Tuesday, October 20, 2015

சில நேரங்களில்.. [ ஒருபக்கக் கதை.. ]

கள்ளக் காதலன் மீதான அபரிமித காதலால் தனது கணவனையே கூலிப் படை வைத்துத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறாள் முன்னாள் தர்மபத்தினி.. 

வீட்டிற்கு மின்விசிறி மாட்ட வந்த கதிரை வேண்டா வெறுப்போடு தான் வரவேற்றாள் சுபா.. 
அலுமினியம் லேடரில் நின்ற வண்ணம் ஸ்பேனர் இண்டிக்கேட்டர் இன்சுலேட்டட்  டேப் என்று ஒரு சாமானிய எலெக்ட்ரீஷியன் வைத்திருக்க வேண்டிய சகல சாமான்களையும் சுபாவிடம் கேட்டுக் கேட்டு வாங்கவே செமக் கடுப்பாகி ' நீ எல்லாம் எதுக்குய்யா இந்த வேலை செய்ய வர்றே?' என்று கேட்டே விட்டாள் அவள்.. 

ஆனால் கதிரிடம் யாவும் இருந்தனவே எனிலும், சுபாவின் மெல்லிய விரல்களை ஸ்பரிசிக்க மறுபடி மறுபடி ஆர்வம் பிறக்கவே, ஒவ்வொன்றையும் கிஞ்சிற்றும் கூச்சநாச்சமின்றி கேட்டுக் கேட்டு வாங்கினான் .. 

பிற்பாடு அங்கீகரிக்கப்  பட்ட கள்ளக் காதலன் ஆகிவிட்ட ஒரு கட்டத்தில் சுபாவிடம் இதனை  அவன் விளித்த போது , "செம ஆள்டா நீ" என்று அவனது மீசை முடியை பற்களால் பிடித்திழுத்தாள்.. 
"ஐயோ" என்று அவன் பதறிய போது , அவனது நிக்கொட்டீன் மணம் கமழ்ந்த உதடுகளுக்கு விழுந்தன கடிகள்.. 

யானை தன் தலையில் மண் வாரி இறைத்துக் கொண்ட கதை மாதிரி, குணசேகர் தான்  கதிரை வீட்டிற்கு மின்விசிறி மாட்ட அனுப்பி வைத்தான்.. அவன் பணிபுரிகிற பிரபல அலுவலகத்தின் ஆஸ்த்தான மின்சார நிபுணன் கதிர்  என்கிற வகையிலே .. 

கதிருக்கும் 'குணாவுக்கு ஆப்பு வைக்க வேண்டும்' என்கிற எண்ணங்கள் எல்லாம் எதுவுமில்லை.. மிக யதார்த்தமாக எல்லா விபரீதங்களும் செவ்வனே நடந்தேறின.. 

மின்விசிறி மாட்ட என்று துவங்கி, கிரைண்டர் சுற்றவில்லை, மிக்ஸி ஸ்லோ ஸ்பீடில் ஏதோ சத்தம் வருகிறது, வாஷிங் மெஷினில் காசு மாட்டிக் கொண்டது, ரெப்ரிஜ்ஜ ரேட்டரில் கூலிங் ஆவதில் தகராறு என்று குணசேகரனின் வீட்டு  உபகரணங்கள் அனைத்தும் அவனது மனைவியின் கள்ளக் காதலுக்கு  உறுதுணையாய் நின்று செயல்பட்டன.. 

ஆனால் அந்த உபகரணங்கள் எவ்வித உபத்திரவங்களையும் செய்யவில்லை, அப்படி அவைகளை நடிக்க செய்த சுபாவின் கைங்கர்யம் அந்த அப்பாவி குணாவுக்கு எங்கே விளங்கப் போகிறது?

சற்றும் எதிர்பாரா தருவாயில் குணா கொஞ்சம் எர்லியராக முந்தாநாள் சாயங்காலம் வந்துவிட்டான்.. வரும்போதே 'சுபா.. இன்னைக்கு ஹெட் ஏக் ன்னு  பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்' என்றவாறே கேட்டைத் திறந்து வந்தான்.. 

கதிரின் பைக்கும் செருப்பும் இருப்பது கண்டான்.. உள்ளே கதிர் பனியனில் இருப்பது  கண்டு சற்றே குழம்பினான்.. 

