Sunday, October 12, 2014

சுப்புணி


ஒன்று 
சுப்புணி ன்ற சுப்பிரமணி இன்னைக்குக் காலைல தான் அந்தக் கோட்டப் பெருமா கோவில் இருக்கற வீதியில செயின் சிநாச்சிங் செஞ்சு ரெண்டொரு நிமிஷம் ஓடித் தப்பிச்சவன், வாக்கிங் போறதுக்காக எதிர்த்தாப்புல வந்துக்கிட்டு இருந்த ஒரு தொண்டுக் கெழம் தன்னோட வாக்கிங் ஸ்டிக்ல அவன் காலுக்குள்ள வுட்டு விழ வச்சு, கம்பத்துல கட்டி வச்சு 'பொதுமாத்து' வாங்க வச்சுது.. 

என்னவோ ஏரியா கவுன்சிலர் பதவி கெடச்ச மாதிரி அதுக்கு ஒரே பாராட்டு மழ .. சாகப் போற வயசுல அதுக்கொரு போலீஸ் உத்தியோகம்.. 

வீதியில போறவன் வாரவன் எல்லாருமா ஆளாளுக்கு போட்டு வாங்குன வாங்குல சுப்புணிக்கு ஒதடு வீங்கி, கன்னம் வீங்கி, பல்லு ஒடஞ்சு ரத்தம் சட்டை காலர், வயிற்றுப் பகுதி என்று ஏகத்துக்கும் சிகப்பாய் நனைந்திருந்தது.. 

அவனும் முடிஞ்ச வரைக்கும் 'அண்ணே நான் திருடலை.. அது என்னோடது .. அவ என்னோட பொண்டாட்டி ண்ணே .. நம்புங்க ண்ணே ..' னு ஆன வரைக்கும் கெஞ்சிக் கதறிக் கூத்தாடிப் பார்த்தான்.. 
'இத இப்டி நீ சொல்வே. நாங்கெல்லாம் நம்பனும்?.. சுத்தப் பேமானிக ன்னு நெனச்சியாடா தே.மவனே..?' என்றொருவன் மூக்கில் குத்தினான்.. 
'வேணும்னா அவள விசாரிங்க ண்ணே ..' என்றான்.. 

ஆனா, அந்த சிறுக்கிமவ அந்த ஸ்பாட்டை விட்டே எஸ் ஆயிட்டா கழுத.. 

'சும்மா நாமலே போட்டு அடிச்சு எங்கயாச்சும் செத்துக் கீது போனான்னா போலீஸ் கோர்ட்ன்னு நாமுளும் சேர்ந்து அலையணும். மொட்டயா போலீசாண்ட  ஒரு கம்பிளின் கொடுத்துட்டம்னா அவுக வந்து ஸ்பெஷலா கவனிச்சுக்குவாங்க.. பாதி உசிர நாம புடிங்கிட்டோம்.. மீதிய அவனுக பார்த்துக்கு வானுக.. ' என்றான் ஒருவன்.. 

அரை சுரணையில் இருந்த சுப்புணிக்கு இதைக் கேட்டு இன்னும் பீதி பற்றிக் கொண்டது. 

இரண்டு 
------------
' ஹே . சாவித்ரி .. இது உன்னோட கழுத்துக்கு சூப்பரா இருக்கும் புள்ளே.. வாங்கிக்கிறையா? '
'நெசமாவா மாமா சொல்றீங்க?'
'நெசந்தான் புள்ள.. '

கல்யாணமாகி ரெண்டுமூணு வருஷமோ நாலஞ்சு வருஷமோ ஆகி இருந்திருந்தா கூட எந்தப் புருஷனும் இப்டி அக்கறையா நகைக் கடைக்குப் பொண்டாட்டியக்  கூட்டிட்டுப் போயி விசாரிக்க மாட்டான் .. ஆனா, சுப்ரமணிக்கும் சாவித்திரிக்கும் ரெண்டரை மாசம் தான் ஆவுது.. 
ஆக , மோகம் 30 ஆசை 60 ங்கற 90 நாள் கணக்குலேயே இன்னமும் 15 நாள் பாக்கி இருக்கு. அப்டிங்கற போது சத்தியமா எந்தப் புருஷனும் தமாசுக்குக் கேட்க  வாய்ப்பில்லே.. 

