1
நாத்திகனையும்
காப்பாற்றுகிற பொறுப்பு
கடவுளுக்கு இருக்கிறது...
சாதாரண மனிதர்கள்
கடவுள்களில் பாரபட்சம்
பார்க்கலாம்..,
அசாதரணமான கடவுள்
மனிதர்களில் பாரபட்சம்
பார்ப்பதில்லை...!!
இந்தக்கருத்துக்கூட
இனி எந்தக் கடவுளுக்குப்
போய் சேருமோ தெரியவில்லை..
ஆனால் நிச்சயம்
ஒரு நாத்திகனாவது
படித்துப் பார்ப்பான்
என்றே அனுமானிக்கிறேன்....!!
2
நன்றி நவில்வதிலுள்ள
பேரின்பம்
பிரார்த்தனைகளில் இருப்பதாகத்
தெரியவில்லை..
பிரார்த்தனை என்பது
மெருகேற்றிய பிச்சை..!
கோயில் வாசலுக்கு
வந்ததும் பிச்சைக்காரனிடம்
நீ கடவுளாகி விடுகிறாய்...
--உள்ளே நீ கடவுளிடம்
ரகசியமாக பிச்சை கேட்டாய்..,
பிரார்த்தனை என்கிற பெயரில்...!!
3
நான் கடவுளைப்
பிரார்த்திப்பதில்லை..,
நம்பிக்கையின்மையால் அல்ல,
கடவுள் மீதான பெருமதிப்பால்....
என்னுடைய அல்ப
பிரார்த்தனைகளைப் பொருட்படுத்துகிற
அவகாசம் கடவுளுக்கு
இல்லாமற் போகக்கூடும்,
உடனே நான் அந்த
அசாதாரண கடவுளை
கோபிக்கக்கூடும்..,
அவசரப்பட்டு "கடவுள் பலவீனமானவன்"
என்று முடிவெடுக்கக்கூடும்..,
ஏதேனும் நிறைவேறுகிற
தருவாயில்
உடனடியாக கடவுளுக்கு
நன்றி சொல்கிற அவசரமும்
நாகரிகமும் என்னிடமிருக்கிறது....!!
சுந்தரவடிவேலு...
No comments:
Post a Comment