Saturday, November 29, 2014

ஆன்மீகக் குழப்பங்கள்..

எல்லா ஜீவராசிகளின் மூலாதாரங்களையும்  சற்று கண்மூடி யோசிக்கையில், நம்மில் பீறிடுகிற ஆச்சர்ய உணர்வு நம்மையே பிய்த்தெறிந்து விடும் போலும்..!
நமக்காவது ஆதாம் ஏவாள் முதற்கண் படைக்கப் பெற்றனர்.. பிற்பாடு ஆப்பிள் ஆதாமால் உண்ணப் பட்டு மனித இனம் பெருகிற்று என்கிற அந்த ஆறாமறிவு புனைந்து வைத்துள்ள கற்பனையையோ --ஒருக்கால்-- உண்மையையோ நாம் சேகரித்து வைத்திருக்கிறோம் உத்தேசமாக.. !

ஆனால் இன்னபிற ஜீவராசிகளுக்கு? அவைகளுக்கும் மனிதனே தான் ஏதேனும் கட்டுக் கதைகள் புனைந்தாக வேண்டும்.. புனைந்து அவைகள் தான் மிகவும் உண்மை என்பது போன்று நிரூபித்தாக வேண்டியுள்ளது..

இத்தனை கோடி ஜீவராசிகள் இருக்கின்றன..
நம் பெற்றோர் சேராமல் நாமில்லை.. நாம் சேராமல் நம் பிள்ளை இல்லை.. நம் பிள்ளைகள் சேராமல் நமக்குப் பேரன் பேத்திகள் இல்லை..
இதே முறை மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.. !

ஆனால்----

இந்த எல்லா ஜீவராசிகளும் பெற்றவர்களே இல்லாமல் முதல் உற்பத்தி ஒன்று நிகழ்ந்துள்ள அதிசயம் யோசிக்கையில், அங்கே தெய்வம் நம்பப் படுகிறது..

அதன் தொடர்ச்சியாக மக்களால் தெய்வங்கள் பல கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உட்படுத்தப் பட்டன.. உருவங்கள் பொறிக்கப் பட்டன.. கற்சிலைகள் செதுக்கப் பட்டன..
மனிதன் தெய்வங்களுக்கு பல பரிமாணங்கள் மற்றும்  பரிணாமங்களைக் கொடுத்தான்.. பல சக்திகளைக் கொடுத்தான்.. அரிவாளை, சூலத்தை, குத்தீட்டியை .. என்று உபகரணங்களை வழங்கினான். நிராயுதபாணியாக நின்ற கடவுளின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து முகங்களில் குரூரம் கொப்பளிக்கச் செய்தான்.. தவறு செய்கிற--- குற்ற உணர்வு கொண்ட நபர்களை மிரளச் செய்தான்.. ! இது இன்னொரு மனித சிற்பியால் புனையப் பட்ட ரௌத்ர தோரணை என்பதைக் கூடப் புரிந்தும் புரியாத ஒரு தன்மையில் பொறி கலங்கிப் போனான்.

அவனே சிலைகளைப் படைத்து அவனே அதற்கு பயந்து நெற்றியில் குட்டி காதுகள் கவ்விப் பிடித்து  'தோப்புக்கரணம் ' போடுகிறான்..
கோவணத்தைக் கட்டிவிட்டு 'ஆண்டிக் கோலம்' என்று அபசகுணம் போன்று அங்கலாய்க்கிறான் .. ராஜ அலங்காரம் செய்து விட்டு 'அதி அற்புத தரிசனம் என்று புளகித்துக் கொள்கிறான்..

கடவுளுமே இப்படித்தானே .... பாரபட்சங்களோடு தானே நம்மைப் படைத்திருக்கிறான்?? 

2 comments:

  1. சுந்தர வடிவேல், அனைவருக்கும் உள்ள குழப்பங்கள் அனல் அதை தைரியமாக நாசுக்காக வெளிப்படுத்திவிட்டிர்கள் .....
    "கடவுளுமே இப்படித்தானே .... பாரபட்சங்களோடு தானே நம்மைப் படைத்திருக்கிறான்??", ஒரு தாய்க்கு தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் இருக்குமா? அதுபோலத்தான் கடவுளும்... நாம் நம் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து பர்ப்பதுபோலத்தான் "ஆண்டிக் கோலம்,ராஜ அலங்காரம், ஸ்வர்ண அலங்காரம், புஸ்ப அலங்காரம்....." உங்களுடிய இதற்கு முந்திய சின்னதாய் ஒரு சிந்தனை யில் சொன்ன நிகழ்ச்சி உங்கள் கருணை (கடவுள்) உள்ளத்தை காட்டுகிறது... நாம் உருவ வழிபாட்டில் பழகிவிட்டோம். வழிபாட்டில் மட்டுமல்ல உறவுகளை, நண்பர்களை அடையாளம் காண உருவத்தை ஞாபக படுத்துகிறோம் .... திருமுலர் வாக்கின் படி உள்ளே உள்ளது தான் வெளிய தெரிகிறது....." பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்".......

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...