'இப்ப எதுக்கு மாமா.. அப்புறம் பார்த்துக்கலாம்' என்ற சாவியைக் கூட வாயை அடக்கி விட்டு நம்ம சுப்புணி அந்த 3 பவுன் கொடியை ஆசை ஆசையாய் வாங்கி  அவளுக்கு மாட்டி விட்டான்... 

3 மாதங்கள் நிறைவு பெறவே இன்னும் ஒரு வாரம் இருக்கையில் தான் நேற்று அந்த சம்பவம் ... 

2 நாட்கள் முன்னர் அந்தப் புதுப் பொண்டாட்டி முந்தைய காதலனோட எஸ்கேப் .. எதேச்சையா அவன் கூட அவளைப் பார்த்திருக்கான் .. 2 பேரும் வெளியூரு  தப்பிச்சுப் போக இருக்கும் போது , இவன் பார்த்திருக்கான்.. 
'திருட்டு முண்ட.. ஏண்டி என் வாழ்க்கைய நாசக் கேடு செஞ்சே?' ன்னு கேட்டு வெஞ்சிருக்கான் .. அழுதிருக்கான்.. 
அதைப் பார்த்து அவ சிரிச்சாளாம் .. 
அவ காதலன் .. 'இந்தப் பொட்ட கூட போயி என்ன வாழ்ந்து கிழிக்கப் போறே?' ன்னு நக்கல் செஞ்சானாம்.. 

பொண்டாட்டிய மிஸ் பண்ணி, ஆசை ஆசையா வாங்கிக் கொடுத்த 1 லட்சம் ரூபா செயினை  மிஸ் பண்ணி, அதையாச்சும் புடுங்கலாம்னு புடுங்கப் போயி , தர்மடி வாங்கி, ஜேப்படி திருடன்னு  பேரைக் கெடுத்து , ஒதடு மனசு எல்லாம் வீங்கி.. இதெயெல்லாம் சொன்னாலும், மக்களோ போலீசோ நம்பாம... ஐயோ.... 

மூன்று 

அந்த கருமங்கள் எல்லாம் முடிந்து நாலஞ்சு வருஷம் ஆச்சு..  
2வதாக சுப்புணி கல்யாணம் செஞ்சு அவனுக்கும் ருக்குவுக்கும் இப்ப மூன்றரை வயதிலும்  2 வயதிலும் ரெண்டு குழந்தைகள்.. 
இவனுடைய முந்தைய வரலாறுகள் அனைத்தையும் ருக்குவிடம் ஒரு காவியம் போன்று அரற்றித் தீர்த்தான்.. அவளும் அதிலே மலைத்து, இவன் மீது ஒரு  இரக்கம் கலந்த சிநேகமும் மதிப்பும் கொண்டிருந்தாள் .. 

இவன் ஊகித்து வைத்தது போன்றே ஒரு அசந்தர்ப்பத்தில், சாவித்திரியை இவன் நினைத்த கோலத்திலேயே சந்திக்க நேர்ந்து சந்தோஷமாக சிரித்தான்.. 
எஸ், அவனது காதலனால் ஒரு ப்ராத்தல் சந்தையில் விற்கப் பட்டு நாறிக் கிடந்தாள்.. இவனைக் கண்டதும் மூஞ்சியை மூடி அழுதாள்.. கழுத்தில் சிகப்புப் பாசிகள்  கோர்த்த ஒன்றை அணிந்திருந்தாள்.. 

அங்கே நின்றிருந்தால் மறுபடி ஏதேனும் பங்கம் விளைவிக்கத் துணிந்து விடுவாள் இந்த சதிகாரி என்று நகர முற்படுகையில்.. 
பின்னாடி இருந்து வந்த ஒரு 3 வயதுப் பெண்குழந்தை அவளது சேலை முந்தானையைப் பற்றிக் கொண்டு அழுவதற்கு தயாரானது.. 

தனது குழந்தைகளுக்கு வாங்கியிருந்த பொம்மைகளையும் தின்பண்டங்களை யும்  அதன் கைகளில் திணித்து விட்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் விரைந்தான்  சுப்பிரமணி.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...