Tuesday, April 29, 2014

கிராமாயணம்....

பால்ய விடுமுறைக் காலங்கள் முழுதுமாக சொர்க்கமாக உணரப் பட்டு கழிக்கப் பட்டு வந்த இடம் எனது தாய் பிறந்த கிராமம். நானும் எனது தாயின் வீட்டு இடது புறத் திண்ணையில் தான் பிறந்தேன் என்பது கல்வெட்டில் பதித்தாக வேண்டிய அற்புத வரலாறு.. 

எப்போது சென்றாலும் நான் அந்தத் திண்ணையை என்னவோ ஓர் தெய்வாம்சம் பொருந்திய பிராந்தியம் போன்று மெய்சிலிர்த்துப் போய் சற்று நேரம் உற்று நோக்கி இன்புறுவது  வழக்கம்.. 


பிற்பாடு வேலை நிமித்தங்களாலும் இன்னபிற சூழல்களாலும் அந்த கிராமம் சென்று அளவளாவுதல் என்கிற சந்தர்ப்பங்கள் வாய்க்காமல், அல்லது நானே அமைத்துக் கொள்ளாமல் என்று சில பல வருடங்கள் நழுவி . ஓடிவிட்டன....

அப்படி ஓர் அடர்த்தியான இடைவெளிக்குப் பிற்பாடு நேற்று சென்று வருகிற நிலைமை அமைந்தது. எனது அம்மா வகையறா உறவுகள் கறிச்சோறு போடுகிறார்கள் என்கிற ஹைலைட் விஷயத்தோடு எனது பயணம் மேற்கொள்ளப் பட்டது.. 


16வயதினிலே ஸ்ரீதேவி பாடித் திரிந்த செந்தூரப் பூவே பாடல் போல பளீரென்று இருந்த கிராமம் அது. பரவசப் புல்வெளிகள் எங்கும் வியாபித்து பட்டாம் பூச்சிகளின் வண்ணப் படையெடுப்பில் எமது வசந்தங்களை மெருகேற்றிய சுகந்த ஸ்தலம் அது.. ஜீவ ஊற்றாய் ஜலம் கசிந்த கிணறுகளோடு எந்நேரமும் மோட்டாரில் நீர் பாய்ந்து சோளக் கதிர்களும் சம்பா நெற்களும் பூத்துப் பூரித்து, வகை புரியா பல வகையறா பட்சிகளின் பரவசச் சிறகடிப்புகள் தொடர் நிகழ்வாக இருந்த  இன்பபுரி அது.. 


அந்த சுவடுகள் என்றைக்குத் தொலைந்ததோ நானறியேன்.. ஆனால், எனக்கு எல்லா கொடுமைகளும் இந்த ஷணத்தில் துவங்கி விட்டதாக உணர்ந்து அங்கலாய்த்தேன்.. ஆம், ஓர் பேரழகு ஸ்திரீ, பரதேசிக் களவாணிகளால் கதறக் கதறக் கோரமாகக் கற்பழித்து சீரழிந்த கோலத்தில் காட்சி அளித்தது கிராமம்.. 

தலைமீது தீசட்டி வைத்தது போல வெய்யில்.. செருப்பற்ற கால்கள் ரத்தம் சுண்டி  நடக்கிற திராணியை இழக்கக் கூடிய கொதிநிலை... வறண்டு கிடக்கிற எல்லா கிணறுகளும்..  தலைவிரித்தாடுகிற தண்ணீர் பஞ்சம்.. பல மாதங்களாக தனது சுவடுகளைப் பதிக்காத மழை.. காய்ந்து கருகிக் கிடக்கிற தென்னைகள், மற்ற பயிர்கள்.. விவசாயம் விவஸ்தை இழந்த  அனாதைச் சிறுக்கி  போல.. விவசாயிகள் தற்கொலைக்கு முன்னரே மூர்ச்சையாகிக் கயிற்றுக் கட்டில்களில்.. 


அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. 


கெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. 
மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. 

கறிசோறு உண்கிற பசி கூட காணாமற்போயிற்று.. 

அன்றெல்லாம் எமது வருகையை அகமகிழ்ந்து வரவேற்று எம்மை அரவணைத்துக்  கொண்ட இதே கிராமம்.. 
இன்றைக்கு எமது கால்களைக் கட்டிக் கொண்டு உதவிக்குக் கேவுவதாக எனக்குத்  தோன்றியது.. 

அடுத்த நாள் நகரம் வந்து எமது அலுவல்களில் முடங்கி வேறு வகையறா பிரக்ஞையில் மூழ்குகிறேன்... 

எமது கால்களைக் கட்டிக் கொண்ட என் தாயின் கிராமத்தை உதறி விட்டு வந்த குற்ற  உணர்விலோ என்னவோ அற்பமான வேலைகள் எல்லாம் கூட வழக்கத்துக்கு  மாறாகப் பிசகல் தட்டிற்று..  

5 comments:

  1. அண்ணேன் , அடிச்சு துவம்சம் பண்ணீட்டீங்க ... வலியைக்கூட இவ்வளவு அழகாக , ஆழமாக சொல்லலாம் போல ....

    Write up ....
    Wonder ... Wonder ...Wonder ...

    ReplyDelete
  2. //அடர்த்தியான இடைவெளிக்குப் பிற்பாடு //- வார்த்தைப் பிரயோகம் வெகு அழகு ...

    ReplyDelete
  3. //16வயதினிலே ஸ்ரீதேவி பாடித் திரிந்த செந்தூரப் பூவே பாடல் போல பளீரென்று இருந்த கிராமம் அது. பரவசப் புல்வெளிகள் எங்கும் வியாபித்து பட்டாம் பூச்சிகளின் வண்ணப் படையெடுப்பில் எமது வசந்தங்களை மெருகேற்றிய சுகந்த ஸ்தலம் அது.. ஜீவ ஊற்றாய் ஜலம் கசிந்த கிணறுகளோடு எந்நேரமும் மோட்டாரில் நீர் பாய்ந்து சோளக் கதிர்களும் சம்பா நெற்களும் பூத்துப் பூரித்து, வகை புரியா பல வகையறா பட்சிகளின் பரவசச் சிறகடிப்புகள் தொடர் நிகழ்வாக இருந்த இன்பபுரி அது.. //


    OMG .... செம்மய்யா இருக்கு பத்தி

    ReplyDelete
  4. கறிசோறு - கறி"ச்"சோறு ?

    ஓர் தெய்வாம்சம் - ஒரு ?

    தீசட்டி - தீச்சட்டி ?

    ReplyDelete
  5. ஆஹ்... எமது அனுபவங்களை தாங்களும் இவ்வளவு முழுமையாக உள் வாங்கியமைக்கு மிகவும் நன்றி திரு.ஜீவன் சுப்பு அவர்களே.. உடன், எமது வார்த்தைப் பிழைகளும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.. அதற்கும் என் நன்றி

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...