Tuesday, August 26, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்.. ... [RADHAKRISHNAN.பார்த்திபன்]

எந்த ஸைடில் இருந்தும் பாஸிடிவாக ரிசல்ட் வரவில்லை என்பதால் அஞ்சான் படத்தை தவிர்த்து .... விகடனில் 45 மதிப்பெண் பெற்றதைக் கண்டு பார்த்திபன் படத்துக்கு சென்று வந்தேன்..

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பட அமைப்போடு திரைக்கதை அமைத்து அதே வித காட்சி அமைப்புகளுக்கு ஜிகினா ஒட்டியது போன்று ஒரு தன்மையை இவரது இந்தப் படம் எனக்கு உணர்த்தியது.. இதே வகையறா உணர்வு வேறு எவருக்கேனும் வந்தால் எனக்கொரு கம்பெனி கிடைக்கும்.. ஆனால் அப்படி எவரும் அபிப்ராயப் பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

சரி அதை விடுங்கள்.. நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு R . பார்த்திபன் அப்பாவின் முழு ராதாக்ருஷ்ணன் என்கிற facebook பாணி பெயரை உடன் சேர்த்துக் கொண்டு தனது செண்டிமெண்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. அப்டியே இந்தப் படத்துக்கும் புத்துயிர் கொடுத்து தனது துவண்டு போன கரியரையும் சற்றே தூக்கி நிறுத்தி விட்டிருக்கிறார் இந்தப் படத்தின் மூலம்..

ஒரே ட்ராக்கில் ஒரு திரைக் கதை அமைத்து அதனூடே பயணிக்கிற படங்கள் கூட என்னென்னவோ குளறுபடிகளை சந்திக்க நேர்ந்த விபத்துக்களை நாம் கண்டிருக்கிறோம்.. ஆனால், பார்த்தி ... இத்தனை ட்ராக்கில் சம்பவங்களைக் கோர்த்து அதற்குள் காரெக்டர்களைப் புகுத்தி அவைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தேஜஸை கொடுத்திருப்பது, இவரது கால் நூற்றாண்டு கால சினிமா அனுபவத்தின் அடையாளம் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது??

தனது நக்கல் கற்பனை வசனங்களுக்கு இன்றைய புது சூழல்களையும் உள்வாங்கி  அதனூடே ஹாஸ்யம் செய்கிற இவரது அபார மூளை ஆச்சர்யப் படுத்தாமல் இல்லை. காமரசத்தை சொட்டச் சொட்டக் கொடுக்க வேண்டுமென்கிற  கமல்ஹாசனின் தாகம் இவருக்குள்ளும்  வெண்ணை போன்று திரண்டு  கிடக்கிறது.. ஆனால் குடும்பங்கள் கும்பலாக நெளியாமல் வந்து கவனிக்க  வேண்டுமானால் அவ்விதக் காட்சிகளை நாசுக்காக வேறு கையாள  வேண்டிய பெரும்பொறுப்பு இருக்கிறது..

நடிப்பவர்கள் எப்படி சொன்னாலும் நடித்து விடுவர்.. பார்த்திபனும் எப்படி எடுக்கவும்  துணிந்தவர் தான் என்ற போதிலும் .. இங்கிதம் கருதி இலைமறை காயாகத் தான்  இந்தக் காட்சிகளை நகர்த்த வேண்டியுள்ளது..

ஒரு பொண்டாட்டியைக் கூட கண்ணில் காண்பிக்காமல் ரெண்டு பொண்டாட்டிக் காராராக நடித்திருக்கும்  தம்பி ராமையா அபார நடிப்புத் திறன் கொண்டுள்ளவர்  என்பது இப்படத்தில் அதீதம் நிரூபணமாகிறது..

அந்த ஹீரோயினாக வரும் பெண்ணின் துடிப்பும் ஆற்றலும் ஜாஜ்வல்யமும் அந்த ஹீரோ பயலிடம்  ரொம்ப மிஸ்ஸிங்.

எல்லா துறைகளிலும் அததற்குரிய தாகங்களோடு பரிதவிக்கிற முயல்கிற நபர்கள் எங்கெங்கிலும் இருந்தவண்ணம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதே போன்று இந்த சினிமா துறையிலும் ஜெயிக்க வேண்டுமென்று அரும்பாடு  படுகிற நபர்கள் பல்கிப் பெருகி விட்டனர் என்பதில்  சந்தேகமில்லை.. அப்படி ஒரு குழாமை வைத்தே ஒரு முழுநீளப் படத்தையும்  எடுத்து அப்ளாஸ் வாங்கி விட்டார் பார்த்திபன்..

திருவோண விருந்துகளில் மலையாளிகள் தங்களது விருந்தில் கொடுக்கிற உணவு முறைகள் ரெண்டு பக்கப் பட்டியல் கொண்டவை.. அதனைப் போன்றே  பார்த்திபனும் தனது படங்களில் அபரிமிதமான கதம்ப விஷயங்களை ஓயாமல் சளைக்காமல்  படைக்கிற ஆற்றல் கொண்டவர்.

அகோரப் பசியில் சென்றால் தான் யாவற்றையும் சுவைத்து மகிழ்ந்து பாராட்ட முடியும்.. பசியில்லாமலோ, அரைப் பசியிலோ சென்றால் அப்படியே இலையை மூடி விட்டு வரவேண்டும்..
ஆகவே ஒரு சினிமா பசியோடு அதாவது , நல்லதொரு மனநிலையில் சென்று இதனைப்  பாருங்கள்.. முழுதுமாக இல்லை என்றாலும் கூட பாதியாவது ரசிக்கிற வாய்ப்பு அமையலாம்..  நன்றி. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...