Sunday, September 1, 2013

கா கா கா....

சற்று முன்னரோ
நெடிய நேரம் ஆயிற்றோ
தெரியவில்லை..
செத்துக் கிடந்தது
காகமொன்று..

சற்று முன்னரெனில்
குழாமாக சூழ்ந்து
இந்நேரம் அந்த
சூழலையே களேபரப்
படுத்துகிற விதமாகக்
கரைந்திருக்கும்..

நெடிய நேரமாயிற்று
போலும்..
கரிக்கட்டையாக
கேட்பாரற்றுப் பொசுங்கிக்
கிடந்தது காகம்.. காக உடல்..!

நேற்றைக்கின்னேரம்
அந்தக் காகம்
சுள்ளி பொறுக்கிக்
கூடுகட்டுகிற முஸ்த்தீபில்
அலைந்திருக்கும்..
குஞ்சுகளுக்கான
பசியைத் தீர்க்கிற அவகாசத்தில்
புழுப் பூச்சியையோ
திதிக்கு எவரேனும் படைத்த
படையலில் வடையையோ
கவ்விக்கொண்டு பறந்திருக்கும்..

அபரிமிதப் பசியில்
அலகுகளைத் திறந்த வண்ணம்
கூட்டில் குவிந்திருக்கிற
அனைத்து  குஞ்சுகளுக்கும்
சரிசம விநியோகம் நடந்திருக்கும்..

இன்றைக்கும் 
வாய்களைத் திறந்த 
வண்ணமாகவே அலறக் கூடும் 
அந்தப் பொன்குஞ்சுகள்.. 

ஆனால் நிச்சயம் 
எவையும் மரித்துப் 
போவதாக எந்த 
ஆய்வறிக்கைகைகளும் 
இதுவரைக்கும் இல்லை.. 

அல்லது 
பறவை கவனிப்பாளர்கள் 
இதனை இன்னும் 
கவனிக்கவே இல்லையோ??

2 comments:

  1. எங்கே சென்றீர்கள் இத்தனை நாட்கள்?... அப்பாடா இப்போதாவது வந்து விட்டீர்களே.. அதுபோதும்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...