
எனது நிழல்
உனது மார்பகப்
பிராந்தியத்தில்
விழுந்தமைக்காக
அத்தனை சந்தோஷத்தில்
அனாவசியமாக
இருந்துவிட்டேன்.. !
உமது நிர்வாணத்தை
சுலபத்தில் தரிசிக்கிற
புருஷ வாய்ப்பு
கிட்டுவது அரிது
என்கிற
அவநம்பிக்கையின்
நிமித்தம் என்னில்
பிறந்த கிறக்கமது ..!!
இத்தனைக்கும்
எனது நிழல் என்பது
அந்தி சூரியனின்
வார்ப்பு..
அதனையும் முகில்
அந்த ஷணத்தில்
மறைத்திருக்கும்
பட்சத்தில் - எமது
நிழலுக்கு உமது
மார்பகங்களில்
படர சந்தர்ப்பம்
அமைந்திருக்காது..!!
என் நிழல்
மீதான எனது
பொறாமை
எனக்கே என்னைக்
கேவலமாக
அடையாளப் படுத்திற்று.!!
பின்னொரு நாளில்
நீ மார்பகப் புற்றில்
அவதியுறும்
தகவலறிந்து
துடித்துப் போனேன்..
அதற்கான
முழு சந்தேகமும்
என்னுடைய நிழலின்
மீது படியத் துவங்கிற்று
அந்தத் தருணம் முதல்..!!

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி திரு. சுரேஷ்
Delete