Tuesday, May 29, 2012

நாய் உட்பட..

ஓர் இழையில்
ரோஷம் மானம்
எல்லாமே
நம்மிலிருந்து
விலகி விடுவது
ஆச்சர்யமே...

மீசையை முறுக்கி
கண்களை உருட்டி
மிரட்டி -
சிங்க கர்ஜனையோடு
வசனம் பிதற்றிய
காலம் மறக்கவில்லை...

கோடொன்றைக் கிழித்து
அதைத் தாண்டினால்
கொய்துவிடுவதாக
பயமுறுத்தியதற்கு
பெரிய மரியாதை இருந்தது...
!

எனது சுபாவங்கருதி
மிரண்டு கிடக்கிற
மனைவி குழந்தைகளோடு
வீட்டு நாயும் அடக்கம்..!!

எனது இருப்பின்
போதிலாக - வீடு
நரகமாக உணரப்பட்டது
எல்லோராலும்..
நாய் உட்பட..

எனது
வெளியூர்ப் பயணம்
சொர்க்கவாசல்
திறப்பதாக இருந்தது
எல்லாருக்கும்..

வீட்டில் நானற்ற
தருணங்களில்
எங்கேனும் நிகழ்கிற
சாலை விபத்து
செய்திகளில்
எனது பங்களிப்பை
அநேகமாக என்
வீட்டிலிருப்பவர்கள்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
என்றே என் உள்மனம் உளறும்..

என் தினவுகள் அனைத்தையும்
வயோதிகம் வந்து
கபளீகரிப்பதை
சுவாரஸ்யமாகி ரசிக்கின்றன
என்னை சூழ்ந்திருக்கிற கண்கள்..!

அவர்கள் கண்களில் எல்லாம்
கொள்ளிவைக்கப்
பதறுகிறது என் ஆற்றாமை
மற்றும் இயலாமை...

ஆனால் எனக்குக்
கொள்ளி வைக்க
நெருப்பெனத்
தகிக்கின்றன
அவர்களது கண்கள்..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...