Saturday, August 25, 2012

"கருவாச்சி காவியம்"..வைரமுத்து

சமீபத்திய எனது வாசிப்பில் என்னை மிகவும் லயிக்க வைத்த நாவல் கவிஞர் வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்"..

ஒவ்வொரு பக்கமும் நம் உயிரைப் பரவசப்படுத்தும் என்றால் அது மிகையன்று. அந்த வெள்ளந்தியான நடை, அதன் ஆழ்ந்த பொருள்கள், யதார்த்தம் வழுவாத சம்பவ சூழல்... ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் கெட்டித் தன்மை... ஐந்தறிவு படைத்த ஆடு கூட எவ்வளவு உயிரோட்டமாக ஆறறிவு மனிதனுக்கு சமானமாக சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது வை.முத்துவின் பேனாவால்?

இந்த நாவலை அதன் பாத்திரப் படைப்புகளை விமரிசிக்கிற வலிமை நிச்சயம் எனக்கில்லை என்பதோடு, அவ்விதம் விமரிசிக்கத் துணியும் பட்சத்தில், அதன் பக்கங்கள் இந்த நாவலைக் காட்டிலும் நீண்டு விடக்கூடும் ..

பல பக்கங்களை இங்கே வெளியிட அனுமானித்திருந்தேன்.. ஆனால் அது ஆகாத காரியம் என்கிற முடிவுக்கு வந்து ஒரே பக்கத்தை... ஒரே பக்கம் கூட இல்லை, அரை பக்க பத்தி ஒன்றை மாத்திரம் இங்கே வெளியிட விரும்புகிறேன்... ஒரு பானை சோற்றுக்கு ஒரே சோறு பதம் என்கிற பழமொழிக்கு சான்றாக இதை நீங்கள் உணரக் கூடுமென்று மிக நம்புகிறேன்..

294 ஆம் பக்கத்திலிருந்து..


"எத்தன நாளைக்கு சோதிப்பியோ சோதிச்சுக்க சாமி... வீட்டைத்தான் புடுங்கிட்ட..புடுங்கிக்க... கோயில் இல்லாட்டி சாமி இல்லேன்னு போயிருமா?. வீடு இல்லாட்டி நான் இல்லேன்னு போயிருவனா?
--வீடுன்னா என்ன?.. எல்லாரும் கடைசியா விட்டுட்டு வெளியேறப் போற ஒரு எடம்.. ஒடம்ப காலி பண்ணிட்டு உசுரே போயிரப்போகுது ஒரு நாளைக்கு. 
ஒரு வீட்டை காலி பண்ணிட்டு வெளிய போறப்ப மட்டும் மசமசன்னு ஏன் மண்ட காயணும் ?"

இன்னொன்னும் புத்தியில ஓங்கி ஒறைக்குது அவளுக்கு..

பூமியத்தான் மனுஷன் தம் பேர்ல எழுதிக்கிறானே ஒழிய, பூமி தன் மேல மனுஷன் பேர என்னைக்காச்சும் எழுதி வச்சிருக்கோ?
--இதுல என் வீடு என் காடுங்கறது எல்லாம் முதல் போட்டு வாங்கி வச்ச முட்டாள் தனமா இல்லையா?
இப்ப நீ இருக்கற வீடு கொஞ்ச காலத்துக்கு முன்னுக்கு ஒன்னதா? இல்ல, ஏழேழு தலைமொறைக்கும் ஒனக்கோ ஒன்குடும்பத்துக்கோ இருக்கப் போகுதா? 
இது ஒரு சத்திரம். வந்து போற நாமெல்லாம் வழிப் போக்கருக.. சத்திரம் சொந்தமாகுமா சாலையில போறவனுக்கு?

வீடு மாறி வீடு போறப்ப அது நல்ல வீடு இது கெட்ட வீடுங்கறாங்களே அது நெசமா?.. எல்லா வீட்டுக்கு மேலயும் மழை விழுந்திருக்கு..எல்லா வீட்டுக்குக் கீழையும் ஒரு பொணம் கிடந்திருக்கு..
வீடுகள்ல நல்லது கெட்டது , ஒன்னது என்னதுங்கற தெல்லாம்  வெறும் மனப்பெரட்டு.."

-இப்படி நாவல் முழுக்க எல்லா பக்கங்களுமே சுவாரசியம் ததும்பிக் கிடக்கிறது.. தவறாமல் யாவரும் படிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். . நன்றி.





1 comment:

  1. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...