Sunday, March 8, 2015

நம்முடைய ...............

ஒரு பிரத்யேகப் பிராயத்தில், பிரத்யேக சம்பவங்கள் மனதை அபரிமிதம் வசீகரிக்கிற சூழல் அநேகமாக எல்லாருக்கும் வாய்க்கிற விஷயம்..

ஒருவகையான சௌகர்யம் மனசு முழுதுமாக கைகோர்த்துக் கொள்கிற விதத்தில் அந்த சம்பவங்கள் பரம ரம்மியமாக நம்மில் ஊடாடி அந்தப் பொழுதுகளை மிகவும் அர்த்தப் படுத்தி விடும்..

பாறைக் குழி என்று  ஒரு இடம்..  விவசாயம் நடக்கிற சமவெளி நிலத்தில், கிஞ்சிற்று குன்று போன்று முளைத்திருக்கிற ஒரு பாறை.. ஆனால், அதனை 'குழி' என்கிற அனர்த்தமான அடைமொழி சேர்த்துக் குறிப்பிடுவார்கள்.
மிதிவண்டி எடுத்துக் கொண்டு ஸ்கூல் லீவ் நாட்களில் அந்தப் பாறைக்குப் போவேன்.. வீட்டிலிருந்து சுமார் நான்கல்லது ஐந்து கி.மீ.கள் இருக்கும்.. அனாயாசமாக அழுத்திக் கொண்டு செல்வேன்.. இன்றைய நாட்கள் மாதிரி அநியாய டிராஃபிக் இருக்காது... கன்னாபின்னாவென்று காட்டு மிராண்டிகள் போன்று எவரும் பைக்கை ஓட்ட மாட்டார்கள்.., அப்படி ஹை - ஸ்பீட் எஞ்சின் பைக்குகளும் அறிமுகமாகி இருக்கவில்லை... முக்கால்வாசிப் பேர்கள் சைக்கிள் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.. மொப்பெடும் பைக்கும் கனவு வாகனங்களாக இருந்தன..

இன்றோ இத்த செத்த  எல்லாரும் 20,000 ரூ.செல்போன்  வைத்துப் பேசுகிறார்கள். டியூவில் பல்ஸர் எடுத்து ஈ.எம்.ஐ கட்டி ஜமாய்க்கிறார்கள் .. கட்டமுடியாட்டி  வண்டியை எடுத்துட்டுப் போ என்று சுலபமாக அடுத்த மாடலுக்கு மாறுகிறார்கள்.. சட்டை  ஜீன்ஸை மாற்றுவது போன்று எதை வேண்டுமானாலும் புதிதாக அப்டேட் செய்கிற "செம தெர்ஸ்டியில் " அலை பாய்கிறார்கள்..

எதனையும் சாத்தியத்துக்குக் கொணர்கிற திறனோடு அளப்பறை செய்கிறார்கள்.. !!   

