Friday, July 19, 2013

மதிப்பிற்குரிய தமிழ் மக்களே.....

உலகில் எதிர்ப்பதம் இல்லாத வார்த்தை அநேகமாக 'மாயை' என்பதாகத் தான் இருக்கமுடியும்..
'மாயை அல்லாத'.. என்பது மாயையைக் காட்டிலும் மாயை என்றே தோன்றுகிறது..!!

நம்மைச் சுற்றி பறக்கிற கொசுவை சுலபத்தில் ஒரே கைதட்டலில் கொன்று விடுகிறோம்.. ரத்தம் பீய்ச்சி நம் உள்ளங்கையில் அது பொசுங்கிக் கிடக்கையில் ஓர் அசூயை வியாபித்தாலும் அதனைக் கொன்ற ஓர் நிறைவை மனசு அனுபவிக்காமல் இல்லை.. கொசுவாக ஓர் பிறவி எடுத்த அந்த உயிரை மிக சுலபமாக நிறைவுக்குக் கொணர்ந்துள்ளோம் என்கிற கிஞ்சிற்றுப் பிரக்ஞை கூட அற்று அடுத்த கொசு அதே ரீதியில் நசுக்கப் பெறுமா என்று எதிபார்க்கத் துணிந்து விடுகிறோம்.. !!

நமது பகுத்தறிவுக்காக ... புத்திசாலித் தனத்துக்காக.... அறிவுப் பூர்வ நடத்தைக்காக.. இன்னபிற நமது அனைத்து மேன்மைகளுக்காகவும் ஓயாமல் கர்வம் கொள்வதை ஏனோ விட்டொழிக்க விழைவதே இல்லை..

நமது முட்டாள் தனங்களுக்காக.. கேனத் தனங்களுக்காக... கிறுக்குத் தனங்களுக்காகக் கூட நாம் அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை...!

திரையரங்குக் கண்ணாடி வழியாக டிக்கட் கிடைக்காமல் சோர்ந்து போய் திரும்புகிறவர்களை சுறுசுறுப்பாக கவனிக்கிறோம்...

டூவீலரில் நம்மை டிராப் செய்ய மறுக்கிறவனை 'நாசமாபோ' என்று சபிக்கிறோம்.. நாம் டூவீலரில் செல்கையில் டிராப் செய்யச் சொல்கிறவனிடம் காது கேட்காதவன் போல, கவனிக்காதவன் போல நகர்கிறோம்.. குறைந்தபட்சம்  'நான் இந்தப் பக்கம் திரும்பறேன்' என்று சொல்லி நேராகவே போகிறோம்.. நடக்க முடியாத கிழவியைக் கடந்து போகிறோம்.. 'டிராப்  பண்ணட்டுமா?' என்றொரு சற்றும் அறிமுகமாகாத அழகியைப் பார்த்துக் கேட்கிறோம்.. 

கையில் காசுக்குத் தரித்திரம் வருகிற போது சற்று முன்னர் தான் அறிமுகமான ஓர் நபரிடம் கூட கடன் கேட்கத் துணிகிறோம்... இருபதுவருட பழக்கமுள்ள நண்பன்  தனது குழந்தையைப் பள்ளியில் சேர்க்க 'பத்தாயிரம்' கேட்டால் கூட 'அடடே. இருந்ததை இப்பத்தான் ..' என்றொரு கதை சொல்வோம்... அனாமதேயமாக அறுபதாயிரம் கூட சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டில் தூங்கிக் கொண்டு கிடக்கும்.. 

வாழ்நாள் நெடுக தவறுகளை  சரிவரச் செய்வதே அநேகம் பேருடைய சுபாவமாக உள்ளதை கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதித் தெரிவிப்பதில் தான் என்ன தீர்வு வந்துவிடப் போகிறது??

2 comments:

  1. ஒவ்வொன்றும் உண்மைகள்... உங்களின் ஆதங்கமும் புரிகிறது...

    ReplyDelete
  2. vry thk u boss for yr courtesy!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...