Monday, November 30, 2015

ஆத்தா --- வாழ்க்கைக் குறிப்பு..


ப்பீசு போறதா தான் 
சொல்றான் பெரிய பய்யன்.. 
ஆனா, அப்பப்ப வந்து 
'எம்புட்டாயா சில்ற 
வச்சிருக்கே ன்னு கேட்டு 
அம்பது நூறுன்னு 
அள்ளிக்கிட்டுப் போயிடறான்.. 
'அப்புறமா தாறேன்.. கணக்குல 
வச்சுக்கன்னு '
பெரிய நேர்மவாதி போல 
பீத்திக்கிட்டுப் போவான்.. 
மறுபடி 
'பெட்ரோல் போட ஒரு 
அம்பது குடு ஆத்தா' ன்னு 
சொரண கெட்டுப் போயி 
சாக்கைத் தூக்கி 
காசை வாரிட்டுப் போயிடுவான் 
படுபாவி.. 
'வயசான காலத்துல 
பெத்தவள வச்சு 
கஞ்சி ஊத்தத் தான் 
வக்கில்ல.. 
ஏதோ அவ ஒட்டுன
வயித்துக்குன்னு நாலு 
காசு சேர்த்து வச்சா 
அதுலயும் வந்து  மண்ணப் 
போடுறானே மானங்கெட்ட 
நாயி. ' ன்னு 
கேவிக் கேவி 
நமுத்துத்தான் போனா 
கெழவி.. 

மருமவ இருக்காளே.. மூதி. 
அதுக்கு மேல.. 
போறப்ப வாரப்ப  
புதுசா என்ன காயி 
அத்த வந்திருக்குன்னு 
அள்ளிப் போட்டுக்கிட்டு.. 
பர்ஸ் ஜிப்பை தெறப்பா..
'ஐயோ சில்றைய வூட்டாண்ட யே 
வச்சிட்டேன்.. வாரப்ப தாரேன்.. 
என்பாள்.. சில சமயங்களில் 
போறப்ப தாரேன்.. என்பாள்..!

ஆனா எல்லாவாட்டியும் 
வெறும் பர்சையே ஜிப்பைத் 
திறந்து காண்பிப்பாள்.. 

வடுகப்பட்டிக்குக் கட்டிக் 
குடுத்த ஒத்த மவ இருக்காளே 
சிறுக்கி.. 
மருமவளே தேவலேன்னு 
பண்ணிடுவா.. 
நடு  ரோட்ல 
நாலு பேரு காயி வாங்குற 
டைம்ல வந்து 
'மாப்ளைக்கு மைனர் செயன் 
எப்ப போடுவியாம்?.. அதுவரைக்கும் 
வந்துடாதேன்னு அனுப்பிச்சு 
விட்டாக ' என்று ஏதாவது 
ஒவ்வொரு தபாவும் 
ஒவ்வொரு புதுக் கதையோட 
வந்து கழுத்தறுப்பா.. 

நாசமாப் போன இந்த 
வுசுரு   போயித் தொலையவும் 
மாட்டேங்குது .. 
ஊட்டுக்காரன் மவராசன் இந்தக் 
கொடுமைய எல்லாம்  கண்ணுல 
பாக்கக் கூடாதுன்னு அப்பவே 
கண்ணை மூடிட்டான்.. 
நாந்தேன் இப்ப சீரழியறேன்.. 

த்தனை இம்சைக்கு 
நடுவிலும் 
3 வயது மகள் வழிப் 
பேரனை மடியில் 
வைத்து அவன் 
சாப்பிட கேரட்டைக் 
கழுவிக் கொடுக்கிற 
ஒரு சுகம் தான் 
இன்னும் அவள் 
ஆயுளை கெட்டிப் 
படுத்தி வைத்திருக்கிறது..!!



புகைப்பட உதவி  : திரு. தங்கம் பழனி 



Saturday, November 28, 2015

நானும் ரௌடி தான்..

