Sunday, April 29, 2012

சொல்ல சொல்ல இனிக்குதடா....

ஓர் தத்துவ மேதை போல ஏதாவது சொல்வதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை... வெறுமனே சொன்னால் போதும்... ஆனால் அதை செய்வதற்குத் தான் அதிகம் உழைப்பு தேவைப் படுகிறது... செய்வதில் உள்ள உழைப்பு சொல்வதிலும் தேவை என்ற பட்சத்தில் .. நான் அநேகமாக வாயை இறுக மூடிக் கொண்டிருப்பேன் .. ஹிஹி..

நிலைபெறாமை குறித்த சுவடுகள் எல்லாரும் அறிந்ததே எனிலும், தானும் அவ்வித சுவடுகளோடு பின்னாளில் மற்றொருவரால் உணரப்படுவோம் என்கிற சிந்தனை, பிரக்ஞை அநேகமாக -வாழ்கிற நாட்களில்- எவருக்குமே பிடிபடுவதே இல்லை என்று உத்தரவாதமாக சொல்லலாமென்றே தோன்றுகிறது..

நிரந்தரம் மாயை என்கிற உண்மை விளங்குவதில்லை என்பதோடு, தற்காலிகமே நிரந்தரம் என்கிற நிதர்சன உண்மை, சுடுவதாகவும் தவிர்க்கப் படவேண்டியதாகவும் எல்லாரிலும் மிகவும் படிந்து கிடப்பது ஆச்சர்யமானது...

வாழ்கிற நாட்களில் எதற்கு இல்லாமை குறித்த இத்தனை விளக்கங்கள்?.. இருக்கிற ஒவ்வொரு நாளும் லாபம் என்கிற உற்சாகத்தில் கைகொட்டி கும்மியடித்து ஆனந்தக் கூத்தாடுவதை  விடுத்து எதற்கிந்த எதிர்கால நிகழ்வு குறித்த பீதி கலந்த கவலை??.. எதுவும் நிலை இல்லை என்கிற பற்றற்ற வாழ்வை விடவும் , பண ஆசை, பொருளாசை, அந்த ஆசை இந்த ஆசை என்று அபரிமிதமான ஆசைகளின் பட்டியல்களோடு இந்த வாழ்வினை கொண்டாட வேண்டுமே அன்றி... எல்லாம் பொய், எல்லாம் மாயை, எதுவும் நிரந்தரம் அல்ல என்கிற சித்தாந்தகளோடு சிறகுகளை முறித்துக் கொள்வதில், மேற்கொண்டு பறக்கும் நோக்கற்று விந்திக் கொண்டிருப்பது அசுவாரசியமானது என்றே தோன்றுகிறது ...

பகுத்தறிவோடு வெறுமனே சிந்திப்பதற்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு... சிந்திப்பதையே உன்னதமென்கிற மாயையில் திளைப்போர் அதிகம்... அதனையே அந்த நபர்கள் செய்ய ஆரம்பிக்கையில் வழக்கமான முட்டாள் தனங்களோடு தான் தங்கள் காரியம் அரங்கேறி இருக்கிறது என்கிற விஷயம்  அறிவுக்கு உறைக்கையில்.. தங்கள் உயர்ந்த சிந்தனைகள் மீதாக இயல்பானதோர் அவநம்பிக்கை வர ஏதுவாகிறது..

வாழ்வு நெடுக இவ்வித முரண்களோடும் , நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கைகளோடுமே பயணிக்க வேண்டியுள்ளது... 


Monday, April 23, 2012

பொய் மகுடங்கள்...

தலையில் நடப்பதாக 
எனது ஆணவத்திற்கு 
குறியீடு வைத்திருந்தார்கள்...

-எனக்கு 
சிரசாசனமே சரியாக
வரவில்லை என்று
எனது யோகா வாத்தியார்
குறை சொல்கிறார்..

வள்ளல் தன்மை
என் கூடப் பிறந்ததாக
என் ஜாதகம் பேசுகிறது..

-என் பேரம் கருதி,
நான் கூப்பிட்டால் கூட
வருவதில்லை
என் வீதி கடக்கிற
கீரைக்காரி..!

சுந்தரவடிவேலு..