'வாஷிங் மெஷின் டெஸ்ட் பண்றப்போ தண்ணி தெறிச்சு ஷேர்ட் ஃபுள்ளா வெட்  ஆயிடிச்சு.. அதனால வெளிய காயுது' என்று சுபா சூழலை தெய்வீகமாக மாற்றினாள் .. 

ஹோ.. ஐ .. ஸீ . என்னோட சட்டை ஏதாவது ஒன்றை  எடுத்துக் கொடேன் "

"அதானே...!எனக்குக் கூட தோணலை"  என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு கதிருக்கு தனது கணவனின் சட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் .. 



அப்புறம் அலுவல் பணி நிமித்தம் குணா மதுரை செல்லவேண்டி வரவே, பரஸ்பரம் கதிர்-சுபாவுக்கு அந்தத் தருணங்கள் தேனிலூறிக் கிடந்தன.. 

சுபா தான் சொன்னாள் .. " இந்த மாதிரி எப்பவும் டென்ஷன் இல்லாம விளையாடணும் .. அதான் மனசுக்கு உடலுக்கு நல்லது.. புருஷன் வந்திடுவானோ .. வானோ ன்னு பயந்துட்டே இருந்தோம்னா நெர்வ்ஸ் வீக்கா போயிடும்.. மனசும் கெட்டுப் போயிடும்.. அதனால"

'அதனால?' 

'எதாச்சும் பண்ணி நீயே கதைய ஃபினிஷ் பண்ணிடே கதிர்' 

ஐயோ சுபா.. நான் எப்டி..?'

'ஓகே.. நீ ரிஸ்க் எடுக்க வேணாம். நான் பார்த்துக்கறேன்.. எங்க ஊருப் பசங்க 2 பேரு  எனக்குப் பழக்கம்.. எதைக் கேட்டாலும் செய்வாங்க.. நாளைக்கே கூட மதுரை போக சொல்லிடறேன்'

ஐயோ சுபா?'

நீ ஏண்டா இப்டி பதர்றே?.. நீயே காட்டிக் கொடுத்துடுவே போல.. ஒனக்காகத் தாண்டா எரும ! 



"ஒங்க ஆப்பீஸ்ல ஆப்பீசரா இருக்கறாரே , குணசேகர் ன்னு ஒருத்தர்.. ?'
"ஆமா"
"நானும் பாப்பாவும் 4 நாளுக்கு முன்னாடி கடவீதி போயிட்டு நடந்து வர்ற போது  டிராப் பண்ணவா ன்னு கேட்டாரு.. நாந்தான் பதறிட்டேன் .. வேண்டாம்னு சொல்லிட்டேன்.. "
என்றாள் கதிரின் மனைவி லலிதா .. 
"அப்புறம்?"
"அப்புறம் அவரே சொன்னாரு.. 'நீங்க எங்க ஆஃபீஸ் எலெக்ட்ரிஷியன் கதிரோட  ஒய்ஃப் தானே?.. என்ன சிஸ்டர் என்னைத் தெரியலையா.. ஒருவாட்டி நீங்க கதிரோட எங்க  ஆபீஸ்க்கு பாப்பாவ தூக்கிட்டு வந்திங்களே.. "
"நான் கவனிக்கலை ஸார் ..'
இட் இஸ் ஓகே.. எனக்கு தெரிஞ்சுது.. அதனால யதார்த்தமா கேட்டேன்.. தவறா நினைக்காதீங்க.. 
"சொல்லிட்டு போயிட்டாரா?"
"அவர் போகத்தான் பார்த்தாரு. நான் தான், அவர்கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டு பாப்பாவ நடுவில உட்கார வச்சுட்டு பின்னாடி நான் உட்கார்ந்து வந்தேன்.. நல்ல மனுஷன்"


மதுரை சென்று சுபா ஏவி விட்ட கூலிகளை தடுத்து நிறுத்தி குணாவைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு வந்து சேர்ந்தது கள்ளக் காதலன் கதிருக்கு.. 

தன்  மனைவி மாதிரி நல்லவளாக சுபா இல்லையே என்கிற கவலையும், சுபாவின் கணவன் குணா மாதிரி நானில்லையே என்கிற கவலையும் முதல் முறையாக ஒன்று சேர்ந்து அவஸ்தைப் படுத்தின கதிரை..!!





No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...