Saturday, November 24, 2012

துப்பாக்கி------------------விமரிசனம்

இவ்ளோ லேட்டாக எவரும் துப்பாக்கிக்கு விமரிசனம் எழுதி இருக்க சான்சில்லை... இது நியாயமுமில்லை... இந்நேரம் ஏகப்பட்ட விமரிசனங்கள் அவர் அவர்கள் பிளாகில் படம் ரிலீசான திவாளி சமயத்திலேயே பட்டாசு கிளப்பி இருப்பார்கள் எல்லாரும்..

என்ன பண்ண?. இன்னைக்குத் தான் எனக்கு அந்த துப்பாக்கியை சுட அனுமதி கிடைத்திருக்கிறது... ஆகவே எனக்கான உளறல்களை விமரிசனம் என்கிற பெயரில் இங்கே கொட்டிவிடுவதில் ஓர் ஆத்ம திருப்தி... என் விமரிசனத்துக்காக எவருமிங்கே காத்துக் கிடக்கவில்லை  என்றபோதிலும் அப்படி காத்துக் கிடப்பதான ஓர் அலாதி கற்பனையில் கொஞ்சம் கொட்டித் தீர்க்க விழைகிறேன்...


சாத்தியப் படாத சங்கதிகளை செவ்வனே சுலபமாக அரங்கேற்றுகிற காரியம் தொன்று தொட்டு சினிமா கதாநாயகனால் மட்டுமே நிவர்த்தி செய்யப் பட்டு வந்திருக்கிற விஷயம் நமக்குப் புதிதில்லை என்ற போதிலும் அதையே எத்தனை முறை "ரிப்பீட்டு" அடித்தாலும் வாயைத்திறந்து பார்ப்பதையும் அதே வாயில் விரல்களைத் திணித்து விசிலடிப்பதையும் நாமெல்லாம் சலிக்காத வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்...

பத்துத் தீவிரவாதிகளையும் பத்து ராணுவ வீரர்கள் குண்டு வைத்திருக்கிற பத்து இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பதற்கு பதிலாக ராணுவவீரர்களின் துப்பாக்கிகள் வெடிக்கின்றன... நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் கூட்டிலும்  குண்டுகள் பாய்ந்து சரமாரியாக சாய்கிறார்கள் தீவிரவாதிகள்..... பிற்பாடு அந்த வெடிக்க இருந்த டைம் பாம்புகளை வெடிக்காமல் செய்து மக்களைக் காப்பாற்றுகிறார்கள்...

நிஜத்தில் இப்படி நிகழ்ந்தால் இதுபோல கின்னஸில் இடம்பெற வேண்டிய செயல் வேறொன்றும் இருந்திருக்காது... திரையில் இந்தக் கற்பனையைக் காண்கிற போது  "குடுத்த காசுக்குப் பரவாயில்லை" என்று காலரைத் தூக்கிக் கொள்கிற ரசிகர்களைப்  பார்க்கையில் "தமிழ்நாட்டில் என்றைக்கும் எம்ஜியார் ஆட்சிகள் தான்" என்று சம்பந்தா சம்பந்தமில்லாத ஓர் அனுமானம் குறும்பாக எட்டிப் பார்த்துப் போகிறது...

அந்தர் பல்டிகளும் அனாயாச நளின நடனங்களும் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல... அனல்பறக்க எல்லாவற்றையும் வள்ளலெனக் கொட்டிக் கொடுக்கிறார் இளைய  தளபதி... ஜோடியாக வருகிற காஜலும் சலித்த பிகரில்லை..சும்மா அலேக்காக கொடுத்த பாத்திரத்தை அழகாகத் தேய்த்துக் கழுவி பளபளக்க வைக்கிறார்..

நாயகனின் நண்பனாக வருகிற சத்யன் என்னவோ தூங்கி எழுந்த மந்தகாசத்திலேயே  படம் முழுக்க பவனி வருகிறார்... நக்கல் என்பதாக அவ்வபோது  என்னவோ பிதற்றுகிறார்... சிரிப்பு தவணை முறையில் வந்துபோகிறதே  தவிர கவு.மணி வடிவேல் ஜோக்குகள் போல ஓர் அடர்த்தி எதுவும் அவரிடம் தென்படவில்லை...

ஓர் வீரியமான இசையும் சில காமெரா ட்ரிக்குகளும் நமுத்துப் போன காட்சி அமைப்பைக் கூட மெருகேற்றி பிரம்மாதப் படுத்திவிடும் என்பதற்கான சாட்சி பல காட்சிகளில் தென்படுவது  திரைக் கதையின் பலவீனம்...

சிவாஜியில் ரஜினிக்கு வருகிற ஆரம்பப் பாட்டின் மெட்டை ஞாபகப் படுத்துகிற மாதிரி இதிலும் ஓர் ஆரம்பப் பாட்டு...

அதென்னடா யாரைப் பார்த்தாலும் பொசுக் பொசுக்கென்று போட்டுத் தள்ளுகிற வில்லன்கள் எல்லாருமே கதாநாயகனை மாத்திரம் கையைக் கட்டி வைப்பதும் , பிறகு கைக்கட்டை அவிழ்த்து ஒற்றைக்கு ஒற்றை மோதி நாயகனிடம் அடிவாங்கி சாவதும் ..... இதே கருமாந்திரத்தை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பதோ ...!!

விஜய்க்கு மிலிடரி ஆபீசராக வருகிற ஜெயராம் நக்கல்கள் தேவலாம்... ஒரு ராணுவ வீரன் சந்திப்பது தீவிரவாதிகளின் தளங்களையே தவிர எந்த இடத்திலும் ராணுவதளம்  படத்தில் காண்பிக்கப் படுவதில்லை...

விஜய் தனது காதலியிடம் காதலை அம்புட்டு சொல்வதும், கிஸ் பரிமாறிக் கொள்வதும்... அப்புறம் கடைசியில் காதலியை அம்போன்னு வுட்டுக்கின்னு மறுக்கா  ராணுவத்துக்குப் போறதும் .. அதுக்காக அம்முணி ரெம்பா பீல் பண்றதும் ... இது மாத்திரம் இயல்பா இருக்கணும்னு ஸ்க்ரீன்ப்ளே அமச்சவங்க, இதுக்கு முன்னாடி  சொதப்புன போதெல்லாம் ரொம்ப யதார்த்தமா சொதப்பிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.. 

3 comments:

  1. உங்கள் பாணியில் விமர்சனம் நன்று...

    ReplyDelete
  2. நான் இன்னும் பார்க்கலை! விமர்சனத்துல புகழறீங்களா? இல்லை இகழறீங்களா? சட்டுன்னு முடிச்சீட்டீங்க?

    ReplyDelete
  3. நான் தெளிவாக விமரிசித்து விட்டதான இறுமாப்பில் இருக்கிறேன்.. எனது அகந்தையை தங்களின் குழப்பமான கேள்வி கூச்சப்பட வைத்துவிட்டது...
    நிச்சயம் இந்தப் படம் ஒருவித புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் இடைப்பட்ட தன்மையில் தான் அமைந்திருப்பதாக தங்களின் கேள்விக்குப் பிறகு எனக்குத் தோன்றுகிறது... எனது விமரிசனத்தின் இடைச்செருகலாகக் கூட இந்த எனது பதிலை சேர்த்துக் கொள்ளலாமென்று தோன்றுகிறது..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...