நானும் ரௌடி தான்.. 
தெளிந்தநீர் நிலை போன்று ஒரு தேஜஸ்.. எந்தக் கலங்கலும் அற்று ஆழம் கூட மேற்பரப்பிலிருந்து ஈஸியாக விஷுவலைஸ் ஆனது போன்ற ஒரு திருப்தி இந்தப் படம்.. 
இப்படி ஒரு நய்யாண்டி ஸ்லாங்கில் பேசி நடிக்கிற வித்தை விஜய் சேதுபதிக்கு செம கெத்து.. மீசை அற்று ஹாண்ட்சம் வழிகிற இன்னசண்ட் முகம்.. 
நயன்தாராவை அந்தக் கடற்கரையில் கடிந்து கொள்கையில், நயனுக்குக் காது கேட்காது என்பதை மறந்து பேச, பிறகு விசுக்கென்று ஞாபகம் வரவே, 'நான் பேசற போது கொஞ்சம் என்னோட மூஞ்சியப் பாரேன்!' என்கிற கேவல்.. 
Image result for naanum rowdy thaan nayanthara
நயன் ரியல்லி ஆசம் ... இன்னா ஒரு 'செவி கேளா' பெர்ஃ பார்மான்ஸ் .. வொண்டர் .. 
பழி வாங்குகிற அந்த எனெர்ஜியை முகத்தில் ஸ்லிப் ஆகாமல் வைத்துக் கொண்டு , சான்ஸ் மாட்டுகையில், அந்தக் 'கொல்கிற ' மூர்க்கம் தொலைந்த மென்மை ததும்பும்  பெண்மை.. வாவ்.. என்று ரசிக்கத் தூண்டிற்று.. 

சேதுபதியோடு நட்பு பாராட்டும் பாலாஜி.. 
ஆளை மாற்றி சுட்டு விட்டு , என்னவோ பிளாக் போர்டில் கிறுக்கி விட்டு அழித்து மறுபடி சுலபமாக சாக்பீஸில் எழுதுவது போன்று அந்த சைலன்சர் ரிவால்வாரில் சுடவேண்டிய நபரை சுட்டு விஜய் சேதுபதிக்கு டிஸ்ப்ளே செய்து காண்பிக்கிற மொட்டை  ராஜேந்தரனின் குரூர ஹாஸ்யம் .. 'கெக்கே பிக்கே'வென்று  சிரிப்பு முட்டுகிறது.. 

வாவ்.. என்ன லாவகமாக வில்லத் தனம் பார்த்திபனுக்கு?.. சும்மா தி.நெ .வேலி ஹல்வா வை அலேக்காக வாயில் குதப்பி மற்ற வில்லன்களுக்கு சவால் விடும்  நாசுக்கு.. இனி, இதர படங்களில் வில்லன் ரோல் தொடரும் என்றே தோன்றுகிறது..  

அனிருதின் இரைச்சல் இல்லா பொருத்த இசை.. ரெண்டொரு ரசிக்கும் படியான மெலடி.. காமெராவை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.. 

செம சென்ஸ் டைரக்டர்.. ட்ராக் தொடரட்டும்.. 
தரமிகு தயாரிப்பில் மறைமுக தனுஷும் மின்னுகிறார்.. 
நன்றி.. 

Tuesday, November 24, 2015

ஒரு மொக்கைக் கவிதை..

தினசரி காய்கறி 
மார்க்கெட்டில் 
முனைகளை உடைத்து 
வெண்டைக்காய் 
பொறுக்கிக் கொண்டிருந்தவன் ... 
Image result for LADYS FINGER
என் போன்றே 
பொறுக்குகிற உமது 
விரலொன்றைப் 
பிடித்து .. 
முனை உடைக்க வளைத்தேன்.. 
படக்கென்ற நெட்டிச் 
சப்தம் கேட்டதும் தான் 
அது உன் விரல் என்று 
உணர்ந்து திகைத்தேன்.. 
Image result for GIRLS FINGER
'லேடீஸ் ஃபிங்கர் '
என்று நினைத்து.... 
ரியல்லி ஸாரி " 
என்றேன்.. 

