Saturday, June 15, 2013

tms..

TM.சவுந்தரராஜன்..
அடேங்கப்பா.. எத்தனை எத்தனை பாடல்கள்..!! அவர் பாடுவதற்கு அசையாத வாய்களும்  உண்டோ?..
எம்ஜியார், சிவாஜி, என்கிற இரண்டு மாபெரும் தமிழ் சினிமாவின் சகாப்தங்கள் ... என்னதான் அற்புதமாக நடித்து நடிகர் திலகம் என்றும் புரட்சித் தலைவர் என்றும் பேர் எடுத்தாலும் ஸ்டைலாக அவர்கள் பாடி ஆட ஓர் TMS இல்லை என்றால் அத்தனை உயிரோட்டமாகத் திகழ்ந்திருக்கக் கூடுமா என்றால் அது உண்மையாகவே பதில் சொல்ல முடியாத கேள்வி தான்...

வேண்டுமானால் அவர்கள் இருவரும் இல்லை என்றால் இவருக்கு எங்கே வேலை இருந்திருக்கப் போகிறது என்று இவரது திறமை மீது பொறாமை கொண்டு எவரேனும் உளறி இருக்க முடியுமே ஒழிய... இவர் இல்லை என்றால் அந்த இரண்டு கலைஞர்களும் இப்படி பிரம்மாண்ட விஸ்வரூபம் எடுத்திருக்க முடியாதென்றே நம் எல்லாராலும் உத்திரவாதமாக அடித்து சொல்ல முடியும்.. !!

சிவாஜிக்கென்று ஓர் குரல் மெருகு.. எம்ஜியாருக்கென்று ஒன்று.. இவை போக, பக்தி ரசம் சொட்ட சொட்ட கடவுள் மீதான உருக்கமான பாடல்கள்..

இவரது திறன்களை அடுக்க பிரயத்தனப் பட்டோமேயானால், அது பனை மாதிரி  மிக நெடிதுயர்ந்த விஷயம்.... கடல் மாதிரி அகன்று விரிந்த அதிசயம்..

கடைசி வரைக்கும் எல்லாருக்குமே பாட வேண்டுமென்கிற நோக்கில், இறைவன் இவரை  நீண்ட ஆயுள் வரைக்கும் வைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும்..

இவரது பாடல்களுக்கு வாயசைக்கிற வல்லன்மை இப்போதைய எந்த நடிகர்களுக்கும் இல்லை.. இவர் பாடல்களுக்கு வாயசைத்தவர்கள் அநேகமாக எல்லாருமே இப்பூவுலகை விட்டு சென்று விட்டனர்.. அவர்களை எல்லாம் அனுப்பி விட்டுப் பொறுமையாக இப்போது தான் இவர் மறைந்து விட்டார்.. இனி மேல் லோகத்தில்  இருக்கிற எவருக்கும் பிரச்சினை இல்லை..

ரம்பை ஊர்வசியோடு ஆடிப் பாட பொருத்தமான குரல் அமையவில்லை என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த  எவ்வளவோஆத்மாக்களுக்கு  இனி tms வந்து விட்டது  குறித்து மிக்க மகிழ்ச்சி தானே??

Friday, June 7, 2013

சகிக்கமுடியாத சைக்காலஜி..?

எதிர்பாரா தருணங்களில் மிக மிக நல்ல கவிதைகள் மனசில் தோன்ற, அதனை பதிவிறக்கம் செய்கிற ஓர் சூழல் வாய்க்காத அவஸ்தை அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே தான் உள்ளது..

அப்படி நான் இழந்த கவிதைகள்  ஏராளம்.. ஆனால், பேனா நோட்டோடு எழுத அமர்கையில் மண்டையைப் பிய்த்தது போக முளைப்பது, சில அற்ப கற்பனைகளே...

அதனை எழுதாமல் விட்டுத் தொலைந்தால் தான் என்ன என்று தோன்றினாலும், சரி இதையாவது எழுதித் தொலைக்கலாம் என்று நான் தொலைப்பதையே, அநேகமாக நீங்களனைவரும் கண்டு பிடிக்கிறீர்கள் என்று என்னால் தீர்மானமாக சொல்ல முடியும்..

வாழ்க்கை நெடுகவே இப்படித்தான்.. நல்ல கவிதைகளைப் போலவே எல்லா நல்லவைகளையும் அடைகிற இலக்கோடு பிரயத்தனப்பட்டு, அடைந்து விட்ட மாயையுள் சிக்குண்டு... பிடிபட்ட சிட்டுக் குருவி சர்ர்ர்ர் என்று விட்டு நழுவித் தப்பிப்பது போல ஓர் இழப்புணர்ச்சியிலே நாமெல்லாம் மூர்ச்சையாகி ஆசுவாசத்திற்கு அலை பாய்கிறோம்..!!?

பொதுவாகவே பிடிபடாதவை சிறந்ததென்கிற அவசர முடிவை நாம் யாவரும் எடுக்கிறவர்கள்.. பிடிபட்டவை நம்முள் ஓர் லயிப்பற்று-- ஓர் அனாமதேய தன்மையில் ஊடாடுவதை ஒப்புக் கொள்கிற நாகரீகம் நமக்கு இருந்தாலே அது பெரிய விஷயம்..

வீட்டில் தயார் செய்து சுவையாக எலுமிச்சை சாதம் தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் கோவிலுக்கு நாம் கொண்டு சென்றிருந்தாலும், அங்கே எவரோ ஏனோ தானோ வென்று விநியோகிக்கிற இனிப்பே பற்றாமல் இருக்கிற சர்க்கரைப் பொங்கலுக்கு அடிதடி போடுவதில் ஓர் அநியாய சுவாரசியம் குவிந்து கிடப்பதை  இல்லை என்று சொல்ல எவரும் தயாரிலில்லை..!!


Monday, June 3, 2013

சற்று முன்னர்..

மொய்க்கிற ஈக்காக  
சுழிப்பது போல 
தெரிகிற 
பிணத்தின் முகம்...

நாசிப் பஞ்சை 
அகற்றச் சொல்கிற            
கட்டளையின் சாயல் 
அந்த முகத்தில்.. 

ஊதுவத்திப் புகை 
நெஞ்சை அடைப்பதாக 
மௌனமானதோர் 
புகார்.. 

மின்விசிறி சுழலாமல் 
வியர்வைக் கசகசப்பு 
ஓர் சங்கடத்தை 
நிகழ்த்துகிறது...
அகாலத்தில் 
வந்திருக்கிற இந்த 
மாரடைப்பு மரணத்தைத் 
தவிர்த்துவிடுகிற 
சாத்தியங்கள் 
இருக்கும் பட்சத்தில்...
இதற்காகவெல்லாம் 
--நான் மேற்சொன்னதைக் 
காட்டிலும் சற்று 
காட்டமாகவே 
நடந்து கொள்கிற சுபாவமுள்ளவன் 
தான் பழனிசாமி..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...