Thursday, September 15, 2016

ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்..

Image result for TEMPLE BEGGARS MODERN ART பிச்சைஎடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. 
உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோல்வி காண்பான்.. 

"காலு கையி நல்லா தானே இருக்கு?.. ஏதாச்சும் வேலை செஞ்சு பொழைக்க தெரியாதா?.." என்றொரு கேள்வி, எவரேனும் ஏதோ ஒரு தருவாயில் கேட்க நேரும்.. 

அப்படியான கேள்வி முதலில் சற்றே உறைத்து.. உழைக்கிற ஆயத்தத்துக்குப் போக வைத்தது சேகரை.. 

ஆனால் உடலின் வனப்பு, அவனது ஈன இதயத்திடம் தோல்வியுற்றது.. ஒருக்கால் பிச்சைத் தொழிலை துவங்கிய புதிதில் இந்தக் கேள்வி அவனிடம் தொடுக்கப்  பட்டிருக்குமாயின் லஜ்ஜை அவனுள் பீடித்து .. எங்கேனும் பீடி சுற்றவாவது கிளம்பி இருப்பான்.. ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அப்படியொரு கேள்வி அவன் தொழில் துவங்கி பத்தாம் மாதம் தான் அவனிடம் கேட்கப் பட்டது.. மாதங்கள் பத்து ஆகிவிட்டதில், அவனுள் கருவுற்றிருந்த பிச்சைக் குழந்தை நன்கு வளர்ச்சி பெற்று அபார்ஷன் தகுதியை இழந்து விட்டிருந்தது.. 

ஆகவே சுகப் பிரசவமாக அவனுக்கு அவனது பிச்சைக் குழந்தை பிறந்தது.. 

அதனை வளர்த்து வாலிபம் பண்ணவேண்டிய தாய்மையும் தந்தைமையும் ஒருங்கே அவனுக்கு கடமையாக்கப் பட்டிருந்தன.. 

கோவில் திருவிழாக்கள், சர்ச் பிரார்த்தனைக் கூட்டங்கள், மசூதித் தொழுகைகள் .. என்று அனைத்துப் பிராந்தியங்களிலும்  அவனது சஞ்சாரம் வெகு விமரிசையாக நிகழ்ந்தேறின.... 


மறுபடி கூட சிற்சிலரால்  பற்பல முறைகள் உழைக்கச் சொல்லப் பட்டான்.. "முடிஞ்சா போடு.. இல்லேன்னா போயிக்கினே இரு" என்று அதட்டுமளவுக்கு பிச்சையில் ப்ரொபெஷனலிஸம் கண்டிருந்தான் .. 
ஏனென்றால் 10 பேர்களிடம் அவன் கையேந்தி அலறுகையில் , அதிலே ரெண்டொருவர் தான் அப்படி வியாக்யானம் பேசுபவர்கள் இருந்தனர்.. 
மிச்சம் எட்டுப் பேர்கள் 'தலை காக்கும்' என்று தர்மம் செய்பவர்களே.. !
என்ன நியாயம் நீதி என்றாலும் என்றாவது மைனாரிட்டி ஜெயித்ததாக சரித்திரம் உள்ளதா என்ன?

அவனோடு பிச்சை எடுக்கிற சக தோழர்களின் ஊனம் காணும் போதெல்லாம் அவனுள்  ஒரு வகையறா பொறாமை கிளர்ந்தெழும்.. "கருமம் புடிச்ச கடவுளு.. நமக்கு காலும் கையையும் இப்டி நாசமா போன மாதிரி நல்லா வச்சுட்டானே!" என்று மௌனமாகப் புலம்புவான்.. சமயங்களில் மனம்விட்டு அழுதும் கூடப் புலம்புவான்..  


"இன்னா சேகரு .. இன்னைக்கு திருவோடு கல்லா கட்டுது போல.. " என்றொரு முறை வலது கையில்லாத டேவிட் சொன்ன போது , கடுப்பான சேகர்.. 

