Thursday, March 12, 2015

காதலனின் டைரியிலிருந்து ......

மிக மிக அனிச்சையாகவே 
அன்றாடம் உம்மை 
தரிசிக்க வேண்டுமென்பதில் 
தீவிரம் காண்பிக்கிறேன்..!

உன்னைத் தேடும் போதிலாக
நீ கிடைத்து விட்டதான 
திருப்தியில் கிடந்த நான் 
நம்மில் நிகழ்ந்த ஆலிங்கனங்களில் 
நீ தொலைந்து போனதான 
ஏக்கத்தில் விம்முகிற எனது 
வினோத இதயத்தினை என்னவென்பது?

அவ்வப்போது 
நானுன்னைத் தேடியும் 
கிடைக்கப் பெறாமல் இருக்கிறாய்..
ஆனால்...
நான் கிடைத்தாலும் கூட 
நீ என்னைத் தொலைக்கவே 
பார்க்கிறாய் அவ்வப்போது..!!

உன் மீதான எனது 
காதலின் ஆழத்தை, 
உனக்கும் அதே தன்மையில் 
பயிற்றுவிக்கிற என் முஸ்தீபை 
ஏளனமாகப் புறந்தள்ளும் 
உமது செயலில் கூட 
ஒரு வசீகரம் உணர்கிற 
என் ரசனை 
எனக்கே என்னில் நிகழ்கிற 
ஒரு பொருந்தா உணர்வாக  
இம்சிக்கிறது..!

உன்னைக் கடிந்து 
கொள்கிற கற்பனை கூட 
வலி தருகிறது எனக்கு.. 
நீயோ 
நிஜவலி தரும் வகையில் 
சுலபத்தில் கடிந்து 
கொள்கிறாய் என்னை.. !

ஆலிங்கனங்கள் 
சுலபநிகழ்வாக அமையப் பெற்ற 
எனது அதிர்ஷ்டக் காதலில் 
என்னை நீ புறக்கணிக்கிற 
துரதிர்ஷ்டங்களும் அதே 
சுலபத்தில் நடந்தேறின 
என்கிற முரண்கள் 
சகிக்க முடியாத சாபக்கேடுகள் 
போன்றே தோன்றுகின்றன...!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...