Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Monday, September 10, 2012

புதிய பார்வை..



இந்தப் புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
நிச்சயம் ஓர்
சந்தோஷமான கவிதை
வரப்போவதில்லை...

ஆனால் இந்தப்
புகைப்படத்திலுள்ள
குழந்தைகளுக்குப்
போல சந்தோஷம்
வேறாருக்கும்
இருக்கப் போவதுமில்லை...

இந்தப் புகைப்
படத்திற்கு முந்தைய
இதற்குப் பிந்தைய...
இவர்களது அவகாசங்கள்
யாவும் சத்தியமாக
ஆனந்தக் குறைபாடற்றுத்
தான் இருந்திருக்கக் கூடும்...

ஆனால்
கவிதை எழுதுகிற நாம்
இவர்கள் சேற்றில்
விழுந்துவிட்டதாகப்
புனைகிறோம்...
இவர்கள் கவலைப்
படுவதாக
கவிதையை நடிக்க
வைக்கிறோம்...

இவர்களுக்கு அறிவு வந்து
வாழ்நாளில் இவர்கள்
அறிகிற கவலை
என்பது ... நாமெல்லாம்
அனுபவிக்கிற
பெருங்கவலைகளின்
சிறு துகள்களே அன்றி
வேறொன்றுமல்ல...

என்ன.. நாமெல்லாம்
காருக்குள் அழுதுகொண்டு
போய்க் கொண்டிருப்போம்..
இவர்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
தேரிழுப்பவர்கள்....!!
--------*************--------

Thursday, January 19, 2012

கிழட்டுப் புன்னகை...

ஓர் இழையில்---
அறியாமை அறுபடுகிற
அடையாளமே புரிபடாமல்
"அறிவு" வந்து
அப்பிக் கொள்கிறது
மனசெங்கிலும் 
எல்லாருக்குமே..!!

முன்பிருந்த 
அறியாமைகள் யாவும்
மலரும் நினைவுகளாகவும்
சிறுபிள்ளைத் தனங்களாகவும்
அடையாளப் பட்டு
விடுகின்றன --
தற்போதைய 
அறிவின் நிமித்தமாக..!!

அதே அறியாமைப்
பிராயங்களோடு
உலவி வருகிற இன்றைய
தலைமுறையை 
தரிசிக்க நேர்கையில் 
நமட்டாய் ஓர் 
சிரிப்பு வந்து போகிறது
உதட்டோரம்....

ஆனால் ஏனோ
அந்தச் சிரிப்பை
கிழடு தட்டியதாகவே
உணரத் தோன்றுகிறது..!!!



சுந்தரவடிவேலு    
.

Monday, September 26, 2011

ஒவ்வொரு வீதியிலும்...

விதிகளின் நிமித்தமான
பேதங்கள் அபேதங்கள்
யாவுமே --
காரண காரியங்களுக்கு
அப்பாற்பட்டவை...

பேரன் பேத்தி எடுத்த
பக்கத்து வீட்டுத் தாத்தா
இன்னும் தீவிர
புணர்ச்சியில் ஈடுபடுகிற
சங்கேதம் அனைத்தையும்
என் செவிகள் உணரும்...

ஐந்துமாதக் குழந்தை
வயிற்றில் இருக்கையில்
பைக் விபத்தில் சில மாதங்கள்
முன்னர் இறந்து போன
இளவயதுக் கணவன்
எதிர் வீட்டில்...

கள்ளக்காதலைக் 
கண்டும் காணாத
வீரப்புருஷன் ஒரு வீட்டில்..

நல்ல மனைவியை
சந்தேகப்பட்டுக் கொல்லாமல்
கொல்கிற கொடூரன்
இன்னொரு வீட்டில்...

மூன்றாவதும் பெண்ணாகவே
பிறந்ததால் தொட்டில்
குழந்தை அமைப்பிடம்
ஒப்படைக்கிற தீர்மானம்
ஒரு வீட்டில்...

கல்யாணமாகி
வருடம் ஆறாகியும்
புழுப்பூச்சி இல்லை என்று
சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற
தம்பதி ஒரு வீட்டில்....

குதூகலம் கும்மாளம்
ஒரு வீட்டில், 
குடிகாரன் தொந்தரவு
மற்றொரு வீட்டில்...

ஒவ்வொரு வீட்டிலும்
இத்தனை வில்லங்கத்தை
வைத்துக்கொண்டு --
ஒன்றுமே நடக்காத மாதிரி
நாசுக்காய் நீண்டு
கிடக்கிறது வீதி...!!  

Friday, March 4, 2011

அற்ப மனிதனின் டைரியில் இருந்து.

கோவிலுக்குள் 
நுழையும் பொழுதே
வெளியே நிறுத்தியிருக்கிற
மொபெட் குறித்தும்
அதனடியே 
விடப்பட்டுள்ள .
காலணிகள் குறித்துமான
சிந்தனைகள்...
--ஒற்றை லாக் 
மட்டும் போட்டிருக்கிறேன்..,
ரெண்டையும் போட்டிருக்கலாமோ?
--பிய்ந்து போகிற
தருவாயில் இருக்கிற
பழைய செருப்பை
போட்டு வந்திருக்கலாமோ...,
போன வாரம் தான்
வாங்கிய புது ஜோடியை
போட்டு வந்திருக்கிறேன்...


