Thursday, November 8, 2012

அவசரக்காரர்கள்..

பரபரவென்று எதற்கெடுத்தாலும் சிலர் பதட்டப் படுவதைப் பார்க்கையில் என்னுள் அவர்கள் மீது ஓர் இனம்புரியா வெறுப்பு... எதற்கிந்த அவதி?.. அப்படி என்ன வாரிக் கட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல்...

இவர்களுக்கும் ரத்தக் கொதிப்பை கன்னாபின்னாவென்று ஏற்றிக் கொண்டு இவர்களை  சார்ந்த சாதுக்களையும் ஒருவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி.... இப்படியான நபர்களை நாம் சம்பந்தப் படாமல் புறமிருந்து வேடிக்கை பார்ப்பது தான் நமக்கு புத்திசாலித்தனம்... அல்லாமல் இவர்களை சார்ந்து நாம் ஏதேனும் காரியம் நிறைவேற்றவேண்டிய சூழல்கள் உருவாகுமாயின் அது நமது மிகப் பெரிய துரதிர்ஷ்டமென்றே கொள்ளவேண்டும்..

அவசரம் ஆத்திரம் ஒரு மனிதனுக்கு அறவே அனாவசியம் என்று வாதிக்க நான் இங்கே வரவில்லை.. தேவைகள் கருதி, அவ்விதம் நடந்தால் அது ரசிக்க உகந்த விஷயம்... அதுவன்றி ஒன்றுமில்லாத கவைக்குதவாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டு, படுத்தி.., களேபரமாகி, ஆக்கி... 


இவர்களை ஒருவிதமான சைக்கோ என்று தான் சொல்லவேண்டுமே தவிர சுறுசுறுப்பானவர்கள், வேலையை கச்சிதமாக  உடனடியாக நிறைவேற்றுகிற அசாதாரண நபர்கள் என்று வர்ணிப்பது இந்த முட்டாள் தனத்தை நாமே ஊக்குவிப்பது  போலாகும்... 


காலை பத்துமணி பரீட்சைக்கு அதே காலை ஒன்பதேமுக்காலுக்கு அவதிப் படுவதில் ஓர் அர்த்தமிருக்கிறது... ஆனால் ராத்திரி ஒன்பதேமுக்காலுக்கு இருந்து அவதிப் பட்டால் என்னவென்று சொல்வது?


பதறாத காரியம் சிதறாது, நிறைகுடம் தளும்பாது, சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது.. என்றெல்லாம் எத்தனை தத்துவார்த்தமாக இவர்களுக்கு விளக்க முயன்றாலும்  தனது தன்மையிலிருந்து வெளிவருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.. 


இப்படியான நபர்கள் அமைதியாக இருப்பதையே அநாகரீகமாக உணர்பவர்கள்... பதட்டமில்லாமல் பக்குவமாக ஒன்றை செய்துமுடிப்பதை கேவலமாகக் கருதுபவர்கள்... 


பாம்பாட்டி பாம்பு கொத்தித்தான் சாவான் என்பது போல, இவர்களது பதட்டமே இவர்களுக்கு  எமனாகி விடும் ஓர் தருணத்தில்... ஆனால் என்ன கொடுமை என்றால், அதனை உணர்கிற ஓர் சந்தர்ப்பத்தைக் கூட இவர்களுக்கு வழங்க காலத்திற்குப் பொறுமை இருப்பதில்லை... 


இன்னும் என்னென்னவோ இவர்கள் குறித்து சொல்ல அசைபோடுகிறது எனது மனநாக்கு... பார்ப்போம், அவ்வப்போது கிடைக்கிற சந்துகளில் எல்லாம் இவர்களது சிந்தினைப்  பாட முயல்வோம்...

1 comment:

  1. உண்மை தான்... தானாக மாறினால் தான் உண்டு...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...