'இதுவும் 
லேடீ'ஸ் பிங்கர் தானே?'
என்ற உமது 
நய்யாண்டியில் கிறங்கி 
மறுபடி உமது  
அத்தனை விரல்களையும் 
ஒருங்கே கோர்க்க 
நேர்ந்தது.. 
நமது திருமணத்தில்.. !!

Monday, November 23, 2015

முரண் மூட்டை..

குடம் குடமாகக் 
கொட்டப் படுகிறது 
பால்...!
பால் கரவா 
கல் நந்திக்கு...!!

குடம் குடமாய் 
பால் தரும் 
பசுவுக்கோ .. 
சரிவரக் குளித்து 
விடுவது கூட இல்லை.. !

இருந்த சில்லறைகளை 
மொத்தமாக 
கோவில் உண்டியலில் 
திணித்து விட்டு.. 

ஒரு ரூபாய் 
சில்லறையை 
இறங்கும் போது 
தருவதாக சொல்கிற 
நடத்துனரை 
களவாணி என்றே 
அனுமானிக்கிறோம்.. !

சவாரிக்கு முந்துகிற 
ஆட்டோ ஓட்டுனர்கள் 
போன்றே அர்ச்சகர்கள்.. 
அர்ச்சனை கிராக்கிக்கு 
தட்டை ஏந்திக் கொண்டு  
அலை பாய்கிறார்கள்.. !

மதிய அன்ன தானத்திற்கு  
சரியாக 100 டோக்கன்கள்.. 
அந்த நூறில் அரைப் பசியோடும் 
பசியே அற்றும் 
பலரும் இருக்கக் கூடும்.. 
ஆனால் குடலைப் பிடுங்கும் 
பசியோடு வருகிற 
101 வது நபருக்கு 
என்ன போராடியும் 
டோக்கனில்லை.. !

ஆன்மிகம் தழைத்தோங்கும் 
இந்தியக் கோவில்களில் 
பெண்களை கவனிக்கிற 
ஆண்களின் கூட்டமும் 
ஆண்களை கவனிக்கிற 
 பெண்களின்  கூட்டமும் 
இல்லை என்றால், 
கோவில் குடமுழக்குகள் 
கூட - ஒரு 
பிரபல திரைப் படத்தின் 
கடைசி நாள் கூட்டம்  
போன்று தான் இருக்கக் கூடும்.. !!

Thursday, November 19, 2015

பிரபல அநாமதேயம் .......

 வள்ளுவன் காந்தி  பாரதி போன்றவர்களின் திறன்கள் எம்மைக் கவர்ந்ததை விட அதீதம் அவர்களின் அழியாப் புகழ் எனக்குள் ஓர் மகோன்னதக் கிறக்கத்தை நிகழ்த்தச் செய்துள்ள நிதர்சன உண்மையை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்..

தோன்றின் புகழொடு தோன்றுக.. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம் என்கிற வள்ளுவன் குறளே கூட ஒன்றுண்டு..

ஒரு பிராயத்தில் எனக்கென இந்தப் பிரபஞ்சம் வரிந்து கட்டிக் கொண்டு அதையும் இதையும் செய்யத் தான் போகிறது என்கிற அடாத நம்பிக்கையில் கழிந்திருப்பதை இன்று அசைபோடுகிறேன்..

அவ்வாறான "புகழ் தாக"த் தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை, எம்மை அற்புதமாக இயக்கவல்ல க்ரியா ஹூக்கிகளாக எம்மில் வீற்றிருந்தன..

ஆனால் சற்றும் நான் எதிர்பாராமல் ஒரு தருவாயில் நான் புகழற்ற சாதாரணப் பனாதியாக நேர்ந்தது.. அந்த சுடும் உண்மை என் மனசுக்குள் தீக்காயங்கள் ஏற்படுத்தின.. ஆறா ரணமாக மிக நெடிய காலங்கள் சீழ் பிடித்து  வலி உண்டு பண்ணிற்று..