மறுபடி மெனக்கெட்டு
திரும்பிப்போய் 
மொபெடின் ரெண்டாவது
லாக்கை போட்டு வந்திருக்கலாம்..
அந்தப்புது ஜோடி செருப்பை
மொபெடின் சைடுகவரில்
செருகி விட்டு வந்திருக்கலாம் ..

இந்த சிந்தனை 
ஓட்டங்களின் நடுவே 
சுவாமியின் முகம் 
ஜ்வலிக்கிற தீபாராதணை...

--புது செருப்பும் 
மொபெடும் அப்படியே 
இருக்க வேண்டும் என்கிற
பிரார்த்தனையே 
பிரதானமாகி  விட்டபடியால்
சில நாட்கள்
முன்னர் ஓடிப்போன 
மனைவி திரும்ப சீக்கிரம்
வர வேண்டும்
என்கிற பிரார்த்தனை
விட்டுப்போயிற்று...

Thursday, February 3, 2011

பாப்பாவுக்கான முத்தங்கள்

குழந்தைக்கு
நான் வைக்கிற 
முத்தங்களை                
மென்மையாக 
வைக்கச்சொல்கிறாள்
என் மனைவி...
மனைவிக்கு வேண்டுமானால்
அப்படி வைக்க 
முடியுமோ என்னவோ
பாப்பாவுக்கான முத்தங்கள் 
முரட்டுத்தனமானவை,
காட்டாறு போன்றவை...

அவ்வளவு முரட்டு
முத்தங்களிலுமே கூட 
ஓர் பதனம் கடைபிடிக்கப்படும்..
அந்த மெல்லிய கன்னங்களில் 
எனது மீசையோ தாடியோ
ஹிம்சிக்காத வண்ணம் 
ஓர் மென்மை இழையோடும்..

அது எனக்கும் குழந்தைக்கும் 
மாத்திரமே புரிந்த 
ரகசியம்... பார்க்கிற 
எனது மனைவிக்கும்
பிறர்க்கும், குழந்தையை 
தொந்தரவு செய்வதாகத்
தோன்றும்... அந்த
எனது முத்தங்களில் அது
உதிர்க்கிற கன்னக்குழிப் 
புன்னகையும், ஓர் 
உள்ளார்ந்த சிரிப்பும் 
இந்தப் பிரபஞ்சத்தில்
என் இருப்பை மிகவும் 
அர்த்தப்படுத்தும்....

Monday, December 20, 2010

காத்திருப்பு

எல்லா பலவீனங்களோடும்
கை குலுக்க வேண்டிய
நிர்ப்பந்தம்..
"நான் பலவான்களின்
உற்ற சிநேகிதன்...உங்கள்
கைகளைக் குலுக்குவதே
எனக்குத் தேவையில்லாத வேலை.."
என்று பலவீனங்களிடம்                      
சொல்ல நினைக்கிறேன்...

"நீ நினைப்பதையே நாங்கள்
புரிந்து கொள்வோம் "
என்கிற தோரணையில்
என்னில் ஊடுருவி
என்னை ஆக்கிரமிக்கின்றன
பலவீனங்கள்...
என் பலங்களையும் தைரியங்களையும்
உடனடியாக காலி செய்யச்சொல்லி
நாலாந்தரமாக நடக்கின்றன....

"கவலைப்படாதே ராசா...
இப்போதைக்கு நாங்க போறோம்..
கண்டிப்பா இந்த பலவீன சனியன்கள்
தொலையும்.. அப்ப திரும்ப வருவோம்"
--இப்படி என்னை
இருக்க வைத்துவிட்டுப்
போயிருக்கின்றன பலங்களும்
தைரியங்களும்..

சுலபத்தில் எல்லா
நல்லவைகளும் காத்திருக்க
சொல்லி விட்டு அதோகதியாக
நிறுத்தி விட்டுப் போய் விடுகின்றன..

மறுபடி பலங்களையும் தைரியங்களையும்
களவாடுகிற
திறன்களை பயங்களிடமும்
கவலைகளிடமும் இருந்தே
கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது....!!

Wednesday, October 28, 2009

உன் ஒற்றைப் பார்வையில்...

எதுவுமற்ற வெறுமை
வந்து அவ்வப்போது
மனசை
சூனியமாக்கினாலும்
உன் நினைவுகள் வந்து
யாவற்றையும் நிரப்பி
என்னை நிறைகுடம்
ஆக்கி விடும்..

என் மனக்குளத்தில்
உன் பிம்பம் போதும்..
சலனம் ஏற்படுத்தி விடும்..!
எத்தனையோ பேர்கள்
கல்லெறிந்த போதெல்லாம் கூட
கலங்காமல் இருந்த
மனக்குளம்
இன்றுன் .. ஒரே பார்வையில்
பேரலைகள் படர்ந்து
துவம்சம் செய்து
புரட்டிப்போட்டு விட்டது என்னை..!!

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...