Wednesday, December 24, 2014

k .பாலச்சந்தர்

இயக்குனர் சிகரம்..
எத்தனையோ அடிவாரங்களை கைபிடித்து உச்சியில் நிறுத்திய பெருமை இந்த சிகரத்துக்கு எப்போதும் உண்டு..
சார்த்தியே கிடந்த எத்தனையோ பத்தாம்பசலி ஜன்னல்களை தமது யதார்த்தக் காற்றை அனுப்பி திறக்க வைத்த தீர்க்கதரிசி..

வாழ்க்கை நெடுக வேலி எனப் படர்ந்து கிடந்த எவ்வளவோ இம்சை நிரம்பிய முடிச்சுக்களை சுலபத்தில் களைந்த சூத்திரதாரி.. !

காதலானாலும் காமமானாலும் தன்னுடைய படங்களில் மாத்திரமே அதன் வீரியம் முழுதையும் பிழிந்து திரையில் தாரை வார்த்துக் கொடுக்கிற பெரும் கலைஞன்.. நிழல்களை அப்படி தத்ரூபமாக நேசித்து, மற்றவர்களையும் தனது போக்கிலே பயணிக்க செய்த திறமைசாலி..

நிஜவாழ்வில் எவ்வித அவதூறுகளையும் சந்தித்திராத மாண்பு மிகு இயக்குனர் இவர்.. அகம்பாவமோ கர்வமோ எதுவாயினும் தன்னுள்ளேயே ரகசியப் படுத்தி, காமெராவில் இவர் கொணர்கிற கோணங்கள் யாவும் பெண்மை குறித்த மேன்மைகளையும் மென்மைகளையுமே அன்றி வேறொன்றறியோம் பராபரமே..!!

செல்லுலாய்டு என்கிற விஷயமே தமது வாழ்வில் புக நேர்ந்திடாத அன்றைய மகாகவியின் அனேக எழுச்சி மிகு கவிதைகளுக்கும் அற்புத தளங்களும் காட்சிகளும்  சம்பவங்களும் அமைத்துக் கொடுத்த நவீனகால பாரதி இந்த பாலச்சந்தர் ... 

இப்படியான செழுமை நிரம்பிய ஒரு கலைஞனுக்கு  காலம் மிகப் பெரும் ஆயுளைக் கொடுத்து நிறைவு வரைக்குமான அவரது படைப்புக்களை வெளிக் கொணர்ந்து  நம்மை எல்லாம் திகட்டத் திகட்ட ரசிக்கச் செய்து விட்டுத் தான் காலம் அவரை அழைத்துக் கொண்டது என்கிற உண்மையை உணர்வோமாக..!

யாரது பிரார்த்தனைகளும் அற்று இவரது ஆத்மா சாந்தி பெறக் கூடும் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை எனிலும், அதனையும் மீறி இவருக்காகப் பிரார்த்தித்து  விடுவதில் தான் எல்லாருக்கும் விருப்பம்.. !!




2 comments:

  1. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. பொருத்தமான அஞ்சலி..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...