"கண்ணு வைக்காதடா பீடைநாயி .. உன்னைப் பத்தி எல்லாம் நான் என்னைக்காச்சும் கண்டிருக்கனா  கேட்டிருக்கனா.. ஏண்டா என்னெ மட்டும் வந்து ஆளாளுக்கு நோண்டறீங்க?" என்று அவன் கத்தி அந்தப் பிராந்தியம் அலற சண்டையிட்டது , பக்தர்கள் கோவில் புக மறந்து வேடிக்கை காண்பதாக அமைந்தது.. '

இம்மாதிரி அனாவசிய சச்சரவுகள் பிச்சை எடுப்பவர்களுக்கு சகஜம்..  நமக்கு, அவர்கள் பரமவைரி ஆகிவிட்டது போன்று தோன்றும்..
மற்றொரு அவகாசத்தில் --சேர்ந்து இருவரும்  கஞ்சா அடிப்பதில், தண்ணி அடிப்பதில் சமத்துவமாவதைப் பார்க்க நேர்பவர்களுக்கு மெல்லிய ஷாக் ஒன்று பரவி விலகும்.. !

இன்பமான வாழ்க்கையோ, ஈனத்தனமான வாழ்க்கையோ, எவருக்கும் என்றென்றும் தொடர்வதில்லை.. சற்றே ஒரு முற்றுப் புள்ளி  வைக்கக் கூடும்.. குறைந்தபட்சம் ஒரு கமா போட்டாவது தொடரும்.. 


ஆனால் சேகருக்கு நேர்ந்த முற்றுப் புள்ளி ..,, அதிசயமானது.. 

தாற்காலிக முற்றுப் புள்ளி என்று தான் அவனது சக பிச்சைகளும் , தர்மம் புரிபவர்களும் அனுமானித்திருந்தனர்.. சேகர் கூட அவ்விதம் தான் நினைத்திருந்தான்.. 

அவனது முற்றுப் புள்ளியை நிரந்தரமாக்கியது  அவனுக்கு நிகழ்ந்த விபத்தொன்று.. 


புரட்டாசி சனி ஒன்றில், பெருமாள் கோவில் வாசலில் , அபரிமித வசூலின் நிமித்தம்  முதல் திருவோடு நிரம்பி, இரண்டாவது  திருவோட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்த அவன், -- அடுத்த நாள் ஞாயிறன்று தமது சக பிச்சை ஸ்நேகிதர்களை டாஸ்மாக் அழைத்து சென்று விக்டரிப் பார்ட்டி கொடுத்தவன், 3வது  குவார்ட்டரில் மட்டையாகி .. ரோட்டினை பார்க் பெஞ்ச் என்று  திட்டவட்ட உறுதி செய்துவிட்டு பொத்தென்று ... என்னவோ கர்லான்  குஷன் மெத்தை மீது விழுகிற கற்பனையில் ... சாய்ந்தான்.. 

அப்படி விழுந்து படுத்ததாலேயே அநேகமாக அவயவத்தின் ஏதோ ஒரு பாகம் , ஸ்மால் ஃ ப்ரேக்ச்சர் .. பிளட் கிளாட் என்று ஒரு ரிப்போர்ட் வரக்கூடும், மப்புத்  தெளிந்து  அண்ணன் எழும் போதில்.. 

இந்தத் தலைக்கேறிய போதையில் ரயில் கழுத்தில் ஏறி தலை தனி, முண்டம் தனி ஆனால் கூட வலி உணர்கிற பிரக்ஞையில் அவன் இல்லை.. 

அவனுக்கொரு பிச்சைக்கார மனைவி உண்டு, அவள் வேறொரு பிராந்தியத்தில்  தமது தொழிலில் மும்முரம் என்பதோடு சேகரின் மனைவிக்கு கையில் பிடித்து நடக்க ஒன்றும் ,இடுப்பில் ஒன்றும், வயிற்றுக்குள் ஒன்று என்றும் .. எந்த ப்ளேன்க்கையும் எம்ப்டி செய்யாமல் 

ஃ பில் அப் செய்த சேகர், .. என்னவோ குழந்தை ஆசையால் அல்ல.. தமது கவுரவத் தொழிலின் கிளைகள் பரப்பவே.. 