ஆனால் காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை கொண்டது.. அந்த ரணங்கள் சொஸ்தம் அடைந்தன.. தழும்புகள் கூட அற்று காயமாற்றின.. சாகக் கிடந்தவனுக்கு ஊதும் முஸ்தீபில் கிடந்த சங்கு, பிற்பாடு சாகக் கிடந்தவனே எழுந்து 'தம்' பிடித்து ஊதுவதற்கு உதவிற்று..

ஆக , எமது அனாமதேயம் பிரபலமாயிற்று.. சீந்துவாரற்று ரோட்டில் நடக்கிறேன்.. கைகுலுக்கும் தொந்தரவில்லை, ஆட்டோகிராப் அவஸ்தை இல்லை, நான் இன்னார் என்று எவரும் என்னை அறிமுகப்  படுத்துகிற இம்சை இல்லை.

இந்த சுதந்திரம் ஆசுவாசமாக இருக்கிறது.. இதுவே நிறைவு வரை நீடித்தால் போதும்  என்கிற அவா வந்துவிட்டது..

எனக்கிருக்கிற கிஞ்சிற்று 'ஓவியம் வரைகிற'  திறனைக் கொண்டு என்னை நான் புதுவிதமாக வரைய ஆசைப் பட்டு உருமால் கட்டிய மண்டையோடு முறுக்கிய மீசையும், நீண்ட தாடியும் விட்டிருப்பதாக கற்பனை செய்து தத்ரூபமாக வரைந்து முடித்த திருப்தியில் எனது மகளிடத்துக் காண்பித்தேன்..

"பாரதி தாடி வளர்த்த மாதிரி இருக்கு.. அப்புறம், வள்ளுவன் உருமால் கட்டிய மாதிரி  இருக்கு" என்கிறாள்..


Wednesday, November 11, 2015

வேதாளம்.......

பாட்ஷா, விஸ்வரூபம் படங்களை சுலபமாக ஞாபகத்துக்குக் கொணர்கிற திரைக் கதை..
வி.ரூபத்தில் கமல் போடுகிற அந்த சண்டையின் டெம்ப்ட் இந்த வேதாளத்தில் நான்கைந்து மடங்குகளாக படர்ந்து ரசிகர்களை கும்மாளமூட்டச் செய்து விடும் போலும்..
Image result for VEDHAALAM
பாசக் கார அண்ணனாக.. ரௌடி ஸார் வேதாளமாக ... "ஹன்க்" போல மாறி வில்லன் வகையறாக்களை பீஸ் பீஸ் ஆக்குகிற பிஸ்தாவாக ..
அஜித்தின் இவ்ளோ பரிணாமங்கள் சற்றே இம்சிக்கின்றன.. இன்னவகை உணர்வென்று விவரிக்க சாத்யப் படாத ஒருவித அவஸ்தை.

என்ற போதிலும் இந்தக் கதைக்கு விலாவாரியாக ஸ்க்ரீன் ப்ளே செய்து, சளைக்காத காமெரா கோணங்கள் வைத்து, காட்சி வாரியாக இசையையும் பொருத்தமாக செருகி ... டைரக்டர் சிவாவின் சக்ஸஸ் ஃபார்முலா பின்னர் வருகிற புதியவர்களையும் தொற்றிக் கொள்கிற வாய்ப்பு நிறையவே தென்படுகிறது படம் நெடுகிலும்..

இம்மாதிரி யதார்த்தம் என்ன விலை என்று கேட்கிற தமிழ் படங்களை ஏற்கனவே நிறையப் பார்த்துப் பழகிய நமது ரசிகர்களுக்கு இந்தப் படமும் அதே ஜாதி  என்பது மிகவும் ஆறுதல் எனிலும், நல்ல சினிமாவை யதார்த்த சினிமாவை நேசிக்கிற நபர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே..

