Tuesday, June 3, 2014

வன்மம் மனிதம் அன்று..

ணர்வுக் குழப்பங்கள் என்பன குடும்பங்கள் எங்கிலும் இயல்பாக ஊடுருவிக் கிடக்கிற சமாச்சாரம்...
சற்றும் எதிர்பாரா சம்பவங்களுக்கு மனஸ்தாபம்.... அவை நிமித்தமாக, பல வாரங்களாக மாதங்களாக .. ஏன் , வருடங்கள் என்று கூட அடர்த்தி கொண்டு விடும் இந்த மனஸ்தாபங்கள்.. ஆளாளுக்கு முகங்களைத் தவிர்த்து விடுதல், மற்றும் பேசுவதென்பதே மருந்துக்குக் கூடக் கிடையாது.. பரமவைரிகள் போன்று முறுக்கிக் கொண்டே..
பிற்பாடு ஓர் தருவாயில், மிக சகஜமாக பேச நேர்வது, .. "அட, இந்த அற்ப பிரச்னைக்கு இத்தனை காலம் நட்பை தள்ளிப் போட்டு விட்டோமே" என்கிற பரஸ்பர பகிர்தல்கள்..

இன்னொன்றும் இருக்கிறது.. "பெரிய பிரச்சினை வருவதற்கான எல்லா தகுதிகளும் இந்த சம்பவத்துக்கு உண்டு " என்கிற அனுமானத்தோடு அணுகப் படுகிற அந்த சம்பவம் மிக சாது போல சுலபத்தில் நடந்தேறி விடும்.. எதிர்பார்த்த எவ்வித கோர அனுபவங்களையும் நமக்குள் நிகழ்த்தாமல், வெறுமே மிக யதார்த்தமாக நழுவி விடக் கூடும்.. "வாவ்.. " என்று வியக்கக் கூடும் நாம்..

பரஸ்பர புரிதலில் அவ்விதம் நிகழ்ந்ததா அல்லது காலம் அவ்விதம் நிகழ்த்தியதா என்கிற இன்பக் குழப்பம் இருதரப்புக்கும்..
வாய் வார்த்தைகளில் தான் உள்ளன எல்லா சாதுர்ய சாமர்த்தியங்களும்..
எதிர்புறம் வம்படியாக பேச்சு வந்து விழுந்தால் கூட சகஜ நிலையில் அதனை எதிர்கொண்டு சிநேகமாக கைகுலுக்குகிற லாவகத்தில் அணுகுவோமேயாயின் .. அந்த நெருப்பு அணைக்கப் படும்.. எதிர்புறம் நன்கு சீரமைக்கப் படும்.. அங்கேயும் புன்னகைப் பூக்கள் மிளிர்வதற்கான சாத்தியக் கூறுகளை சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டியது ஒரு தரப்பிலாவது கடைப் பிடிக்கப் பட வேண்டியது அவசியம்..

ரெண்டு ஆடுகளும் சண்டையிட்டு ரெண்டும் ஆற்றில் விழுந்து அடித்துக் கொண்டு போவதை விட வழிவிடுகிற போக்கு ஒரு ஆட்டுக்காவது தெரியுமாயின் இரண்டு ஆடுகளும் பிழைத்துப் போய் இன்னும் கிஞ்சிற்று காலங்கள்  வாழும் தகுதி பெறும் .. இது ஒண்ணாப்பு பாடத்துல வரக்கூடிய மாரல் ஸ்டோரீஸ் ..


மனிதர்களைத் திருத்திக் கொள்ள தேவைப் படுகிற ஆடுகள், மட்டன் பிரியாணிக்கும் உதவுகின்றன.. !!


ஆறறிவு அளிக்கப் பட்டுமே கூட விட்டுக் கொடுத்தல் என்கிற பண்பாடு மனிதர்கள் மத்தியில் இன்னும் மயக்க நிலையில் தான் உள்ளது..
"என்னை விடவாடா நீ?" என்கிற ஈகோ .. "நீ என்னடா பெரிய இவனாடா?" என்று காலரைப் பிடிக்கத் துறுதுறுக்கிற முறுக்கம் ... 

இவ்வித வன்மங்களினின்று மீண்டு சகஜ நிலையில் ஒரு காரியத்தினை அணுகி அவைகளை மென்மையாகக் கையாள்கிற பக்குவம் வரும் பட்சத்தில் தான்  அங்கே மனிதம் தழைத்து நிற்பதாகப் பொருள்.. 

அல்லவெனில், குரோதங்களும் ரத்தக் களறிகளும் வலிகளும் பெரும் இழப்புக்களும், அதன் நிமித்தமான சோகங்களும் அழுகைகளும்.. பிறகு மேற்கொண்டு  பழிவாங்குகிற ஓர் ரவுத்திரம் முளைப்பதும்.. இதுவா வாழ்க்கை? .. சில காலமே வாழ அனுமதி உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் எதற்கு இப்படி ஓர் வெறியாட்டம்?.. 
அற்பாயுளில் ஒழிந்து விடுவதும், உடலிலும் மனத்திலும் வலிகளோடு வயோதிகம் வரைக்கும் அழுந்திக் கொண்டிருப்பதும்... 
சீராக நமக்கெல்லாம் அளிக்கப் பட்ட இந்த வாழ்வினை, எதற்காக இப்படி முரண்களோடு தரிசிக்க விழைய வேண்டும்??

நமது கற்பனைகளும் செயற்பாடுகளும் சமாதானங்களை மையப் படுத்தி நகர்தல் வேண்டுமேயன்றி, சண்டையிட்டு சாதிக்க வேண்டுமென்கிற விவேகமற்ற வெறி நம்மை விட்டுக் கழன்றோட வேண்டும் .. 


யோசித்துப் பாருங்கள்.. சண்டையிட்டு இருதரப்பும் ஜெயிக்கப் போவதில்லை.. ஒரு தரப்பு கத்திக் குத்துப் பட்டு ரத்தவெள்ளத்தில் சாய்ந்து அதே ஷணத்தில் மாய்ந்து போக நேரும்.  இன்னொரு தரப்பு மற்றொரு நாள் பழிவாங்கப் பட்டு கதறிச் சாக நேரும்.. 


சமாதானமாகப் போவதோ, இருதரப்பும் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதிப் பெருமூச்சோடு வாழ்ந்து அமைதியாக சந்தோஷமாக மனநிறைவோடு மரணம் தழுவலாம்.. 


யோசித்து செயல்படுங்கள் மனிதர்களே.. 


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...