Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Monday, April 1, 2013

சுயம் ...

எனது பலவீனங்கள்
மறைக்கப் படுவதை
மிகவும் பலவீனமாக
உணர்கிறேன்...
அதே விதமாக--
எனது பலங்களை
மறைப்பதை
மிக பலமாக உணர்கிறேன்..!

இங்கிதமற்ற அலட்டல்கள்
அழகாகத் தெரிகிற
ப்ராயங்களும் உள்ளன...
ஆனால் -
ஓரிழையில் அவை
கடக்கப் படவேண்டும்..!
அல்லவெனில்,
நம்முடைய சிதிலங்களை 
நாமே அடையாளம்
காணத் தவறியவர்களாவோம் ..!!

Friday, January 21, 2011

நிகழ்.....

இறந்த மற்றும்
எதிர் காலங்கள் 
குறித்தான 
பிரக்ஞைகளிலேயே
அநேகம் பேர்களுடைய                         
வாழ்நாட்கள் கழிந்துவிட
நிகழ்கால ஸ்மரணை
சற்றும் அற்றுத்தான் 
வாழ்ந்து வருகிறோம்...

மெய்ஞானிகளும் 
பொய்ஞானிகளுமே கூட
நிகழ்காலத்தில் வாழ்ந்து
பழகச்சொல்கிறார்கள்...
வாழ்வின் மொத்த சாராம்சங்களும்
நிகழ்காலத்திலேயே 
புதைந்துள்ளதாகவும் 
இறந்த மற்றும் எதிர் காலங்கள்
யாவும் மலையளவு மாயை
என்கின்றனர்....

இதனை எல்லாரும் 
பன்முறை கேட்டாயிற்று...
மேற்கொண்டும் எவரேனும்
சொல்கையில் கேட்பதற்கு
சுகமாகவும் கடைபிடிக்க
சுலபமாகவும் தோன்றும்...
அதற்காக 
நேற்றைக்கு டீச்சர் 
கொடுத்த ஹோம் வொர்க்கை
மறக்க முடியுமா...
செய்யாமல் போனால் நாளைக்கு
அடிவாங்குவதை நினைத்து
பயக்காமல் தான் இருக்க முடியுமா?...



.

Wednesday, February 10, 2010

பிற்பாடு..

அனாவசியம் என்று
எதனையும் அவ்வளவு
அவசரப்பட்டு அப்புறப்
படுத்த முடிவதில்லை..

மேஜை எங்கிலும்
பரவலாக காகிதங்கள்..,
எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்
என்பதான அனுமானம்
பத்து நாட்களுக்கும் மேலாக...!

கசக்கி குப்பைக்கூடையில்
போட்ட பிற்பாடே அந்தக்
காகிதம் பிரத்யேகமான
தேடலுக்கு உள்ளாகும்...
-மேஜையின் மீது
நாய் கூட சீந்தாமல்
நாற்பது நாட்கள் கிடக்கும்...!!

நம் வாழ்க்கை கூட
அந்தக்காகிதம் போல தான்...
எந்தப்ப்ரயோஜனமும் அற்று
சும்மாவே கிடப்போம்..,
புதையுண்ட பிறகாக
ஆற்ற வேண்டிய ஆயிரம்
கடமைகள் அநாதைகளாகி
விட்டதாக
நம் ஆன்மா அரற்றும்?....


சுந்தரவடிவேலு

Tuesday, January 19, 2010

மயிலிறகு..

காதல் என்ற
மயிலிறகு வருடல்
வாழ்வு நெடுக
எத்தனை பேர்க்கு
வாய்க்கும்?
--நெடுக வேண்டாம்..,
ரெண்டொரு வருடங்கள்..?
அந்தக்கொடுப்பினை
கூட அற்று வெறுமனே
நகர்கிற கொடுமை,
பிறப்புக்கே இழுக்கென்று
அபிப்ராயிக்கத்தோன்றுகிறது...

குறைந்த பட்சம்
ஒருதலைக்காதலிலாவது
பொழுதுகள் கழிந்திருக்குமாயின்
அது கூட வாழ்க்கையை
சற்று நிரப்பி விட்ட மாயை...

மயிலிறகாக உணராமல்
மயிராக உணர்ந்து எவ்வளவோ
காதல்கள் செய்யப்படுகின்றன.,
--பின்னொரு நாளில் கொச்சை
படுத்தப்பட்டு , காதல் என்பதற்கான
தாத்பர்யமே சீரிழந்து ...
ஆனால் அப்படி இங்கிதமில்லாத-
வர்களுக்கெல்லாம் காதல்
துவக்கத்தில் சுலபத்தில்
சாத்யப்பட்டு விடுகிற
விபரீதம் ..

எவ்வளவோ மயிலிறகுக்காதல்கள்
ஒருதலைப்பட்சமாக மட்டுமே
ஏங்கி சாகடிக்க வைத்து விட்டு
நடை பிணமாக்குகிற
அவலங்கள் யாவும்....
--- காதலே அற்று வாழ்ந்து
சாவதை விட மேன்மையானதென்றே
அடித்துக்கூற முடியும்
காதல் உணர்ந்த எல்லாராலும்...!!


