Sunday, August 16, 2009

வலிமை நிரம்பிய மாயைகள் {சிறுகதை}

சமயங்களில் உன் குரல் என் ஞாபகத்துக்கு வருகையில், சுலபத்தில் உன் முகமும் என் ஞாபத்துக்கு வந்து விடும். அதே போல் தான் உன் முகம் ஞாபகம் வருகையில், குரலும் பிடிபட்டு விடும்.

வணிக மய்யமொன்றில் வீட்டு உபயோகப்பொருட்களுக்கான கண்காட்சி நடந்து கொண்டிருந்த ஓர் ஞாயிறு மாலையில் என் பொழுது உத்தமமாய் கழிந்துகொண்டிருந்தது.. வியாபார விசாரணைகளுடன் மனித நெரிசல் எப்பொழுதும் எனக்கு சுவாரஸ்யம் ஊட்டும். இன்னது வாங்கப்போகிறேன் என்கிற கங்கணம் ஏதுமற்று வெறுமனே கடைக்குக்கடை சுற்றி விலை விசாரிக்கிற சுகமும் தனி வகை. நானே எதிர்பாரா வகையில் ஏதேனும் பொருளை வாங்கி விடுகிற இன்ப அதிர்ச்சிகளும் நிகழ்வதுண்டு..

என்னவோ திடீரென்று நீ அந்தக் கூட்டத்தில் ஏதேனும் பொருளை வாங்குகிற முஸ்தீபில் விலை விசாரித்துக் கொண்டிருந்தாக வேண்டுமென்று கட்டாயமாகத் தீர்மானிக்க நேர்ந்தது. அந்த அசரீரி என்னுள் புகுந்து உன்னைத் தேடச்சொல்லிற்று. ஓர் தீர்க்கதரிசியின் மெருகில் உன்னைத் தேடும் பணியை மேற்கொண்டேன். பார்த்தும் கேட்டும் பல வருடங்களாகி விட்ட உன் முகமும் குரலும் என் அருகாமையில் தான் என்று தீர்க்கமாக நம்பட்துவங்கிற்று என் உள்மனது.

உன்னை
மிகவும் நான் காதலித்தேன், காதலிக்கிறேன், மேற்கொண்டும் காதலிப்பேன் என்பவை எல்லாம் ஆணித்தரமாகத் தீர்மானிக்கப்பட்டது போலவே, நீ என்னை காதலிக்கவில்லை, இல்லை, இல்லை என்பவைகளும் தீர்மாநிக்கப்பட்டவைகள் என்றே அனுமானிக்கிறேன்.உன்னைக் காதலிக்கச்சொல்லி வற்புறுத்துகிற திராணி எனக்கில்லை என்பதோடு - அதை விட அநாகரீகம் வேறில்லை என்கிற அபிப்ராயங்களும் கொண்டவன் நான்.
என் உள்மனதின் யூகம் உண்மையாகி விட்டது போலவே பக்கமிருந்து எங்கோ உன் குரல் என் செவியுள் பாய்ந்தது..அந்தக் கூட்டத்தின் அத்தனை இரைச்சல்களும் அல்பமாகி, உன் குரல் மாத்திரம் தெளிந்து தொனித்தது...

உடனடியாக
உன்னைப் பார்த்தாக வேண்டுமென்கிற வேட்கை அபரிமிதம் என் வாசம் இருப்பினும் , என்னையே நான் கட்டுப்படுத்திக்கொண்டு கொஞ்சம் தாமதித்துப் பார்க்கலாமே எனும் ஓர் வகையான சுவையில் என் கண்களை மூடிய வண்ணம் உன் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவனப்பாரு..நின்னுட்டே தூங்கறான்...என்று கூட comments கொடுத்தனர் சிலர். உனது குரலிலேயே கரைந்து போக ஆயத்தமானவன் போல தவத்தில் தவித்தேன். நீ பேசாத அந்த கொஞ்ச நேர இடைவெளியில் கூட _ அந்த இடம் பெயர்ந்து விட்டாயோ என்கிற அவசரத்தில் விழிப்புற்று துரிதமானேன். என் விழிப்பிநூடே உன் குரலும் துவங்கியதால் மறுபடி கண்களை மூடினேன்.

