Wednesday, August 17, 2016

முரண்களின் ராஜ்ஜியம்..

முரண்களினூடே 
இயங்கப் பெறுகிறது 
வாழ்க்கை.. 
யாதொரு ப்ரத்யேகத் 
தன்மையிலுமாக 
நிலைத்திருப்பதற்கான 
சாத்தியக் கூறுகளற்ற 
குழப்பங்களைப் பற்றிக் கொண்டே 
நீள்கிறது காலம்.. !

பற்றற்றிருப்பதற்கான லாவகம் 
பிடிபட்ட தெளிவில் இருக்கையிலேயே 
பொருள்கள் மீதான 
பேராவல் பீறிடுகிறது.. 

மௌனத்தை மய்யப் படுத்த 
முனைகையிலேயே
ஏதேனும் முணுமுணுக்க 
வாய் பிரயத்தனிக்கிறது.. 

வேசி வீட்டு பூஜையறையில் 
வருகிற பக்தி 
கோவிலில் அவளைப்
பார்த்துவிட நேர்ந்த போது
வராமல் மறுதலித்து விட்டது.. !

மரணத்திற்கு எதிர்மறையான 
இந்த வாழ்க்கை.. 
மரணத்துடன் ஒப்பிடுகிற
தகுதியையே இழந்து 
நிற்பதாகத் தோன்றுகிறது.. 

மரணம் தெளிவானது .. 
குழப்பமற்றது.. 

புதைப்பதா எரிப்பதா 
என்கிற முரண்பட்ட 
சடங்குகளுக்குரிய குழப்பங்கள் 
வாழ்பவர்களின் பிரச்சினை மட்டுமே.. !

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...