மனைவியின் அன்றாட கலெக்ஷன் எவ்வளவு, குழந்தைகளுக்கு அவள் செய்கிற உணவுச் செலவுகள் என்ன, என்கிற அனைத்து அக்கவுண்ட் -ஸும் 
கட் அண்ட் ரைட்டாக அவள் ஒப்பித்தாக வேண்டும்.. அதர்வைஸ் தலைவர் சேகர் அவர்கள்  காண்டாகி கன்னாபின்னாவென்று லலிதா.. யெஸ் .. திருமதி சேகர்  கண்டபடிக்கு அடிவாங்க நேரும் ,
 அவ்வமயம் குழந்தைகள் கதறுவதும், அவள்  அதுபோக இன்னொரு உயிரை சுமக்கிற ஈருயிர் காரி என்கிற எவ்வித ஈவிரக்கங்களும் அற்ற அவனது அடி உதை பார்க்கையில், விசாரணையே இன்றி தூக்கில் போடுகிற தகுதி வாய்ந்தவன் என்கிற முடிவுக்கு ஜட்ஜ் இல்லாத  பேமானி  ஒருவன் கூட சுலப தீர்ப்பு சொல்லிவிட முடியும்.. 

இப்படியான சேகர், அன்று ரோட்டில் கிடந்தது பரிதாபமல்லவா?.. அதனைவிடப் பரிதாபம்  .. ரோடென்று கூடப் பாராமல் .. அல்லது சேகர் என்று கூடப் பாராமல் .. லாரியில் வந்த ஒருவன் லாரியை  நம்ம தலைவர் சேகர் மீது, 2 கால்களும் நசுங்கும் வண்ணம்  ஏற்றி சென்றது தான்.. 

செத்த கண்டிஷனில் ஏறிக் கிடந்த மப்பில் கூட .. அப்படியொரு வலி வந்து விட்டது  சேகருக்கு.. 
ஐயோ.. ஐயோ.. என்று குய்யோ முறையாகி.. 
லாரிக்காரன் மீது தப்பில்லை என்று தீர்ப்பாகி.. 
சொற்பக் காசாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து  நிர்க்கதியாகி ... 

மனைவி குழந்தைகள் எல்லாருமே காறித்துப்பி விட்டு ஓட , 
...... எப்படியோ  காலம் சில கடக்கப் பெற்று..... 
முன்னர் அவன் ஆசை ஆசையாக  எதிர்பார்க்கப் பட்ட அந்த அற்புத ஊனம்... இதோ.. இதோ.. 

னால் சேகர் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. 
பிச்சை எடுப்பதை அறவே விட்டுவிட்டு இப்போதெல்லாம் தினசரி கரிகாலன் புகையிலைக்  கம்பெனிக்கு வெல்லனே எழுந்து பீடி சுற்றப் புறப்பட்டு விடுகிறான்.. 
அவனை அழைத்துப் போக பீடிக் கம்பெனி மொதலாளி  நெதமும் வண்டி அனுப்பிச்சுறாரு.. 
அவன் நல்லா பீடி சுத்தறதால, கைல பெடல் பண்ற ஒரு மூணு சக்கர வண்டி கூட கவர்மெண்ட்ல சொல்லி ஏற்பாடு பண்றதா பேச்சு.. 

கோவில் வழிகளில் அவன் கடக்கையில் அங்கே பிச்சை எடுக்க உட்கார்ந்திருக்கிற  தமது சக நண்பர்களை ஏறெடுத்தும் கூடப் பார்ப்பதில்லை  சேகர்.. !!
Image result for TEMPLE BEGGARS MODERN ART

3 comments:

  1. நல்ல கருத்துள்ள கதை பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. வலைத்தளம் வாருங்கள்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...