Wednesday, July 1, 2015

யதார்த்தங்கள் வலியன ...

நாம் என்றேனும் ஏதேனும் கிஞ்சிற்று எழுதவதற்கே மலையளவு யோசிப்பதும், எழுதினால் எடுபடுமா என்று சந்தேகிப்பதும், பிறகு எழுதித் தான் பார்ப்போமே என்று எழுதி, ரெண்டொரு கைகளாவது  அப்ளாஸ் செய்கிறதா என்று கவனிப்பதும், அப்படி அப்ளாஸ் கிட்டாத பட்சத்தில் உடைந்து மேற்கொண்டு எழுதும் திராணி இழந்து மவுனித்துக் கிடப்பதும், நான்கு கைகள் சேர்ந்து தட்டி உற்சாகப் படுத்தும் பட்சத்தில் கர்வத்தில் மீசை முறுக்கி 'கவிதை எனது தொழில் .. கதைகள் எனது எழில்' என்று பாரதி போன்று முழங்கி மூர்ச்சை அடைவதும்... தட்டுத் தடுமாறி ஆசுவாசமடைவதும்.. 

அதிகம் எழுதாமலும் , எழுத்து ரீதியாக எவ்வகைப் பிரபலங்களும் கிடைக்கப் பெறாத என் போன்றோர்க்கே எழுதுவது என்பது இவ்வளவு ரசாயன சுனாமிகளை நிகழ்த்துகையில் ..
பிரபல எழுத்தாளர்களும், பற்பல பதிப்புக்கள் பெற்று அவை நிமித்தம் ராயல்டி பெறுகிற.. எழுதுவதையே சுவாசமாகக் கொண்டுள்ள அவர்களை நிச்சயம் வியந்தாக வேண்டும், அவர்களைக் கண்டு சற்றே பயந்தாகவும் வேண்டும்.. 

அந்த கோதாவில் நாமில்லையே என்கிற அங்கலாய்ப்பு தவிர்க்க அசாத்யமான உணர்வாக  மனசுள் விக்கி நிற்பது சற்று வெட்கமும் வேதனையும் ஊட்டுவன.. 

யாவற்றுக்கும் அதிர்ஷ்டக் காற்று .. நேரம்.. என்றெல்லாம் தோராயணமாக ஏதோ  சொல்வது இன்னும் என்னுள் அசூயை நிகழ்த்துவதாக உள்ளது.. 

அதனதன் போக்கில் சூழல்களை விட்டு விடுவதே ஆரோக்கியமாக உள்ளதே அன்றி, நல்லவற்றை எல்லாம் நம்வசமாக்கும் முஸ்தீபில் வேரோடு பிடுங்குகிற பேராவல்களும் தாகங்களும் குற்ற உணர்வுகளை விதைப்பனவே அன்றி வேறென்ன? 

அந்தந்த இலக்கை அடையப் பிரயத்தனிப்பதும், கிடைக்கப் பெற்றதும் அகமகிழ்வதும், சாத்தியமற்றுப் போகையில் சுணங்கிப் போய்க்  கிடப்பதும், மறுபடி ஒரு வெறி  பூத்து சாதித்தே தீருவதும்.. இதெல்லாமே ஒருவித அறியா பிராயத்தில்  நடந்தேறி விட்டால் தேவலாம்.. 

காலக் கடத்தலில் , பிரத்யேகமான ஒருவகை முதிர்ச்சியில் அவ்விதம் பிரயத்தனிப்பது என்பதெல்லாம் சிறுபிள்ளைத் தனமாகவும் நமது சுய கவுரவங்களும்  சுய மரியாதைகளும் நமக்கே அலங்கோலப் பட்டு விடுகிறது.. 

ஆகவே, இந்த வாழ்வில் எந்தத் தகுதி நிலவினும், அதனூடே யதார்த்தமாகப் பிரயாணிக்கக்  கற்பதே உயர்தர சுபாவமே அன்றி, அதனின்று பிய்ந்து போய் பிரபலத்தில் மிளிர்பவர்கள் பின்னாடி ஓடவாரம்பித்தால் இந்த வாழ்க்கை, அனாவசிய  வலிகளையும் கவலைகளையும் நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் என்பதே எனது அனுமானங்களும் எச்சரிக்கைகளும் ஆகும்.. !!

3 comments:

  1. எதையும் தொடர முடிவதை திருப்தியுடன் தொடர்வதே என்றும் இனிமை...

    ReplyDelete
  2. சுந்தர், உண்மையை உணர்ந்து, அனுபவித்து எழுதியுள்ளிர்கள். அன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தும் அருமை...கடைசி பாராவில் நீங்கள் எழுதியிருப்பது அனுபவம் கொடுத்த கொடை.

    ReplyDelete
  3. thanks for reading my concept and reviewing it dear friends..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...