உன்னை
காதலிப்பதாக உனக்கு நான் அன்று விண்ணப்பித்ததை நீ கிழித்தெறிந்து விட்டதால் நான் சுக்கு நூறானேன். பிற்பாடாக மன்னிக்கச்சொல்லிக் கேட்டதற்கு மட்டும் என்னிடம் வந்து மன்னித்து விட்டதாகச்சொன்னாய்.
வெறும் நண்பர்களாக பேசலாம் பழகலாம் என்பதாகத் தீர்மானித்துக்கொண்டோம். அதுவே ஆயுளுக்கும் போதும் என்பதாக நான் ஆனந்தக்கண்ணீர் வடிக்க நேர்ந்தது.

"சுஜாவோட அழகு எவளுக்கும் வராது.. உனக்கும் கூட.." என்று என் மனைவியிடமே கூட ஆயிரம் முறைகள் பிதற்றியாயிற்று..என் மனைவி
தெளிவும் நம்பிக்கையும் அதீதம் மனசில் கொண்டவள் ஆதலால் எனது இந்த வேதனைக்காக என்றும் கோபித்ததில்லை. என்னை ஆசுவாசப் படுத்த இறங்கி விடுவாள். என் மனைவி எனக்கு ஓர் வரப்ரசாதம்..

உன் குரலுக்கான பெண்
நீ இல்லை என்பதோடு, உன்னுடைய அழகில் கால் பாகம் கூட அவள் இல்லை என்பது என்னுள் வெறுமைகளையும் வேதனைகளையும் கிளர்வனவாய் அமைந்தன. ஆனபோதிலும் உன்னை என் ஞாபகத்தில் நிறுத்த வைத்த அவளது குரலை மீண்டும் மீண்டும் கேட்கவே விழைகிறேன்.

விவஸ்தை தொலைந்த விதியின் பொருட்டு இனி நீயும் நானும் மேற்கொண்டு சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை போல அசரீரி பிதற்றுகிறது..
மிக்சியும் கையுமாக வீடு வந்த பொழுது மணி ஒன்பதிருக்கும். கண்காட்சி பற்றியும் , உன் குரல் குறித்து நேர்ந்த அவஸ்தைகள் குறித்தும் என் மனைவியிநிடத்து வெகு விமர்சையாக ப்ரலாபித்தேன்.

என்னைக் காதலிக்கிற
என் மனைவியை நான் பொருட்படுத்தாமல் , எவருக்கோ மனைவியாகி விட்ட உன்னை, அதுவும் என்னைக் காதலிக்காத உன்னை நான் காதலித்துக் கொண்டிருப்பது எவ்வளவு அநியாயமும் அசூயையும் நிரம்பியவை என்று நான் கருத நேர்ந்ததை என் மனைவியிடம் தெரிவித்த பொது, ஏனோ என்னைக்கட்டிக்கொண்டு மிகவும் அழுதாள் . நானும் அவ்விதமே அழுதேன் வெகு நேரம்...


சுந்தரவடிவேலு, திருப்பூர்.

4 comments:

  1. dear shankaralingam,
    i am sundaravadivelu. first of all i must thank you to study my short story. you conveyed that you dont understood. that may be my fault. sorry . next time i will try my best. thank you.

    v.sundaravadivelu

    ReplyDelete
  2. மிக நன்றாக இருந்தது.. நல்ல ஒரு அனுபவத்தை தந்தது.. தொடர்ந்து எழுதவும்..

    காதலின் வாசம், குரல்.. இன்னும் புலன்களுக்கு புலப்படாத நிறைய விசயங்களை அதை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்..

    இதை படிக்கும் போது என் சொந்த அனுபவம் நினைவுக்கு வந்து சென்றது..

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. very thanks mr.kannan.
    sorry. i just watched your comment now only...
    really it is making to boost up my writing career.
    once again i am thanking you sir..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...