Friday, November 6, 2009

என் அபிப்பிராயம் சரியா தவறா?.. அறியேன்...

வாழ்க்கை சிலருக்கு அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காத வனப்புகளை அறிமுகப்படுத்தி விடுகிறது...
சொற்ப ரசனைகளுடன் வாழ்க்கையை அனுசரித்து வந்தவர்களுக்கு காலம் கைக்கு அடங்காத கணிசமான பரிசை விநியோகித்து விழி பிதுங்க வைத்து விடுகிறது... இவை அனைத்தையும் எவ்விதம் அடைந்தோம் என்கிற ப்ரக்ஞை கூட அற்று இவைகளை எப்படி அனுபவித்துத்தீர்ப்பது என்கிற சுகமான குழப்பங்களில் லயித்து விடுகின்றனர்...
வித விதமான கார்கள்... உயர் ரக ஆடை அணிகலன்கள்... இன்னபிற இத்யாதி லக்சூரி சமாச்சாரங்கள்... அவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அப்படிப்போட்டு ஆட்டுகிறது..

சிலருக்கோ... அவஸ்தைகளை சொல்லி மாளாது... துரதிர்ஷ்டம் மாத்திரம் எப்போதும் துணை வரும்... மருந்துக்குக்கூட உற்சாகம் நிகழாது... தப்பித்தவறி என்றேனும் ஏதாவது சந்தோஷங்கள் தலை காட்டுமேயானால் .. உடனடியாக ஓடி விடக்கூடிய சுடுதண்ணி அவசரத்தில் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்... பஞ்சரான சைக்கிள் மூலையில் முடங்கிக்கிடக்கும்., நோய்வாய் பட்ட மொபெட்டு ஒன்று பெட்ரோல் தாகத்தில் வறண்டு கிடக்கும்... நடந்தே போய்விட்டு வரலாம் என்றால், போய்வர வேண்டிய இடம் வெகு தூரத்தில் இருக்கும்.. நம் சவுகரியத்திற்கு டவுன் பஸ் கூட இருக்காது... ஆனாலும் போயாக வேண்டும்.. போனால் வந்தும் ஆகவேண்டும்..!

இப்படி முரண் களுடன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கொடுமைகள்... இதற்கெல்லாம் இறைவனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவா முடியும்.. நாம் சொன்னாலும் தான் கடவுள் நிற்பாரா என்ன...

வசதி படைத்தவர்களிடத்தில் கடவுள் ஓர் பணியாள் போல பவ்யமாக கைகளைக்கட்டிக்கொண்டு நிற்பது போல தோன்றுகிறது எனக்கு... அதே கடவுள் வரியவர்களிடத்து எஜமானன் போல அதட்டிக்கொண்டு இருக்கிறார் என்றே அனுமானிக்கிறேன்...!!

இவ்விதமாக கடவுளை கீழ்த்தரமாக ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.. நம்மையெல்லாம் ஸ்ருஷ்டித்த கடவுளுக்கு , இந்த சுண்ணாம்பு --- வெண்ணை பாகுபாடுகள் எதற்கு என்கிற ஆதங்கமான கேள்வியைத்தான் முன்வைக்கிறேன்... எளியவர்கள் நிரம்பிய இந்த சமூகத்திற்காக.... அவர்களுடைய பிரதிநிதியாக..


சுந்தரவடிவேலு...


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...