Thursday, January 17, 2013

காதலின் சுவடுகள்...

என்னைக் காதல் வசப்படுத்தி பாதித்த எவ்வளவோ பெண்களுக்கு என்னைக் குறித்த தகவல்கள் எந்நாளும் தெரிவிக்கப்பட்டதே இல்லை... ஒருக்கால் எனது காதல் முறையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்னை அணுகி எனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமுடியும்... பரஸ்பரம் எங்கள் காதல் செவ்வனே பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கக்கூடும்..... காதலின் சுவை உணர்ந்தவனாக, நானும் இவ்வுலகில் ஓர் மகோன்னத அனுபவத்தைப் பெற்றவனாக வலம் வந்திருக்கமுடியும்..!

கவைக்குதவாத வெட்கங்களும் மௌனங்களும், நான் சிறந்து விளங்கி இருக்கவேண்டிய எல்லா தளங்களிலும் என்னை வெறுமனே ஒன்றுமற்றவனாக ஆக்கி யாவற்றையும் அனாவசியத்துக்குப் புதைத்து வைத்திருக்க வேண்டிய விபரீதங்களில் எனது வாழ்நாட்கள் கழிந்தும் கரைந்தும் விட்டன...

இனி மேற்கொண்டு செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லை என்றானபோதிலும், ஞாபகங்களாக மனசுள் நிழலாடுகிற அந்த வறண்ட பிராந்தியங்களை இங்கே பதிவிறக்கம் செய்வதில் சிறிது ஆசுவாசம் உணரமுடிகிறது... அதன் நிமித்தமே, இந்தக் "குப்பைகொட்டுகிற" காரியம் நடந்தேறுகிறது....!!

இன்னொரு விஷயத்தையும் என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை... அதற்கான சாத்தியக் கூறுகள்  நிச்சயம் இல்லை என்று என்னால் அனுமானிக்க முடிகிறதென்ற போதிலும், அதையும் தாண்டி காலம் என்னை அதிசயப் பட வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்கிற ஊர்ஜிதம்  பிடிவாதமாக எனக்குள் வியாபித்துள்ளது.... அதாகப் பட்டது.----

எனது காதலின் தகவல் எப்படி எந்தப் பெண்களுக்கும் தெரிவிக்கப் படாமல் வாய்த்ததோ , அதே அடிப்படையில் அந்தப் பெண்கள் என்னைக் காதலித்த தகவல்களும் அதே மௌனத்தில் உறைந்து தகவலாற்றுப் போய் விட்டிருக்கலாம் என்பதே அது....!
-இந்த அனுமானம் எனது நெஞ்ஜெலும்புக் கூட்டில் பெருமைகளையும் கவலைகளையும் ஒருசேரத் திணித்து வார்த்தைப் படுத்தவியலாத ஓர் உணர்வை  உருவாக்கி கண்களில் நீர் கசிந்து கன்னங்களில் உருண்டோட செய்கின்றன...!!




No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...