Sunday, April 22, 2012

மானம் கெட்டவன்

மிகத் துரிதமான
எனது சோம்பேறித்
தனங்களும் ..
மிக மிக
சோம்பேறித் 
தனமான எனது
அவசரங்களும்
என்னிடம் எனக்குப்
பிடித்தவை மற்றும்
பிடிக்காதவை..

எல்லாருக்குமான
வாழ்க்கை 
அபரிமிதமான
துடிப்பில் இயங்குகையில்
கல் தேரையாக
எனது...

பாய்வதற்கான பதுங்கல்
என்கிற அனுமானம்
எல்லாருக்கும்...
அதனைச் சாக்காட்டி
நானும் படுத்துறங்கப்
பழகிக் கொண்டேன்...

எனது குறட்டை கூட
புலியின் உறுமலில்
பயமுறுத்துவதாக
சொல்கிறார்கள்...
அதிர்ந்து கூடப் 
பேசத் தெரியாதவனுக்கு
இவ்வளவு தப்புத் தப்பான
அடையாளங்களா??

என் இளம்ப்ராயங்களில்
என் ஜாதகத்தை கணித்த
ஜோதிடர்கள் பலரும்
நான் பெரிய 
மேதாவி ஆவதற்கான
எல்லா அருகதைகளும்
இருப்பதாகப் பிதற்றி
என் அம்மாவின்
சுருக்குப் பையை
காலி செய்தனர்... 
எனக்காவது கொடு,
மொபெடுக்கு பெட்ரோல்
போட உதவுமென்று
கேட்டுப் பார்த்தாலும்
ஊம்ஹும்...

இந்தக் காலகட்டம்
என்னைப் பொருத்தவரைக்கும்
பரவாயில்லை... 
என் அம்மா 
முன்னர் போல
என்னைக் குறித்து
ஜோதிடம் பார்த்து
காசை விரயம் செய்வதில்லை.., 
அதோடு எனது
பைக்கிற்கான பெட்ரோல்
போடுவதற்கான காசினை
நான் உருவிக் கொள்வதை
தூங்குகிற என் அம்மாவினால்
கண்டுகொள்ள முடியவில்லை..

என் அக்காவிடம்
நேற்றுப் பேசிக் கொண்டிருந்தாள்
என் அம்மா...
""எடுக்க எடுக்க
முழிச்சுப் பார்த்தா 
அவன் மனசு கஷ்டப்படும்...
நாம பெத்த கடனுக்கு..""

பேசியது கேட்காதது மாதிரி
புரியாதது மாதிரி
சுலபமாக என்னால் 
இருந்துவிட முடிகிறது....
அந்த இரவில்
பதட்டமில்லாமல் 
அம்மாவிடம் 
சுருக்குப் பையை
உருவ முடிந்தது...
முழித்துக் கொண்டிருந்த 
அக்கா தான் 
கேவலமும் பரிதாபமும்
கலவையான ஓர் பார்வை
பார்த்து என்னை
சங்கடத்திற்கு ஆளாக்கினாள்..!!

சுந்தரவடிவேலு..

Wednesday, April 18, 2012

RX 100 YAMAHA.. RX 100 YAMAHA....

RX  100 YAMAHA....

1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்தேன்...

கடந்த பதினெட்டு ஆண்டுகள் இதே பைக்கை உபயோகித்து வந்தேன்... என்னவோ காதலி பிரிகிற உணர்வு... நீண்ட நாள் நண்பன் கண் காணாத ஊருக்கு செல்வது போன்ற தாங்கொணா வேதனை... வாரி அனைத்து பல முத்தங்கள் தந்து விடத் தோன்றியது... அழவில்லையே தவிர எனக்குள் ஓர் கசிவு உள்ளே என்னை முழுதுமாக நனைத்திருந்தது... இதற்கு அழுதால் சிரிப்பார்கள் என்கிற லஜ்ஜை, அழுவதை மறைக்க வேண்டியாயிற்று..
அன்றைய யவ்வனத்தில், யுவனாயிருந்த காலத்தில் ... விழித்துக் கொண்டே கண்ட கனவு தான் அந்த யமஹா... லட்சணத்துக்கும் அதிவேகத்துக்கும் ப்ராபல்யமான அந்த பைக்கை ஆசை ஆசையாக நான் வாங்கியது என் அப்பாவுக்கு எரிச்சல் தந்தது... மைலேஜ் அதிகம் தராது என்பதோடு விபத்துக்கான சாஸ்வதங்களும் இந்த பைக்கில் அதிகம் உண்டு என்கிற அக்கறை தான் என் அப்பாவின் கோபமும் எரிச்சலும் என்பது என் இளமைனதுக்குப் புரிபடவில்லை...

