழு விலை போட்டு வாங்குகிற  மனசு எனக்கு இயற்கையாகவே இருந்திருக்கும் பட்சத்தில்.. நிச்சயம் நான் ஓர் பிரம்மாதமான எழுத்தாளனாக ..., ஊக்கமாக உரையாடுகிற உன்னத பேச்சாளனாக மலர்ந்திருக்கும் வாய்ப்பினைப்  பெற்றிருப்பேன்.. ஆனால், எனது இந்த நீச சிந்தனை பொதிந்த இருதயத்தோடு அற்ப வெற்றிகளைக் கூட அடையும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதை  சுலபத்தில் அனுமானிக்க நேர்கிறது.. !!

சுயமதிப்பீடு சுயமரியாதை இழப்பதை நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடுகிற நாகரீகம் கூட அற்றவனாக ஓர் பிராயத்தில் இருந்தேன். இன்று அவ்விதம் அல்லாமல் பேசுகிற வளர்ச்சி பெற்றுள்ளேன் என்பதை பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..!

இந்த வளர்ச்சியும் அற்று இன்னும் இந்தக் கேவலத்தை ரகசியமாக்கி என்னை அசிங்கப் படுத்துகிற சிறுமையில் ஆண்டவன் வைக்கவில்லை என்பதை நன்றியோடு உணர்கிறேன்..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...