Friday, February 27, 2015

பயணங்கள் முடிகிறது..

நம்முடைய அன்றாட பயணங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிற பேருந்துகளின் அவல நிலைமையை சற்றே இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..

முதற்கண் அரசாங்க ரீதியாக செயல்படுகிற பேருந்துகள் குறித்து சிலவற்றை சொல்கிறேன்..
எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஸ்லைடிங் ஜன்னல் கதவுகள் இருந்து வந்தன.. அவரவர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப , அப்படியோ இப்படியோ நகர்த்திக் கொண்டு நிம்மதியாக இருந்தனர் பொதுமக்கள்.. ஆனால், இப்போது மேலிருந்து பனால் என்று இறங்குகிற கண்ணாடி விண்டோ.. குழந்தையின் கையோ விரல்களோ தப்பித் தவறி வைக்கப் படுமாயின் சுலபத்தில் துண்டு ஆகிவிடக் கூடும். சில ஜன்னல் கதவுகள் மிக அவசரமாக இறங்கி பெரும் சப்தம் நிகழ்த்தும்.. சில ஜன்னல்களோ, என்ன இழுத்தாலும் கீழே இறங்காது.. அதையும் மீறி, கீழே அப்பாடா என்று கொண்டு வந்தாலோ, மறுபடி காற்று வரத் திறக்க வேண்டுமாயின் பகீரதப் பிரயத்தனப் படவேண்டும்.. 3 பேர்கள் சேர்ந்து எப்படியோ மேலே ஏற்றி நிறுத்தினாலோ, அந்த லூப்பைப் போட ஒரு போராட்டம்...

ஒரு கோட்டரைக் கவிழ்த்துக்  கொண்டு உட்காருகிற கபோதிகளுக்கு இதெல்லாம் பிரச்சினை  இல்லை.. காற்று வந்தால் என்ன, எக்கேடு கேட்டால் என்ன.. அந்த லாகிரி மப்பில் அண்ணன் குறட்டை போட ஆரம்பித்தால் , தான் இறங்க வேண்டிய  இடம் கூட கடந்து போய் வேறெங்கோ இறங்கி மறுபடி திரும்பி வந்தாக வேண்டும். குடிகாரப் பசங்களுக்குப் பக்கத்தில் உட்காருகிற நபர் தான் பெரிய துரதிர்ஷ்டசாலி.. அந்தக் கருமாந்திர வீச்சமும் அவ்வப் போதைய  அவனுடைய அனத்தல்களும் தாங்கவே முடியாது.. எழுந்து போய்  எங்கேனும் நின்று கொண்டால் கூட தேவலாம் போன்று ஒரு அசூயை வரும்..
ஆனால் அதையும் தாண்டி அசதி ஆட்கொண்டு 'போகுது போ' என்று அப்படியே  கிடக்க நேரும் .. ..
.
இருவர் அமரவேண்டிய இருக்கையில் இருவர் அமரலாம்.. மூவர் அமரவேண்டிய இருக்கையில் மூவர் அமரலாம் என்பது அரசாங்கப்  பேருந்துகளின்  தனிச் சிறப்பு.. சமயங்களில் ஏதோ ஒரு குண்டு வந்து சிக்கிக் கொண்டால், அம்புட்டுதான்.. மற்ற இருவர் கதியும் அதோகதி..
அனேக அரசாங்க பஸ்களில் டிஜிட்டல் ஸ்பீக்கர்களுக்கு வேலையே இல்லை.. பழைய காலத்து  வானொலி போன்று ஏதாவது கவைக்கு உதவாத பாடல்கள் முழங்கிக் கழுத்தறுப்பு நடக்கும்.. ஏதோ  நடுநடுவே இளையராஜாவின் கண்மணியே காதல் என்பது கற்பனையோ , என் வானிலே போன்ற பாடல்கள் ஒலிக்கும்.. அதுவும் இளையராஜாவுக்காக அல்ல, ரஜினி படங்கள் என்பதற்காக.. ஆனால் அதற்கடுத்த பாடலே, நாடு அதை நாடு நாடா விட்டால் ஏது வீடு  என்று சாகடிக்க ஆரம்பிப்பார்கள்.. அதுவும் கூட எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக அல்ல, எம்.ஜி.ஆர் க்காகவே.. !!

சில அரசாங்கப் பேருந்துகள் வெண்ணையில் கத்தி வைத்த விதமாக அழகாக வழுக்கிக் கொண்டு போகும்.. சில வண்டிகளோ, நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வெரச்சுப் போய் .. "ஆள உடுங்கடா சாமி" என்ற விதமாக இறங்கி  ஓட நேரும் நமது ஸ்டாப் வந்ததும்..
இந்த ஒரு ரூபா 2 ரூபா பிரச்சினைகள் அவ்வப்போது முளைத்து கண்டக்டருக்கும்  பயணிக்கும் ஒரு மூன்றாம் உலகப் போரே நடைபெறும்..
அத்தனை சில்லறைகளை ஆட்டிக் கொண்டே அப்புறம்  இறங்கும் சமயத்தில் தருவதாக சொல்லி கடுப்பேற்றுவார் கண்டக்டர்..  பயணிகள் சிலரோ  அந்த ஒற்றை ரூபாயில் உலகையே விலை பேசுவது போன்று அத்தனை கறாராக இருப்பர்..

