Saturday, February 13, 2010

நாளைக்கு மறுபடியும்....

வழக்கமான மைதான நடைபயிற்சிக்கு பதிலாக வீதிகளில் அவ்வப்போது நடப்பேன்.. சர்க்கரை , ரத்த அழுத்தம், இன்னபிற என்று நமக்கும் புரியாமல் பட்டியல் போட்டு வைத்திருக்கிறது நம் உடல்...
இவை எல்லாமே நடைபயிற்சியில் நம்மை விட்டு ஓடிப்போய்விடும் என்கிற மாயை நடக்கிற எல்லாருக்குமே உண்டென்பதால் மார்னிங் வாக்கிங் என்பது இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார்..

ரெண்டொரு நாட்கள் நடப்பது ஏதாவது காரியம் நிமித்தம் தடைபட்டுவிட்டால் கூட மனசுள் பெரும் குற்ற உணர்வை கொண்டு வருகிற அளவிற்கு நடப்பது என்பது இன்று எல்லாரது வாழ்விலும் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையன்று...

அதிகாலை நாலு மணிக்கே பயிற்சியை துவங்குகிற நபர்கள் உண்டு.. அந்த நேரத்தில் ஒன்றுக்கு.. ஐ மீன் உச்சா.. ஒன் பாத்ரூம் அவசரமாக வர இருந்தாலுமே கூட , நன்றாக இழுத்து போர்த்திப்படுத்து விட்டு ஆறுக்கோ ஏழுக்கோ எழுந்து தான் போகிற அளவுக்கு நான் சுறுசுறுப்பானவன்..
ஆக, அதற்கும் பிறகாக நிதானமாக எழுந்து ஒரு சாயா அடித்துவிட்டு கிளம்புவேன்..

அநேகமான நாட்கள் மைதானம் தவிர்க்கப்படும்.. விரிந்து கிடக்கிற புதுப்புது வீதிகளில் பராக்கு பார்த்த வண்ணம் கடந்து செல்வது ஓர் அலாதி சுகம் எனக்கு... டி.சர்ட்டுகள் நாயை பயமுறுத்தும் என்பதால் சாதாரண சட்டையே போட்டு செல்வேன்..

எல்லாருமே வீட்டு வாசலுக்கு வந்து தான் பல் துலக்குவார்கள் போலும், குளியலறைகளை குளிப்பதற்கு மாத்திரமே உபயோகிக்கிறார்களோ? பிரஷும் பேஸ்ட் நுரையுமாக ரொம்பப்பேர்களை தெரு நெடுகிலும் தரிசிக்கலாம்...

அடுப்பை வேறு வெளியில் வைத்திருப்பார்கள்.. தண்ணீர் காய வைப்பதற்காக கண்ட குப்பைகளையும் போட்டு கவலையே படாமல் மாசு படுத்துவதில் இந்தியர்கள் கில்லாடிகள்...
இதே மோசமான பழக்கங்களையே தன் குழந்தைகளுக்கும் கூச்சமில்லாமல் கற்றுக்கொடுக்கிறார்கள், அல்லது இதையெல்லாம் பார்த்து பொடிசுகள் இயல்பாகவே கற்றுக்கொள்கின்றன...

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே வயிற்றுக்கு ஊட்டுவார்கள்.., அப்படித்தான் ஓர் நடுவயதுப்பெண்மணி தன் குழந்தைக்கு இன்று... சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை என்னைக்காண்பித்து இட்லியைத் திணித்துக் கொண்டிருந்தாள்.. அந்நேரம் வரை அது அழுது அடம் செய்திருக்கும் போல.., என்னையும் ஏன் ராஜ நடையையும் பார்த்த பிற்பாடு சிரித்த முகத்தோடு இட்லி உட்கொண்டதாக ஓர் அற்புதமான தகவலை அந்தப்பெண்மணி நான் அருகில் சென்றதும் சொல்லக்கூடும் என்கிற என் அனுமானம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது...
வெறுமனே ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவள் வாசலை கடக்க நேர்ந்தது., என் அந்தப்புன்னகை அவளைப்பார்த்தா அவள் குழந்தையைப் பார்த்தா என்கிற கேள்வியுடன்...
அவளுக்குள்ளும் அந்தக்கேள்வி இருக்கும்?
பார்ப்போம், நாளைக்கும் அதே தெருவில் நடந்து...!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...