ஆனால் சிகரெட் ஸ்மோகிங் இஸ் இஞ்ஜூரீயஸ் டு ஹெல்த் என்று சிகரெட் பெட்டி மேல் பிதற்றி யாது பயன்?.. உருவி, பற்றவைத்து உள்ளே வரைக்கும் இழுத்து  புகையை வெளித் தள்ளுகிற கூட்டம் ஒன்றும் குறைந்த பாடாகத் தெரியவில்லை..
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று மதுப் புட்டி மீது லேபிள் ஒட்டி என்ன பண்ண? சந்திர மண்டலத்தில் ஒயின் ஷாப் ஆரம்பித்தாலும் ராக்கெட் வைத்துப் போக ரெடியாக இருக்கிற குடிமகன்கள் குறைந்த பாடில்லை..

அதே விதமாகத் தான். இந்த அதரப் பழசான அரைவேக்காட்டுப் படங்களுக்கு என்று எப்போதுமே ஒரு கும்பல் குதூகலக் குலவை ஓத தாரை தப்பட்டை சகிதமாக இருந்து கொண்டே தான் இருக்கின்றன..

இந்த மாதிரி படங்களுக்கு நெகட்டிவ் ரிவ்யூ வருவது குறித்த கவலையோ, அக்கறையோ சற்றும் அற்று அது என்ன கண்றாவியாக இருந்து தொலைந்தாலும் அரங்கதிர விசிலூதி அல்லோல கல்லோலப் படுத்துவதென்பது எம்ஜியார் காலந்தொட்டு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிற சாபக் கேடு..

"இந்தப் படம், செம சக்ஸஸ் .. சும்மா அள்ளு அள்ளுன்னு அள்ளப் போவுது.. வேணா பாருங்களேன்"
என்கிற தல ரசிகர்களின் ஒய்யார சவால்கள் ...

"பு லி  மாதிரி இதுவும் ஊத்திக்கணும்" என்கிற சிலரின் சாபங்கள்..

'ஊத்துனா என்ன , ஆத்துனா என்ன ?' என்கிற அசால்டோடு இருக்கிற மீடியேட்டர் ரசிகர்கள்..

"நாம" எப்டி?...                                                                                                

Saturday, November 7, 2015

கமல் ..ஸிக்ஸ்டி ஒன்


Image result for kamal hassan

ரமக் குடி தந்த 
பரம நடிகன்.. 
பரம குடி காரன் கூட 
பரம ரசிகனாகி 
விடுவான் கமலுக்கு.. 

சிரமமே அற்று 
அனாயாசமாய் எவ்விதப் 
பாத்திரத்தையும் 
தன்வசப் படுத்திய 
தந்திர சாலி.. 

அரசியல் உரசிட 
அனுமதியா தங்கம்.. 
சினிமா சிரத்தை 
தவிர்த்து 
வேறெதிலும் 
நுழைப்பதில்லை 
தமது 'சிர' த்தை.. 

சினிமாவுக்கு மட்டுமே 
உயர்த்தும் 
தமது கரத்தை 
இந்த சிறுத்தை.. 
அனைவருமே 
ஆதரிப்பர் அரவணைப்பர் 
இந்த எமது கருத்தை..!!

[ஹிஹி.. அப்பப்ப, எல்லாருக்குள்ளேயும் இப்படி ஒரு "ராஜேந்தர்" குபுக்குன்னு பூந்துக்கத் தான் செய்றாங்க].. 

Wednesday, November 4, 2015

ஈரக் கவிதை..

லைக்குச் செருப்பாக 
-குடை.. 
சேறு ஆவதற்கு முன்பான 
மழையைத் தவிர்க்க.. 

கால்களுக்குக் குடையாக 
செருப்பு.. 
சேறாக மாறிவிட்ட 
மழையைத் தவிர்க்க.. 

குடையோ செருப்போ 
அற்று முழுதுமாக 
மழையில் 
நனைந்து கரைந்திடும் 
மழலைமை 
நம் ஒவ்வொருவருள்ளும் 
ஒவ்வொரு 
மழை நாளின் போதிலும்.. !!

Image result for rainy day

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...