Monday, June 9, 2014

முற்பிறவி ஞாபகங்கள்..

[வழக்கமாக ஏதேனும் புனைந்ததற்குப்  பிறகு ஓர் சித்திரத்தைத் தேடி இங்கே இணைப்பேன்.. இந்தக் கவிதை வழக்கத்துக்கு மாறானது.. இந்த சித்திரத்தைப் பார்த்த பிற்பாடு , இதனை மையப் படுத்தி ஓர் கவிதை புனைய அவா கொண்டு சித்தரித்ததாகும்.. இவ்விதம் செய்கையில் கருத்தில் ஓர் ஆழமின்மையும் , செயற்கைத் தன்மையும் குடிகொண்டு விடும் என்பது எமது எண்ணம்.. ]


பரஸ்பரம் குடும்ப 

நபர்கள் யாவருக்கும் 
யாசிப்பதே தொழில்... 
ஒவ்வொருவரும் 
வெவ்வேறு  பிராந்தியத்தில்...!

முருகன் மலைக் கோவில் 

அடிவாரத்தில் அவளது 
வயோதிகப் புருஷன்.. 

ரயில்வே ஸ்டேஷனில் 

அவள்.. 

பஸ் ஸ்டாண்டில் மூத்தவன்..


சின்னப் பையனும் 

அவனுடைய அக்காவும் 
தெருத் தெருவாக 
கயிற்றில் நடக்கிற வித்தை.. 

சமய சந்தர்ப்பங்களில் 

குடும்பமே குழாமாக ஒன்றி 
செயல்படுகிற தருணங்களும் 
வாய்ப்பதுண்டு.. 
அது அநேகமாக 
மழைக் காலங்களில்...!!

இது ஈனப் பிழைப்பு 

என்கிற பிரக்ஞை எவர்வசமும் 
இதுவரைக்கும் வரவில்லை.. 

கண்தெரியாத நபர்கள் 
ஊதுவத்தி விற்கிறார்கள்.. 
ஊசிபாசி விற்கிறார்கள்.. 
கால் ஊனப் பட்டவர்கள் கூட 
எதையேனும் பொருள் விற்று 
பிழைப்பு நடத்துகிறார்கள்.. 
அவர்களோடு இவர்கள் 
சிநேகிதமும் வைத்திருக்கிறார்கள். 
--அவர்களிடும் பிச்சையைக் கூட 
ஆசையாசையாய் பெற்றுக் 
கொள்கிற ஸ்மரணையற்ற 
இந்த ஜடங்களின் மூதாதையர்கள் 
தான தர்மங்களில் சிறந்து விளங்கிய 
அரச வம்சத்தினர் ... 
அரண்மனை பல கட்டியவர்கள்.. 

இன்றைக்கு அவைகளில் 

பல அன்னச் சத்திரங்களாக 
மாறி இருக்கின்றன...

அன்றாடம் அங்கே 

வருகிற யாவருக்கும் 
விநியோகம் நடந்த வண்ணமே 
தானுள்ளது.. 

"இத்தன பேரு லைன்ல 

நின்னு பொறுமையா வாராங்க.. 
உங்க நாலு பேருக்கு மட்டும் 
என்ன கேடு?" என்று 
நாக்கைப் பிடுங்குவது போல 
யாராவது இவர்களைக் கேட்கிற 
விதமாகத் தான் இவர்கள் 
நடந்து கொள்வார்கள்.. 

"இந்த சத்திரமே நாங்க போட்ட பிச்சை..

எங்க கிட்டயேவா?" என்று மௌனமாகக் 
கேட்டுக் கொள்கிறான் அந்தக் கயிற்றில் 
நடக்கிற சின்ன மகன்.. 

சென்ற பிறப்பின் அரசன் 

 என்கிற மங்கலான ஞாபகக் கீற்று 
அவனை அவ்விதம் கேட்கத் தூண்டியதோ??

2 comments:

  1. உங்களின் பார்வையும் எண்ணங்களும் வித்தியாசமானவை...!

    ReplyDelete
  2. thanks for yr great comment dear sir..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...