சுந்தரவடிவேலு

Thursday, October 1, 2009

அவஸ்தை..

எந்த வசீகரங்களுமற்ற
கனவுகளுடன் உறக்கம்...
விழிப்பில் தான் எல்லாம் சூன்யம்
என்றால் உறக்கத்திலுமா?..

ஞாயிற்றுக்கிழமை
சாயங்காலம் ... சினிமா பார்க்கலாம்
என்று திரையரங்கு போனால்
அரங்கு நிறைவு...
பிளாக் டிக்கட் வாங்கிப்பார்க்க
வேண்டியதாயிற்று...

பிறகு ரெண்டொரு நாட்கள்
கழிந்து ஓர் இரவில் வந்த
கனவிலும் சினிமா பார்க்க
தியேட்டர் விரைகிறேன்...
பிளாக் கில் கூட டிக்கட்
கிடைக்காமல் வீடு திரும்புகிறேன்...!!


சுந்தரவடிவேலு.

Saturday, August 29, 2009

எதற்கும் தயாராகும் மனசுகள்....

அன்றெல்லாம்
கனவுகளில் ---
நான் எதிர்பார்த்தாலுமே
கூடப் போதும்.. நீ
வந்து விடுவாய்..!
ஆதலால் அன்றைய
உறக்கங்கள் கூட
இன்றளவும்
வசந்தகால வனப்புகளுடன்
ஞாபகமாய் உள்ளன..

அன்றைய உறக்கம்
வராத இரவுகளில் கூட
நீ கனவாய் வந்தது போன்ற
பிரம்மைகள் உள்ளன..
விழித்திருக்கையில் --
நமது மடிகளில்
மாறி மாறி நாம் கிடந்து
அந்தக் காதல் உற்சவத்தை
உற்சாகமாய்ப் பகிர்ந்து கொண்டோம்..
--இப்படியாக
விழித்திருக்கையிலும் உறங்குகயிலும்
எந்தத் தருவாய்களிலும்
உன்னை நானோ என்னை நீயோ
இழப்பதற்கான சாத்யக்கூறுகளே அற்ற
அந்த இறந்த காலங்களை-----
விவாகரத்து பெற இன்னும்
ஒரு வார அவகாசமே உள்ள
இந்தச் சமயத்தில்
மீண்டும் ஒரு முறை
பகிர்ந்து கொள்ளப்
பிரயாசைப் படுகிறது என் மனது...!!

Saturday, August 22, 2009

அப்பா..

மறுபடி
பூமியில் என்னைப்
புதுப்பித்தவர்...
-என்னைப்பற்றிய
தனது லட்சியங்களுக்கு
சுதந்திரம் கொடுத்தவர்.,
...எனது லட்சியங்களை
இரக்கமில்லாமல் சிறைப்
படுத்தினார்...!
-சுதந்திரம் அளிக்கப்பட்ட
அவரது லட்சியங்களில்
நான் என்னைக்
கைதியாய் உணர்ந்தேன்..,
அவரால் சிறைப்படுத்தப்பட்ட
எனது லட்சியங்களில் மாத்திரமே
நான் சுதந்திரம் உணர்ந்தேன்...!
இந்த முரண்களால் மூர்க்கமானோம்..
வார்த்தைகளில் குளிர்ச்சி திணிக்க
மறந்து போனோம்...

சுலபத்தில் நான்
தோற்க நேர்ந்த என் அப்பாவின்
லட்சியங்களால்,
வெற்றி பெற்ற எனது
லட்ச்யங்களும் கூட
என்னுள் எவ்வித
சுவாரஸ்யங்களையும்
பதிவாக்கவில்லை...!!
-அன்றைய
அவரது லக்ஷ்யங்களுக்கான
கதறல்களை, இன்றைய
அவரின் இல்லாமையில் கூட
அசரீரியாக தொனிக்கக்
கேட்கிறேன்...!!

(2)

"IN FUTURE,
I WILL BE A DOCTOR
OR AN ENGINEER"
-திட்டவட்டமாக
சொல்கிறான் எனது
பத்தாம் வகுப்பில் படிக்கிற
மகன்...
நான் ஆகவேண்டும் என்று
என் அப்பா ஆசைப்பட்ட
தகுதிகள்.....
"அதைக் காட்டிலும்
தமிழ் இலக்கியத்தில்
அதிகம் சாதிக்கலாமே!"
-என்று சொல்ல விரும்பிய
நான்,
முரண்களை விரும்பாமல்
மௌனித்துக்கொண்டேன்....
இந்த நாசுக்கு அன்றைக்கு
என் தந்தைக்குத் தெரியவில்லை...!
"நான் தாண்டா மகனே உனக்கு
மகனா வந்து பிறந்து இருக்கேன்.."-
---என் கனவில் வந்த அப்பா சொன்னார்...!

விழிப்புற்ற நான் அருகில்
என் மகன் ஆழ்ந்து உறங்குவதைப்
பார்க்கிறேன்..
அப்பாவை மறுபடி நான்
பூமியில் புதுப்பித்து விட்டதாய்
உணர்ந்தேன்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...