Friday, April 19, 2013

மணம் வீசும் முட்கள்..

முள் தைக்கும்
என்கிற அவஸ்தைகளைத்
தாண்டி -
கவர்ந்திழுத்துப் பறிக்கச்
செய்கிற ரோஜாக்கள் போல...

நான் ஆசை ஆசையாகக்
கொஞ்ச முனைகையிலெல்லாம்
என்னைப் புறக்கணிக்கிற
எனது மகளை 
விடாப்பிடியாக 
கொஞ்சிவிடுகிற நாசுக்கை 
எப்படியோ நான் 
கற்றுக் கொண்டேன்.. 

அவளது புறக்கணிப்பைக் 
கூட முள்ளென்று 
அடையாளப் படுத்துவதில் 
எனக்கு 
உடன்பாடில்லை... 
அவள் அந்தப் பிஞ்சுக் 
கைகளைக் கொண்டு 
எனது முகத்தைத் 
தள்ளிவிட்டு --
ஆசை ஆசையாய்  
நான் வைக்க விழைகிற 
முத்தங்களைத் 
தவிர்ப்பது  
முள்ளெனக் குத்துகிற 
எனது தாடி
கூசும் என்பதாலேயே 
அன்றி 
என் முத்தங்கள் 
அவளுக்கு மிக 
மிகத் தேவை எப்போதுமே..!

வேண்டுமானால் 
ஓர் அடையாளத்துக்காக 
மட்டுமே மறுபடி சொல்கிறேன்.. 
அவளது புறக்கணிப்பு 
முட்களைத் தாண்டி 
அந்த மெல்லிய 
கன்னங்களுக்கான 
எனது முத்தக் கொஞ்சல்கள் 
நிகழும்..
என் மகளுக்கு 
எனது முத்த ரோஜாக்கள் 
நிறையத் தேவை என்பதால்
அவளும் எனது தாடி முட்கள் 
குத்துவதை ஆரம்பத்தில் 
புறக்கணித்து விட்டு 
பிற்பாடாக ஏற்றுக் 
கொள்கிறாள்..!!



2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...