அந்தப் பாறை மீது ஏறி உச்சம்  போய் முன்சட்டைப் பாக்கெட்டின் வியர்வை ஈரம் சற்றே படிந்துள்ள கோல்ட் பில்டர் எடுத்து ரெண்டே குச்சி இருக்கிற தீப்பெட்டியில் ஒரு குச்சியை மருந்தில் கிழித்து பற்ற வைத்தோமென்றால் .. ஒருவகை சாபக்கேடு போன்று , ஒன்று அந்த நமுத்த சிகரெட்டில் தீ ஏறாது.. , அல்லது முதல் குச்சி முடிந்தும் சிகரெட் பற்ற வைத்த பாடு இருக்காது. இருக்கிற அடுத்த ஒரே 2ஆம் குச்சி பார்த்து பற்ற வைத்தால் உண்டு. அல்லது அதுவும் காற்றுக்கு அணைந்து போகிற சூழலில் செம டென்ஷன் ஏறும்.. 2 ரூ கொடுத்து சிகரெட் வாங்குகிற எனக்கு எட்டணா தீப்பெட்டி வாங்க முடியவில்லை என்பதை விட தீப்பெட்டி சட்டை ஜேப்பில் இருந்து அம்மா துவைக்கையில் சிக்கவைத்து விடும் என்கிற பயம்.. 
[குறிப்பு: அன்றைக்கு கோல்டு பில்டர் ரூ.2. இன்று ரூ.5 என்கிறார்கள் .. நான் இன்று ஊத  ஆசைப் பட்டும் உடல்நிலை நிமித்தம் வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்]    
ஆகவே, சிகரெட் வாங்குகிற கடைக்காரரிடமே காலித் தீப்பெட்டியும் குச்சி ரெண்டும் வாங்கிக் கொள்வேன்.. அண்ணாச்சி ஐந்தாறு குச்சிகள் திணிப்பார் என்ற போதிலும் நான் தான் பிடுங்கி மாதிரி" 2 போதும் அண்ணாச்சி .. ஏன் வேஸ்ட் பண்றீங்க?" என்று தெனாவெட்டாகப் பேசி சைக்கிள் ஸ்டாண்டை ஸ்டைலாக  அன்லாக் செய்து வலதுகாலை பின்னாடி தூக்கி பந்தாவாக ஏறுவேன்.. என்னுடைய அப்பா இன்னும் முன்பாரில் தான் காலை வளித்துப் போட்டு ஏறுகிறார் என்கிற இளப்பமான ஒரு அனுமானம் எனக்கிருந்தது.. ஆனால் அது அவர் வேட்டி கட்டும் காரணத்தால் அவ்விதம் தான் ஏற முடியும் என்கிற அறிவு பிடிபடவே என் மரமண்டைக்கு வருடங்கள் கண்டன.. 

2 மணிநேரங்கள் நழுவுவது கூட தெரியாமல் அந்தப் பிராந்தியத்தில் நானிருப்பேன்.. அங்கே ஆடு மாடு மேய்க்க வருகிற சில நபர்களும் கூட எனக்குப் பழக்கமானார்கள்.. 
ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் எப்போது துவங்கின, எப்போது நிறைவுற்றன என்கிற அலசல்களின் போதெல்லாம் நான் ஒருவித மயக்கக் குழப்பத்துக்கு ஆளாவேன். 

இன்றும் அந்த வழி செல்ல நேர்கையில், நான் பொழுதோட்டிய பாறையைத் தேடுவேன்.. அதைக் காணோம்.. அந்த விவசாய பூமி காணோம்.. அன்றைய எவ்வித அடையாளங்களும் அற்று அங்கே கட்டிடங்கள் முளைத்திருந்தன.. 

இது போன்று பல பிராயங்களில் பற்பல சம்பவங்கள்.. ஒவ்வொன்றையும் விவரிக்க ஆரம்பித்தால், நிகழ்காலமே ஸ்தம்பித்துப் போய் விடும்.. 

ஆனால், நிகழ்காலம் எதிர்காலப் பதிவுகளுக்கு உபயோகப் படும் என்கிற பிரக்ஞை எவருக்கும் என்றைக்கும் உதிக்காத ஒரு மர்ம சூரியன்.. 

ஆனால், அவை பின்னொரு தருவாயில் விவரிக்கப் படுகையில் அந்தக் குறிப்பிட்ட பிரத்யேக விஷயங்கள் என்றென்றும் அஸ்தமனமாவதற்கு வாய்ப்பே இல்லை போன்றொரு தீவிர நம்பிக்கை நம்மில் செழித்தெழுகிறது .. 
ஆனால் நாம் தான் சுலபத்தில் ஒரு நாள் அஸ்தமித்து விடுகிறோம்.. !!

                                                                                  

1 comment:

  1. எங்கும் ஆக்கிரமிப்பு திகைப்பு தான்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...