ஆனால் எனது நண்பர்கள் மத்தியில் அந்த பைக் பெருமிதமான விஷயமாயிற்று... அதனை வசப்படுத்த இயல்பான வசதி வேண்டும் என்பதோடு காசு பணம் குறித்த கஞ்சத்தனமில்லாத ஓர் லாவகத்தை ஏற்படுத்துகிற வல்லன்மை கொண்டது யமஹா.. ஆனால் எனது தன்மை அப்படி ஒன்றும் பிரமாதமானதாக  இல்லை என்பது யாவரும் அறிந்தது... இவன் தன்மைக்கு இந்த பைக்கா என்கிற முரண் பீறிடும் பார்வைகளை நான் அடையாளம் கண்டிருக்கிறேன்... இவைகளை எல்லாம் தாண்டி வார்த்தைகளற்ற ஓர் இறுமாப்பில் நான் வலம் வருவேன் இந்த பைக்கில்..

சுசுக்கியோ ஹோண்டாவோ தராத ஓர் பிரத்யேக மிதப்பை இது பிரதிபலிக்கும் என்கிற மாயையில் அன்று சிக்கிய பலருண்டு.. 
பல ஊர்களுக்கு பல மைல் பயணங்களை  மேற்கொண்டு என் தெனாவெட்டை பிற எனக்கு அறிமுக நபர்கள் இல்லாத ஊர்களிலும் பறைசாற்ற முயன்ற எனது அன்றைய சிறுபிள்ளைத் தனங்கள் யாவும் இன்றைய முதிர்ச்சியில் என்னில் நிழலாடுகின்றன...

அந்த பைக்கின் நிமித்தம் நான் பற்பல கலவை உணர்வுகளை அன்றும் அனுபவித்தேன் இன்றைய பிரிவிலும் அனுபவிக்கிறேன்...

மறுபடி ஒரு நாள் எங்கேனும் எவரேனும் ஓட்ட எதேச்சையாக நான் பார்க்க நேரும் என்கிற அனுமானம் உண்டு..

அப்போது---- நான் கடப்பதை அந்த பைக்கும் சத்தியமாக உணரக்கூடும்... சத்தியமாக...!!

V.SUNDARAVADIVELU..

Saturday, April 7, 2012

தன்னை உணர்ந்தவன் ஞானி..

எழுதி பிராபல்யம் அடைந்து விடலாம் என்கிற கனவு ... அம்புட்டு சுலபமில்லை மச்சீ என்பது போலஉணர ஓர் குறிப்பிட்ட தருணமாகிறது.. உடனடியாக அவ்விதம் உணர்ந்து வெளியேற அநேகமாக எழுதுகிற எவர்க்கும் வாய்ப்பதில்லை...
எப்படியேனும் பிரமாத எழுத்தாளன் ஆகியே விடலாம் என்கிற மாயை போட்டு புரட்டி எடுத்து விட, அவனும் எதையாச்சும் கிறுக்கிக் கிறுக்கித் தள்ள நேர்கிறது...

அப்புறம் ஓர் இழையில் காலம் ... ''என்னா சாரே இன்னும் தெளியலையா?'' ன்னு மௌனமா ஒரு கேள்வி கேக்கறதைப் புரிஞ்சுக்க ... அதுக்கொரு தனி ஞானம் தேவைப் படுகிறது..
அந்தப் பிரத்யேக ஞானம் இருந்தா மட்டுமே மேற்கொண்டு எழுதாம பொட்டாட்ட வெளியேற முடியும்.. இல்லேன்னா, தொடர்ந்து எதனயாச்சும் சலம்பிக்கினே கெடந்து படிக்கிற எல்லாரும் குண்டியில சிரிக்கிறது கூட புரியாம .. பைஜாமா போட்டுட்டு பந்தா பண்ண வேண்டியது தான்..