சில பேருந்துகளில் ரிலாக்ஸாக சாய ஒரு பிடிமானமான கைப்பிடி இருக்கும்.. அனேக பேருந்துகளில் அது இருக்காது.. ஒரு தோதில்லாமல் தான் மண்டையை  முன்சீட்டில் பதிய வைத்தாக வேண்டும்..

இனி நம்ம ஆஸ்த்தான ப்ரைவேட் பஸ்கள் பற்றி பிதற்றுவோம்..

மேலே, கீழே, ஒரே அமர்க்களம்.. சீலிங் டிசைன் சும்மா பின்னித் தள்ளும்.. பந்தாவான சீட்கள்.. கலர் கலரான ஃபோம்கள் ..
ஆனா மச்சி.. 2 பேரு குந்தி இருக்கற சீட்ல 3வதா ஒருத்தர் போயி ஒக்காந்தார்னு வைங்க. அவ்ளோ தான்.. செம இம்சை அது..
அதுவும் ஜன்னலோரத்துல ஒருத்தர் உட்கார்ந்திருப்பார்.. அப்புறம், இந்த ஓரத்துல ஒருத்தர் உட்கார்ந்திருப்பார்.. 3வதா வரும்  நபருக்கு நடுவில் தான்  இடம்.. காலை நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியவே முடியாது..ஒவ்வொரு சீட்டுக்கு அடியிலும்  ஸ்பீக்கரையோ
  அல்லது வேறு ஏதாவது கருமாந்திரத்தையோ நிரப்பி விடுவார்கள்.. இந்த அவஸ்தையில் சும்மா ஹோம் தியேட்டர் கணக்காக போன மாதம் ரிலீஸ் ஆகி ஓடுகிற விஜய் அஜீத் படங்கள் .. டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்..
சீட்டிங் நிம்மதி இல்லை, கூட்டம் பம்முகிறது.. குண்டியைக் கொண்டு வந்து முகத்தில்  இடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்.. மூவர் சீட்டில் இரண்டரைப் பேர்கள்.. மற்றும் இருவர் சீட்டில் ஒன்றரைப் பேர்கள்..

வண்டி பறக்கிறது.. கன்னாபின்னா வேகம்.. அதனை ரசிக்கிற சிலர், அதிலே பயக்கிற சிலர்.. பின்னாடி ஏறுகிறவர்களை முன்னுக்கு செல்ல சொல்லி கத்துவதும்  முன்னாடி ஏறுகிறவர்களை பின்னுக்கு நகர சொல்லி...
மக்களை ஜூஸாக்கி பிழிகிறார்கள்.. இரட்டை நடத்துனர்கள்..
ஆனாலும், ஒரு ஸ்டாப்பில் நிறுத்த சொல்லி கை காட்டுகிற நபருக்கு உடனே பஸ் நிற்கிறது.. தான் கட்டளை இட்டதும் நின்று தன்னை ஏற்றுகிற பேருந்தை பெருமையாகக் கருதி உள்ளே வருகிற அந்தப் பயணிக்கு உள்ளே புகுந்ததும் தான்  நாற்றம் புரிகிறது..
நிற்கக் கூட இடமற்ற இதனை எதற்கடா நிறுத்த வேண்டும்?

ஆனால் அரசாங்கப் பேருந்தோ, விசாலமாக இடமிருந்தால் கூட, பிரத்யேக நிறுத்தத்தில் தான் அவை நிற்கும்... கும்பலாக ஏறுவதை இம்சையாக உணர்கிற நடத்துனர்..
எத்தனை கலெக்ஷன் ஆனாலும் அதே சம்பளம் தான்.. என்கிற அசமந்தம்..

ஆனால், தனியார் பேருந்து நடத்துனர்களுக்கோ, கூட்டத்தை நிரப்புகிற அளவு போனஸ் .. கமிஷன் என்கிற அடிப்படை.. அது போக சம்பளம்..

இவர்களுடைய இந்த மாதிரியான சுயநல பிரச்சினைகளுக்கு பலிகடா ஆவது அப்பாவிப் பொது மக்கள் தான்..

இதெல்லாம் போக, போட்டி போட்டுக் கொண்டு துரித கதியில் பேருந்தை முடுக்குவது, டைமிங் மிஸ் ஆனால், டென்ஷன் ஆகி ஆக்ஸலரேட்டரில் இருந்து காலை எடுக்க மறப்பது.. , பிரேக்கை மிதிக்க மறப்பது.. பிறகு மரத்தில் மோதியும் டீலாவுள் கவிழ்ந்தும் மக்களை காயப் படுத்துவது, உசுரை எடுப்பது.. அதற்கென அரசாங்கம்... சுமாரான  காயத்துக்கு ரூ.25 ஆயிரம், சூப்பர் காயத்துக்கு ரூ.50 ஆயிரம் , சாவுக்கு ரூ.1 லட்சம் ...ஹோட்டல் மெனு போன்ற   அறிவிப்புக் கூத்துக்கள்.. !
நெஜமாலுமே இந்தப் பணமெல்லாம் கிடைக்குதான்னு பாதிக்கப் பட்டவங்க கிட்ட தெளிவா கேட்டா தான்  தெரியும்.. மத்தபடிக்கு நமக்கெல்லாம் தொலைகாட்சி மற்றும் பேப்பர் செய்தி தான்..

வேண்டுமானால், அந்த ரூ.25 ஆயிரம் மெனுவை முயன்று பார்ப்போமா? ஹிஹி.. ஐயோ ஐயோ..


1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...