Tuesday, July 21, 2015

பஞ்சாயத்து..

அந்தக் காய் வண்டிக் காரனிடம் ஜானகியின் பேரம் எனக்குள் ஒருவகை இனம்புரியா இம்சை தருவதாக இருந்தது..
நான்கைந்து வீட்டு வாடகைகள் வருகின்றன.. அவை போக வட்டிக்காசு வருகிறது வீடு தேடி.. நகரின் பிரதான பிராந்தியத்தில் காம்ப்ளெக்ஸ் கடைகள் வாடகை வேறு வருகிறது..

எனது வீட்டு ஜன்னல் வழியே இந்த அசூயை தருகிற "பேர சினிமா" அரை மணிக்கும் மேலாக விளம்பர இடைவெளி அற்று ஓடுகிறது..
ஜன்னலை சார்த்துகிற திராணி எனக்கு அற்றுப் போயிற்று.. ஏனெனில், ஜானகி என்பவள் பேரம் பேசி கொஞ்சம் அசிங்கமாகத் தெரிந்தாலும், அவளது உடல்மொழி அலசி ஆராய உகந்ததாகவே இருந்தது..
என்னுடைய சபலங்கள், அவளது பேரத்தைக் கூட நியாயப் படுத்தி விடுகிற அக்கிரமம் நிரம்பியவை..

இப்போது கூடப் பாருங்கள்.. அவளது பேரத்தை மையப் படுத்தி அவளைக் கேவலமாக சித்தரித்து ஒரு சிறுகதை புனைகிற நோக்கில் தான் இதனை எழுத விழைந்தேன்.. ஆனால், சற்றே பிசகி அவளது பேரக் கட்சியில் இணைந்து அவளது கொள்கை பரப்பும்  செயலாளனாக செயல்படும் தீவிரத்தில் என்னால் இப்போது இயங்க முடிகிறது..

ஆரம்ப கட்டமாக என்னுடைய பரிதாபத்துக்குப் பாத்திரமாக அந்தக் காய்க்காரன் இருந்தான் என்ற போதிலும், இந்தக் காட்சி அமைப்பில் அவனை பேசாது வாய்மூடி இருக்கச் சொல்லி என் இதயம் பரபரத்தது..

முன்டாஸ் பனியனில் இருந்த நான், சட்டை மாட்டிக் கொண்டு அந்த ஜானகியை நெருங்கி.. "என்ன பிரச்சினை?" என்றேன்..
மனம் கவர்ந்த ஒருத்திக்காக ஒரு பஞ்சாயத்துத் தலைவனாகவே மாறிவிட முடிகிறது என்னால் .. !
வீட்டில் நடக்கிற அற்பப் பிரச்சினைக்குக் கூட எந்தத் தீர்வையும் எளிதில் காண சாத்தியப் படாத என்னால், எப்படி ரோட்டுக்கு வந்ததும் சிங்கம் போன்று கர்ஜித்து . கேட்பவரை துவம்சம் செய்கிற வகையிலே உரையாடி ஒன்றுமில்லாமல்   செய்து விட முடிகிறதோ என்று என் மனைவி குழந்தைகள் ஆச்சர்யம் த்வனிக்க என்னை அதே ஜன்னல் வழியே வந்து  நோட்டமிடுவதை ஒருவகைப் பெருமிதமும்  லஜ்ஜையும் கொண்டு தான் காண முடிகிறது ...

நன்றி நவில்கிற நாகரீகம் புரியாத ஜானகி அவளது பேரத்தில் ஜெயித்து நகர்ந்து விட, கொலைவெறியில் காய்க்காரன் வெறிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு "இந்தத் தேங்கா என்ன வெலைப்பா?" என்கிற எனது சுரத்தற்ற கேள்விக்கு  "நகரு சாரு .. நீ தேங்கா வாங்கிக் கிழிச்சது போதும் ' என்று சொல்லாமல் சொல்லி நகர்ந்தான் காய்க்காரன் .. 

'இனி என்ன ஆனாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் தான் எனது வேலை '  என்கிற கொள்கையோடு என் வீட்டிற்குத் திரும்பினேன்.. 

எனது மனைவியின் மௌன நக்கல்கள் வலி ஏற்படுத்துபவை.. 
இருப்பினும் 'இதெல்லாம் சகஜமப்பா' என்கிற ரீதியோடு வாழப் பழகியவன் நான்.. 

1 comment:

  1. பாக்கியராஜ் ஞாபகம் வந்தது... ஹிஹி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...