எழுதறதுல மட்டுமில்ல.. எல்லா விஷயங்களுமே இப்டித்தான்... தனக்கு இது தான் வரும்னு தன்னைப் புரிஞ்சுக்கறதே பெரிய விஷயமா இருக்கு மனுஷங்களுக்கு... புரிஞ்சுக்கிட்ட பிறகு அதிலிருந்து வெளியேறத் தெரியனும் மொதல்ல... அது தெரியாம சும்மா ஒழப்பிக்கிட்டே கெடந்தா..... கூட இருக்கறவங்களும் காறித் துப்பிடுவாங்க... தன்னம்பிக்கையும் ஓஞ்சு தேஞ்சு போயிடும்...

அப்புறம் சாவகாசமா வர்ற ஞானத்தை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாத லெவலுக்கு வயசு வாலிபம் எல்லாம் போயி ..... முதுமையும் சோம்பலும் கபளீகரம் செஞ்சிடும்..உன்னோட சூழ்நிலையை..!!

அப்டித்தான் ரொம்பப்பேருக்கு மிக சுலபமா வாழ்க்கையில நடந்துக்கிட்டே வருது... இதெல்லாம் புரிஞ்சு ""காலத்தே பயிர் செய்"" ""காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"" என்கிற பழமொழிகளுக்கு ஏற்ப நடந்து கொள்கிற சிலரால் மட்டுமே பணம் புகழ் என்று எல்லாமே பெறமுடிகிறது..
பெரும்பாலானவர்கள் தன்னையும் தன் திறன்களையும் அறியாமலே, அல்லது அறிந்துமே கூட அதைப் பிரயோகிக்காமல் , தனக்கு கைவரப்பெறாத விஷயங்களை துஷ்ப்ரயோகம் செய்து ... மண்ணோடு மண்ணாகி விடுகிறார்கள்...


படித்து முடித்து வருகிற மாணவ மாணவிகளைக் கூட அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ற தொழிலை செய்ய அனுமதியுங்கள், .. முதற்கண் படிப்பதைக் கூட பெற்றோராகிய நீங்கள் திணிக்காமல் ,அவர்களின் விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்... 


புதிதாக நான் எதனையும் சொல்லி விடவில்லை. ஏற்கனவே பற்பலரும் அறிவுறுத்திய  ஓர் சாதாரண விஷயத்தையே நானும் இங்கே முன்வைக்கிறேன்...

ஆனால் முன்னர் சொன்ன மாதிரி... தயை கூர்ந்து எவரும் தனது திறன் எதில் என்று தெரியாமல் காலத்தை விரயம் செய்து கொள்ளாதீர்கள்...


அவ்விதமான பல அனுபவங்களுக்கு நான் ஆளானேன் என்பதால் இதனை உங்கள் அனைவரிடமும் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்... நன்றி..




சுந்தரவடிவேலு..




Thursday, April 5, 2012

மறுபடி மறுபடி..

மறுபடி மறுபடி...

மிகவும் சாஸ்வதம் போல
மிக மிக நிரந்தரம் போல
எவ்வளவு சம்பவங்கள்
வாழ்நாள் நெடுக..
எல்லோருக்குமாக 
அனுபவங்களாகி 
விடுகின்றன??

--அவைகளில் 
ஐக்கியமாகித்
 திளைக்கையில்
ஓர் சுவாரஸ்யம்...
பிய்ந்து உதிர்வது
போல் வெளியேறுகையில்
ஓர் ஆற்றாமை...!!

எல்லோருக்குமே
திரும்பிப் பார்ப்பதற்கான
எவ்வளவு 
மலரும் நினைவுகள்..
அழியாச்  சுவடுகள்??!..

சட்டையுரிக்கின்ற
பாம்பென - எவ்வளவோ
துயர்களைக் 
கழற்றி எறிந்திருக்கின்றன
காலம்..

நத்தை ஓடென
அடைந்து கொள்ளவும்
மீன் தூண்டிலென
மாட்டித் துள்ளவும்
பல சந்தர்ப்பங்கள்..

புலிகளிடம் சிக்கிப்
பிழைத்திருக்கிறோம்..
ஆடு முட்டி
சாகக் கிடந்திருக்கிறோம்..

மரணம் 
நிகழவிருப்பதற்கான
சாத்யக் கூறுகளையும்
நிதர்சன உண்மைகளையும்
தாண்டி .. 
--வாழ்க்கை மட்டுமே
வியாபித்து எங்கெங்கிலும்
விரிந்து கிடப்பதான
மாயையுள் மயங்கிச்
சிலிர்க்கிறோம்...
ஒவ்வொரு ஷணமும்..!!

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...