
பிற்பாடு டெலிபோன் வந்தது.. விரல் நுழைத்து சுழற்றி சுழற்றி .. ஒரு எண்ணை தவறுதலாக சுழற்ற நேர்ந்தாலும் மறுபடி முதலில் இருந்து..
பிறகு பட்டன் போன்.. அதிகம் ஒரு எண்ணை அழுத்த நேர்ந்தாலும் அதனை க்ளியர் செய்து விடுவது, மறுமுனையில் பிஸி என்றால் சில நொடி இடைவெளிக்குப் பிறகு ரீடையல் செய்வது..
மொபைல் வந்து.. தொடுதிரை வந்து ... மனதில் நினைத்தாலே அழைக்க வேண்டிய நபரின் செல் சிணுங்கும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது..
இவைகள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாக "முகநூல்" இன்றைய தேதியில் மாறி விட்டது என்பதில் எவர்க்கும் எள்ளளவு மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை..
என்றோ விடுபட்ட நண்பர்கள் .. எதற்கோ சண்டையிட்டு வருடங்கள் பல பேச்சு வார்த்தைகளற்று இருந்த எதிரிகள்.. என்று பட்டியலிட்டு எல்லா வகையறா மனிதர்களும் சுலப சங்கமமாக வித்திட்டிருக்கிறது பேஸ்புக் என்கிற விஷயம்.

எந்த செய்தியின் நிமித்தம் கணினியை திறக்க வாய்த்தாலும், முதற்கண் நமது கண்களும் விரல்களும் மேய முற்படுவன , அந்த நீலநிற பின்புலத்தில் அமைந்துள்ள சின்ன "f " தான்..
யாதொருவருக்கும் வயது பாகுபாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிற அன்றாட கணினி சடங்கு இதுவெனில் "மிகையன்று"..
டெலிபோன், மொபைல், மின்னஞ்சல், இன்னபிற கடிதங்கள் என அனைத்த தொடர்புகளுக்கான ஊடகங்களையும் பின்னுக்குத் தள்ளிய பெருமை இதனையே சாரும்.. !!

"எனக்கு இன்னொரு முகம் இருக்கு" என்று இந்த முகநூல் சொல்வதை சற்றே அலச முனைவோம்..
வழக்கமாக லைக் வைக்கிற நண்பன் எதுவுமற்று இருப்பானாயின் இடுகை இட்டவன் இதயம் வெம்பிப் புடைப்பதை சொல்லியாக வேண்டும்..
ஆழ்ந்து கவனித்தால், அவனுடைய ஏதாவது பதிவினை இவன் கண்டிருக்க மாட்டான்.. அல்லது கண்டும் காணாதிருப்பான்..
ஆனால் இவனொன்றைப் புனைந்து பதிவிட்டதை மட்டும் அவன் கவனிக்க வேண்டுமென்று வெறி கொள்வான்..
மற்றொருவன் பகிர்ந்துள்ள விஷயம் கவைக்குதவாததாக இருப்பினும்,நட்பின் நிமித்தம் மரியாதையின் நிமித்தம், ஒரு கமெண்ட்டோ, குறைந்த பட்சம் ஒரு லைக்கோ கொடுத்தாலே அன்றி, உமக்கு முகநூல் கோதாவில் இடமில்லை..
அரண்மனையில் வீற்றிருக்கும் ராஜாக்களுக்கான மரியாதையில் உள்ளனர் பேஸ்புக்கில் சிலர், பலர்..
அதே பேஸ்புக்கில் அனாதை விடுதியில் இருப்பவர்கள் போன்றும் பலர் உள்ளனர் என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.. !!
நட்புக்கென்று ஒரு அதிகாரத்தை ஒதுக்கி நயம்பட உரைத்த வள்ளுவன் இந்தக் கால கட்டத்தில் இருக்க நேர்ந்தாலும் கூட, நிச்சயம் முகநூலுக்கென்று ஒரு அதிகாரத்தை ஒதுக்கியே தீரவேண்டும்.. !!

No comments:
Post a Comment